பாவமன்னிப்பு கேட்டால்…
இறைவன் மன்னிப்பானா? தண்டிப்பானா?
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
“மனிதர்களின் தவறுகளுக்காக அவர்களை (உடனுக்குடன்) இறைவன் தண்டிப்பதாக இருந்தால் எந்த உயிரினத்தையும் பூமியின் மீது இறைவன் விட்டு வைத்திருக்க மாட்டான். எனினும் நிர்ணயிக்கப்பட்ட நாள் வரை திருந்துவதற்காக அவர்களுக்கு அவகாசமும் வழங்குகிறான். அவர்களின் நிர்ணயிக்கப்பட்ட நாள் வந்து முடிந்ததும் (தண்டிக்கவும் செய்யலாம், மன்னிப்பும் வழங்கலாம்.
தன் அடியார்களை அல்லாஹ் அறிந்தவனாக இருக்கின்றான். அ.கு. 35:45
மேற்கண்ட வசனத்தில் இறைவன் மூன்றுவித கருத்தை கூறுகிறான்.
முதலாவது: தன்னுடைய வல்லமையை அல்லாஹ் இதன் மூலம் சுட்டிக்காட்டுகிறான்.
இரண்டாவது : தன்னுடைய மன்னிக்கும் பண்பைப் பற்றியும் கூறுகிறான்.
மூன்றாவது : தன் அடியார்களின் நிலை என்னவாகும் என்பதை தான் அறிந்தவனாக இருக்கின்றேன் என்றும் கூறுகிறான்.
பொதுவாக பாவம் செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் இறைவன் மன்னிப்பான் என்று எல்லா இறை நம்பிக்கையாளர்களும் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதுமட்டுமல்ல இது இறைவன் மீதுள்ள அடிப்படை நம்பிக்கையும் கூட, அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆயினும் அவ்வப்பொழுது சந்தேகமும் சிலருக்கு வரத்தான் செய்கிறது.
மன்னித்தானா? மன்னிக்கின்றானா?
(Pastense)(Presentense)
மன்னிப்பானா? அல்லது தண்டிப்பானா?
(Futuretense) (Funishment
இறைவன் மன்னிப்பானா? என்ற சந்தேகம் பலகீனமான இறை நம்பிக்கையாகும்.
எவ்வாறு என்றால்;
இறைவனின் பண்பான “மன்னிப்பாளன்‘ (அல்கய்ப்ய்பார்) என்ற செயலையே சந்தேகப்படுவதாகும்.
தன் அடியார்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகம் கொள்ள வேண்டாம் என்பதை தன் வழிகாட்டி நூலில் (அல்குர்ஆனில்) இறைவன் கீழ்கண்டவாறு கூறுகிறான்.
“மன்னிப்பு கேட்டு தவறை திருத்திக் கொண்டு (இனி தவறு செய்யமாட்டேன் என்று செயல் மூலம் காட்டுபவர்களை) நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பு மிக்கவன், நிகரற்ற அன்புடையவன்” என்று கூறுகிறான். அ.கு. 2:160
மேற்கண்ட வசனத்தில் தான் மன்னிக்க கூடியவன் என்றாலும் ஒரு நிபந்தனையும் இறைவன் வைக்கின்றான். அதாவது எந்த தவறை செய்தோமோ அந்த தவறை இனி செய்யாது இருந்தால் மட்டுமே மன்னிப்பு கிடைக்கும் என்பதாகும். நமது நடைமுறை வாழ்க்கையிலும் இதுவே எதார்த்தமும் ஆகும். ஆயினும் தவறு செய்வதும், தவறுக்கு மன்னிப்பு கேட்பதும் தொடர் கதையாகவே உள்ளது.
“தவறு செய்ய யாரும் பொதுவாக பயப்படுவதில்லை. ஆனால் செய்யும் தவறு வெளியே தெரியக்கூடாது என்றுதான் பயப்படுகிறார்கள்.’ “ஏன் இப்படிப்பட்ட நிலை என்றால் அவர்கள் தங்களையும் அறியவில்லை, இறைவனையும் அறியவில்லை‘ என்பதே ஆகும்.
பொதுவாக நாம் அனைவரும் நமக்கு நன்மையையே நாடுகின்றோம். மேலும் நன்மைக்கு கூலி உடனே இறைவன் கொடுக்கவேண்டும் என்றும் விரும்புகின்றோம், கொடுப்பான் என்றும் நம்புகின்றோம். ஆனால் பாவத்திற்கு மட்டும் தண்டனையை விரும்புவதில்லை, மன்னிப்பை விரும்புகின்றோம்.
இவ்வாறு நினைப்பது சரியா?
தவறை(பாவத்தை) திரும்ப, திரும்ப செய்வதை விட்டுவிடாது மன்னிப்பு மட்டும் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இறைவனே அதற்கு விளக்கமும் கூறுகிறான்.
அது என்னவென்றால்,
“பாவங்களில் வெளிப்படையானதையும் இரகசியமானதையும் விட்டு விடுங்கள்! பாவத்தைச் செய்தோர், அதை செய்து வந்ததன் காரணமாகத் தண்டிக்கப்படுவார்கள்” அ.கு. 6:120
மற்றொரு வசனத்தில் அதற்கான (பாவத்திற்கான) தண்டனை என்னவென்றும் இறைவன் கூறுகிறான். “குற்றம் (பாவம்) புரிந்தோரின் தங்குமிடம் நரகமாகும். அங்கிருந்து அவர்கள் வெளியேற நினைக்கும்போதெல்லாம் மீண்டும் அதில் போடப்படுவார்கள். (தள்ளப்படுவார்கள்)
“நீங்கள் பொய்யயனக் கருதிக் கொண்டிருந்த நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்படும். அ.கு.32:20
அவ்வாறு என்றால் அல்லாஹ் மன்னிக்கவே மாட்டானா? என்று கேள்வி எழும்.
ஆம் இறைவன் மன்னிப்பான், மன்னிக்கக் கூடியவன் தான். ஆனால் தான் யாரை மன்னிப்பேன் என்பதையும் அவனே கூறுகிறான்.
“அறியாமல் பாவம் செய்துவிட்டு தாமதமின்றி (உடனே) மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்க வனாகவும் இருக்கின்றான்.” அ.கு. 4:17
மற்றொரு வசனத்தில்;
“பாவங்களை செய்துகொண்டே இருந்துவிட்டு மரணம் நெருங்கும் வேளையில் நான் இப்போது மன்னிப்புக் கோருகிறேன் எனக் கூறுவோருக்கும், ஏக இறைவனையும் இறை கட்டளையை நிராகரித்தவராக மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு” என்பதையும் இறைவன் கூறுகிறான். அ.கு. 4:18
மேலும் மற்றொரு வசன்த்தில்,
“இறைவன் மன்னிப்பவன், இரக்கமுள்ளவன், அவர்கள் (பாவங்கள்) செய்ததற்காக அவர்களை பிடிப்பதாக இருந்தால் அவர்களுக்கு தண்டனையை உடனே வழங்கியிருப்பேன்.”
மாறாக அவர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட ஒரு நேரம் உள்ளது. அதை விட்டும் தப்பிக்கவும், காப்பாற்றப்படவும் மாட்டார்கள்” அ.கு. 18:58
இதுவே இறைவனின் நிலை, அதாவது அவன்… (இறைவன்) …
அருளாளன் தான்,
அன்புடையோன் தான்,
இரக்கமுடையவன் தான்,
ஆயினும்,
யாவற்றையும் பார்ப்பவன்,
நீதமுடையவன்
ஆனாலும்,
“தீர்ப்பளிப்போரில் அல்லாஹ் மிகச் சிறந்த தீர்ப்பளிப்பவன் இல்லையா?” அ.கு. 95:8
எனவே….
“”ஒரு நாளை அஞ்சிக் கொள்ளுங்கள், அன்று நீங்கள் அல்லாஹ்விடம் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்துவந்தது (நன்மைக்கும், தீமைக்கும்) முழுமையாக கூலி வழங்கப்படும். அவர்கள் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்” அ.கு. 2:281
இறுதியாக….
“ஆணோ அல்லது பெண்ணோ, இறை நம்பிக்கையாளராக இருந்து நற்செயல்கள் செய்தால், அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். அவர்கள் சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்”. அ.கு. 4:124