கலீஃபா….!
அ. நஜ்முத்தீன்
இறை வழிகாட்டி நூலான (குர்ஆனில் உள்ள 6236 வசனங்களை வெறுமனே அரபியில் படித்து (ஓதி) விட்டு மற்றும் தாய்மொழியில் படித்துவிட்டு கடந்துபோகக் கூடியவர்களே அதிகம். அவ்வாறு கடந்து போகின்றவர்களுக்கு அதைப் பற்றியான சிந்தனை செய்ய தோன்றாது.
குர்ஆனையும், ஹதீத் நூல்களையும் படிப்பது கடந்து போவதற்காக அல்ல. சிந்தித்து செயல்படுத்துவதற்காகவே அருளப்பட்டன. எனவேதான் அல்லாஹ் நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? என்று சுமார் 90க்கு மேற்பட்ட வசனங்களில் கேட்கிறான்.
இறைவன் மனிதனைப் பற்றி சொல்லும் போது தன்னுடைய “கலீஃபா” என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 2:30)
கலீஃபா என்றால் என்ன பொருள் :
1. பிரதிநிதி
2. பொறுப்பு ஏற்றுக்கொண்டு செயல்படுபவர்.
3. அதிகாரம் ஒப்படைக்கப்பட்டவர் என்று பொருளாகும்.
ஆனால் முஸ்லிம்களில் பெரும்பாலோர் “கலீஃபா” என்றால், நபி(ஸல்) அவர்களுக்கு பின் முஸ்லிம் சமூகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்களான,
1. அபூபக்கர்(ரழி)
2. உமர் (ரழி)
3. உஸ்மான் (ரழி)
4. அலி(ரழி)
மேற்கண்டவர்களைத்தான் குறிக்கும் என நினைத்துள்ளார்கள். அவர்கள் கலீஃபாக்கள் தான். ஆனால் அது அரசியலில் தலைமை பொறுப்பை மட்டும்தான் குறிக்கும்.
அதுவே குர்ஆனில் கூறப்பட்டுள்ள “கலீஃபா” என்ற சொல்லுக்கு அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து பூமியில் வாழ்ந்து செயல்படும் பொறுப்பாளியை(மனிதனை) “கலீஃபா” என்பதைக் குறிக்கிறது. அதாவது முழு மனிதனையும் குறிக்கிறது.
மனிதனை அல்லாஹ் ஏன் “கலீஃபா” என்று கூறுகிறான்?
அறிவு(இல்ம்) சிந்தனை, தீர்மானிக்கும் திறன் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது நல்லது, கெட்டது தேர்ந்தெடுக்கும் உரிமை மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நீதியையும், அநீதியையும் வேறுபடுத்தும் திறன் வழங்கப்பட்டுள்ளது. பல பொறுப்புக்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
மனிதனின் (கலீஃபாவின்) பொறுப்புகள் என்ன?
1. அல்லாஹ்வை வணங்குதல் (ஜின்னையும், மனிதனையும் நான் என்னை வணங்கவே படைத்தேன். (அ.கு. 51:56)
2. கலீஃபா என்பது பதவி அல்ல, ஆட்சி அல்ல பொறுப்பை சுமந்த அடிமை என்பதாகும்.
மனிதன் பொறுப்பை சுமந்துள்ளதால் தனி நபர், குடும்பம், சமூகம் அனைத்திலும் நீதியை கடைப்பிடிக்க வேண்டும்.
இரத்தம் சிந்துதலை (வன்முறையை) தடுக்க வேண்டும்.
இயற்கை வளங்கள், உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் பொறுப்பாகும்.
மனிதனின் (கலீஃபா) அதிகாரம் என்ன?
மனிதன் பூமியின் பொறுப்புதாரி மட்டுமே. பூமியின் உரிமையாளர் அல்ல.
சுருக்கமாக சொல்வது என்றால்;
அல்லாஹ்வின் கட்டளைகளின் அடிப்படையில் பூமியையும், பூமியில் உள்ள உயிர்களையும் பாதுகாத்து நீதியுடன் வாழும். “பொறுப்புள்ள பிரதிநிதி” ஆவான்.
கலீஃபாவின் (மனிதனின்) பொறுப்பு என்னென்ன?
1. சுற்றுச்சூழல் (சிஐஸஷ்rலிஐதுeஐமி) பாதுகாத்தல், (காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, இயற்கைக்கு இடையூறுகளை ஏற்படுத்துதலை தடுத்தல்)
2. ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு கூடாது, மதம் அல்லது இனம் அடிப்படையில் அநீதி செய்யக்கூடாது, பலவீனருக்காக குரல் கொடுப்பவனாக இருக்கவேண்டும், அநியா யத்தை கண்டு மவுனம் சாதித்தல் கூடாது.
3. அறிவு : அறிவை சரியான வழியில் நன்மைக்கு பயன்படுத்துதல், தொழிலில் தொழில்நுட்பத்தில் நெறிமுறையைப் பின்பற்றுதல் வேண்டும்.
“அறிவு இல்லாத அதிகாரம் அழிவை உருவாக்கும்”
அரசியல் : அதிகார துஷ்பிரயோகம் கூடாது. ஊழல், லஞ்சம், அடக்குமுறையை தடுக்க வேண்டும்.
தனி நபர் வாழ்க்கை :
சுயநலம் கூடாது, அவசரம் கூடாது. மன அழுத்தம் தேவையற்றது, சுய கட்டுப்பாடு வேண்டும், மன்னிக்கும் தன்மை இருக்க வேண்டும், நேர்மை வேண்டும்.
அதாவது கலீஃபா என்பவர். “அரியணையில் இருக்கும் அரசனாக இருந்தாலும் நீதி, நியாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
குர்ஆனில் கலீஃபா என்ற சொல் எங்கெல்லாம், எதற்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது:
1. நிச்சயமாக நான் பூமியில் ஒரு கலீஃபாவை ஏற்படுத்தப் போகிறேன். (அல்குர்ஆன் 2:30)
(தனி நபரை குறிக்கவில்லை, முழு மனிதக் குலத்தையே குறிக்கிறது)
குறிப்பிட்ட தனி நபர் :
தாவூதே! நிச்சயமாக நாம் உன்னை பூமியில் அரசனாக ஆக்கியுள்ளோம். (அ.கு.38:26)
இதில் ஆட்சி, நீதி, அதிகாரம் நிறைந்த தனி நபர் பொறுப்பை குறிக்கிறது.
தலைமுறை தொடர்ச்சி :
“அவன்தான் உங்களை பூமியின் கலீஃபாக்களாக ஆக்கியவன்” (அல்குர்ஆன் 6:165)
இது தலைமுறை தலைமுறையாக தொடர்வது என்பதை குறிக்கிறது.
முன்னோர்கள் :
“நூஹ்(அலை) அவர்களின் சமுதாயத்திற்குப் பின் உங்களை கலீஃபாக்களாக ஆக்கியதை நினைவுகூறுங்கள்” (அல்குர்ஆன் 7:69)
“ஆத் சமுதாயத்திற்குப் பின் உங்களை கலீஃபாக்களாக்கினான்” (அல்குர்ஆன் 7:64)
இது அதிகாரம் பெற்ற பின் பொறுப்பை மறந்த சமுதாயத்தினரை குறிக்கிறது.
நல்லவர்கள் :
“உங்களில் ஈமான் (நம்பிக்கை) கொண்டு நல்லமல்கள் செய்பவர்களை பூமியில் கலீஃபாவாக ஆக்குவேன்.” (அ.கு. 24:55)
குர்ஆனில் மனிதனுக்கு “கலீஃபா” என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்தினான் என்பது தெளிவாக தெரிகிறது.
ஆனால் சிலர் மார்க்க அறிஞர் என்ற போர்வையில் கலீஃபா என்பதற்கு மனிதன் அல்லாஹ்வின் பிரதிநிதி அல்ல, அல்லாஹ்விற்கு பிரதிநிதி தேவை இல்லை, மனிதனுக்கு தான் பிரதிநிதி தேவை என்று தவறான பொருளை கூறி மக்களை திசை திருப்புகிறார் கள்.
உண்மையில் அத்வைதம் (சூஃபிம்) மாபெரும் சிர்க் ஆகும்.
அதாவது இறைவனும், மனிதனும் ஒன்றே என்பது (ஞானம் பெற்றால்/பைஅத் வாங்கினால்) நான் அவன் என்ற வேறுபாடு மறைந்து ஒன்றாகிவிடும்)
உண்மை என்னவென்றால்;
இறைவன் என்றும் இறைவனே.
மனிதன் என்றும் அடிமையே.
அல்லாஹ் – படைத்தவன்
மனிதன் – படைக்கப்பட்டவன். (16:20)
அதாவது அல்லாஹ்வும்(இறைவனும்) மனிதனும் ஒருபோதும் ஒன்றாகாது. பார்க்க வசனம் : (112:4)
“அவனுக்கு இணையானது எதுவும் இல்லை” (42:11)
உலகம் மாயை அல்ல, உண்மையாக படைக்கப்பட்டது மனிதன் இறைவனாக முடியும் என்பதாக கூறுவது அத்வைதமாகும். மனிதன் இறைவனின் அடிமை என்பதுதான் இஸ்லாம் கூறும் தத்துவமாகும்.
“படைப்பவன் படைக்கப்பட்டவனைப் போலவா” (16:17)
அவன் பிறக்கவும் இல்லை எதையும் பெற்றெடுக்கவும் இல்லை. (112:3)
அத்வைதத்தில் : மனிதனை இறைவனாக உயர்த்துதல். இறைவன் வேறு–படைப்பு வேறு என்பது இல்லை.
குர்ஆன் கூறும் சித்தாந்தம் :
“அல்லாஹ்வுடன் யாரை இணைத்தாலும் அவனுக்கு இருப்பிடம் நரகமாகும் (சொர்க்கம் ஹராம்) (5:72)
முடிவுரை : கடந்த காலத்திலும் சரி, நிகழ் காலத்திலும் சரி, எதிர்காலத்திலும் சரி, கலீஃபா என்றால் அல்லாஹ்வின் கட்டளைகளின் அடிப்படையில் அறிவு, நீதி, கருணை, பொறுப்பு ஆகியவற்றுடன் வாழும் பிரதிநிதி (மனிதன்) ஆவான்.