தலையங்கம் :
வானத்தை தொட ஆசைதான்… ஆனால்…?
தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அன்றாடம் கூட்டணியைப் பற்றியும், தொகுதி பங்கீடு பற்றியுமான செய்திகள் தலையங்கமாக உள்ளன.
மேலும், தேர்தல் காலங்களில் பேசு பொருளாக இருப்பது இஸ்லாமியர்களின் இஸ்லாமிய கட்சிகளின் நிலையுமாகும். அதாவது இஸ்லாமியர்கள் ஒட்டுமொத்தமாக தி.மு.க.விற்கு வாக் களிப்பவர்கள் என்பதாகும். மற்றும் முஸ்லிம்களின் ஒற்றுமையின்மைக்கு யார் காரணம்? என்றால் தி.மு.க.தான் என்பதாக எல்லோரும் சொல்லும் வாய்மொழி வார்த்தையாகும்.
இது நகைப்புக்குரிய ஒன்றாக உள்ளது. உண்மை என்னவென்றால்;
கட்சி தலைவர்கள் தனித்த தவில் ஓசை கேட்கவேண்டும் என்ற பேராசையில் ஒற்றுமையை சிதைத்து, தனி ஆவர்த்தனம் செய்கிறார்கள். ஒவ்வொருவரும் தனித்தவிலை(கட்சியை) வைத்துக் கொண்டு ராஜாவாக வலம் வரவேண்டும் என்ற பேராசையில் மிதக்கிறார்கள்.
மேலும், முஸ்லிம்களும், முஸ்லிம்களுக்காக கட்சி நடத்துவதாக கூறும் தலைவர்களும் என்ன செய்கிறார்கள் என்றால்,
யாரேனும் புதிதாக கட்சி தொடங்கினால் முதல் ஆளாக தொப்பியோடு போய் முன் வரிசை யில் நிற்பதும், மற்றும் புதிய கட்சி தொடங்கியவரின் தலையில் தொப்பியை போட்டு அவருடன் நோன்பு கஞ்சி குடிப்பதும், இப்தார் நிகழ்ச்சி நடத்துவதுமாக உள்ளார்கள்.
இதனால் முஸ்லிம் சமுதாயத்திற்கு எந்த பயனுமில்லை, பலனுமில்லை.
சுமார் 35 வருடத்திற்கு முன்பு ஆன்மீகத்தின் பெயரால் இஸ்லாமிய இளைஞர்களை வழிகெடுத்ததில் சில தலைவர்களுக்கு பங்குண்டு.
முதலில் ஆன்மீகத்தை பேசினார்கள். பின்பு ஆன்மீகம் மட்டும் போதாது. அரசியலும் வேண்டும் என்று உணர்ச்சி மேலிட பேசினார்கள். அவ்வப்பொழுது போராட்டம், அரசுக்கு எதிராக சில கண்டனங்கள் செய்தார்களே தவிர இவர்கள் சாதித்தது ஒற்றுமையாக இருந்த சமுதாயத்தை துண்டுதுண்டாக 30க்கும் மேலாக பிரித்தது மட்டுமே.
இப்போது (2025 வரை) சுமார் 48 கட்சிகளாக பிரிந்து ஆளுக்கொரு தனி கட்சி, தனிக் கொடி என்ற பெயரில் வளம் வருகிறார்கள்.
முஸ்லிம்/இஸ்லாம் என்ற மாபெரும் இயக்கத்தின் கீழ் (ஒரே குடையின் கீழ்) நிற்கவேண்டும் என நினைக்கவில்லை. அல்லாஹ்வின் பெரும் கருணையால் கேரளத்தில் மட்டுமே இஸ்லாமிய ஒரே இயக்கத்தின் செயல்பாடு பாராட்டக் கூடிய வகையில் உள்ளது. கேரள அரசியலையே தீர்மானிக்கக் கூடிய மாபெரும் சக்தியாக முஸ்லிம்கள் இருக்கின்றார்கள்.
இந்தியாவின் அரசியலையே தீர்மானிக்கும் சக்தியாக இருந்த முஸ்லிம்கள் இன்று ஒரு சீட்டுக்கும், இரண்டு சீட்டுக்கும் கதவை தட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.
முஸ்லிம்களின் கைகள்(பலம்) வானத்தை (பாராளுமன்றத்தையும், சட்டமன்றத்தையும்) தட்டக்கூடிய அளவிற்கு நீளமானது. ஆனால் பலம் அறியாமல், புரிதல் இல்லாமல் பிற கட்சிகள் இவர்கள் மீது சவாரி செய்யும் நிலை.
பிரிவினையைக் கொண்டு ஒருபோதும் பலத்தை நிரூபிக்க முடியாது.
“நீங்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து இந்த இறைவனி கயிற்றை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று குர்ஆன் கூறுகிறது.
உங்கள் பலத்தை நீங்கள் அறியாத வரை எதுவும் மாறப்போவதில்லை.
முஸ்லிம்களின் ஒற்றுமை இல்லாமல் எதுவும் நடக்காது என்ற நிலையை உணர வேண்டும்.