விமர்சனம் : 2018 அக்டோபர் இதழ் பக்.35ல் தஃப்ஸீர்களை தவிர்த்துக் கொள்வது சிறப்பு என்கிறீர்கள், சரி! அப்படியானால் இங்கே உதாரணத்திற்கு “அல்குர்ஆன் 2:189ல் பிறைகளை காலங்காட்டி என்று கூறிவிட்டு, நீங்கள் வீட்டுக்குள் அவற்றின் பின்புறமாக வருவது புண்ணியமானதல்ல….” இங்கே இதனை எப்படி விளங்கிக் கொள்வது?  அபூ நபீல், தேங்காய்பட்டணம்

விளக்கம் : தாங்கள் கூறுவதைப் பார்த்தால் தஃப்ஸீரே படிக்க வேண்டாம் என்று எழுதியது போல சொல்கிறீர்கள், மன்னிக்கவும். தாங்கள் கூறியபடி நாங்கள் எழுதவில்லை. “அந்த தஃப்ஸீர்களைத் தவிர்த்துக் கொள்வது சிறப்பு” என்றுதான் எழுதி இருந்தோம். “அந்த தஃப்ஸீர்களை” என்றால் எந்த தஃப்ஸீர்கள் என்று குறிப்பிட்டிருந்தோம்.

அதாவது “மார்க்கத்தில் பல பிரிவுகளை உண்டாக்கியவர்கள், அவரவரின் கொள்கைகளை தஃப்ஸீர்களில் திணித்து இருப்பார்கள் அந்த தஃப்ஸீர்களைத் தவிர்த்துக் கொள்வது சிறப்பு” என்று எழுதி இருந்தோம். அந்த பத்தியை கீழே தந்துள்ளோம். மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். “ஆனால், ஹதீஃத்கள் பற்பல நூல்களில் பதிவாகியிருப்பதாலும், பல நூல்களை வாங்கிப் படித்து அவைகளை தெரிந்து கொள்வது சிரமமாக இருப்பதாலும், ஓரளவேணும் இவைகளையும், இறை வசனங்கள் அருளப்பட்ட சந்தர்ப்பங்களையும், காரணங்களையும் உள்ளடக்கி தஃப்ஸீர்கள் இருப்பதால் மேலதிக விவரங்களைப் பெற முடிகிறது.

ஆனால், மார்க்கத்தில் பல பிரிவுகளை உண்டாக்கியவர்கள், அவரவரின் கொள்கைகளை தஃப்ஸீர்களில் திணித்து இருப்பார்கள். அந்த தஃப்ஸீர் களைத் தவிர்த்து இருப்பது சிறப்பு”. பொதுவாக குர்ஆன் மற்றும் ஹதீஃத் புத்தகங்களைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தால், மார்க்கத்தை நன்கு அறிந்து கொள்ள முடியும். அதிக விளக்கங்கள் பெற, தஃப்ஸீர் வாங்கியே ஆக வேண்டும் என்றால், உலகப் பிரசித்திப் பெற்ற, எண்ணற்ற தஃப்ஸீர்களில் எல்லோராலும் சிறந்த தஃப்ஸீர் என ஏற்றுக் கொள்ளப்பட்ட ”தஃப்ஸீர் இப்னு கஸீர்” படியுங்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட   காரணங்கள் :

  1. குர்ஆனுக்கு குர்ஆனைக் கொண்டு விளக்கம்
  2. அடுத்து ஹதீஃதைக் கொண்டு விளக்கம்
  3. அடுத்து சஹாபாக்களின் விளக்கம்
  4. அடுத்து தாபியீன்களின் விளக்கம்
  5. அடுத்து தபஉ தாபியீன்களின் குறிப்பாக இமாம்களின் விளக்கம்
  6. அடுத்து அரபி மொழி வல்லுனர்களின் விளக்கம்
  7. அடுத்து சிறந்த விரிவுரையாளர்களின் விளக்கம்
  8. அடுத்து அரபி கவிஞர்களின் விளக்கம்

எண் 3 முதல் 8 வரை உள்ளவற்றில் கூறப்பட்டுள்ள விசயங்களை விட்டுவிடவும் செய்யலாம்.

குர்ஆன் ஹதீஃதுக்கு முரண் இல்லாதவைகளாக இருந்தால் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

தங்களின் அடுத்த வினா:

அல்குர்ஆன் 2:189ல் பிறைகளை காலாங்காட்டி என்று கூறிவிட்டு, நீங்கள் வீட்டுக்குள் அவற்றின் பின்புறமாக வருவது புண்ணியமானதல்ல. இங்கே இதனை எப்படி விளங்கிக் கொள்வது என்று வினவுகிறீர்கள்.

தங்களுக்கு இந்த ஆயத்தில் எதை விளங்க முடியவில்லை? எல்லாமே படித்தவுடன் புரிகிறதே. சிலர் நினைக்கலாம். இதில் தொடர்ச்சி இல்லை என்று நாம் படித்துக் கொண்டிருப்பது அல்லாஹ்வின் குர்ஆன், நாவல் போல தொடர் கதைகள் போல இது தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் படைப்பாளனின் பாணி வேறு மாதிரியாக இருக்கிறதே. சில வசனங்கள் தொடர்ச்சியாக இருக்கும். சில வசனங்கள் சம்பந்தமே இல்லாமல் வேறு வேறாக இருக்கும். ஒரு விசயம் ஒரு வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும், ஆனால், அடுத்த வசனமே வேறு விசயத்தைப் பற்றி பேசுவதாக இருக்கும்.

இப்படித்தான் தாங்கள் மேலே கூறிய 2:189 வசனமும், பிறையைப் பற்றி படித்ததை நினைவிற் கொள்ளுங்கள். அவ்வளவுதான், அடுத்து சொல்லப்பட்ட விசயத்திற்கு போய் விடுங்கள்.

இந்த வசனத்தில், ஹஜ் பயணத்திற்கான அந்த மாதத்தை அறிய பிறையை கணக்கிட்டு கொள்ளவேண்டும் என்பதை சாதாரணமாக, வாசக அமைப்பிலிருந்தே அறிய முடிகிறதல்லவா? அவ்வளவுதான். அந்த வசனத்தில் மீதி இருக்கும் ஆயத்துக்களை முழுமையும் படித்துப் பார்த்தோமே யானால் விசயம் புரிந்து விடும்.

வரிசைக் கிராமமாக புரிந்து கொண்ட விசயங்கள் :

  1. ஹஜ் முடித்து திரும்பி வீட்டிற்கு வரும் போது பின்புற வழியாக வரும் பழக்கம் இருந்திருக்கலாம் என்று எண்ணம் ஏற்படுகிறது. அப்பழக்கத்தை விட்டு விடும்படி தடை அறிவிக்கப்படுகிறது. பழக்கம் இருந்திருக்கும் என்ற எண்ணம் ஏற்படாவிட்டாலும், தடை அறிவிக்கப்படுவது சிரமம் இல்லாமல் புரிந்துவிட்டது.
  2. பின்புறமாக வந்தால் பரக்கத் இருக்குமோ என்றெல்லாம் எண்ணம் கொள்ளத் தேவை இல்லை. ஒரு பிரயோஜனமும் இல்லை என்று சொல்லப்பட்டிருப்பதும் சுலபமாக புரிகிறது.
  3. தடை விதிக்கப்பட்டுவிட்டதால் அதை மீறக் கூடாது. அல்லாஹ்வுக்கு பயப்பட்டு விதித்ததன்படி நடந்து கொள்ள வேண்டும்.
  4. வழக்கமாக வீட்டிற்கு வரும் வாசல் வழியாகத்தான் வரவேண்டும் என்று அல்லாஹ் உத்தரவிடுகிறான்.
  5. அல்லாஹ்வுக்கு பயந்து நடந்தால் எல்லா விசயங்களிலும் நமக்கு வெற்றி நிச்சயம். படித்தவுடன் ஆயத்து முழுதும் தெரிந்து விடுகிறது. படித்தும் தெரியவில்லை என்றால், தாங்கள் ஹதீஃதைப் பாருங்கள். அதிலும் இல்லை என்றால் தஃப்ஸீருக்கு வாருங்கள்.

Previous post:

Next post: