இன்ஷா அல்லாஹ்! (அல்லாஹ் நாடினால்)…?
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
“இன்ஷா அல்லாஹ்” என்ற இந்த சொல் முஸ்லிம்களிடையே மிகவும் பிரபலமான சொல்லாகும். எவ்வாறு “மாஷா அல்லாஹ்” என்ற சொல் பிரபலமானதாக இருக்கிறதோ அதைவிட பன்மடங்கு பிரபலமான சொல்லாகும் இது.
அதாவது முஸ்லிம்களாக இருக்கக் கூடிய ஆண், பெண் இரு வகுப்பாரும் தன் வாழ்நாளில் பலமுறை உபயோகப்படுத்தக்கூடிய சொல்லாகும். “இன்ஷா அல்லாஹ்” என்ற இந்த சொல்லை உபயோகப்படுத்தாத முஸ்லிம்களே இருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு இது ஒவ்வொரு முஸ்லிம்களின் வாழ்வுடன் பின்னிபிணைந்த சொல்லாகும்.
உண்மையில் “இன்ஷா அல்லாஹ்” என்றால் அதன் அர்த்தம் என்ன?
பொதுவாக அதன் அர்த்தம் “அல்லாஹ் நாடினால்” என்பது பலரும் அறிந்த ஒன்றாகும்.
அதாவது அல்லாஹ் ஏற்கனவே தீர்மானித்து விட்டான் என்று பொருள் கொள்வதா? அல்லது அவ்வப்பொழுது நடக்கும் நிகழ்வுக்கு ஏற்றவாறு முடிவு எடுத்து செய்கின்றானா?
என்று பொருள் கொள்வதா?
இத்தகைய சந்தேகம் சரியா?
அல்லாஹ் நாடியதே நடக்கும் என்றால் மனிதனுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்திற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
அதே சமயம், பிற்காலத்தில் நடக்கப் போவது அல்லாஹ்விற்கு தெரியாது என்று நம்புவதும் சரியான நிலைப்பாடும் (நம்பிக்கை) அல்ல. ஏன் என்றால் முக்காலத்தையும் அறிந்தவன் தான் “அல்லாஹ்” என்று நம்புவதுதான் முழுமையான இறை நம்பிக்கையாகும்.
“அல்லாஹ் நாடினால்” என்பது விதி சம்பந்தப்பட்ட ஒன்றா என்றால் அதுவும் இல்லை,
“விதி‘ என்பது வேறு,
“அல்லாஹ் நாடினால்” என்பது வேறு, வேறு. அவ்வாறு என்றால் இதற்கு உண்மையான பொருள்தான் என்ன?
மனிதனின் முயற்சியும் அந்த செயலுடன் இணைந்திருந்தால்தான் அல்லாஹ் நாடியதை பெற்றுக்கொள்ள முடியும் என்பது பொருளாகும். ஆயினும் இப்படி சொல்வதால் சில சந்தேங்களும் வரும்.
அது என்னவென்றால்…
ஒரு சிலர் படிப்பறிவோ, அல்லது தகுதியோ இல்லாமலும் மற்றும் எந்த முயற்சியும் செய்யாமலும் பெரும் செல்வந்தராகவும், பெரும் பதவியிலும் இருப்பதை நாம் கண்டு வருகிறோம். அதாவது மனித முயற்சியே இல்லாமலும் இவைகள் நடக்கின்றன.
அது எப்படி?
இதற்கு இறை நூலில் விடை உள்ளது.
“அல்லாஹ்! தான் நாடியவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றான். அதுபோல் அவன் நாடியவரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கின்றான். அவன், தான் நாடியோரை கண்ணியப்படுத்துகின்றான், அதுபோல் கண்ணியப்படுத்தியவரை இழிவும் படுத்து கிறான், நன்மைகள் யாவும் அவன் வசமே உள்ளது, அவன் அனைத்து ஆற்றலும் உள்ளவன்” என்று கூறுவீராக. அ.கு. 3:26
மேற்படி வசனத்திற்கு சரியான பொருள் கொள்வது என்றால், அல்லாஹ்வின் ஞானம் இரு வகைப்படும்.
ஒன்று : அல்லாஹ் தீர்மானித்து (விதி) ஆகும்.
மற்றொன்று : அவ்வப்பொழுது நடக்கும் நிகழ்வுடன் இறைவனின் நாட்டமும் ஆகும்.
உதாரணமாக :
“இன்ஷா அல்லாஹ்” என்ற சொல் இறை நூலில் (அல்குர்ஆனில்) சுமார் 12 இடங்களில் நேரிடையாக கூறப்பட்டுள்ளது. பார்க்க வசனம் : 2:70, 6:111, 9:28, 11:33,34, 12:99, 18:69, 36:47, 37:102, 48:27
மேற்படி வசனங்களில் எல்லாம் நடக்க இருப்பதைப் பற்றியே பேசுகிறது. அதுபோல் நடந்து முடிந்ததையும் கீழ்கண்ட வசனம் கூறுகிறது. பார்க்க வசனம் : 12:76,42:24
அவ்வாறு என்றால் அல்லாஹ் நாடிவிட்டானா? அல்லது நாடவில்லையா?
எனவேதான் இறைநூலில் மற்றொரு வசனத்தில் இறைவன் கூறுகிறான்;
“உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் மறைத்தாலோ, அல்லது வெளிப்படுத்தினாலோ அதை அல்லாஹ் கூறுகிறான். வானங்களில் நடப்பதையும், பூமியில் நடப்பதையும் அல்லாஹ் அறிகிறான். அவன் அனைத்து படைப்பினங்களின் மீதும் ஆற்றலுடையவன்”. அல்குர்ஆன்3:27
எல்லாவற்றையும் அறிந்தவனாக இறைவன் இருப்பதால் மனிதர்களுக்கு ஓர் அறிவுரையை இறைநூல் கூறுகிறது. அது என்னவென்றால்; பொதுவாக “இன்ஷா அல்லாஹ்” என்று சொல்லாமல் எந்த ஒரு செயலையும், “நான் நாளை இந்த செயலைச் செய்துவிடுவான்” என்று திட்டவட்டமாக சொல்லக் கூடாது என்று கூறுகிறது.
இதற்கு படிப்பினையாக நபி(ஸல்) அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை இறைநூல் கூறுகிறது.
“நீர் (முஹம்மதே) எதனைப் பற்றியும் நிச்சயமாக நான் இதை நாளைக்குச் செய்து விடுவேன்” என்று ஒருபோதும் கூறாதீர். அ.கு. 18:23
(இந்த சம்பவத்தைப் பற்றி பல கற்பனைகள் உள்ளன. நாம் அதற்குள் செல்ல விரும்ப வில்லை)
ஆனால் நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் நடந்த, நடக்கின்ற, சில விசயங்கள் மூலம் இதை புரிந்து கொள்ளலாம். கடன் வாங்கும்போதோ அல்லது கடனை திரும்ப தருவதாக சொல்லும்போதோ உறுதியாக கிடைக்கக்கூடிய வழிமுறையில் பணம் கிடைக்கும் என்ற நிலை இருந்தால்,
“இன்ஷா அல்லாஹ்” நாளைக்கு தருகிறேன் என்று கூறினால் அது சரியானதாகும்.
அதுவே உறுதியாக பணம் கிடைக்காது என்று தெரிந்த நிலையிலும், அதற்கான முயற்சியும் செய்யாதும் நாளைக்கு தருகிறேன் என்று “அல்லாஹ்வை சாட்சியாக” வைத்து கூறுவது தவறாகும். ஏனெனில் கடனை திரும்ப கொடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் நாளைக்கு தருகிறேன் என்று சொல்வது.
“அல்லாஹ் நாடினால்” என்ற சொல்ல தவறாக பயன்படுத்துவது ஆகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு மாறாக தருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கி றேன், கிடைத்தால் “இன்ஷா அல்லாஹ்” தருகிறேன் என்று சொல்லலாம்.
மற்றொரு உதாரணம் :
தொழில் நிறுவனத்தில் வேளை செய்யக்கூடிய நபர் அந்த தொழில் அதிபரிடம் சம்பளத்தை கூட்டியோ அல்லது வேறு ஏதேனும் சலுகையோ கேட்டால் “இன்ஷா அல்லாஹ்” நான் செய்கிறேன் என்று வாக்களிக்கிறார். ஆனால் அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை என்றால் அதுவும் தவறாகும்.
அவர் சொன்னது அல்லாஹ்வை சாட்சியாக வைத்துதான். அல்லாஹ்வை சாட்சியாக வைத்து சொன்னதால் தொழில் நிறுவனத்தில் வேளை செய்யக்கூடிய அந்த நபர் மிகவும் நம்பிக்கையில் இருப்பார். எனவே செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலோ, அல்லது முயற்சி செய்யாமலோ அவ்வாறு கூறவேண்டாம்.
மேலும் மற்றொரு உதாரணம் :
உழைப்பது மூலமோ மற்றம் உழைத்து விவசாயம் செய்வதன் மூலமோ மனிதனுக்கு உணவு, உடை இதர அனைத்தும் கிடைக்கும். அதுவே “அல்லாஹ் நாடினால்‘ உழைக்காமலும் கிடைக்கும் என்று நம்புவது தவறான இறை நம்பிக்கையாகும். உணவை உற்பத்தி செய்வதற்கான பூமியைத் தான் இறைவன் தந்துள்ளான். வானத்திலிருந்து உணவை நேரிடையாக இறக்குவதில்லை.
அல்லாஹ்வின் செயல்திட்டத்தில் இல்லாததை எல்லாம் அல்லாஹ் செய்வதாக சிலர் சொல்லுவார்கள். இது இறை நம்பிக்கையை (ஈமானை) பாதிக்கக் கூடியதாகும்.
மேலும் இறைநூலில் ஒரு சம்பவத்தை பாடமாக இறைவன் கூறுகிறான்.
பார்க்க வசனம் : அல்குர்ஆன் 18:43
மேற்சொன்ன விசயங்கள் யாவும் ஏதோ ஒரு ஊரில் அல்லது ஒரு சிலருக்கு நடந்து முடிந்த கதை என்று எண்ணாதீர்கள். ஆகவே இனி எல்லா காரியங்களுக்கும் மனப்பூர்வமாக “இன்ஷா அல்லாஹ்” சொல்லுவோம்.