என் கேள்விக்கு என்ன பதில்?

in 2014 பிப்ரவரி,பிறை

அபூ அப்தில்லாஹ்

கணக்கீட்டுப் பிறையா? கண்ணில் படும் பிறையா? என்ற சர்ச்சை ஏற்பட்ட காலத்திலிருந்தே ததஜ மத்ஹபு இமாமை பகிரங்க விவாதத்திற்கு அழைத்துக் கொண்டிருக்கிறோம். அந்நஜாத்தில் அழைக்கிறோம். தனித் தனிப் பிரசுரங்கள் மூலம் அழைக்கிறோம். அவரது பக்தகோடிகள் அவர் மீதுள்ள அபார குருட்டு நம்பிக்கையில் “”எங்கள் அண்ணனோடு நீங்கள் விவாதம் செய்ய முடியுமா? அந்தத் தைரியம் உங்களுக்கு உண்டா? அதற்குத் தயார் என்றால் இப்படி உங்கள் பத்திரிக்கையில் எழுதுவதை விட்டு, பிரசுரங்கள் வெளியிடுவதை விட்டு, நேரடியாக எங்கள் அண்ணனுக்கே அழைப்பு அனுப்ப வேண்டும் என்று வீராப்புப் பேசியதற்கு இணங்க, பீ.ஜைக்கே இருமுறை நேரடியாகக் கடிதம் பதிவுத் தபாலில் அனுப்பி விட்டோம். எமது கடிதத்திற்கே நேரடியாகப் பதில் எழுதப் பயந்து நடுங்கும் அவர் நேரடி விவாதத்திற்கு எங்கே வரப் போகிறார்? நேரடி விவாதத்திற்குப் பயந்து பிடறியில் பின்னங்கால் அடிபட ஓடும் அவர், நாம் விவாதத்திற்கு வராமல் பிடறியில் பின்னங்கால் அடிபட ஓடுவதாக அவரது பக்தகோடிகள் மூலம் செய்தி பரப்பிக் கொண்டிருக்கிறார்.

அவரது பக்தர்களோ அவர் கருப்பை வெள்ளை என்று சொன்னாலும் ஆம்! வெள்ளைதான் என்றும், வெள்ளையைக் கருப்பு என்று சொன்னாலும் ஆம்! கருப்புதான் என்றும் கண்மூடிச் சொல்லும் சுய சிந்தனை அற்றவர்களாகவே இருக்கிறார்கள். அதனால்தான் பிறைகள் கிழக்கே உதித்து மேற்கே மறைகின்றன என்ற அறிவியல் உண்மைக்கு முரணாக பீ.ஜை.யின் பிறைகள் மேற்கே உதித்து கிழக்கே மறைகின்றன என்ற மூடத்தனமான பிதற்றலை ஏற்று அப்படியே பிதற்றித் திரிகிறார்கள்.

குர்ஆன், நபி நடைமுறை மட்டுமே மார்க்கம், குர்ஆனில் இல்லாததை, நபி நடைமுறையில் இல்லாததை யார் சொன்னாலும் அவர் கலீஃபாவாக இருந்தாலும், நபி தோழராக இருந்தாலும், தாபியீயாக இருந்தாலும், தபஅதாபியீயாக இருந்தாலும், இமாமாக, இருந்தாலும், அவுலியாவாக இருந்தா லும், முன்னோர்கள் சொன்னதாக இருந்தாலும், பின்னோர்கள் சொன்னதாக இருந்தாலும், அன்றுள்ளோர் சொன்னதாக இருந்தாலும், இன்றுள்ளோர் சொன்னதாக இருந்தாலும் அது ஒருபோதும் மார்க்கம் ஆகாது என்று பீ.ஜை. 1986லிருந்து 2014 இன்று வரை பிரகடனப்படுத்திக் கொண்டிருப்பது அவரது பக்தகோடிகளிலிருந்து அனைவரும் அறிந்த உண்மை. மார்க்கம் என்று எதை யார் சொன்னாலும் அதை குர்ஆனில் பாருங்கள். ஹதீஃதில் பாருங்கள், இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த இரண்டிலும் இல்லை என்றால் அதைக் குப்பைத் தொட்டியில் எறிந்து விடுங்கள் என்று பீ.ஜை. பகிரங்கப்படுத்தியதையும் அவருடன் பழகியவர்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். இது ஊருக்கு மட்டும்தான் உபதேசமா? அல்லது அவரும், அவரது பக்தர்களும் இந்த உபதேசப்படி நடப்பவர்களா என்பதைப் பார்ப்போம்.

அவரும் அவரது பக்தகோடிகளும் கோரஸ் பாடும் “”தவ்ஹீத்” குர்ஆனில் இருக்கிறதா? ஹதீஃதில் இருக்கிறதா? இல்லையே! குர்ஆன், ஹதீஃதில் இல்லாத ஒன்றை எப்படிப் பெயராகக் கூறித் திரிகிறார்கள்? நாங்கள்தான் தவ்ஹீத்வாதிகள்? நேர்வழி நடப்பவர்கள் என்று பிதற்றித் திரிகிறார்கள்? ஆனால், யார் நேர்வழி நடப்பவர்கள், யார் கோணல் வழிகளில் செல்பவர்கள் என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான். நீங்கள் அறியமாட்டீர்கள் என்று திட்ட மாக, தெளிவாக, நேரடியாக அல்லாஹ் பல குர்ஆன் வசனங்களில் நெத்தியடியாகக் கூறி இருக்க (பார்க்க : 16:9, 6:71, 7:155, 4:88, 28:56, 7:178. 17:97, 18:17, 39:37, 6:77, 2:124, 10:25, 14:4, 2:272, 6:88, 40:28, 53:30, 30:53, 27:81, 4:115, 18:57,28:85, 2:213, 17:84, 36:21) அல்லாஹ் வின் இந்த பகிரங்க அறிவிப்பை நிராகரித்து ததஜ வினர் எந்த அடிப்படையில் நாங்கள் தான் நேர்வழி நடப்பவர்கள். தவ்ஹீத்வாதிகள் எனத் தப்பட்டம் அடிக்கின்றனர்? (பார்க்க : 7:30)

உங்களை நீங்களே பரிசுத்தவான்கள்-நேர்வழி நடப்பவர்கள் என்று பீற்றிக் கொள்ள வேண்டாம். உங்களில் பரிசுத்தவான்கள், நேர்வழிநடப்பவர்கள் யார் என்பதை அல்லாஹ்வே அறிந்தவனாக இருக்கி றான் என்று 4:49, 53:32 இரண்டு இடங்களில் நெத்தியடியாகக் கூறி இருப்பதை நிராகரித்து குஃப்ரிலாகி தங்களைத் தாங்களே தவ்ஹீத்வாதிகள்-ஏகத்துவவாதிகள்-நேர்வழி நடப்பவர்கள் என தப்பட்டம் அடிப்பது குர்ஆன், ஹதீஃத்களில் இருக்கிறதா? அல்லது அவற்றிற்கு முரணான பித்அத்தான பிதற்றலா? குர்ஆன், ஹதீஃதில் இல்லை என்றால் பீ.ஜை யின் பகிரங்க அறிவிப்புப்படி தவ்ஹீத்வாதி எனப் பீற்றுவது குப்பைத் தொட்டியில் எறியப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியுமா? இதுதான் என் கேள்வி? பதில் என்ன?

தங்கள் ஜமாஅத் “”தவ்ஹீத் ஜமாஅத்” என மேடைக்கு மேடை பிதற்றுவதின் உண்மை நிலை என்ன? “”தவ்ஹீத்” என்றால் ஏகத்துவம் என்பதை ததஜவினரும் மறுக்க மாட்டார்கள். தங்களின் மாத இதழுக்கு ஏகத்துவம் என்றே பெயரிட்டுள்ளனர். “”ஏகத்துவம்” என்றால் இணை, துணை, தாய், தந்தை, பிள்ளைகள், தேவை, இடைத்தரகு, கூட்டு இவை அனைத்தையும் விட்டும் விடுபட்டவன் அல்லாஹ் என்பதுதான் தவ்ஹீதின் -ஏகத்துவத்தின் பொருள். ஜமாஅத் என்றால் “”கூட்டமைப்பு” என்ப துவே அதன் பொருள். அப்படியானால் “”தவ்ஹீத் ஜமாஅத்” என்றால் “”ஏகத்துவக் கூட்டமைப்பு” என்பதுதான் அதன் பொருள். இதை மறுப்பாளர்களா? ததஜவினர்?

அப்படியானால் “”அல்லாஹுஸ்ஸமத்” அல்லாஹ் தேவையற்றவன் என்பதை மறுத்து அல்லாஹ் தேவையுடையவன் என்கின்றரா ததஜ வினர். இது குஃப்ர்-இறை நிராகரிப்பா? இல்லையா? தேவையுடையவர்கள் மட்டுமே கூட்டுச்சேர முடியும் என்பதை மறுப்பார்களா ததஜவினர்? தேவையே இல்லாத எந்த வகையிலும் கூட்டுச் சேரவே முடியாத அல்லாஹ்வுடன் இவர்கள் கூட்டுச் சேர்ந்திருப்பதாக அதாவது தவ்ஹீத் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத் என மேடைகளில் ஓயாது இவர்கள் முழங்குவது எதைக் காட்டுகிறது? பதில் என்ன?

“”தங்களிடம் ஞானம் வந்த பின்னர், தங்களுக்கிடையே உள்ள பொறாமையின் காரணமாகவே தவிர அவர்கள் பிரிந்திடவில்லை. குறித்த ஒரு தவணையில் உம் இரட்சகனின் வாக்கு முந்தியிருக்காவிட்டால் அவர்களிடையே தீர்ப்பு அளிக்கப்பட்டே இருக்கும். அவர்களுக்குப் பின்னர் இந்நெறி நூலுக்கு வாரிசாக் கப்பட்டவர்கள் இதில் பெரும் ஐயத்திலேயே இருக்கிறார்கள். (42:14)

அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கும் இணையாளர்கள் அவர்களுக்கு இருக்கின் றனரா? மேலும் தீர்ப்புக் குறித்த வாக்கு இல்லாதிருப் பின், அவர்களுக்கிடையில் முடிவு செய்யப்பட்டே இருக்கும். அக்கிரமக்காரர்களுக்கு நோவினை மிக்க தண்டனை நிச்சயமாக உண்டு. (42:21)

நீங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கே கற்றுக் கொடுக்கிறீர்களா? அல்லாஹ்வோ வானங்கள், பூமியில் உள்ளவற்றை நன்கறிந்தவன். ஒவ்வொன் றையும் நன்கறிகிறான் என்று கூறும். (49:16)

இந்த மூன்று இறைவாக்குகளையும் மீண்டும் மீண்டும் படித்து நெஞ்சத்தில் உறைய வைத்து ஆழ்ந்து சுயமாகச் சிந்திப்பவர்கள் மட்டுமே தவ்ஹீத் வாதி, தவ்ஹீத் ஜமாஅத் என தங்களைத் தாங்களே சுயமாகப் பெயரிட்டுப் பிரகனப்படுத்துவோர், பித்அத், குஃப்ர், ´ஷிர்க் அனைத்திலும் முழுக்க முழுக்க முங்கிக் குளிக்கிறார்கள் என்பதைத் திட்டமாக விளங்க முடியும். நவீன மத்ஹபான ததஜவில் முங்கிக் குளித்து, ததஜ மத்ஹப் போதையில் மதி மயங்கி இருப்பவர்கள் இந்த உண்மையை விளங்கவே முடியாது. இந்த எமது குற்றச்சாட்டு தவறு என்றால் எவ்வித சுய விளக்கம், சுய புராணம் இல்லாமல், ததஜ மத்ஹப் இமாமின் வாக்குறுதிப்படி குர்ஆன், ஹதீஃத் கொண்டு மட்டுமே எமது தவறை உணர்த்த வேண்டுகிறோம். இதுதான் எமது கேள்வி? பதில் எங்கே?

இதேபோல், கண்ணுக்குத் தெரியும் 3ம் பிறையே முதல் பிறை; நபி(ஸல்) அப்படித்தான் வரையறுத்துள் ளனர் என்று ததஜ இமாமும், மத்ஹபினரும் கூறித் திரிகிறார்கள். அதே சமயம் கணக்கீட்டின் மூலம் துல்லியமாக மாதம் பிறப்பதை முன்கூட்டியே அறிய முடியும் என்பதையும் எவ்வித மறுப்பும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறார்கள். இதோ ததஜ இமாமின் ஒப்புதல் வாக்குமூலம்.

இதோ ததஜ தலைமைப் புரோகிதர் கூறுகிறார் படித்துப் பாருங்கள்.
இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். வானியல் கணிப்பை ஏற்று, முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். வானியல் நிபுணர்களால் கணிக்கவே முடியாது என்று நாம் வாதிடுவதாகக் கருதக் கூடாது.

பல நூறு வருடங்களுக்குப் பின்னால் சென்னையில் தோன்றக் கூடிய சந்திர கிரகணத்தை இன்றைக்கே அவர்களால் கணித்துச் சொல்ல முடியும். எத்தனை மணி, எத்தனை நிமிடத்தில் தோன்றும் என்று கணிக்கிறார்களோ அதில் எந்த மாற்றமு மின்றி அது நடந்தேறும். அந்த அளவு வானியல் வளர்ந்து விட்டது என்பதை நாம் ஏற்றுக் கொள்வோம்.
இன்று இந்தப் பகுதியில் பிறை தென்படும் வகையில் இருக்கும் என்று கணித்துக் கூறினால் அந்தப் பகுதியினர் காணும் வகையில் ஆகாயத்தில் நிச்சயம் இருக்கும். ஏனெனில் அந்த அளவுக்குத் துல்லியமாகக் கணிக்க இயலும். மேகம் மற்றும் புறக் காரணங்களால் நமது பார்வைக்குத் தெரியாமல் போகவும் கூடும்.

அவர்களது கணிப்பு சரியானது தான் என்பதை ஏற்றுக் கொள்ளும் அதே சமயத்தில் தலைப் பிறையைத் தீர்மானிக்க அதை அளவு கோலாகக் கொள்ளக் கூடாது என்பதுதான் நமது வாதம். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் மாதத்தின் முதல் தினத்தைத் தீர்மானிப்பதற்குக் கண்ணால் பார்க்க வேண்டும் என்று வரையறுத்து விட்டனர்.
(ஏகத்துவம்: ஏப்ரல் 2009 பக். 31.32)ததஜ மத்ஹப் இமாம் கூறுவது புரிகிறதா?

தலைப்பிறையைப் புறக் கண்ணால் பார்த்து மட்டுமே தீர்மானிக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளதாக ததஜ மத்ஹப் இமாம் கூறுகிறார். குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்கம் என்று 1986லிருந்து கூறி வரும் அவர், தலைப் பிறையைப் புறக்கண்ணால் மட்டுமே பார்க்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளை யிட்டுள்ள ஆதாரபூர்வமான ஹதீஃதைக் காட்ட வேண்டும். இன்று வரை காட்டினாரா? இல்லையே! குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்கம் என்று அவர் சொல்வதில் வாய்ச்சொல் வீரராக மட்டுமே திகழ்கிறார். அவரது சொல்லுக்கும் செயலுக்குமுள்ள முரண் பாட்டைப் பாருங்கள். முழுக்க முழுக்க நயவஞ்சகம்!

கண்ணால் பார்க்கச் சொல்லும் ஹதீஃதைக் கேட் டால் 1435 வருடங்களுக்கு முன்னர் அன்று நபி (ஸல்) அவர்கள் கண்ணால் தானே பார்த்தார்கள் என்று புருடா விடுகிறார். ஜமுக்காளத்தில் வடித்தெடுத் தப் பொய்யைச் சொல்கிறார். நபி(ஸல்) நேரடியாகத் தமது கண்ணால் பிறை பார்த்ததாக ஒரு ஹதீஃதிலும் இல்லவே இல்லை. “”ஸூமூலிருஃயத்திஹி அஃப்தி ரூலிருஃயத்திஹி” அதாவது சந்திரனில் தினசரி ஏற்படும் மாற்றத்தை-மன்ஜில்கள் (பார்க்க: 2:189, 36:39) பார்த்து முடிவு செய்து நோன்பை ஆரம்பியுங்கள். நோன்பை முடியுங்கள் என்ற கட்டளையிட்டுள் ளதை மறுத்து சுய புராணம் சொல்லி, மாதக் கடைசி யில் மஃறிபு நேரத்தில் மேற்கில் பிறை பார்க்கும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளதாக அப்பட்ட மான பொய்யைச் சொல்கிறார். பிறை மேற்கில் பிறந்து, கிழக்கில் மறைகிறது என்று இன்னொரு பொய்யைச் சொல்கிறார்.

ஆம்! நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக அப்பட்டமான பொய்யைச் சொல்கிறார். “”என்மீது வேண்டு மென்றே பொய் உரைப்பவன் நாளை நரகில் தனது இருப்பிடத்தைத் தேடிக் கொள்ளட்டும்” என்று கூறும் முத்தவாத்திரான ஹதீஃதை நிராகரித்து-குஃப்ரிலாகி நபி(ஸல்) அவர்கள் மீதே கடைந்தெடுத்தப் பொய் யைக் கூறுகிறார்.

வஹியின் தொடர்புடனும், அல்லாஹ்வின் கண் காணிப்பிலும் (52:48) இருந்த இறுதி நபி(ஸல்) அவர்களே, அல்லாஹ்வின் ஃபியலான அறிவிய லுக்கு முரணாக (பார்க்க : 6:96, 7:54, 10:5, 13:2, 14:33, 16:12, 21:33, 31:29, 35:13, 36:40, 39:5, 55:5) சந்திரனின் ஓட்டம் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் இல்லை. மனிதக் கண்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கிறது என்று அப்பட்டமான தார்ப்பாயில் வடித்தெடுத்த முழுப் பொய்யை சொன்னதாகச் சொல்லும் ததஜ இமாமுக்கு எந்தளவு நெஞ்சழுத்தம் இருந்தால், அல்லாஹ்வின் அச்சமின்றி நபி(ஸல்) அவர்கள் மீதே பொய்யை இட்டுக்கட்டிக் கூறும் துணிச்சல் ஏற்படும். இது பொய்யா? இல்லையா? பதில் எங்கே?

இதை ஆரம்பத்தில் எடுத்துக்காட்டிய போது இவர்களின் கணக்கீட்டுப்பிறைக்கு ஒரு சில குர்ஆன் வசனங்கள் ஆதாரமாக இருந்தால் போதுமா? என குர்ஆனை நிராகரித்து உளறியவர்தான் ததஜ மத்ஹப் இமாம்!

அது சரி! ஒரு வாதத்திற்கே ததஜவினர் பிடிவாதம் பிடிப்பது போல் அன்று நபி(ஸல்) அவர்களே கண்ணால் பார்த்தே முதல் பிறையைத் தீர்மானித்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இன்று போல் 1435 வருடங்களுக்கு முன்னர் அன்று, இப்போது நடை முறைக்கு வந்துள்ள கணினி (Computer), சூரியன், சந்திரன் இவற்றின் சுழற்சி பற்றிய துல்லிய கணக் கீட்டு முறை (கணிப்பு அல்ல) இவை அனைத்தும் இருந்து சந்திர மாதம் ஆரம்பிக்கும் நாளை முன் கூட்டியே இன்று ததஜ மத்ஹபு இமாம் துல்லியமாக அறிந்து வைத்திருப்பது போல்(பார்க்க அவரது ஏகத்துவம் ஏப்ரல் 2009 இதழ் பக்கம் 31,32) மிகத் துல்லியமாக அறிந்து வைத்துக்கொண்டு, நபி(ஸல்) அவர்கள் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து மட்டுமே தலைப் பிறையைத் தீர்மானிக்கக் காத்திருந்தார்கள் என்று சொல்கிறாரா? பதில் எங்கே!

ஒருவேளை சு.ஜ.மனாருல்ஹுதா மாத இதழ் சொல்வது போல் 1435 ஆண்டுகளுக்கு முன்னரும் இந்தக் கணக்கீட்டு முறை இருந்தது என்று தார்ப்பாயில் வடித்தெடுத்த அண்டப் புளுகை ததஜ மத்ஹப் இமாமும் சொன்னாலும் சொல்வார். அந்த அளவு அவர்களின் உள்ளங்கள் கற்பாறைகளை விட மிகக் கடினமாக இறுகிவிட்டன.
(பார்க்க:2:74, 5:13, 6:43,125, 57:16)

உண்மை நிலை என்ன? இன்று போல் அன்று நவீன வாகனங்கள் இல்லை. நேரம் அறிய கடிகாரம் இல்லை, உடனடியாகத் தூரத்து செய்திகள் அறிய தொலைத் தொடர்பு சாதனங்கள் இல்லை. சந்திர மாதம் பிறப்பதைத் துல்லியமாக அறிய விண்ணியல் அறிவியலோ, நவீன கணினி கணக்கீட்டு முறையோ 1435 வருடங்களுக்கு முன்னர் இல்லவே இல்லை. அதனால் 22:27 இறைவாக்குக் கூறுவது போல் அன்று ஹஜ்ஜுக்கு ஒட்டகத்தில் சென்றார்கள், சூரிய ஓட்டத்தைக் கண்ணால் மட்டுமே பார்த்து ஐங்கால தொழுகைகளைத் தொழுதார்கள், தூரத்து மரணம் போன்ற அத்தியாவசிய செய்திகளையும் காலம் தாழ்ந்து ஆள் நேரில் வந்து சொல்லி அறியும் கட்டாயம் இருந்தது. அதே வரிசையில் சந்திர மாத ஆரம்பத்தையும் அன்றாடம் மன்ஜில்களை சந்திர னைக் கண்ணால் பார்த்துத் தீர்மானிக்கும் கட்டாயம் இருந்தது.

ஆனால் நவீன கண்டுபிடிப்புகளுக்குப் பின்னர் இன்றோ ஹஜ்ஜுக்கு விமானத்தில் செல்கிறார்கள் ஒட்டகத்தில் இல்லை. கடிகாரம் பார்த்து நேரத்தை அறிந்து தொழுகிறார்கள், சூரிய ஓட்டத்தைப் பார்ப்ப தில்லை. தூரத்துச் செய்திகளை தொலைத் தொடர்பு கள் மூலம் அறிகிறார்கள். ஆள் நேரில் வருவதில்லை. அதே வரிசையில் கணினி கணக்கீட்டு முறை (கணிப்பு அல்ல) மூலம் சந்திர மாதம் பிறப்பதை முன் கூட்டியே அறிந்து நோன்பை ஆரம்பித்து, நோன்பை முடித்து, பெருநாள் கொண்டாடுவது எப்படி குர்ஆன், நபி வழிக்கு மாற்றமாகும். இன்றும் பிறையைக் கண்ணால் பார்த்து மட்டுமே மாதத்தை துவங்க வேண்டும் என அடம் பிடிப்போர், இன்றும் ஒட்டகத்தில் ஹஜ்ஜுக்குச் செல்ல வேண்டும். சூரிய ஓட்டத்தைக் கண்ணால் பார்த்தே ஐங்கால தொழுகை தொழ வேண்டும். தூரத்து மரண செய்தியை ஆள் நேரில் வந்து சொன்ன பின்னரே புறப்பட்டுச் செல்ல வேண்டும். இப்படியா செயல்படுகிறார்கள். இவற்றிற் கெல்லாம் தங்களின் சுய விளக்கங்களை, சுய புராணங்களை, இன்று கூறி அவற்றை நிராகரிக்கிறார்கள். குர்ஆன், ஹதீஃத் ஆதாரம் எங்கே?

உண்மை என்ன தெரியுமா? நவீன கண்டு பிடிப்புகளின் மூலம் மாற்றம் ஏற்படும் போது இவர்களின் ஆபாக்களான மதகுருமார்கள் இன்று இம்மத குருமார்கள் வானத்திற்கும் பூமிக்கும் இடையில் எகிறிக் குதிப்பது போல் குதிக்கத்தான் செய்தார்கள். அவர்கள் மாறவே இல்லை. காலம்தான் அவர்களை மாற்றியது. அதே போல் இன்று பிறை விவகாரத்தில் புறக்கண்ணால் மட்டுமே பிறையைப் பார்த்து மாதத்தைத் துவக்க வேண்டும் என்று வானத்திற்கும் பூமிக்கும் எகிறிக் குதிப்போர் ஒருபோதும் மாற மாட்டார்கள். மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டி ருப்போர் நேர்வழிக்கு வந்ததாக வரலாறே இல்லை என்பதை 36:21 இறைவாக்கு உறுதிப்படுத்துகிறது. இதோ அல்குர்ஆன் 3:77 இறைவாக்கு இன்னும் நேரடியாகக் கூறுகிறது.

அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கும் தம் சத்தியங்களுக்கும் அற்பக்கிரயம் பெறுபவர்களுக்கு மறுமையில் எவ்வித பாக்கியமுமில்லை. அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான். இறுதி நாளில் அவன் அவர்களைப் பார்க்கவும், தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு நோவினை மிக்கத் தண்டனையும் உண்டு. (3:77)

“தலைப்பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே மாதத்தைத் துவங்க வேண்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் வரையறுத்துவிட்டார்கள். மாதக் கடைசி யில் மாலை நேரத்தில் மேற்கே மறையும் பிறையைப் பார்த்தே பிறை பிறந்துவிட்டது. நாள் ஆரம்பித்து விட்டது, நாள் மாலை மஃறிபில் ஆரம்பிக்கிறது என்றே நபி(ஸல்) அவர்கள் போதித்துச் சென்றுள்ளார்கள், பிறை மேற்கே பிறந்து கிழக்கே மறைகிறது. கணக்கீட்டு முறைக்கு ஒரு சில குர்ஆன் வசனங்கள் ஆதாரமாக இருந்தால் போதுமா? என்றெல்லாம் ததஜ மத்ஹப் இமாம் பிதற்றுவதற்கு குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்கம், கலீஃபாக்களது, நபி தோழர்களது, தாபியீக்களது, தபஅ தாபியீக்களது, இமாம்களது, அவுலியாக்களது சுய கருத்துக்கள் ஒரு போதும் மார்க்கம் ஆகாது.

இஜ்மா, கியாஸ் மார்க்கம் ஆகாது என பகிரங்கமாகப் பிரகடனப் படுத்தும் ததஜ மத்ஹப் இமாம் தனது சுய கருத்தை மார்க்கம் ஆக்காமல், தனது இந்த மூடக் கொள்கைகளுக்கு குர்ஆன், ஹதீஃதிலிருந்து மட்டுமே ஆதாரம் காட்டி அவற்றை நிலைநாட்ட வேண்டும். இவை அனைத்திற்கும் அவரது நேரடி பதில் என்ன? பதில் அளிப்பாரா? இல்லை என்றால் நபி(ஸல்) அவர்கள் மீது கடைந்தெடுத்த பெரும் பொய்களை வாரி இறைத்து தனது இருப்பிடத்தை நரகில் பதிவு செய்து கொள்கிறார் என்ற எமது குற்றச்சாட்டிற்கு பதில் என்ன? எதிர்பார்க்கிறோம்.

Previous post:

Next post: