முதுமையில் நிம்மதி காணமுடியுமா?
அ. நஜ்முத்தீன்
பொதுவாக எது முதுமை?
எது நிம்மதி?
என்று தெரியாததால் இந்த கேள்வி எழுகிறது. மேலும் இப்போது (20Ks) இளமையிலேயே நிம்மதியை காணமுடியவில்லை. பின்பு முதுமையில் எங்கு காண்பது? என்று பேசப்படுகிறது, கேட்கப்படுகிறது.
ஆம்! உண்மைதான்.
இளமையில் நிம்மதியை தொலைத்தவர்கள் தான் இன்று (20Ks) ஏராளமானோர். அதற்கு காரணம் நவீன (Fast Food) உணவு முறைகளும், அலோபதி மருந்து மாத்திரைகளும் ஆகும்.
முதுமை என்பது எது?
சுமார் 40 வயதை கடந்துவிட்டால் அது முதுமையா? (அல்லது) அரசு மற்றும் அலுவலகப் பணியிலிருந்து ஓய்வு (Retirement) கொடுக்கின்றார்களே 60 வயதில் அதுவா முதுமை? இல்லை.
உண்மை என்னவென்றால்;
உடல் நலமும், மன நலமும் பேணாதவர்களுக்கும், அலோபதி மருத்துவர்களுக்கும் மட்டுமே வயது கூடுதல் என்பது முதுமை என்று நினைப்பார்கள்.
ஆரோக்கியத்தையும், மனநலத்தையும் பேணுபவர்களுக்கு வயது என்பது முதுமை அல்ல, அது வெறும் எண்ணிக்கை தான்.
அதாவது வயது அதிகரிப்பது முதுமை அல்ல, மாறாக நம்பிக்கை குறையாது வாழ்வை நேசிப்பவர்களுக்கு வயது 70-80 ஆனாலும் முதுமை வராது. நிம்மதியும் இளமையும் என்றும் இருக்கும்.
அவ்வாறு என்றால் முதுமையிலும் (70-80 ஆனாலும்) நிம்மதியாகவும், இளமை யாகவும் வாழ முடியுமா?
நிச்சயமாக முடியும்.
அலோபதி மருத்துவர்கள் மீதும், மருந்து மாத்திரகள் மீதும் அளவு கடந்து நம்பிக்கை வைக்காமல், மாறாக எதில் “பரஃகத்” இருக்கிறது, கிடைக்கிறது என்பதை அறிய வேண்டும்.
“பரஃகத்” என்பது அல்லாஹ்வின் மறைவான அருட்கொடை அல்லது நன்மை என்று சொல்லலாம்.
1. சம்பளம் (Salary) வருமானம் (Income) அதிகமில்லை, ஆனாலும் அதில் மன அமைதி, குடும்ப அமைதி இருந்தால் அது “பரஃகத்”.
2. வறுமையில் வாழ்ந்தாலும் நோயின்றி வாழ்வது…. “பரஃகத்”.
3. வீட்டில் உணவு குறைவாக இருந்தாலும் அது அனைவருக்கும் போதுமானதாக இருந்தால்… அது “பரஃகத்”.
4. நேரம், காலம் குறைவாக இருந்தாலும் செய்ய வேண்டியதை அமைதியாக செய்து முடிக்க முடிந்தால் அது “பரஃகத்”.
நிம்மதி, இன்பம், மன நிறைவு என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபட்டதாக இருக்கலாம், இருக்கும். ஆனால் அதன் அடிப்படை உண்மை ஒன்றே.
அது “உள்ளத்தின் அமைதி” என்பதாகும்.
1. நிம்மதி என்பது நிறைய பொருட் செல்வங்கள் வைத்திருப்பதில் இல்லை.
2. எல்லா ஆசைகளும் நிறைவேற்றுவதிலும் இல்லை.
3. பிறரை விட எவ்வளவு பணம், பதவி உள்ளவராக இருப்பதிலும் இல்லை.
மாறாகஉண்மையானஇன்பம், நிம்மதி எவைகள் என்றால்;
A. ஒருவரை அல்லது குடும்பத்தினரை புரிந்த வாழ்வது நிம்மதியாகும்.
B. மனதில் பொறாமை இல்லாமல் இருப்பது நிம்மதியை தரும்.
C. மனிதர்களுக்கும், இறைவனுக்கும் நன்றி சொல்ல தெரிந்து வாழ்வது நிம்மதியான வாழ்வாகும்.
D. யாரையும் மனம் புண்படுத்தாமல் பேசுவதும் மன அமைதிக்கான வழியாகும்.
E. சிலர் சிரிக்கவும், சிந்திக்கவும் பேசுவதும் நிம்மதியாகும்.
F. பிறருக்கு உதவி அல்லது தர்மம் செய் வது மூலம் அவர்கள் அடைகின்ற மகிழ்ச் சியை கண்டு ரசிப்பது நிம்மதியாகும்.
I. குர்ஆன் படிப்பதிலும், தொழுகை யிலும் கிடைக்கின்ற மகிழ்ச்சி மனம் நிறைவுபெறும்.
அதாவது இன்பம், நிம்மதி என்பது உதட்டில் அல்லது வெளியில் இல்லை.
“உள்ளத்தில்தான்” உள்ளது.
சுருக்கமாக :
மார்க்கம் அனுமதித்ததை (ஹலாலானது) செய்வது மூலம் எதில் உள்ளம் நிறைவு பெறுகிறதோ அதுவே முழுமையான நிம்மதியாகும்.
இவைகள் எல்லாம் முதுமையிலும் கிடைக்குமா?
நிச்சயமாக கிடைக்கும்.
அதற்கு மூன்று வழிகள் உள்ளன.
1. அல்லாஹ் வழங்கியதைக் கொண்டு (இருப்பதைக் கொண்டு) அதற்குமேல் பறக்காமல் (ஆசைப்படாமல்) இருக்கும் மனமே நிம்மதி பெறும்.
2. ஆசை கூடாதது என்பது அல்ல, ஆசையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க தெரிந்திருக்க வேண்டும்.
3. நற்சிந்தனை, தொழுகை, துஆ, நன்றி.
இவைகள் உள்ளத்தை சுத்தப்படுத்தி அமைதியை தரும்.
எனவேதான் இறைவன் தன் வழிகாட்டி நூலில் (குர்ஆனில்) எதைக் கொண்டு மனம் அமைதி பெறும் என்பதைக் கூறியுள்ளான்.
“இறை நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறு கின்றன. அறிந்துகொள்ளுங்கள்! அல்லாஹ்வின் நினைவால்தான் உள்ளங்கள் நிம்மதியடைகி ன்றன” (அல்குர்ஆன் 13:28)
மேற்கண்ட வசனம் “”அல்லாஹ்வின் நினைவால்” உள்ளங்கள் நிம்மதியடைகின் றன என்று கூறுகிறது.
அல்லாஹ்வின் நினைவால் என்பது :
1. அவன் மீதுள்ள நம்பிக்கையாகும்.
2. அவனுக்கு கீழ்ப்படிதலாகும்.
3. அவன் அனுமதித்ததற்கு மாறாக எது ஒன்றையும் செய்யாது. இறைவன் எப் போதும் நம்மை பார்க்கின்றான், கண் காணிக்கின்றான் என்பதாகும்.
4. அவனுக்கு நன்றி செலுத்துவதாகும்.
5. அவனுடைய படைப்புக்களை சிந்திப்பதாகும்.
சமீப காலமாக சுமார் 80 சதவிகிதத்தினர் உலகில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உலகில் நடைபெறும் தற்கொலைக்கு காரணம் மன அழுத்தமும் ஆகும். ஆனால் மன அழுத்தம் ஏற்பட்டாலும் முஸ்லிம்கள் தற்கொலை செய்துகொள்வது மிக மிக குறைவு.
அதற்கு காரணம்; இறைவன் மீதுள்ள நம்பிக்கை, மற்றும் இறைவன் சக்திக்கு மீறி எந்த சுமையும் கொடுக்கமாட்டான் என்பதும் ஆகும். வாழ்க்கையை சுமையாக கருதாமல் அருட்கொடையாக கருதினால் இளமையிலும், முதுமையிலும் நிம்மதி காணலாம்.