இஸ்லாத்தின் இலட்சியம்! ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயம்!!
நபிகால இஸ்லாமிய ஒற்றுமை
முஹிப்புல் இஸ்லாம்
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநாட்டுதல் – ஓர் தெளிவாக்கம்!
அசல் இஸ்லாம் மக்களை விட்டும் அந்நியமானதேன்?
“இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலை நாட்டுதல்” என்பதை நாம் பரவலாய், வார்த்தைக்கு வார்த்தை, எழுத்துக்கு எழுத்து கொள்கையாய் முழங்கிக் கொண்டிருக்கிறோம். வரவேற்கத்தக்கதே! ஆனால் அது வெறும் வெற்று கோசமாய் மாறிவிடாமல், நம்மால் நடைமுறை வாழ்வில் பிரதிபலிக்கப்படுகிறதா? இல்லையே! ஒரு சில விசயங்கள் நீங்கலாய்…!?
இஸ்லாம் பெயர்தாங்கி முஸ்லிம்களால், நபியவர்கள்(ஸல்) காலத்துக்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின், ஒவ்வொரு காலகட்டத்தில் வெவ்வேறு நிலைகளில் கலப்படமாக் கப்பட்டு களங்கப்படுத்தப்பட்டு வருகிறது.
விதிவிலக்கு பெறும் சில அம்சங்கள் நீங்கலாய், அசல் இஸ்லாத்தின் அம்சங்கள் அனைத் தும் பெயர்தாங்கி முஸ்லிம்களால் அழிக்கப்பட்டுவிடுமோ என்று அபாய சங்கு ஊதுமளவுக்கு, இஸ்லாம் இன்றைய பெயர் தாங்கி முஸ்லிம்களால் சிதைக்கப்பட்டு வருகிறது. வெளிப்படுத்த முடியாத, வேதனைக்குரிய கசப்பான பேருண்மை!
இந்த அவலத்திலிருந்து, இஸ்லாத்தை மீட்சி பெறச் செய்வது உண்மை முஸ்லிம்கள், ஒவ்வொருவரின் நீங்கா கடமையாகும்.
அந்த உண்மை முஸ்லிம்கள் இன்றைய பரபரப்பான, சமுதாய சந்தடிக்குள் எங்கே ஒழித்து கொண்டிருக்கிறார்கள்? ஏன் இன்னும் தங்களை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்? புரியாத புதிரல்ல.
ஓ! நமக்கேன் இந்த வீண் வம்பு என்று ஒதுங்கிக் கொண்டார்கள்.
அசல் இஸ்லாம் மக்களை விட்டும் அந்நியமாக உண்மையறிந்தவர்கள் ஒதுங்கிக் கொண்டதே பிரதான காரணம்!
இஸ்லாம் பெயர் தாங்கிகளால் தகர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் இக்கட்டான காலக்கட்டிலும் அவர்கள் அதைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லையயன்றால், பின் யார்தான் உண்மை இஸ்லாத்திற்காக குரல் கொடுப்பது?
தமிழகத்தில் உண்மையை உணர்ந்த பெரும்பான்மையான பிரபல்யங்கள், ஒதுங்கிக் கொண்டபோது, அன்று ஒரு சிலராய் இருந்தாலும், இஸ்லாத்தை அதன் தூயவடிவில் நிலைநாட்ட துணிவுடன் முன்வந்தார்களே…!
உங்கள் தீரச் செயல் கண்டு, முஸ்லிம்கள் மட்டுமல்ல, முழு தமிழகமும் பிரமித்தது. அதன் பின்விளைவே, நீங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டீர்கள்! எதிர்க்கப்பட்டீர்கள்! ஏன்? பல இடங்களில் தாக்கவும்பட்டீர்கள்! சொல்லொனா தொல்லைகளுக்கும் ஆளாகிக் கொண்டிருந்தார்கள். எழுத்தில் வடிக்கவியலா துன்பங்கள் இன்றளவும் உங்களை நிழலாய்ப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் நீங்கள் இம்மையில் பரிகாரம் தேடிக்கொள்ள முடியாதென்றாலும் அல்லாஹ்விற்காக என்ற ஓர்மையுடன் வேலை செய்ததற்கு இன்ஷா அல்லாஹ் மறுமையில் அல்லாஹ்விடம் மகத்தான நற்கூலியுண்டு.
நம்மில் சிலரின் அல்லது பலரின் தவறான அணுகுமுறையால் பிரச்சனைகள், சச்சரவுகளை வலியச் சென்று விலைக்கு வாங்கியது, வேதனைக்குரியதே! இந்த விரும்பத்தகாத நிலை தொடராமல், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க, முறையான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதா? இதை சம்பந்தப்பட்டவர்கள் சிந்தனைக்கு விட்டு விடுகிறோம். அதே நேரத்தில் பிரச்சனைகள் நம்மை முன்னோக்கும்போது, அதை எதிர்கொள்ள நாம் எந்த நேரத்திலும் சித்தமாயிருக்க வேண்டும். இது நம் நினைவை விட்டும் எப்போது தம் அகலாது இறுத்தி வைக்கப்பட வேண்டும்.
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநாட்டிய இறைத்தூதர்கள், நபிமார்கள் சந்தித்த இன்னல்கள்:
பிரச்சனைகளைச் சந்திக்கும்போதும் துன்பங்கள் தொடரும்போதும் நம்மவர்கள் பதட்டமடைவதேன்? பரிதவிப்பதேன்?
பிரச்சனைகளையும், துன்பங்களையும் சந்திக்காமல் மனித சமுதாயத்துக்கு நாம் பயக்கும் எதையும் யாரேனும் செய்து காட்டியதுண்டா?
மனித சமுதாயம் முழுமைக்கும் நன்மை பயக்கும் வாழ்க்கைநெறி இஸ்லாம்! அதை நிலைநாட்ட அல்லாஹ்வால் தெரிவு செய்யப்பட்டவர்களே, இறைத்தூதர்கள், இடுக்கண்களைச் சிந்திக்காமல் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநாட்டியதாய் வரலாறு உண்டா?
முழுக்க, முழுக்க மாற்று கருத்துடையோர், இறைமறுப்போர், இணைவைப்போர், என்று அனைத்து வழிகேடுகளையும், தங்கள் வாழ்க்கையாக்கிக் கொண்டவர்களைத்தான் நபிமார்களும், இறைத்தூதர்களும் எதிர் கொண்டார்கள்.
எதிர்த்தவர்கள் பெரும்பான்மையானவர்களாகவும், பாவம் செய்தவர்களாகவும், செல்வமும், செல்வாக்கும் படைத்தவர்களாகவும், ஆட்சி பீடத்தையும், அதிகாரத்தையும் உடையவர்களாகவும் இருந்தார்கள் என்றாலும், அனைத்து எதிர்ப்புகளையும், இன்னல்களை யும் இஸ்லாத்திற்குட்பட்டே சந்தித்தார்கள். அல்லாஹ்(ஜல்) அவர்களுக்கு வெற்றியும் அளித்தான்.
“இஸ்லாத்தை அதன் தூயவடிவில் நிலை நாட்டுதல்” என்பதற்கு முன் உதாரணங்கள் நபிமார்களும், இறைத் தூதர்களுமே இறுதி இறைநூலில் பதிவு செய்யப்பட்டுள்ள அவர்கள் சிலரின் வாழ்வே இதற்குச் சான்று பகர்ந்து கொண்டிருக்கிறது. இதில் நம்மில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் நாம் இன்று என்ன செய்துகொண்டிருக்கிறோம்? அவர்கள் வரலாறுகளை எத்தனை முறை படித்திருக்கிறோம். எத்தனை முறை பேச்சிலும், எழுத்தி லும் எடுத்துக் காட்டியிருக்கிறோம். ஆனால் அவ்வரலாறுகளைச் சிந்தித்து படிப்பினை பெற்றுள்ளோமா? படிப்பினை பெற தவறி விட்டோம்.
இன்னமும் சரியாக உணரப்படவில்லை:
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநாட்டுதல் என்றால் என்ன? இதை நாம் சரியாக புரிந்து கொண்டுள்ளோமா? (இல்லையே!)
இணை வைத்தல்(சிர்க்)கள், அனாச்சாரங்(பித்அத்)கள் ஆதாரமற்ற மூட சடங்குகள், சம்பிரதாயங்கள், (குராஃபாத்) தக்லீத் (மதஹபுகள்) போன்றவைகள், அவைகளோடு இணைந்த சில விசயங்களை எதிர்ப்பதுதான், இஸ்லாத்தை அதன் தூய்மை கெடாமல் நிலைநாட்டுதல்! என்பதற்கு நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட குறுகிய வரை விலக்கணம் அல்லவா?
இஸ்லாத்தை அதன் தூயவடிவில் நிலைநாட்டுதல் என்பதன் இலட்சணம் இதுதானா?
இஸ்லாத்தை அதன் தூயவடிவில் நிலைநாட் டுதல் என்றால் என்ன? இதை இன்னமும் நாம் சரியாக உணரவில்லை. இதற்கு இன்றைய தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லிக் கொள்வோரின் நடைமுறையே போதிய சான்றாகும்.
இஸ்லாத்தை அதன் தூயவடிவில் நிலைநாட்டுதல் என்பதற்கு நபி(ஸல்) அவர்களே நமக்கு முன்மாதிரி!
அல்லாஹ்வால், இஸ்லாம், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு, எவ்வாறு அருளப்பட்டதோ, அதுதானே தூய இஸ்லாம்! உண்மையான அசல் இஸ்லாம்! எவ்வித கூட்டலும், கழித்தலுமின்றி, பெருக்கலும், வகுத்தலுமின்றி, எந்த மனித கருத்துக்களின் கலப்படமுமின்றி, குறுக்கீடுமின்றி. அல்லாஹ்வால் அருளப்பட்ட அதே நிலையில், அல்லாஹ்வின் கட்டளைப்படி, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களால் வாழ்வியல் ரீதியில் நடைமுறைப்படுத்தியும் காட்டப்பட்டு விட்டதே!
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், இஸ்லாத்தை அதன் தூய வடிவில், தங்கள் வாழ்வில் பிரதிபலித்ததோடு நின்றுவிடவில்லை. தங்களைப் போல் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் கடைபிடித்தொழுகும் ஒன்றுபட்ட இஸ்லாமிய சமுதாயத் (உம்மத்)தை உருவாக்கிக் காட்டினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
அந்த நபித்தோழர்களும் இஸ்லாத்தை தூய வடிவில் கடைபிடித்தொழுகியதோடு, அந்த உண்மை இஸ்லாத்தை தூயவடிவில் நிலைநாட்டும் பணியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்களே…!
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நிலைநாட்டி னார்கள். அப்படி நிலைநாட்டும் ஒன்றுபட்ட சமுதாயத்தையும் உருவாக்கிச் சென்றார்கள்.
இயக்கரீதியான செயல்பாடுகள், கூட்டு முயற்சி அமைப்புகள், கழகங்கள், பேரவைகள், என்று இன்று நம்மால் சொல்லப்படும் (நன்மைகள்) அனைத்தையும் இஸ்லாத்திற்குட்பட்டு நிறுவிக்காட்டப்பட்டுவிட்டதே!
மனிதனுக்கும் மனித சமுதாயத்துக்கும் நன்மை பயக்கும் எதையேனும் இஸ்லாம் எடுத்துக்காட்டாமல் விட்டுவிட்டதா? மனித சமுதாயம் முழுமையும் எல்லாவகையிலும் செயல்பட இலகுவான, இறைமார்க்கம் இவ்வுலகில் இஸ்லாம் ஒன்றுதானே!
மனித வாழ்வின் அனைத்து அம்சங்களோடு, காலையில் எழுந்து படுக்கச் செல்லும் வரை, பிறந்ததிலிருந்து இறக்கும் வரை தனி மனிதனையும், மனித சமுதாயத்தையும் இஸ்லாத்தோடு, முழுமையாக ஐக்கியப்படுத்துதல் அன்றோ.
இஸ்லாத்தை அதன் தூயவடிவில் நிலைநாட்டுதல் என்பதன் சரியான, உண்மையான அர்த்தம்! இதைத்தானே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் நிலைநாட்டி சென்றார்கள்.
எப்படி புரிந்துள்ளோம்?
ஆனால், நாம் இன்று, “”இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநாட்டுதல்” என்பதை சரியாக புரிந்திருக்கிறோமா? இல்லையே!
உலகியல் காரியங்கள், நிர்வாக வசதிகள், பாதிக்கப்பட்டோருக்கு உதவுதல், இத்யாதி, இத்யாதி. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள காரணங்கள் எதுவானாலும், எல்லாவற்றையும் இஸ்லாத்திற்குட்பட்டு செயல்படுத்த முடியுமா? முடியாதா?
இன்று நம்மால் சொல்லப்படும் செயல்பாடுகள், ஒன்றுபடுதல் போன்றவைகள் அனைத்தையும் இஸ்லாத்திற்குட்பட்டு நிறுவ முடியுமா? முடியாதா? நிச்சயம் முடியும்…!
நாம் எதைச் செய்தாலும் அது இஸ்லாத்திற்குட்பட்டிருந்தால் தானே அது அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்படும்?
“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாமாகும்…”
(ஆல இம்ரான் 3:19)
இஸ்லாத்திற்குட்படாத எந்த செயல்பாட்டிற்குள் அல்லாஹ்விடம் எவ்வித மதிப்புமில்லை. இதை நன்றாக நினைவில் நிறுத்தியவர்களாய், நபி(ஸல்) அவர்களும், நபித் தோழர்களும் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநாட்டுவதற்கு நமக்கு வழிகாட்டியும் சென்று விட்டார்கள். நபி(ஸல்)அவர்கள். இன்று இது மறைக்கப்பட்டும், மறைக்கப்பட்டுவிட்டதால், இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநாட்டுதல் என்பது நம்மவர்களால் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதை இன்றைய தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லிக் கொள்வோரின் பேச்சும், எழுத்தும், செயலும் நிரூபிக்கும்.
நம் செயல்பாடுகள் உலகியலைக் குறிக்கோளாக்கியிருந்தாலும், அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தைத் தேடித்தரக் கூடியதாய் இருக்க வேண்டும் என்றால் நம் செயல்பாடுகள் நிச்சயம் இஸ்லாத்திற்குட்பட்டதாய் இருக்க வேண்டும். திசை திருப்பப்பட்டு வரும் நம் கவனத்தை நபி(ஸல்) அவர்கள் காலத்திற்கு அப்படியே திருப்புவோம்.
இன்ஷா அல்லாஹ், இந்த ஆய்வின் இரண்டாம் பகுதி அடுத்த இதழில் நிறைவு பெறும். மீண்டும் சந்திப்போம்! சிந்திப்போம்! சீர்பெறுவோம்!