அநீதிக்கு துணை போகும் சமூகமும், இறைவனின் எச்சரிக்கையும்!
எஸ். ஹலரத் அலி
இன்றைய நவீன உலகில், ஜனநாயகம் மற்றும் ஆட்சி அதிகாரம் குறித்த விவாதங்கள் உலகமெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
ஆனால், இந்த அதிகாரப் போக்கில் அறநெறிகள் எங்கே இருக்கின்றன என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. அக்கிரமக்காரர்களைப் புகழ்வதும், ஊழலையும், லஞ்சத்தையும் ஒரு சமூகக் கலாச்சாரமாக நியாயப்படுத்துவதும் பெருகிவிட்ட நிலையில், இதற்கான எச்சரிக்கையை நபி(ஸல்) அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.
அக்கிரமக்காரர்களைக் கண்ணியப்படுத்துதல்!
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் ஒரு அக்கிரமக்காரனை (அநீதி இழைப்பவனை) கண்ணியப்படுத்துகிறாரோ, அவர் இஸ்லாத்தை அழிப்பதற்கே முற்படுகிறார்! நூல்: அனஸ் பின் மாலிக்(ரழி) வழியாக அறிவிக்கப்படுவது.
மேலும், ஒரு அநீதி இழைப்பவனை அல்லது பாவத்தில் மூழ்கியிருப்பவனைப் புகழ்ந்து பேசுவது, இறைவனின் கோபத்திற்குரிய செயலாகக் கருதப்படுகிறது. ஹதீத் கூறுகிறது.
“ஒரு பாவி (ஃபாஸிக்) புகழப்படும் போது, அல்லாஹ் கோபமடைகிறான்” நூல் : திர்மிதி.
அதிகாரத்தில் இருப்பவர்கள் அநீதி இழைக்கும்போது, அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒருபுறமிருக்க, சுயநலத்திற்காக அவர்களைப் புகழ்ந்து பேசுவதும், அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் அந்த அநீதியின் பரவலுக்குப் பங்களிப்பாகும்.
தீமையை நியாயப்படுத்தும் “இயல்பாக்கம்”:
இன்று பரவலாகக் காணப்படும் ஒரு ஆபத்தான போக்கு என்னவென்றால், “எல்லா இடத்திலும் லஞ்சம் இருக்கிறது”
“எல்லா ஆட்சியாளர்களும் இப்படித்தான்!” என்ற வாதத்தின் மூலம் தீமையைச் சாதாரணமாக ஒன்றாக மாற்றிக் கொள்வது. இதனை சமூகவியல் அறிஞர்கள் “இயல்பாக்கம்‘ என்கிறார்கள்.
ஒரு அநீதி சமூகத்தில் எல்லா இடங்களிலும் நடக்கிறது என்பதற்காக, அது நீதியாகிவிடாது. குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது.
“அநீதி இழைப்பவர்களுக்குச் சாய்ந்துவிடாதீர்கள்; அவ்வாறு சாய்ந்தால் நரக நெருப்பு உங்களைத் தீண்டும்”. அல்குர்ஆன் 11:113
அநீதி இழைப்பவர்களைப் புகழ்வதும் அவர்களுக்கு ஆதரவாகப் பேசுவதும், அவர்களின் அநீதிக்குத் துணை நிற்பது போன்றதே.
மறுமையின் அடையாளங்கள் :
நபி(ஸல்) அவர்களின் தீர்க்கதரிசனத்தில், மறுமை நாள் நெருங்கும் காலத்தில் நடக்கும் சில அடையாளங்களாகப் பின் வருபவை சுட்டிக்காட்டப்படுகின்றன.
1. பொய்யர்கள் உண்மையாளர்களாகக் கருதப்படுவார்கள்.
2. துரோகிகள் நம்பிக்கையாளர்களாகப் போற்றப்படுவார்கள்.
3. ருவைபிளாக்கள் (அற்பமானவர்கள்) பொது விவகாரங்கள் குறித்துப் பேசுவார்கள்.
அதாவது தகுதியற்றவர்கள் சமூகத்தின் வழிகாட்டிகளாகவும், அதிகார மையங்களாகவும் மாறுவார்கள். நூல் : அஹ்மத்
தற்போது நாம் காணும் ஊழல் மிகுந்த அரசியல் கலாச்சாரம், நேர்மையற்றவர்களுக்குக் கிடைக்கும் முக்கியத்துவம் மற்றும் அநீதிக்குத் துணை நிற்கும் சமூக அமைதி ஆகியவை இந்த ஹதீத்களின் நிதர்சனமான வெளிப்பாடுகளாகவே அமைகின்றன.
மாற்றத்திற்கான பாதை : இந்தச் சூழலில் இருந்து ஒரு முஸ்லிமும், விழிப்புணர்வுள்ள குடிமகனும் எவ்வாறு தற்காத்துக் கொள்வது?
மெளனம் சம்மதமல்ல! அநீதியைக் கண்டால் அதைத் தடுப்பது அல்லது குறைந்தது அதைத் தனது மனதால் வெறுப்பது (ஈமானின் பலவீனமான நிலை) ஒவ்வொருவரின் கடமையாகும்.
தார்மீக உறுதி! அனைவரும் செய்கிறார்கள் என்பதற்காகத் தார்மீக விழுமியங்களை விட்டுக் கொடுக்காமல் இருப்பது. தனி மனித நேர்மை என்பது ஒரு சமூக மாற்றத்தின் வித்தாகும்.
அறிவுப்பூர்வமான விழிப்புணர்வு : அதிகாரத்தில் இருப்பவர்களை அவர்களின் செயல் பாடுகளைக் கொண்டே எடை போட வேண்டுமே தவிர, அவர்களின் செல்வாக்கிற்காக அல்ல.
முடிவுரை : அநீதி இழைப்பவர்களைக் கண்ணியப்படுத்துவதும், தீமையைச் சாதாரணமான ஒன்றாக நியாயப்படுத்துவதும் சமூகத்தின் தார்மீகச் சரிவின் உச்சமாகும்.
ஆட்சியாளர்களின் தவறுகளைப் புகழுக்காக மறைப்பதும், அவர்களின் அநீதக்குத் துணை நிற்பதும் மறுமையில் பெரும் வினையைத் தரும். இறைவனின் கோபத்திற்கு அஞ்சி, அநீதிக்கு எதிராகச் சிறு குரலையாவது எழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
உண்மையான வெற்றி, உலக ஆதாயங்களுக்காக மறுமையை மறப்பதல்ல. மாறாக, மறுமைக்காக இம்மையில் பாவங்களை தவிர்ப்பதும், தடுப்பதுமே! இவைகளை நியாயப்படுத்துவதல்ல!