பிரார்த்தனை – துஆ!
இப்னு ஹத்தாது
மறு பதிப்பு :
பிரார்த்தனை–இறைவனிடம் இறைஞ்சுதல் – துஆ ஒரு முஸ்லிமின் வணக்கங்களின் மூளையாக இருக்கிறது. எல்லாம் வல்ல இறைவன் “அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும் (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்குச் சமீபமாகவே இருக்கின்றோம்” (அல்குர்ஆன் 50:16)
என்று அல்குர்ஆனில் அறிவித்துக் கொடுக்கிறான். அடியான் தன்னிடம் நேரடியாகக் கேட்பதை அல்லாஹ் மிகமிக விரும்புகிறான். அதற்கு மாறாக அடியான் தனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் பரிந்துரைப்பவர்களாக மற்றவர்களை அவர் மலக்காக இருந்தாலும், ஜின்னாக இருந்தாலும், அவுலியா அல்லாஹ்வாக இருந்தாலும் ஆக்கிக்கொள்வதை மிக மிக வெறுக்கிறான். அல்லாஹ்வின் மிக நேசத்திற்குரிய இப்ராஹீம்(அலை) அவர்களின் நேரடிச் சந்ததிகளாக குறைசிகள் இருந்தும் அவர்கள் தங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் பரிந்துரைப்பவர்களாக அல்லாஹ்வின் நல்லடியார்களை, அவுலியாக்களை ஆக்கிக்கொண்ட காரணத்தாலேயே அவர்கள் நிராகரிப்பவர்களாக – காஃபிர்களாக ஆனதாக அல்லாஹ் அல்குர்ஆன் 10:18, 39:3 ஆகிய வசனங்களில் தெளிவுபடுத்தி எச்சரித்துள்ளான். ஒவ்வொரு தொழுகையிலும், ஒவ்வொரு ரகாஅத்திலும் “உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி தேடுகிறோம்” என்று தெளிவாக பிரகடனப்படுத்தி அதில் உறுதியாக இருக்குமாறு ஏவுகிறான்.
ஆக பிரார்த்தனை அல்லாஹ்விடம் கேட்பதை மட்டுமே குறிக்கும். எனவே தான் பிரார்த்தனை – துஆ வணக்கங்களின் மூளையாக இருக்கிறது. அடுத்து அந்த துஆ–பிரார்த்தனை எப்படி அமையவேண்டும் என்பதையும் அல்லாஹ் கற்றுத் தருகிறான். அது வருமாறு:
(முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும் அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்; வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை. அல்குர்ஆன் 7:55
மேலும் அவ்வாறு வரம்பு மீறுகிறவர்களின் நெஞ்சங்களில் முத்திரை இட்டு விடுவதாக அல்குர்ஆன் 10:74லும் அவர்களை வழிகேட்டில் விட்டுவிடுவதாக 40:34 வசனத்திலும் கடுமையாக எச்சரித்துள்ளான் அல்லாஹ்.
இந்த வசனங்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்வது யாதெனில், நாம் தொழுகை, நோன்பு, திக்ர், குர்ஆன் ஓதுதல் போன்ற வணக்க வழிபாடுகளுக்குப் பின்னர் நம்மைப் படைத்துப் போசித்துப் பாதுகாத்து வரும் வல்லமை மிக்க அல்லாஹ்வின் தர்பாரில் மிகப் பணிவாகவும் அந்தரங்கமாகவும் அதாவது சப்தமிட்டு கூச்சல் போடாமல் மெளனமாக நம்முடைய தேவை களைப் பிரார்த்தனையாக துஆவாக வைக்கவேண்டும். செவிடனை நாம் அழைக்கவில்லை. கூச்சல் போடுவதற்கு மிக மிக நுட்பமாகவும், தெளிவாகவும் கேட்பவன் அல்லாஹ். இதை நாம் மறந்துவிடக் கூடாது. (பார்க்க 50:16)
ஆனால் முஸ்லிம்கள் இன்று வணக்கங்களின் மூளையான இந்த பிரார்த்தனையை–துஆவை கூச்சல் போடும் ஒரு வெற்றுச் சடங்காக, இறைவனுக்கு வெறுப்பை யூட்டி இவர்களின் உள்ளங் களில் முத்திரையிட்டு, இவர்களை வழிகேட்டிலாக்கும் ஒரு பித்அத்தாக –அநாச் சாரமாக ஆக்கிவிட்டிருக்கிறார்கள். போயும், போயும் பர்ழான–கடமையான ஐங்கால தொழுகைக்குப் பின் உடனடியாக கூச்சல் போட்டு பின்னால் தொழுபவர்களின் தொழுகை யையும் பாழாக்கி, தங்களின் தொழுகையையும் பாழாக்கிக் கொள்கிறார்கள். “குளிக்கப் போய் சேற்றை அள்ளிப் பூசிக்கொண்ட கதை” என்று சொல்வார்களே அதுபோல் தொழுத தொழுகையையே பாழாக்கி விடுகிறார்கள். தொழுகை மூலம் அல்லாஹ்வின் நேசத்திற்கு ஆளாவதற்குப் பதிலாக, அல்லாஹ்வின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகும் காரியத்தைச் செய்து விடுகிறார்கள். முஸ்லிம்கள் மேலே நாம் எடுத்து எழுதியுள்ள குர்ஆன் வசனங்களை உற்றுணர்ந்து அவற்றின் போதனைக்கு மாற்றமாக தங்களின் பிரார்த்தனை துஆ அமைந்துள்ளதை விளங்கி தெளபா செய்து அல்லாஹ்வின் பொருத்தம் பெறுவார்களாக.
எல்லோருக்கும் துஆ செய்யத் தெரியாதே? அதனால்தான் இமாம் துஆ செய்ய மற்றவர்கள் கோரஸாக ஆமீன் சொல்கிறார்கள் என்ற வாதம் அல்லாஹ்விடம் எடுபடாது. துஆ அரபியில்தான் இருக்கவேண்டும்; அரபி மொழி மட்டும்தான் அல்லாஹ்வுக்குத் தெரியும் என்று எண்ணுவது, அல்லது அரபியில் கேட்கும் துஆவை மட்டும்தான் அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என்று எண்ணுவதை இரண்டுமே அல்லாஹ்வின் வல்லமையை அறியாது அவனைக் குற்றப்படுத்துவதாகவே அமையும். முஸ்லிம்கள் இது விசயத்தில் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
நபி(ஸல்) அவர்களோ, நான்கு கலீஃ பாக்களோ, நபிதோழர்களோ, இமாம்களோ, இப்படி கூட்டு துஆ செய்வதை கற்றுத் தரவில்லை என்பதை முஸ்லிம்கள் உணரவேண்டும். இந்த கூட்டு துஆ பழக்கத்தை முதல் முதலில் யார் ஏற்படுத்தினார்கள் என்பதும் முஸ்லிம்களில் யாருக்கும் தெரியாது. இன்று உலகளாவிய அளவில் எல்லா முஸ்லிம்களிடமும் இத்தவறான பழக்கம் இல்லை. இந்தியாவில் வடநாட்டில் கூட எல்லா பகுதிகளிலும் இத்தீய பழக்கம் இல்லை. மார்க்க ஞானம் சரிவர இல்லாத புரோகித முல்லாக்களால் மட்டுமே இந்த கூட்டு துஆ நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இவர்களால் கடமையான தொழுகைக்குப் பின்னர் கூட்டு துஆ மற்றும் சுத்தம், பாத்திஹா போன்ற பல பித்அத்தான சடங்குகளில் கூட்டு துஆ மற்றும் பல நிகழ்ச்சிகளில் விஷேச துஆ, அபூர்வ துஆ என்றெல்லாம் இவர்களாக மார்க்கத்தில் பித்அத்களைப் புகுத்திக் கொண்டு, இறை வனுக்கு வெறுப்பைத்தரும். அவர்களின் உள்ளங்களில் முத்திரையிடப்பட்டு வழிகேட்டிலாக் கும் இப்படிப்பட்ட கூட்டு துஆக்களை முஸ்லிம்களிடையே நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். தப்லீக் இஜ்தியாக்களின் இறுதியில் இந்த பித்அத்தான கூட்டு துஆ செய்யப்படுகிறது. உபதேச நிகழ்ச்சிகளில் அக்கறையாகக் கலந்து கொள்ளாதவர்கள் கூட இறுதியில் நடை பெறும் இந்த பித்அத்தான கூட்டு துஆவில் அவசியம் கலந்துகொண்டு துஆ கேட்பவர் மூச்சுவிடும் இடங்களிலெல்லாம் கோரஸாக ஆமீன், ஆமீன், ஆமீன் என்று காட்டுக்கத்தாகக் கத்துவது பார்ப்பதற்கு ஒரு பக்கம் வேடிக்கையாகவும் மறுபக்கம் வேதனையாகவும் மறுபக்கம் வேதனையாகவும் இருக்கும். 7:55 அல்லாஹ்வின் நேரடிக் கட்டளையை அப்பட்டமாக மீறி தங்களின் உள்ளங்கள் முத்திரையிடப்பட்டு வழிகேட்டிலாவதைக் கூட உணராமல் செயல்படுகின்றனர். அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடும் முஸ்லிம்கள் இதில் எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டுகிறோம்.