அல்லாஹ்வின் ஒருமை! அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்!

in 2020 செப்டம்பர்

அல்லாஹ்வின் ஒருமை! அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்!

முஹிப்புல் இஸ்லாம்

அல்லாஹ்வின் உன்னத பண்பால் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்!

தேவையற்றவன் என்னும் உன்னத பண்பால் அல்லாஹ் ஒருமையானவன்!

புகழாரங்களால் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்!

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.

எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும்.  அல்குர்ஆன்: 1:1

அல்லாஹ்விற்கே அனைத்துப் புகழும்!

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே என புகழாரம் சூட்டுதல் முஸ்லிம்கள் வழக்கம்!

புகழ் அனைத்தாலும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல் முஸ்லிம்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடமை. முஸ்லிம்கள் பலரால் இது ஓரளவுக்கு நிறைவேற்றவும் படுகிறது. புகழால் அல்லாஹ்வை ஒருமைப்படுத்தும் முஸ்லிம் சமுதாயம், அல்லாஹ்வை (அஹத்) ஒருவன் என ஒருமைப்படுத்தத் தவறிவிட்டது.

ஓரளவு உணர்தல் :

அல்லாஹ் ஒருவன் எனும் அல்லாஹ்வின் இறை ஒருமை பலரால் ஓரளவு உணரப்பட்டுள்ளது. ஆனால் அல்லாஹ்வோடு தொடர்புள்ளவையும் ஒருமையில்தான் உள்ளது. அல்லாஹ்வோடு தொடர்புடையவை எனும் மாறாத பேருண்மை பலரும் அறியாதது. விளைவு விடுபடவில்லையே!

ஷிர்க்-இறைக்கு இணையாக்குதல் எனும் மாபாதகம் முஸ்லிம்கள் வாழ்வில் வெட்ட வழிய வந்து மண்டிக் கொண்டிருக்கிறது. ஷிர்க்கை ஒழிக்கப் புறப்பட்ட அரைகுறைகளும் ஷிர்க்கில் மூழ்கித் தத்தளிக்கின்றனர். ஷிர்க்கிலிருந்து விடுபடாத முஸ்லிம்களே இல்லை எனத் துணியும் அளவு ஷிர்க் முஸ்லிம்களைக் கவ்விக் கொண்டிருக்கிறது. காரணம், அல்லாஹ்வோடு தொடர்புடையதிலும் அல்லாஹ் ஒருமையானவன் என்பது முறையாக அறியப்படவில்லை, அறிவுறுத்தப்படவில்லை.
முன்வருதல் :

ஷிர்க்கிலிருந்து முற்றாக விடுபடும் போது மட்டுமே முஸ்லிம்கள் அல்லாஹ்வை ஒருமைப்படுத்தியோர் ஆவர். இன்றைய நடைமுறை “செமி தவ்ஹீத்” நாளை மறுமையில் அல்லாஹ்விடம் எந்தப் பலனையும் தராது. காலம் கடந்தேனும் உண்மையை உணர முன் வருதல் காலத்தின் கட்டாயம். முன்வருவார்களா?

அல்லாஹ்வின் ஒருமை!

அல்லாஹ் ஒருவன் என்னும் அல்லாஹ்வின் ஒருமை – இஸ்லாமிய இறைக்கோட்பாட்டின் அசைக்க முடியாத அடித்தளம். அந்த உறுதியான அடித்தளத்தில் அல்லாஹ்வோடு தொடர்புடையவையும் ஒருமையில் நிலைநிறுத்தப் பெற்றுள்ளன. இதுதான் இஸ்லாமிய ஓர் இறை நெறியின் தனித்துவம்.

அல்லாஹ் தொடர்புடையதில் அல்லாஹ் ஒருமையானவன். இதை மானுட வாழ்வில் பிரதிபலிக்கச் செய்வதே இஸ்லாத்தின் இலட்சியம். அல்லாஹ் தொடர்புடையதில் அல்லாஹ்வின் ஒருமை:

அல்லாஹ் தொடர்புடையதில் அல் லாஹ் ஒருமையானவன், இதன்மூலம் நிலைநிறுத்தப் பெற்றுள்ள அல்லாஹ்வின் ஒருமை, இதை எளிதாய் உணர்த்தும் அரிய அற்புத சூத்திரம் அல் இஃக்லாஸ் ஏகத்துவம் 112வது அத்தியாயமாய் அல்குர்ஆனில் பதிவாகியுள்ளது.

  1. குல்ஹுவ அல்லாஹ் அஹத். (மானுடத்துக்கு, நபியே!) நீர் பிரகடனப்படுத்துவீராக, அல்லாஹ் அவன் ஒருவனே!
    2.    அல்லாஹுஸ்ஸமத். அல்லாஹ் (எவரிடத்தும், எதனிடத்தும்) தேவையற்றவன்.
    3.    லம்யலித் வலம் யூலத் அவன் (எவரையும்) பெற்றெடுக்கவும் இல்லை, அவன் (எவராலும்) பெற்றெடுக்கப்படவும் இல்லை.
    4.    வலம்ய குல்லாஹு குஃப்வன் அகத். அன்றியும் அவனுக்கு நிகராக எவரும் (எதுவும்) இல்லை. (அல்இஃக்லாஸ்- ஏகத்துவம் : 112:1-4)

அல்லாஹ்வின் அருளுரைகளே இரத்தினச் சுருக்கம்தான். இரத்தினச் சுருக்கங்களின் இரத்தினச் சுருக்கமாய் 112ம் அல் இஃக்லாஸ் அத்தியாயம். அத்தியாயப் பெயரே ஏகத்துவம். நான்கே சிறு வாக்கியங்களில் பெரும் மார்க்க இறைக் கோட்பாடு. ஓர் இறைக் கோட்பாட்டிற்கோர் அரிய எளிய அற்புதச் சூத்திரம்.

வாசித்துக் காட்டினால் படிக்காத பாமரரும் எளிதாய் புரிந்து கொள்ளும் விசித்திரம் கற்றோர் புரிவது கடினமா?

அல்குர்ஆன் பயிலாதோர் பலர்:

நம்மில் அரபு மொழி பயிலாதோர் பலர். அரபு மொழி பயின்றோரில் அல்குர்ஆன் பயிலாதோரும் பலர். தமிழ் படித்தோர் அதிகம், ஆங்கிலம் படித்தோர் கணிசம். அல்குர்ஆன் மொழியாக்களைப் படித்தோர் எத்தனை? படித்தோரில் ஆழ்ந்து பயின்றோர் எத்தனை? இப்படித் தொடுக்கப்படும் அடுக்கடுக்கான துளைத்தெடுக்கும் வினாக் கணைகள் எதற்கும் முறையான பதில்கள் இன்றி விஞ்சும் வேதனை.

முழங்க மட்டுமா?

எப்போதோ எவரோ பட்டும் படாமல் பேசியும், எழுதியும் வந்த அல் இஃக்லாஸ் அத்தியாயம், சமீப காலமாய் தம்பட்ட தவ்ஹீத்வாதிகள் மேடைகளில் முழங்கவும், இதழ்களில், நூல்களில், பிரசுரங்களில் எழுதுவதற்கும் மட்டும்தானா?

அல்இஃக்லாஸ் அத்தியாயம் அறியத் தரும் அல்லாஹ்வின் ஒருமையை அல்லாஹ் தொடர்புடையதில் அல்லாஹ்வின் ஒருமையை அறியத் தவறியதேன்? அறிந்தோர் அடுத்தவர்க்கு அறியத் தராதது ஏன்?

ஏன்… ஏன்? என ஏன்கள் தான் நீளும். எங்கோ, எப்பொழுதோ கிடைக்கும் விடை களும் அதிர்ச்சி தரும் மழுப்பல்களே?

கசடறக் கற்றல், ஆழ்ந்து சிந்தித்தல் :

அல் இஃக்லாஸ் அத்தியாயத்தை ஊன்றிப் படித்தல், கசடறக் கற்றல், ஆழ்ந்து சிந்தித்தல், ஆய்வு செய்தல் அவசியம்.

குல்ஹுவ அல்லலாஹ் அஹத்: சொல்லுக அவன் அல்லாஹ் ஒருவன்.

அல் இஃக்லாஸ் முதல் இறைவாக்கு அல்லாஹ்வின் இறை ஒருமையை காட்டுகிறது.

அல்லாஹ் ஒருவன் என அல்லாஹ்வின் ஒருமையை முதல் இறைவாக்கில் உறுதி செய்த அல்லாஹ்.

தொடரும் 2ம், 3ம் இறைவாக்குகளில்…

அல்லாஹ்வோடு தொடர்புடையதில் அல்லாஹ்வின் ஒருமையை உறுதி செய்வது ஆழ்ந்த சிந்தனைக்குரியது.

சார்ந்திருத்தல் படைப்பினங்களின் இயல்பு:

அல்லாஹுஸ்ஸமத்: அல்லாஹ் தேவையற்றவன், படைப்பாளன் அல்லாஹ் படைப்பினங்களில் எதையும், எவரையும் சார்ந்தவன் அல்லன்.

சார்ந்திருத்தல் படைப்பினங்களின் பொதுவான தன்மை. அல்லாஹ்வைச் சார்ந்திருக்க வேண்டியவைகளில் அல்லாஹ்வை மட்டும் சார்ந்திருத்தல், அல்லாஹ் அனுமதித்தவைகளில் மற்ற படைப்பினங்களைச் சார்ந்திருத்தல் படைப்பினங்களின் இயல்பு.

அல்லாஹ் தேவையற்றவன், சார்ந்திருக்கும் படைப்பினங்களின் தன்மைக்குப் படைப்பாளன் அல்லாஹ் முற்றிலும் மாறுபட்ட இறைமையாளன். அல்லாஹ் தேவையற்றவன் என்பது உயர்ந்தோன் அல்லாஹ்வின் உன்னத பண்பு. தேவையற்றவன் என்னும் உன்னத பண்பால் அல்லாஹ் ஒருமையாளன். எந்நேரமும் அல்லாஹ்வைச் சார்ந்திராத படைப்பினம் எதுவும் எங்கும் இல்லை.

படைப்பினங்களின் தேவையை நிறைவு செய்யும் நிறைவாளன் அல்லாஹ், தேவையற்றவனாய் இருப்பதுதான் ஒரே அல்லாஹ்வின் உயர் இலட்சணம்.

அல்லாஹ்வின் உன்னதப் பண்பு :

அல்லாஹ்வின் இலட்சணம் எதுவாயினும் அது நிறைவானது. மனிதன் உட்பட படைப்பினங்கள் அனைத்தும் குறையுள்ளவைகளே! தேவையற்றவன் எனும் உன்னத பண்பு உயர்ந்தோன் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தானது.

அல்லாஹ் தேவையற்றவன் என்பதன் மூலம் அல்லாஹ்வின் ஒருமை நிலை நிறுத்தப்படுகிறது. தேவையற்றவன் என்ற இலாஹின் இலட்சணத்தைப் பரிபூரணமாய் பெற்றிருப்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே என அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல் படைப்பினங்களின் நீங்காக் கடமை எப்படி?

படைத்தவன் அல்லாஹ் தேவையற்றவன் என்ற அல்லாஹ்வின் தனித்த பண்பை அல்லாஹ் தனக்கே சொந்தமாக்கிக் கொண்டதால், படைப்பினங்கள் எதுவும் அல்லாஹ்வின் தயவில் இருந்து நீக்கம் பெற முடியாதவை என்பது தெளிவாகப் புரிகிறது.

அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல் :

அல்லாஹ் எதனிடத்தும், எவரிடத்தும் எத்தேவையும் அற்றவன் என அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல் என்பது சொல்ல சுவையாகவும், கேட்க இனிமையாகவும் ஏன் சிந்தனைக்கும் விருந்தாகவும் இருக்கலாம்.

சிந்தனைக்கு விருந்தாக்கப்படுவதெல்லாம் மானுடம் வாழ்வில் பிரதிபலிக்க முடியுமா? முடியும்! அதற்கான வழிகாட்டல் அல்குர்ஆனில் அல்லாஹ் விரித்துரைத்துள்ளான்.

உம்முல் குர்ஆன் அல்குர்ஆனின் அன்னை என நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்த அல்குர்ஆன் முகப்புரை அல்ஃபாத்திஹா தோற்றுவாயில் ஆரம்பமாய் அல்லாஹ் கற்றுத் தருகிறான். இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தயீன்.

(உனக்கே நாங்கள் அடிமைகளாகி) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.  (அல்ஃபாத்திஹா : 1:4)

அல்லாஹ் ஒருவனுக்கே உரிய உன்னத பண்பு. அல்லாஹ் தேவையற்றவன் என்பது அல்லாஹ் எதனிடத்தும், எவரிடத்தும் எத்தேவையற்றவன் என அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல் படைப்பினங்களில், அதிலும் குறிப்பாய் மானுடத்தின் நீங்கா கடமை. (அல்குர்ஆன்: 112:2)

மேற்காணும் இறைவாக்கு அல்லாஹ்விடம் இரந்து கேட்டல் முஸ்லிம்களின் கட்டாயக் கடமை எனத் தெளிவுபடுத்துகிறது மட்டுமின்றி அல்லாஹ், இதை மானுடத்தின் மீது கட்டாயக் கடமையாக்கி உள்ளான் என்பதையும் உணர்த்துகிறது. முஸ்லிம்களே இதை முறையாக, சரியாக உணரவில்லையே. மானுடத்துக்கு எப்போது எப் படி

உணர்த்தப் போகிறார்களோ?

அல்லாஹ்வின் ஒருமையைத் தொடர்ந்து அல்லாஹ் தேவையற்றவன், (அல்லாஹுஸ் ஸமத்) எனும் அல்லாஹ்வின் உன்னத பண்பு முதன்மைப்படுத்தப்படுவது ஏன்?
இறைவன் தேவை உள்ளவனா?

மனிதர்கள் கற்பித்து வரும் தெய்வாம் சங்களில் இறைவனை தேவை உடையவனாய் ஆக்குதல்! அஸ்தஃபிருல்லாஹ் அல்லாஹ் காத்தருள்வானாக.

அல்லாஹ்வைத் தேவை உள்ளவனாய் பாவித்தல், இறைவாக்கு இணையாக்கும் இறை மன்னிப்பில்லாத மாபாதகம்.  (காண்க: அல்குர்ஆன்: 4:48,116)\

அல்லாஹ் இது போன்றவைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவிப்பதும், கடும் எச்சரிக்கை விடுப்பதும் இதனால்தான். (அல்லாஹ் ஆகிய) நான் எனக்கு இணையாக்குவோரின் தேவையை விட்டும் தேவை அற்றவன்.

எவர்(கொள்கையால்) செயலால் மற்றவர்களை எனக்கு இணையாக்குகிறார்களோ நான் அவனையும், அவன் செய்யும் ஷிர்க்கான மாபாதங்களை விட்டும் விலகிக் கொள்கிறேன் என்று அல்லாஹ் எச்சரித்துள்ளான். இதை நபி(ஸல்) அவர்கள் எடுத்துக் காட்டி நம்மை உஷார்படுத்துகிறார்கள். (அல்ஹதீது அல் குத்ஸிய்யி, தகவலாளர்: அபூஹுரைரா(ரழி), பதிவாளர்: முஸ்லிம்)

இறைக்கு இணையாக்குவோர் கவனத்திற்கு இதுவரைக் கொண்டுவரப்படாத அதே நேரத்தில் உடனடியாக கொண்டுவரப்பட வேண்டிய அதிமுக்கிய விஷயம் யாதெனில், இறைவனுக்கு இணையாக்கப்படுவோர் யாராயினும் தேவை உடையோரே! இறைவனுக்கு இணையாக்கப்படுவது எதுவாயினும் அதுவும் தேவை உடையதே!

இறைவனுக்கு இணையாக்கப்படுதல் :

தேவை உடையோரையும், தேவை உடையதையும் இறைவனுக்கு இணையாக்கப்படும்போது அந்த இறைவனும் தேவை உடையவனாய் ஆக்கப்படுவது தவிர்க்க இயலாதது ஆகிவிடுகிறது.

இல்லையயனில், குறைந்தபட்சம் இறைவனுக்கு ஒப்பானதாகவாவது ஆகிவிடுகிறது. (நவூதுபில்லாஹிமின்ஹா)

இதை இறைக்கு இணையாக்குவோர் நன்மை, புண்ணியம், வணக்கம், வழிபாடு என்று எப்படி சாதித்தாலும் சரி. அவை அனைத்தையும் இறைக்கு இணையாக்கும் மாபாதகமாய் அல்லாஹ் அல்குர்ஆன் நெடுகிலும் எச்சரித்துள்ளான். நபி(ஸல்) அவர்களும் கடுமையாகக் கண்டித்துள்ளார்கள். மேற்குறித்துள்ள ஹஃதீது அல்குத்ஸியும் அதற்கோர் அசைக்க முடியாத சான்றிற்கோர் மாதிரி.

இறைவன் எப்படி இணையாவான்?

எதனிடத்தும் எவரிடத்தும் எத்தேவையும் இல்லாத ஏக இறைவனாகிய அல்லாஹ். தேவை உடையவைகளுக்கு, தேவை உடையோருக்கு எப்படி இணையானவன் ஆவான்?

காரணம் எதுவாயினும், எக்காலத்திலும், எந்நிலையிலும் அல்லாஹ் எதற்கும், எவர்க்கும் இணையானவனாய் ஒப்பானவனாய் ஒருபோதும் ஆகவேமாட்டான். ஆகவும் முடியாது. முஸ்லிம்கள் இதை எப்போதும் மறந்திடலாகாது.

அனைத்து புகழுக்கும் ஒரே உரிமையாளனான அல்லாஹ்விற்குத் தேவையற்றவன் என்ற பெரும் பேறும், புகழும் அல்லாஹ்வின் புகழாரத்தை மேலும் மேலும் உச்சத்துக்குக் கொண்டு சென்று கொண்டேயிருக்கும்.

மறந்து அடம் பிடித்து அழிச்சாட்டியம் செய்யும் மானுடத்துக்கு அல்லாஹ்வின் பிரத்யேக நினைவூட்டல் இதோ:

யா அய்யுஹன்னாஸ் அன்துமுல் புகராஉ இலல்லாஹ்.

மனிதர்களே? நீங்கள் அல்லாஹ்வின் பால் தேவையுடையவர்களாகவே இருக்கின்றீர்கள்.

வல்லாஹு ஹுவல் கனிய்யுல் ஹமீது.

அல்லாஹ்வோ தேவையற்றவன், மிக்கப் புகழுக்குரியவன். (அல்குர்ஆன்:35:15)

அனைத்து தேவைகளை விட்டும் நீக்கம் பெற்ற தேவையற்றவன், அந்த அல்லாஹ் ஒருவன்தான் என்று அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்!

அல்லாஹ்வின் தனித்துவம் :

தனித்தன்மை எனும் தனித்து நிற்கும் தனித்த பண்பு அல்லாஹ் ஒருவனுக்கு உரித்தான தனித்துவம்!

தன்னிகரற்ற அல்லாஹ்வின் தனித்துவத்தில் அல்லாஹ் தேவையற்றவன் எனும் தனித்த பண்பு முதலிடம் வகிப்பது கூர்ந்து நோக்கத்தக்கது.

படைப்பினங்கள் முழுமையும் அதிலும் குறிப்பாய் மானுடம் தேவைகளுக்காக அல்லாஹ் ஒருவனிடம் மட்டும் எந்நேரமும் யாசித்து இரந்து நிற்க வேண்டும். இதை மேல்காட்டியுள்ள இறைவாக்கில் இடம் பெறும்.

அன்துமுல்ஃபுகராஉ இலல்லாஹ் என்பதன் மூலம் தேவைகளை நிறைவு செய்து கொள்ள மனிதர்கள் எதனிடத்தும், எவரிடத்தும் எத்தேவையும் இல்லாத அல்லாஹ்விடம் எந்நேரமும் இரந்து யாசிக்கும் தேவை உள்ளவர்களே! என்று அல்லாஹ் நேரிடையாக மானுடத்துக்கு உணர்த்துவது ஆழ்ந்த சிந்தனைக்குரியது.

அல்லாஹ்விடம் இரந்து யாசித்தல்:

எவரிடத்தும் எதனிடத்தும் எத்தேவையும் இல்லாத அல்லாஹ்விடம் தேவைகளை இரந்து யாசித்து நிற்பதை வாழ்வின் இலட்சியமாய் கொண்ட மனிதர்கள், குறிப்பாய் முஸ்லிம்கள், தேவையற்றவன் என்னும் உன்னத பண்பால் உயர்ந்தோன் அல்லாஹ்வை ஒருமைப்படுத்தியோர் ஆவர்.

மாறாக எண்ணத்தால், சொல்லால், செயலால் இதற்கு மாற்றம் செய்வோர் இறைக்கிணையாக்கும் மாபதகர்களே!  (காண்க: அல்குர்ஆன்: 4:48,116, 39:65)

உயர்ந்தோன் அல்லாஹ் தேவையற்றவன் என்னும் உன்னத பண்பால் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவோர் வெகு சொற்பமே! மாறு செய்வோர் அதிகம் அத்தகையோர் உடன் திருந்துதல் அவசியம்.

தமக்குத் தாமே சீர்திருத்திக் கொள்ளாத சமுதாயத்தவரை அல்லாஹ்வும் சீர்திருத்தமாட்டான். (காண்க : அல்குர்ஆன்:13:11)

அல்லாஹ் தேவையற்றவன் என அல்லாஹ்வைப் புகழ்தல் :

அல்லாஹ் தேவையற்றவன் என்று புகழ்வதன் மூலம் அல்லாஹ்வை ஒருமைப்படுத்த வேண்டும். இதை மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்வின்பால் தேவை உடையவர்களாக இருக்கின்றீர்கள் (அல்குர்ஆன்: 35:15) என்ற இறைவாக்கின் நிறைவுப் பகுதி வல்லாஹு ஹுவல் ஃஙனிய்யுல் ஹமீத்.

அல்லாஹ்வோ தேவையற்றவன், மிக்கப் புகழுக்குரியோன் என்று மானுடத்துக்கு உணர்த்துகிறது. புகழ் அனைத்தாலும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல் (காண்க. அல்குர்ஆன்: 1:1) அல்லாஹ்விற்கு மட்டுமே செலுத்தப்பட வேண்டிய வணக்கமாகும்.

எதனிடத்தும், எவரிடத்தும் எத்தேவையற்றவன் என அல்லாஹ்வைப் பிரத்தியேகமாய்ப் புகழ்தல் அல்லாஹ் தேவையற்றவன் என்னும் புகழுக்குரியவன் என்று அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதாகும்.

எதனிடத்தும், எவரிடத்தும், எத்தேவையும் இல்லாத அல்லாஹ்விடம் யாசித்து இரந்து நிற்பதும் அல்லாஹ்வைப் புகழும் வணக்கம். இதையும் அல்லாஹ் கோடிட்டுக் காட்டுவதை முன்னர் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. (உனக்கே நாங்கள் மனிதர்கள் அடிமைகளாகி) உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் (இரந்து யாசித்து) உதவியும் தேடுகிறோம். (அல்குர்ஆன்: 1:4,35:15) இறைவாக்கின் நிறைவுப்படுத்தி அல்லாஹ் மிக்கப் புகழுக்குரியவன் எனச் சூட்டுகிறது.

அனைத்துப் புகழாலும் அல்லாஹ்வுக்குப் புகழாரம் சூட்டுதல், புகழாரங்களால் அல்லாஹ்வை வணங்குவதாகும்.

புகழ் அனைத்தாலும் அல்லாஹ்வை மட்டும் வணங்குதல், புகழார வணக்கங்களால் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல் ஆகும்.

அவனின்றி அணுவும் அசையாது :

“அவனின்றி அணுவும் அசையாது” இதை மொழிந்தும், எழுதியும் வரும் இந்திய தேசத்தவர் என்ன செய்கிறார்கள்? இந்திய தேசத்தவர் கற்பித்த கடவுள்களைத் தேவையுடையவர்களாய்ச் சித்தரித்தும், கற்பனை செய்தும் வருகின்றனர். இதற்கு அவர்களின் அன்றாட நடைமுறை வாழ்வே சான்று. அவனின்றி அணுவும் அசையாது என்னும் சித்தாந்தத்துக்கு இந்திய தேசத்தவர் வாழ்வு முரண்படுகிறது. வேதனைக்கு மேல் வேதனை அடைவதன்றி வேறு எதுவும் செய்ய முடியாத தவிப்பு. சகோதர சமயத்தாருக்கு இவ்வாய்வில் எடுத்துக் காட்டப்பட்ட மேற்கோள்களை எடுத்துக்காட்டி வருகிறோம். அவர்களின் ஆழ்ந்து சிந்திப்போர் வியப்பும், வேதனையும் அடைவதைக் காணமுடிகிறது.

போலிச் சமாதானம் :

அல்லாஹ் ஒருவன் என்பது அல்லாஹ்வின் ஒருமை மட்டுமல்ல. அல்லாஹ் தொடர்புடையதிலும் அல்லாஹ் ஒருமையானவன் என்பதை உள்ளடக்கியதே! இதை முஸ்லிம்கள் முறையாக அறிந்திருக்கவில்லை. அதனால்தான் மாற்றார்களுக்கு அறியத் தரமுடியவில்லை. இது ஒரு போலிச் சமாதானம் அவ்வளவே உண்மையில் மேற்கூறியவைகளைச் சுயமே உணர மிகப் பெரும்பான்மை முஸ்லிம்கள் இன்றளவும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதுதான் உண்மை.

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி :

மேல் காட்டப்பட்டுள்ள ஆதாரங்கள் பெரும்பான்மை முஸ்லிம்களையும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. அத்தகையோர் உண்மை அறியும்போது வேதனையால் விம்முகிறார்கள். அவர்கள் முந்தய தவறுகளிலிருந்து முற்றாக விடுபட முனைப்போடு பாடுபட வேண்டும் என்பது எமது அன்பு விருப்பம். அல்லாஹ் அருள் செய்வானாக. (ஆமீன்) முன்னவே உணர்ந்து மறந்தோர்க்கு இது ஓர் நினைவூட்டல்.

(இன்ஷா அல்லாஹ். அடுத்த ஆய்வில் சந்திப்போம். சிந்திப்போம், சீர்பெறுவோம்)

Previous post:

Next post: