நாஸ்திக நண்பர்களே! நாசத்தை தவிர்ப்பீர்! (1)

in பகுத்தறிவாளர்களே!

நாஸ்திக நண்பர்களே! நாசத்தை தவிர்ப்பீர்!

இரு பிரிவினர் :
இன்று உலகில் வாழும் மனித சமுதாயத்தை இரண்டு பெரும் பிரிவினர்களாகப் பிரிக்கலாம். அவர்களில் ஒரு கூட்டம் இறைவனையும் மறுமையையும் மறுக்கும் கூட்டம். வாழ்க்கை வாழ்வதற்கே, ஆண்டு அனுபவிப்பதற்கே பிறந்திருக்கிறோம். தம் மனம் சரி என்று கருதுவதையே காண்பதையே வாழ்க்கையாகக் கருதி, வாழ்ந்து அனுபவித்து மடிய வேண்டியதுதான். மடிந்தபின் மண்ணோடு மண்ணாக ஆகிவிடுவோம். அதன் பின் ஒரு வாழ்க்கை இல்லை! என்பதே இக்கூட்டத்தாரின் நம்பிக்கையாகும். இவர்களையே நாஸ்திகர்கள் என்று அழைக்கிறோம்.

இந்த நாஸ்திக நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்? அவர்களின் வாதத்தில் உண்மையிருக்கிறதா? அவர்கள் வாழ்வில் வெற்றியடையக் கூடியவர்களா? என்பவனவற்றை அவர்கள் மதித்துப் போற்றும் பகுத்தறிவு கொண்டே ஆராய்வோம்.

இவர்கள் தங்களைப் பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது தங்கள் சிந்தனையில் வராதவற்றை எல்லாம் புலன்களுக்கு எட்டாதவற்றை எல்லாம், மறுத்து விடுவது என்பதே இவர்களின் பகுத்தறிவு வாதமாகும். அந்த அடிப்படையில் இறைவனை இவர்களின் அறிவுத் திறமையால் ஆராய்ந்தறிய முடியவில்லை. புலன்களாலும் உய்த்துணர முடியவில்லை.

மறுமை விஷயத்திலும் இதே நிலைதான்! ஆகவே இறைவனும் இல்லை. மறுமையும் இல்லை என்று துணிந்து கூறிவிடுவார்கள்.

பகுத்தறிவின் நிலை :
நாஸ்திக நண்பர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் பகுத்தறிவும், புலன்களும் எந்த அளவு நம்பிக்கைக்கு உரியன என்பதை முதலில் ஆராய்வோம். ஏன் என்றால், அளப்பதற்கு முன் அளக்கும் கருவியையும், நிறுப்பதற்கு முன் நிறுக்கும் கருவியையும் கண்டிப்பாக சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையயன்றால் அளவையிலும், நிறுவையிலும் தவறுகள் ஏற்பட்டு விடும் என்பதை நாஸ்திக நண்பர்களும் மறுக்க மாட்டார்கள்.

பகுத்தறிவைக் கொண்டு மிகப் பெரிய வி­யமான இறைவனையும், இன்னொரு பெரிய விஷயமான மறுமையையும் ஆராயப் புகுமுன், அதே பகுத்தறிவைக் கொண்டு மட்டும் சிறிய விஷயமான, நமக்கு நெருக்கமான தாயையும், தகப்பனையும் முதலில் அறிந்துகொள்ள முயற்சி செய்தால் அதன் முடிவு என்ன? தலை மயிரை எல்லாம் பிய்த்துக் கொண்டாலும், சுயமாகத் தம் பகுத்தறிவால் மட்டும் இவர்கள் நம்மைப் பெற்றெடுத்த தாயையும், தகப்பனையும் உறுதியாக அறிந்துகொள்ள முடியாது. உடனே இவர்கள் எனக்கு தாயும்,தகப்பனும் இல்லை. நான் வானத்திலிருந்து குதித்துவிட்டேன் என்று சொல்வார்களா? இங்கு பெற்றெடுத்தத் தாயையும், தகப்பனையும் அறிந்து கொள்ள இவர்களின் பகுத்தறிவும், புலன்களும் உதவுவதாக இல்லை. ஊரை நம்பி தாயையும் தாயை நம்பி தந்தையையும் அறிந்துகொள்ள வேண்டியதாக உள்ளது. தன்னைப் பெற்றெடுத்த தனக்கு மிகவும் நெருக்கமான பெற்றோரைத் தனது பகுத்தறிவு கொண்டு அறிந்து கொள்ள முடியாதவனா அந்த பகுத்தறிவின் துணை கொண்டு, தன்னையும், தன் பெற்றோரையும், அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் போக்கக் கூடிய, சர்வ வல்லமைமிக்க இறைவனை அறிந்துகொள்ள முடியும்? ஒரு போதும் முடியாது. தங்கள் பகுத்தறிவையும், சிந்தனா சக்தியையும் பெரிதாக நம்பும் இந்த நாஸ்திகர்கள், தாங்கள், தங்கள் தாயின் கர்ப்பப்பையில் 10 மாதம் இருந்து வந்தது, நமது சிறு பிராயத்தில் நடந்த சம்பவங்களை சிந்தித்து விளங்கிக் கொள்ள முடிகின்றதா? கண் முன்னால் பல குழந்தைகள் தாயின் வயிற்றில் இருந்து பிறப்பதைப் பார்த்து விளங்குகிறோம் என்று சொல்வது தவறு. அப்படி ஒரு வாய்ப்பு தங்களுக்குக் கிடைக்காவிட்டால் தாங்கள் கர்ப்பப்பையில் இருந்து வந்ததை மறுப்பார்களா?

நடந்த நிகழ்ச்சியைச் சிந்தித்து விளங்கிக் கொள்ள முடியாதவன், நடக்கப் போகும் ஒரு நிகழ்ச்சியை, அதுவும் மரணத்திற்குப்பின் நடக்க இருப்பதைச் சிந்தித்து விளங்கிக் கொள்ள முற்படுவது விவேகமான செயலா என்று சிந்திப்பார்களாக.

அ…ப்…பா என்று சொல்வதற்கே தாளம் போடுகிறவன் திருக்குறளுக்கு விளக்கம் சொல்ல முடியாது என்பதையும் 2+2=4 என்பதைத் தெரியாதவன் 2100 எவ்வளவு என்பதை நிச்சயமாக அறியமாட்டான் என்பதையும் எவ்வளவு நிச்சயமாக அறிந்திருக்கிறோமோ, அதேபோல் பெற்றெடுத்த பெற்றோரை, பகுத்தறிவால் அறிய முடியாதவரை இறைவனையும், மறுமையையும் நிச்சயமாக அறிய முடியாது என்பதையும் உணர வேண்டும். ஒன்றுமே இல்லாமல் இருந்து, இன்று மனிதனாக உலா வருகிறோமே, இதை முறையாகச் சிந்தித்தால், நம்மைப் படைத்த இறைவன் இருக்கிறான் என்பதை உணர முடியும்.

உலகில் பார்க்க முடியாதவை பல!
அடுத்து உலகில் எத்தனையோ காரியங்களை கண்ணால் பார்க்க முடியாமல், அவற்றின் விளைவுகளை வைத்து நாஸ்திகர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறார்கள். உயிர், காற்று, வலி, மின்சாரம் இவற்றைக் கண்ணால் பார்க்க முடியாவிட்டாலும், விளைவுகளை வைத்து ஒப்புக்கொள்கிறார்கள். சிறுநீரில் சர்க்கரை இருக்கிறதா? என்று எந்த டாக்டரும் சுவைத்துப் பார்த்துச் சொல்வதில்லை. அப்படி எந்த நாஸ்திக நண்பரும் எதிர்பார்க்கவும் மாட்டார். சிறுநீரில் சர்க்கரை இருந்தால் அதன் விளைவு என்ன என்பதை வைத்தே ஒப்புக்கொள்கிறார்கள். இதேபோல் உடம்பிலுள்ள எத்தனையோ வியாதிகளைக் கண்ணால் பார்த்தோ, புலன்களால் நேரடியாக உய்த்துணர்ந்தோ வைத்தியம் செய்யப்படுவதில்லை. வியாதிகளின் விளைவுகளை வைத்தே முடிவு செய்யப்படுகிறது. ஆறடி மனிதனுக்குள் இருக்கும் ஒரு வியாதியை நேரடியாகப் பார்க்க முடியவில்லை. புலன்களாலும் உய்த்துணர முடியவில்லை. இவ்வளவுதான் பகுத்தறிவின், புலன்களின் நிலைகள். இந்த நிலையில் இவற்றை வைத்துக்கொண்டு இறைவனையும், மறுமையையும் அறிய முற்படுவது விவேகமான செயலா? என்று நாஸ்திக சகோதரர்கள் சிந்திக்க வேண்டும். இதுவரை நாம் சொல்லி வந்தது போல் உலகில் எத்தனையோ விஷயங்களை, பகுத்தறிவு கொண்டு புலன்கள் கொண்டு நேரடியாக விளங்கிக் கொள்ள முடியாதவற்றை, ஒப்புக்கொள்ளும் நாஸ்திக நண்பர்கள், இறைவனையும், மறுமையையும், நேரடியாகப் பார்த்தே புலன்களால் உய்த்துணர்ந்தே ஒப்புக் கொள்வோம். இல்லையயன்றால் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று விவாதிப்பது நாஸ்திகர்கள் ஏதோ ஒரு வகையில் தவறான நிலையில் இருக்கிறார்கள் என்பதையே, நமக்கு உணர்த்துகின்றது. இவர்களின் பகுத்தறிவு வாதத்தின் ஆழத்தை அறிந்து கொள்ள சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சம்பவத்தை ஓர் அறிஞருக்கும், நாஸ்திகருக்கும் நடந்து முடிந்த போட்டி விபரங்களை அறியத் தருகிறோம்.

அழகிய படிப்பினை
ஓர் அறிஞர் இறைவன் இருக்கிறான் என்று சொன்னார். நாஸ்திகர், உங்களால் அப்படி நிரூபிக்கவே முடியாது. பகிரங்கமாக நமது போட்டியை வைத்துக் கொள்வோம். மக்கள் எல்லாம் பார்வையாளர்களாக இருக்கட்டும் என்றார். இருவரும் போட்டிக்கு ஒப்புக் கொண்டு நாளும் நேரமும் குறிப்பிடப்பட்டு அறிவிக்கப்பட்டது.

குறிப்பிட்ட நாளில் குறிப்பிடப்பட்ட நேரத்திற்குச் சரியாக நாஸ்திகர் போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்து விட்டார். மக்கள் நிரம்பி வழிகிறார்கள். அறிஞரையோ காணோம். நாஸ்திகர் முகத்தல் சந்தோ­ம். இறைவன் இருக்கிறான் என்று நிரூபிக்க முடியாது என்று அஞ்சி அறிஞர் வீட்டிலேயே இருந்து விட்டார் என்று அங்கு பேசிக் கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் தூரத்தில் அந்த அறிஞர் ஓட்டமும் நடையுமாக வருவது தெரிகின்றது. வேகமாக வந்த அறிஞர் மேடையில் ஏறுகிறார்.

முதலில் நான் காலதாமதமாக வந்ததற்கு உங்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். உரிய நேரத்தில் நான் வீட்டை விட்டு கிளம்பி விட்டேன். இங்கு வந்து சேர நான் ஒரு ஆற்றைக் கடந்து வர வேண்டும். வழக்கமாகத் தோணிக்காரன் இருப்பான். இன்று தோணிக்காரனும் இல்லை. தோணியும் இல்லை. எனக்கு மிகவும் கவலையாகப் போய்விட்டது. போட்டிக்கு ஒப்புக் கொண்டிருக்கிறோமே. உரிய காலத்தில் போகாவிட்டால், அது எவ்வளவு பெரிய இழுக்கு என்று என் மனம் மிகவும் வேதனைப் பட்டது. திடீரென்று ஒரு அதிசயம் நடந்தது பார்த்தீர்களா? தானாகவே ஒரு மரம் அங்கு வந்தது. அது தானாகவே தோணியாகத் தயாராகி விட்டது. உடனே மகிழ்ச்சியோடு நான் அதில் ஏறி இக்கரை வந்து ஓடோடி வருகின்றேன் என்று சொல்லி முடித்ததுதான் தாமதம் நாஸ்திகர் என்ன? கதை விடுகிறீர்களா? தானாக மரம் வருமா? தானாகத்தோணி தயாராகுமா? இதை எந்த மடையனும் ஏற்றுக் கொள்வானா? என்று ஆத்திரத்துடன் கேட்டார். அறிஞர் ஆத்திரப்படாமல் நிதானமாக சூரியன் தானாக சுழல்கிறது. பூமி தானாக சுழல்கிறது. பூமி மீதுள்ள அனைத்தும் தானாகவே உற்பத்தியாகி இருக்கின்றன என்று நீர் சொல்வதை நாங்கள் நம்ப வேண்டுமென்றால், இவ்வளவு பெரிய, பெரிய காரியங்கள் தானாகவே நடப்பது சாத்தியம் என்றால், சின்னஞ்சிறிய காரியமான ஒரு மரம் தானாக வந்து தானாக தோணி உண்டாவது மட்டும் சாத்தியமில்லாத காரியமோ? அதை நம்பக் கூடாதோ? என்று கேட்டார். இப்போதுதான் நாஸ்திகரின் முகத்தில் அசடு வழிந்தது. தனது தவறை உணர்ந்தார். நாஸ்திகப் போக்கை மாற்றிக் கொண்டார். நாஸ்திக நண்பர்கள் இதிலிருந்து படிப்பினைப் பெறுவார்களாக?

குற்றவாளி தப்ப முடியுமா?
பகுத்தறிவால் பெறப்படும் முடிவுகள் சரியாக இருக்குமானால், எந்த உண்மையான திருடனையும் நீதிபதி திருடன் இல்லையயன்று தீர்ப்புக் கூறக் கூடாது. எந்த உண்மையான கொலையாளியையும் நீதிபதி கொலையாளி இல்லை என்று தீர்ப்புக் கூறக் கூடாது. நாட்டில் இப்படியா நடந்து வருகின்றது. குற்றவாளிகள் விடுவிக்கப்படுகிறார்கள். குற்றமற்றவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். இது ஒன்றே போதும் பகுத்தறிவின் நிலையை உணர்ந்து கொள்ள  நாஸ்திக நண்பர்களே! பகுத்தறிவை மட்டும் நம்பினால் மோசம் போய்விடுவோம். சிந்தித்து திருந்த முன் வாருங்கள். அடுத்து இறைவனையும், மறுமையையும், பகுத்தறிவாலும், புலன்களாலும் மட்டும் ஏன் அறிந்து கொள்ள முடியவில்லை என்பதற்குரிய காரணங்களைப் பார்ப்போம்.    (தொடரும்)

Previous post:

Next post: