ஹனபிகள் இதனை மறுக்க முடியுமா?

in 1993 மே,பொதுவானவை

ஹனபிகள் இதனை மறுக்க முடியுமா?
“ஹம்துல்லாஹ் ஜமாலி”
இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் முஸ்லிம்களில் ஹனபி மத்ஹபை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஏறத்தாழ 75 சதவீத அரபி மதரஸாக்களும், பள்ளிவாசல்களும், பெரும் நகரங்களிலுள்ள டவுன் காஜிகளும் ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். அண்மைக் காலமாக தமிழகத்தில் உருவாகி வேகமாக வளர்ந்து வரும் குர்ஆன், ஹதீஸ்களின் பக்கம் மக்கள் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதால், அது இவர்களை மிகவும் பாதித்துள்ளதை நாம் நிதர்சனமாகக் கண்டு வருகிறோம். தாங்கள் வாழையடி வாழையாக பின்பற்றி வரும் ஹனபி மத்ஹபின் சட்டங்களுக்கு மாறாக குர்ஆன், ஹதீஸ்களின் சாட்சிகள் வெகுவாக மக்களிடையே பரவிவருவது இவர்களை பெரிதும் பாதித்துள்ளது. இதனால் குர்ஆன், ஹதீஸ்களின் ஆதாரங்களில் செயல்பட நினைக்கும் மக்களை பற்பல விதங்களில் தொந்தரவு கொடுத்து வருகின்றனர். இதில் பொதுமக்களைவிட அரபி படித்த மெளலவிகள் பெரும் பங்கேற்று செயலாற்றி வருகின்றனர்.

இவர்கள் நாம் எடுத்து வைக்கும் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களை நியாயமான முறையில் விமர்சித்தால் நாமும் அதனை ஏற்கலாம். ஆனால் நமது ஆதாரங்களை புறக்கணித்துவிட்டு தாங்கள் பின்பற்றி வரும் ஹனபி மத்ஹபின் ஒரு சில பிக்ஹு நூல்களின் ஆதாரங்களை எடுத்து வைக்கின்றனர். அந்நூல்கள் யாவை? எப்போது தொகுக்கப்பட்டவை? என்ற ஆரம்பப் பாடத்தை இங்கு காண்போம். இதன் மூலம் அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரத்தில் உண்மை நிலையை விளக்க முடியும்.

ஹனபி மத்ஹபின் இமாமாக கூறப்படும் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் உண்மை பெயர்: அந்-நுஃமான் பின் தாபித்(ரஹ்) ஆகும். ஹிஜ்ரி 80-ல் கூஃபில் பிறந்து பெரும் செல்வந்தராக ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்கள். ஹிஜ்ரி 150-ல் மரணமெய்தினார்கள். அல்லாஹ்வின் அருள்மறையான திருகுர்ஆனில் ஆழ்ந்த ஞானமும், புலமையும் பெற்றிருந்தார்கள். பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் தலைநகராக விளங்கிய கூஃபாவில் வாழ்ந்ததால் ஹதீஸ்களை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கடினமாகவும், கவனமாகவும் இருந்துள்ளார்கள். “உண்மையான ஹதீஸ்கள் கிடைக்குமானால் அதுவே எனது வழி” எனவும் கூறிச் சென்றுள்ளார்கள். இமாமுல் அஃலம் (தலைச் சிறந்த இமாம்) என அனைவராலும் அன்று முதல் இன்று வரை அழைக்கப்படுகிறார்கள்.

இவ்வளவு கண்ணியமிக்க அபூஹனீபா(ரஹ்) தனது வாழ்நாளில் எந்த ஒரு மார்க்க நூலையும் எழுதி வைத்துச் சென்றுள்ளதற்கு அறவே ஆதாரங்களில்லை. இமாம் மாலிக்(ரஹ்) அவர்களுக்கு முஅத்தா மாலிகி என்ற ஹதீஸ் நூலும். : இமாம் ஷாபிஈ(ரஹ்)அவர்களுக்கு முஸ்னத் ஷாபிஈ, உம்மு போன்ற நூல்களும்; இமாம் ஹம்பலி(ரஹ்)  அவர்களுக்கு முஸ்னத் அஹ்மத் போன்ற நூல்களும்; அந்தந்த இமாம்களால் தொகுக்கப்பட்டவை இன்னும் இருப்பதை நாம் காணலாம். ஆனால் இவர்கள் அனைவருக்கும் முந்தியவராக, இமாமுல் அஃலம் என அனைவராலும் போற்றப்படும் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் ஏன் ஒரு நூலைக்கூட எழுதவில்லை?

நபி(ஸல்) அவர்களின் மறைவிற்குப்பின் முதல் நூற்றாண்டிலேயே பிறந்த அபூ ஹனிபா(ரஹ்) இஸ்லாத்தின் அடிப்படையான திருகுர்ஆனும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறையிலுள்ள ஹதீஸ்களும் போதுமென்ற நினைவில் எந்த நூலையும் எழுதவில்லையென நாம் நல்லெண்ணம் கொள்கிறோம்; அல்லது கூஃபாவில் சர்வசாதாரணமாக உலவி வந்த பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட நபிமொழிகள் தம்மையும் அறியாமல் தனது நூலில் இடம் பெற்று சரித்திரமாகிவிடக் கூடாது என எழுதாமலிருந்திருக்கலாம். அது மட்டுமல்ல! அவரது இரு மாணவர்களாக விளங்கிய அபூயூசுப்(ரஹ்), முஹம்மது(ரஹ்) ஆகியோரும் ஆபூஹனீபா(ரஹ்) கூறியதாக ஆதாரபூர்வமான அறிவிப்பாளர் என்ற வரிசைகளில் எந்த செய்தியையும் பதிவு செய்து பாதுகாக்கவில்லை என்பது சரித்திரங்கள் கூறும் கூற்றாகும். மாறாக, இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மறைவிற்குப்பின் அவரது மாணவர் முஹம்மது(ரஹ்)அவர்கள் இமாம் மாலிக்(ரஹ்) அவர்களைப் பின்பற்றி “முஅத்தா முஹம்மது” என ஒரு ஹதீஸ் நூலை எழுதியிருப்பது யாவரும் நன்கறிவர். அது இன்றும் மக்களிடையே உள்ளது.

இவ்விதமாக எந்த நூலையும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் எழுதாமலிருக்க, பின்வந்தவர்கள் மார்க்கத்தில் இல்லாததையும், பொல்லாததையும், எழுதி தங்களது பெயரில் வெளியிட்டால் மக்களிடையே எடுப்பது என எண்ணி அனைவராலும் “இமாமும் அஃலம்” எனப் புகழப்படும் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் பெயரில் ஹனபி சட்டங்களாக அரங்கேற்றினர். இவர்கள் கூறும் கூற்றுக்களை அபூஹனீபா(ரஹ்) அவர்களின் கூற்றாக மக்களிடையே பிரபல்யபடுத்தியுள்ளனர். ஹனபி மத்ஹபின் முக்கிய பிக்ஹு நூல்களாக இன்று மக்களிடையே உலவி வரும் நூல்களையும், அவை தொகுக்கப்பட்ட காலங்களையும் கீழ்க்காணும் அட்டவணையிலிருந்து பார்த்து இது அபூஹனீபா(ரஹ்) அவர்களால் கூறப்பட்டிருக்க முடியுமா? என்பதை வாசகர்களும், தங்களை ஹனபிகள் எனக் கூறிக் கொள்வோரும் கவனிக்க வேண்டுகிறோம். எங்களது இந்தக் கூற்றை மறுப்பவர்கள் தெளிவான ஆதாரங்களுடன் நம்முடன் எழுத்து மூலம் தொடர்பு கொண்டால் அதனை பரிசீலித்து நமது இதழில் வெளியிடவும் தயாராக இருக்கிறோம்.

நபி(ஸல்) அவர்களின் மரணம் = ஹிஜ்ரி 11.

இமாம் அபூஹனீபாவின் காலம் = ஹிஜ்ரி 80 முதல் 150

ஹனபி மத்ஹபின் பிரபல்யமான பிக்ஹு நூல்களாக இன்று நடைமுறையிலுள்ளவைகளும் அவை தொகுக்கப்பட்ட காலமும்.
நூல்கள்           ஹிஜ்ரி நூற்றாண்டு    இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மரணத்திற்கு சுமார்
1. குதூரி              5ம் நூற்றாண்டு        300 வருடங்களுக்குப்பின்
2. ஹிதாயா            6ம் நூற்றாண்டு        400   வருடங்களுக்குப்பின்
3. காஜிகான்           6ம் நூற்றாண்டு        400   வருடங்களுக்குப்பின்
4. கன்னியா           7ம் நூற்றாண்டு        500   வருடங்களுக்குப்பின்
5. தஹாபி            8ம் நூற்றாண்டு        600   வருடங்களுக்குப்பின்
6. ஷரஹ் விகாயா      8ம் நூற்றாண்டு        600   வருடங்களுக்குப்பின்
7. நிகாயா            8ம் நூற்றாண்டு        600   வருடங்களுக்குப்பின்
8. கன்ஜ்             8ம் நூற்றாண்டு        600   வருடங்களுக்குப்பின்
9. ஜாயிஉல்ருமூன்      8ம் நூற்றாண்டு        600   வருடங்களுக்குப்பின்
10. ஃபதாவே பஜாஸியா 9ம் நூற்றாண்டு        700 வருடங்களுக்குப்பின்    
11. பதாஉல் கதீர்      9ம் நூற்றாண்டு        700 வருடங்களுக்குப்பின்    
12. குலாஸத் கைதானி   10ம் நூற்றாண்டு        700 வருடங்களுக்குப்பின்
13. சல்பீ            10ம் நூற்றாண்டு        800 வருடங்களுக்குப்பின்
14. பஹ்ரு ராயின்      10ம் நூற்றாண்டு        800 வருடங்களுக்குப்பின்
15. தன்வீர் அப்ஸார்    10ம் நூற்றாண்டு        800 வருடங்களுக்குப்பின்
16. தகீரா            10ம் நூற்றாண்டு        800 வருடங்களுக்குப்பின்
17. துர்ருல் முக்தார்     11ம் நூற்றாண்டு        900 வருடங்களுக்குப்பின்
18. ஃபதாவா ஆலம்கீரி  12ம் நூற்றாண்டு        1000 வருடங்களுக்குப்பின்

அபூஹனீபா(ரஹ்) பெயரில் ஹனபி மத்ஹபின் பிக்ஹு நூல்களான இவையனைத்தும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மரணத்திற்கு 300 வருடங்களுக்குப் பின் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தொகுத்தவர்கள் எவருமே அபூஹனீபா(ரஹ்) அவர்களிடமிருந்து எப்படிப் பெற்றார்கள் என்ற விபரத்தையோ, அறிவிப்பாளர் வரிசைகளையோ குறிப்பிடவேயில்லை. அனால் பின்னால் வந்தவர்கள் முந்திய நூல்களை ஆதாரமாகக் காட்டியுள்ளனர். அவற்றிலும் விபரங்களில்லை. இதனைத் தொகுத்தவர்கள் அரபு குலத்தவரோ, மொழியினரோ மட்டுமல்ல. அரபியை கற்றிருந்த மாற்று நாட்டவராலும், குலத்தவராலும், இனத்தவராலும், மொழியினராலும் இவை தொகுக்கப்பட்டுள்ளன. கடைசியாகக் குறிப்பிட்டுள்ள ‘ஃபதாவா ஆலகீர்” மொகலாய பேரரசரான ஒளரங்கசீப் காலத்தில் தொகுக்கப்பட்டதாகவும், அத்தொகுப்பக்கு காயல் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களும் உதவியதாகவும் ஒரு செய்தியுள்ளது நினைவு கூறத்தக்கதாகும்.

இந்நூல்களைத் தொகுத்தவர்கள் அறவே திருகுர்ஆன், உண்மையான நபிமொழிகளை ஆதாரமாக கொடுக்கவில்லையெனக் கூறிவிட முடியாது. அப்படி எழுதியிருப்பார்களேயானால் இந்நூல்கள் இவ்வளவு பிரபல்யமாகியிருக்க முடியாது. எனவே ஆங்காங்கு ஒரு சில குர்ஆன் வசனங்களையும், நபிமொழிகளையும், செருகி அதனை தங்களது மத்ஹபு கொள்கைக்கொப்ப வளைத்தும், திரித்தும் ‘ஃபத்வா” (மார்க்க தீர்ப்பு) வழங்கியிருப்பதைக் காணலாம். ஒரு சில இடங்களில் குர்ஆன், ஹதீஸ்களின் அடிப்படையில் சரியான மார்க்கத் தீர்ப்பை வழங்கி விட்டு தொடர்ந்து அதற்கு மாற்றமான தீர்ப்பையும் முஸ்தஹபு, முபாஹ், லாபஃஸ்  என்ற அரபிச் சொற்களைக் கொண்டு குழப்பியிருப்பதையும் காணலாம்.

இமாம் மரலிக்(ரஹ்) அவர்கள் எழுதிய “முஅத்தா மாலிகி” நூலுக்கு விளக்கம் தந்து “அல்ஜஜுல் மஸாலிக்” என்ற நூலை ஹனபி மத்ஹபினரான முஹம்மது ஜகரிய்யாசாஹிப் அவர்கள் சென்ற நூற்றாண்டில் எழுதினார்கள். மாலிக் மத்ஹபின் பல சட்டங்கள் சரியான ஹதீஸ்களின் அடிப்படையில் ஹனபியின் நடைமுறை சட்டங்களுக்கு மாற்றமாக இருப்பதைக் கண்டார்கள். எப்படி தனது மத்ஹபை விட்டுக் கொடுக்க முடியும்! எனவே முஅத்தா மாலிகி நூலை எழுதிய மாலிக் (ரஹ்) அவர்களையே முஹம்மது ஜகரிய்யா அவர்கள் ஹனபியாக மாற்றி விளக்கம் தந்தார்கள். இதனை இன்றும் ஹதீஸ்கலா வல்லுநர்கள் முஹம்மது ஜகரிய்யா அவர்கள் “முஹன்னஃபுல் மாலிகி” மாலிக்(ரஹ்) அவர்களை ஹனபியாக்கிவிட்டார் எனக் கூறி வருவதை ஹதீஸ்கலையில் காணலாம். இந்த அளவு தங்களது மத்ஹபின் மீது அளவற்ற பற்று வைத்து தணியா வெறியுடன் இருப்பது வருந்ததக்க விஷயமாகும்.

எந்த அரபி மதரஸாவிற்காவது ஹனபி மார்க்கத் தீர்ப்பு கேட்டு எவராவது இன்று ஒரு வினாவெழுதி அனுப்பினால் அவர்கள் பெரும்பாலும் நாம் குறிப்பிட்டுள்ள கடைசி இரு (துர்ருல் முக்தார், ஃபதாவா ஆலம்கீரி) நூல்களிலிருந்து ஆதாரம் தருவதைக் காணலாம். அதாவது இஸ்லாத்தின் அடிப்படைகளான திருகுர்ஆன், உண்மையான நபிமொழி (ஹதீஸ்களிலிருந்து ஆதாரம் தருவதைக் காணலாம். அதாவது இஸ்லாத்தின் அடிப்படைகளான திருகுர்ஆன், உண்மையான நபிமொழி (ஹதீஸ்)களின் ஆதாரங்களில் “ஃபத்வா” மார்க்கத் தீர்ப்பு தரமாட்டார்கள். தங்களிடமுள்ள ரெடிமேட் பிக்ஹு நூல்களிலிருந்து எடுத்துரைப்பார்கள். அதாவது அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மறைவிற்கு 1000 வருடங்களுக்குப் பின் தொகுக்கப்பட்டதிலிருந்து மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். அத்தீர்ப்பை அவர்கள் எப்படியெடுத்தார்கள் என்ற விபரமிருக்காது அந்நூல்கள்தான் தங்களது சட்ட நூல்கள் என்ற பாணியில் சட்டம் தருவார்கள்.

அல்லாஹுவின் பேரருளால் இன்று மக்களிடையே இஸ்லாத்தில் அடிப்படைகளான திருகுர்ஆன், உண்மையான ஹதீஸ்களின் பக்கம் நாட்டம் உருவாகியுள்ளது. எனவே பெரும்பான்மையினர்கள் ஆதாரம் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். இதனை ஒரு சில மெளலவிகளும் உணரத் தொடங்கி குர்ஆன், ஹதீஸ்களின் ஆதாரங்களில் பேசவும் செயலாற்றவும் ஆரம்பித்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.

அண்மையில் திருச்சி டவுன்காஜி அவர்கள் “நபிவழியில் தொழுகை” என நூல் வெயியிடப்போவதாகவும் அதில் குர்ஆன் உண்மையான ஹதீஸ்களின் அடிப்படையில் ஹனபிகளின் தொழுகையை நிலைநாட்டப்போவதாகவும் நோட்டீஸ் வெளியிட்டுள்ளார். வரவேற்கிறோம். நபி(ஸல்) அவர்களை ஹனபியாக்கிவிடாமல், நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில் ஹனபிகளை தொழ வையுங்கள் என டவுன் காஜியாரை கேட்டுக் கொள்கிறோம்.

தெள்ளத் தெளிவாக, வெள்ளவெளேர் என்ற நிலையில் நபி(ஸல்) அவர்கள் தொழுது காட்டியதை அப்படியே எவ்வித வளைத்தலும், திரித்தலும், மறைத்தலுமின்றி ஆதாரங்களாக எடுத்து வைக்க வேண்டுகிறோம். வாழையடி வாழையாக நாம் பின்பற்றி வரும் ஹனபி மத்ஹபுக்கு மாற்றமாக இருக்கிறதே என குர்ஆனையோ, ஹதீஸ்களையோ தங்களது சொந்த ஊகங்களைக் கொண்டு தமது கொள்கைக் கொப்ப திருப்பாமல் தர வேண்டுகிறோம். எவ்வித அடிப்படை ஆதாரங்களுமற்ற மேலே குறிப்பிட்ட ஹனபி பிக்ஹு நூல்களின் ஆதாரங்களைத் தராமல் எவ்வித சந்தேகமுமற்ற திருகுர்ஆன், உண்மையான நபிமொழி (ஹதீஸ்)களின் அடிப்படையில் ‘நபி வழித் தொழுகை” நூலை வெளியிட வேண்டுகிறோம்.

அல்லாஹ் நமது மேற்படி பேராவலை திருச்சி டவுன்காஜி மூலம் நிறைவேற்றி வைப்பானாக! எனப் பிரார்த்திக்கிறோம். நாம் இதுவரை எடுத்து வைத்த ஆதாரங்களை ஹனபிகள் எவராவது மறுப்பார்களேயானால் தங்களிடமுள்ள ஆதாரங்களுடன் நம்மை நேரிலோ, தொலைபேசி மூலமோ, கடிதம் மூலமோ தொடர்பு கொள்ளலாம். நாம் அவர்களது ஆதாரங்களை பரிசீலித்து வெளியிட என்றென்றும் தயாராகவுள்ளோம்.

அல்லாஹ் நம்மனைவருக்கும் நேர்வழி காட்டி குர்ஆன், உண்மை ஹதீஸ்களின்படி வாழ அருள் பாலிப்பானாக! ஆமீன்.
(மனிதர்களே) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கிக் கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள். (7:3)

Previous post:

Next post: