எனதருமை முகநூல் இஸ்லாமிய சகோதரர்கள் கவனத்திற்கு!

in 2020 டிசம்பர்

எனதருமை முகநூல் இஸ்லாமிய சகோதரர்கள் கவனத்திற்கு!

அஹமது இப்ராஹீம்,  புளியங்குடி

சமீப காலமாக சில வெறி பிடித்த சங்கிகள் நாத்திகர்கள் என்ற போர்வையில் இஸ்லாமிய மார்க்கத்தையும் அல்குர்ஆனையும் நமது உயிரினும் மேலான ரஹ்மத்தன்லில் ஆலமீனாகிய நபி(ஸல்) அவர்களையும் நம்மால் தாங்கமுடியாத அளவுக்கு மோசமான வார்த்தைகளைக் கொண்டும் மிகவும் கடுமையான வசைச் சொற்களைக் கொண்டும் முகநூலில் பதிவிடுகிறார்கள். இவ்வாறான நிராகரிப்பவர்கள் திட்டும்போது நாம் என்ன செய்ய வேண்டும் அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி கீழ்க்கண்ட அல்குர்ஆன் வசனங்களில் மிகத் தெளிவாக எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு கட்டளையிடுகின்றான். இதன்படி நாம் அனை வரும் நடப்போமேயானால் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் நம்மை வெகு விரைவில் வந்தடையப் போவது மிக மிக உறுதி என்பதில் எள் முனையளவும் சந்தேகம் இல்லை.

இதோ அந்த வசனங்கள் :

எனினும் (நபியே!) மன்னிப்பைக் கைக்கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக! மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும். (அல்குர்ஆன்: 7:199)

இவர்களில் பெரும்பாலோர் மீது (இவர்களுக்கு வரவிருக்கும் வேதனை பற்றிய) வாக்கு நிச்சயமாக உண்மையாகிவிட்டது. ஆகவே இவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள். (அல்குர்ஆன்: 36:7)

நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க் கட்டைகள் வரையில், அரிகண்டங்களைப் போட்டிருக்கின்றோம். ஆகவே அவர்கள் (குனிய முடியாதவாறு) தலை நிமிர்ந்துவிட்டனர். (அல்குர்ஆன்: 36:8)

இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம். (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம். ஆகையால் அவர் கள் பார்க்க முடியாது. (குர்ஆன்: 36:9)

அன்புத் தம்பிகளே! மேற்கண்ட நாத்திக நாசக்காரர்களின் உள்ளங்களை எல்லாம் வல்ல அல்லாஹ் கற்பாறையாக்கிவிட்டான். நீங்கள் அதை உடைக்கவே முடியாது. எனவே கீழ்க்கண்ட அல்குர்ஆன் வசனங்களின் அடிப்படையில் நீங்கள் இத்தகைய மூடர்களை விட்டும் விலகுவது தான் உங்களுக்கும் உங்கள் ஈமானுக்கும் மிகவும் நல்லது.

(முஃமின்களே!) அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்) நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதை விட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்” என்று இறைநெறிநூலின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே, நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்கர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான். (4:140)

(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள், உங்களுக்கு முன் நெறிநூல் கொடுக்கப் பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (அல்குர்ஆன்: 3:186)

மேற்கண்ட அல்குர்ஆன் வசனங்களின்படி எத்தகைய வசைச் சொற்களையும் பொறுமை யாகத் தாங்கிக் கொள்ளும் பாக்கியத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்த ருள்வானாக. நிச்சயமாக பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான். எல்லாம் வல்ல அல்லாஹ்வே நம்மோடு இருக்கும்போது இந்த சங்பரிவார நாத்திக வெறியர்கள் நம்மை என்ன செய்துவிட முடியும்.

“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது, அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும், முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!  (அல்குர்ஆன்: 9:51)

Previous post:

Next post: