யூஸுஃப் என்னும் ஜோஸப்பின் அழகிய வரலாறு!
S.H. அப்துர் ரஹ்மான்
நவம்பர் மாத தொடர்ச்சி….
“உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்”
“படைத்தவன் உங்களுக்கு அருள்புரியட்டும்”
யூஸுஃப் : நபியுடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர். அவ்விருவரில் ஒருவன், “நான் திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன்” என்று கூறினான். மற்றவன், “”நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் திண்பதாகவும் கனவு கண்டேன்” என்று கூறினான். (பின் இருவரும் “”யூஸுஃபே! எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிப்பீராக; மெய்யாக நாங்கள் உம்மை (ஞானமுள்ளவர்களில்) நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கிறோம்” (என்று கூறினார்கள்)
அதற்கு அவர் கூறினார்: “உங்களிருவருக்கும் அளிக்கக்கூடிய உணவு உங்களிடம் வ(ந்து சே)ருவதற்கு முன்னரும் (இக்கனவுகளின்) பலனை நீங்களிருவரும் அடைவதற்கு முன்னரும். இவற்றின் விளக்கத்தை உங்களில் இருவருக்கும் கூறிவிடுகிறேன். இது என் இறைவன் எனக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்தும் உள்ளவை. அந்த இறைவன் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களும், மறுமையை நிராகரிப்பவர்களுமான சமூகத்தாரின் மார்க்கத்தை நான் நிச்சயமாக விட்டுவிட்டேன்.
“நான் என் மூதாதையர்களான இப்ராஹீம் இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன். அந்த இறைவனுக்கு எதையும் நாங்கள் இணை வைப்பது எங்களுக்கு தகுமானதல்ல. இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அந்த இறைவன் புரிந்த அருளாகும். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (அந்த இறைவனுக்கு) நன்றி செலுத்துவதில்லை.
“சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! வெவ்வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆள்கின்ற ஒருவனான அந்த இறைவனா?
“அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்கள் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை. அவற்றுக்கு அந்த இறைவன் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை. அந்த இறைவன் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும். ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.
“சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன) உங்களிருவரில் ஒருவர் தம் எஜமானனுக்கு திராட்சை மதுவைப் புகட்டிக் கொண்டிருப்பார். மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும், நீங்களிருவரும் விளக்கம் கோரிய காரியம் (கனவின் பலன்) விதிக்கப்பட்டுவிட்டது” (என்று யூஸுஃப் கூறினார்)
அவ்விருவரில் யார் விடுதலை அடைவார் என்று எண்ணினாரோ அவரிடம், “என்னைப் பற்றி உம் எஜமானனிடம் கூறுவீராக! என்றும் சொன்னார். ஆனால் (சிறையிலிருந்து விடு தலையாகிய) அவர் தம் எஜமானனிடம் (இதைப் பற்றிக்) கூறுவதிலிருந்து ஷைத்தான் அவரை மறக்கடித்து விட்டான். ஆகவே அவர் சிறைக்கூடத்தில் (பின்னும்) சில ஆண்டுகள் இருக்க வேண்டியவரானார்.
நான் ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்பதையும், ஏழு பசுமையான கதிர்களையும், வேறு (ஏழு) காய்ந்து (சருகாகிவிட்ட) கதிர்களையும் திடமாக நான் கனவில் கண்டேன். பிரதானிகளே! நீங்கள் கனவு விளக்கம் கூறக் கூடியவர்களாக இருந்தால், என்னுடைய (இக்) கனவின் பலனை எனக்கு அறிவியுங்கள்” என்று (தம் பிரதானி களையழைத்து எகிப்து நாட்டு) அரசர் கூறினார்.
“(இவை) குழப்பமான கனவுகளேயாகும். எனவே நாங்கள் (இக்) கனவுகளுக்கு விளக்கங் கூற அறிந்தவர்கள் அல்லர்” என்று கூறினார்கள்.
அவ்விருவரில் (சிறையிலிருந்து) விடுதலையடைந்திருந்தவர். நீண்ட காலத்திற்குப் பின்னர், (யூஸுஃபை) நினைவு கூர்ந்து “இக்கனவின் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவிப்பேன். என்னை (யூஸுஃபிடம்) அனுப்பி வையுங்கள்” என்று சொன்னார்.
(சிறையில் யூஸுஃபை கண்ட) அவர், “”யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்பதையும்; பசுமையான ஏழு கதிர்களையும், வேறு (ஏழு) காய்ந்து (சருகாகி விட்ட) கதிர்களையும் (கனவில் கண்டால் அக்கனவுக்குப் பலன் என்ன என்பதை) எனக்கு அறிவிப்பீராக. மக்கள் அறிந்துகொள்வதற்காக அவர்களிடம் திரும்பிப் போய்(ச் சொல்ல) வேண்டியிருக்கிறது” என்று கூறினார்.
“நீங்கள் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு (நல்லபடியாக) விவசாயம் செய்வீர்கள். பிறகு நீங்கள் அறுவடை செய்த(விளைச்ச)லில், நீங்கள் உண்பதற்கு வேண்டிய ஒரு சிறிய அளவைத் தவிர, அதனை அதற்குரிய கதிர்களிலேயே விட்டு வையுங்கள்.
“பின்னும், அதற்கப்பால் கடினமான (பஞ்சத்தையுடைய வருடங்கள்) ஏழு வரும்; நீங்கள் பஞ்சமான ஆண்டுகளுக்காக பத்திரப்படுத்தி முன்னமேயே வைத்திருப்பதில் சொற்ப (அளவை)த் தவிர மற்றதை அவை (அந்த பஞ்ச ஆண்டுகள்) தின்றுவிடும்.
பின்னும் அதற்கப்பால் ஓராண்டு வரும். அதில் மக்களுக்கு நல்ல மழை பெய்யும். அதில் (விளையும் கனிகளிலிருந்து) அவர்கள் பழ ரசங்கள் பிழிந்து (சுகமாக) இருப்பார்கள் என்று கூறினார்.
(இவ்விவரம் அரசருக்கு அறிவிக்கப்பட்டதும்) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள் என்று அரசர் கூறினார். (அவருடைய) தூதர் யூஸுஃபிடம் வந்தபோது அவர், “நீர் உம் எஜமானரிடம் திரும்பிச் சென்று “தம் கைகளை வெட்டிக்கொண்ட பெண்களின் உண்மை நிலை என்ன?” என்று அவரிடம் கேளும். நிச்சயமாக என் இறைவன் அப்பெண்களின் சதியை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்” என்று கூறினார்.
(இவ்விவரம் அறிந்த அரசர் அப்பெண் களை அழைத்து) “நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கு இணங்குமாறு அழைத்தபோது உங்களுக்கு நேர்ந்தது என்ன?” என்று கேட்டார். (அதற்கு) அப்பெண்கள் “அந்த இறைவன் எங்களை காப்பானாக! நாங்கள் அவரிடத்தில் யாதொரு கெடுதியையும் அறியவில்லை” என்று கூறினார்கள். அஜீஸுடைய மனைவி, “இப்பொழுது (எல்லோருக்கும்) உண்மை வெளியிடப்பட்டுவிட்டது. நான் தான் இவரை என் விருப்பத்திற்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். நிச்சயமாக அவர் உண்மையாளர்களில் உள்ளவர்” என்று கூறினாள்.
இ(வ் விசாரணையை நான் விரும்பிய) தன் காரணம். “நிச்சயமாக அவர் (என் எஜமானர்) இல்லாதபோது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிந்து கொள்வதுடன், நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சதியை நடைபெறவிடுவதில்லை என்பதை அறிவிப்பதற்காகவுமேயாகும்.
“அன்றியும், நான் என் மனதைப் பாவத்தை விட்டும் பரிசுத்தமாக்கிவிட்டதாகவும் (கூற) இல்லை, ஏனெனில் மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது. என் இறைவன் அருள்புரிந்தாலன்றி நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும், அருளாளனாகவும் இருக்கின்றான்” (என்றும் கூறினார்)
இன்னும், அரசர் கூறினார்: “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள். அவரை நான் என் நெருங்கிய(ஆலோசக)ராக அமர்த்திக்கொள்வேன்” (இவ்வாறு அரசரிடம் யூஸுஃப் வந்ததும்) அவரிடம் பேசி (அவர் ஞானத்தை நன்கறிந்து பொழுது) “”நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் அந்தஸ்துள்ளவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் (உயர்ந்து) இருக்கிறீர்” என்று கூறினார்.
(யூஸுஃப்) கூறினார். (இந்த) பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை (அதிகாரியாய்) ஆக்கிவிடுவீராக; நிச்சயமாக நான் (அவற்றைப்) பாதுகாக்க நன்கறிந்தவன்”
யூசுஃப் தான் விரும்பிய விதத்தில் காரியங்கள் செய்துவர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம். இவ்வாறே நாம் நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும்படிச் செய்கின்றோம். நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.
மேலும் பயபக்தியுடையவர்களான நம்பிக்கையாளர்களுக்கு மறுமையில் கூலி மிகச் சிறந்ததாக இருக்கும்.
(பின்னர் யூஸுஃபுடைய சகோதரர்கள் (மிஸ்ரு நாட்டுக்கு) வந்து, அவரிடம் வந்தபோது யூஸுஃப் அவர்களை அறிந்து கொண்டார். ஆனால் அவர்களோ அவரை அறியாதவர்களாக இருந்தனர்.
(யூஸுஃப்) அவர்களுக்கு வேண்டிய பொருள் (தானியங்களைச்) தயார் செய்து கொடுத்தபோது, (அவர்களை நோக்கி) “உங்கள் தந்தை வழிச் சகோதரனை (மறு முறை நீங்கள் இங்கு வரும்போது) என்னிடம் அழைத்து வாருங்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு (தானியங்களை நிரப்பமாக) அளந்து கொடுத்ததையும், விருந்துபச்சாரம் செய்வதில் நான் “சிறந்தவன்” என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா?
“ஆகவே, நீங்கள் அவரை என்னிடம் அழைத்து வராவிட்டால், என்னிடமிருந்து உங்களுக்கு (தானிய) அளவையும் இல்லை, நீங்கள் என்னை நெருங்கவும் கூடாது” என்று கூறினார்.
“அவரது தந்தையிடத்தில் அவர் விசயமாக நாம் ஓர் உபாயத்தை மேற்கொள்வோம். மேலும் நிச்சயமாக நாம் அதை செய்பவர்கள் தான்” என்று கூறினார்கள்.
(பின்னர் யூஸுஃப்) தம் பணியாட்களை நோக்கி, “அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய மூட்டைகளிலே வைத்து விடுங்கள். அவர்கள் தம் குடும்பத்தாரிடம் சென்ற பிறகு இதை அறிந்தால் அவர்கள் திரும்பி வரக்கூடும்” என்று கூறினார்.
அவர்கள் தம் தந்தையாரிடம் திரும்பிய போது, அவரை நோக்கி, “எங்கள் தந்தையே! (நாங்கள் நம் சகோதரரை அழைத்துச் செல்லாவிட்டால்) நமக்கு(த் தானியம்) அளந்து கொடுப்பது தடுக்கப்பட்டுவிடும். ஆகவே எங்களுடன் எங்களுடைய சகோதரனையும் அனுப்பிவையுங்கள். நாங்கள் (தானியம்) அளந்து வாங்கிக்கொண்டு வருவோம். நிச்சயமாக நாங்கள் இவரை மிகவும் கவனமாக பாதுகாத்தும் வருவோம்” என்று சொன்னார்கள்.
அதற்கு (யாஃகூப், இதற்கு) முன்னர் இவருடைய சகோதரர் விசயத்தில் உங்களை நம்பியது போன்று, இவர் விசயத்திலும் நான் உங்களை நம்புவதா? (அது முடியாது) பாதுகாப்பவர்களில் அந்த இறைவனே மிகவும் மேலானவன். கிருபையாளர்களில் அவனே எல்லோரையும் விட மிக்க கிருபையாளனாவான்” என்று கூறிவிட்டார்.
அவர்கள் தங்கள் (சாமான்) மூட்டைகளை அவிழ்த்தபோது, அவர்களுடைய கிரயப் பொருள் (யாவும்) அவர்களிடம் திருப்பப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள், “எங்கள் தந்தையே! (இதற்கு மேல்) நாம் எதைத் தேடுவோம்? இதோ, நம்முடைய (கிரயப்) பொருள்கள் நம்மிடமே திருப்பப்பட்டுவிட் டன. ஆகவே நம் குடும்பத்திற்கு (வேண்டிய) தானியங்களை நாங்கள் வாங்கி வருவோம். எங்கள் சகோதரரையும் நாங்கள் பாதுகாத்துக் கொள்வோம். மேலும், (அவருக்காக) ஓர் ஒட்டக(ச் சுமை) தானியத்தை அதிகமாகக் கொண்டு வருவோம். இது (அந்த மன்னரைப் பொறுத்தவரை) சாதாரணமான அளவுதான்” என்று கூறினார்கள்.
அதற்கு யாஃகூப் “உங்கள் யாவரையுமே (ஏதாவதோர் ஆபத்து) சூழ்ந்து (உங்களைச் சக்தியற்றவர்களாக ஆக்கிக்) கொண்டாலன்றி நிச்சயமாக நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வருவீர்களென்று அந்த இறைவனின் மீது நீங்கள் எனக்குச் சத்தியம் செய்து (வாக்குறுதி) கொடுத்தாலன்றி, நான் அவரை உங்களுடன் அனுப்பவேமாட்டேன்” என்று கூறினார். அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து (வாக்குறுதி) கொடுத்ததும் அவர் “நாம் பேசிக் கொண்டதற்கு அந்த இறைவனே காவலனாக இருக்கின்றான்” என்று கூறினார்.
(பின்னும்) அவர், “என் (அருமை) மக்களே! நீங்கள் (மிஸ்ருக்குள்) ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள். வெவ்வேறு வாசல்களின் வழியாக நுழையுங்கள். அந்த இறைவனின் விதிகளில் யாதொன்றையும் நான் உங்களை விட்டுத் தடுத்துவிட முடியாது. (ஏனென்றால்) அதிகாரமெல்லாம் அந்த இறைவனுக்கேயன்றி (வேறு எவருக்கும்) இல்லை. அவன் மீதே நான் முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே, முழுமையாக நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீதே முழு நம்பிக்கை வைப்பார்களாக!” என்று கூறினார்.
(மிஸ்ரு சென்ற) அவர்கள் தம் தந்தை தங்களுக்குக் கட்டளையிட்டபடி நுழைந்ததனால் யாஃகூபுடைய மனதிலிருந்து ஒரு நாட்டத்தை அவர்கள் நிறைவேற்றி வைத்தார்களே தவிர, அந்த இறைவனிடமிருந்து (வரக்கூடிய) எதனையும் அது அவர்களை விட்டும் தடுக்கக்கூடிய தாக இருக்கவில்லை. நாம் அவருக்கு அறிவித்துக் கொடுத்தவற்றில் நிச்சயமாக அவர் அறிவு(த் தேர்ச்சி) பெற்ற வராகிருக்கின்றார். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதை அறியமாட்டார்கள்.
(பின்னர்) அவர்கள் யாவரும் யூஸுஃபின் பால் பிரவேசித்தபோது அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னைத் தம்முடன் அமரச் செய்து “நிச்சயமாக நாம் உம்முடைய சகோதரன் (யூஸுஃப்) அவர்கள் (நமக்குச்) செய்தவை பற்றி(யயல்லாம்) கவலைப்படாதீர்” என்று (இரகசியமாகக்) கூறினார். இன்ஷா அல்லாஹ் தொடரும்…..