இடி மின்னல் வழங்கும் இயற்கை உரம்

in 2010 மே,அறிவியல்

  அல்குர்ஆன் வழியில் அறிவியல்…

S.ஹலரத் அலி, ஜித்தா

 அல்லாஹ்வின் நெறிநூலான அல்குர்ஆனில் அறிவியல் உண்மைகள், ஆய்வு வழிகாட்டு தல்கள் ஏராளமாக உள்ளன. அல்குர்ஆனை அறிவியல் நோக்கோடு ஆராயும்பொழுது அனேக நன்மைகளை மனித சமுதாயத்திற்கு அளிக்க முடியும். இதன் மூலம் நேர்வழியில் மக்கள் வருவதற்கு வாய்ப்பும் உள்ளது. ஆனால் துர்பாக்கியமாக, இன்று அல்குர்ஆன் வெறும் வணக்க வழிபாட்டு நூலாக மதரஸா முல்லாக்களிடம் முடக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற வணக்கங்கள் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் பொழுது இவைகளை கடமையாக விதித்து கடைபிடிக்கக் கட்டளையிடுகின்றான். இது போன்ற வசனங்களை ஆராய்ந்து பார், சிந்தித்துப் பார் என்று அல்லாஹ் கூறுவதில்லை. ஆனால் அல்லாஹ்வின் ஆற்றலை, அவனது படைப்புகளை, வல்லமையைப் பற்றி கூறும் ஆயிரக்கணக்கான வசனங்களில் நம்மை அவன் சிந்தித்துப் பார்க்க, ஆராய்ந்து கவனித்துப் பார்க்க வேண்டுகிறான். இவ்வசனங்களை ஆராய புரோகித உலமாக்களுக்கு தகுதியும் இல்லை. ஆர்வமும் இல்லை. ஏனெனில் இம்மதரஸாக்கள் உண்மையான ஆலிம்களை உருவாக்குவதற்குப் பதிலாக இமாமத் புரோகித கூலி ஆலிம்களை உற்பத்தி செய்கிறது.

“”(உங்களுக்கு) பயத்தையும், ஆதரவையும் தரக்கூடிய மின்னலை அவனே உங்கள் முன் பிரகாசிக்கச் செய்கிறான். (மழையை) சுமந்த பளுவான மேகங்களையும் அவனே உண்டாக்குகிறான்.’’ அல்குர்ஆன் 13:12

நயமும், பயமும் தரக்கூடியவாறு மின்னலை அவன் உங்களுக்கு காண்பிப்பதும், மேகத்திலிருந்து மழையைப் பொழியச் செய்து இறந்த பூமியை செழிக்கச் செய்வதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளனவாகும். அறிவுடைய மக்களுக்கு நிச்சயமாக இதில் (ஒன்றல்ல) பல அத்தாட்சிகள் இருக்கின்றன.’’ அல்குர்ஆன் 30:24

மேற்கண்ட இரு வசனங்களிலும் மின்னல் நயமும், பயமும் ஆதரவும் தருவதாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான். மின்னல் வெட்டின் பிரகாசமான ஒளிக் கீற்று கண் பார்வையைப் பறிப்பது போன்று பயத்தை நமக்குக் கொடுக்கிறது. மேலும் மின்னல் நமக்கு ஆதரவு, உதவியும் செய்கிறது என்று அல்லாஹ் கூறுகிறான். அது என்ன ஆதரவு என்பதை அறிவியல் கண் கொண்டு பார்ப்போம்.

மின்னல் எப்படி உருவாகிறது?

மழைக் காலங்களில் மேகங்களிடையே ஏற்படும் மிகப்பெரிய தீப்பொறி போன்ற மின் பொறிக் கீற்று, கண்களைப் பறிக்கும் ஒளிவீச் சோடு கோடுகளாய் வானில் கிளைத்து நொடிப் பொழுதில் தோன்றி மறையும் நிகழ்ச்சிதான் மின்னல். மழை மேகங்கள், தமக்குள் இருக்கும் அணுக்கள் பல வழியிலும் உராய்ந்தோ, பிறவாறோ மின்னூட்டம் பெற்று விடுகின்றன. எவ்வாறு மின்னூட்டம் பெறுகிறது என்ற வழிமுறை இன்னும் ஆய்வாளர்களால் அறிய முடியவில்லை. ஆனால் இப்படி மின்னூட்டம் பெற்று அது அதிகமாகி வரும்போது மின்னூட்ட ஈர்ப்பு விசையால் காற்று வழியே மின் ஆற்றல் பாய்ந்து மின்னோட்டத்தை இழக்கின்றன.

இவ்வாறு காற்று வழியே மின்னூட்டம் பாயும் பொழுது மின்பொறியாய் (தீப் பொறிகளாக) ஒளி விடுகிறது. ஒளிக் கீற்று போல் ஒளி இழைகளாய் தெரியும் பகுதியில் காற்று மின்மயமாக்கப்படுகிறது. ((Ionised)  மின்னலின் போது சுமார் 300000c வெப்பம் ஏற்படுகிறது.(இவ்வெப்பம் சூரியனின் மேல் பகுதியில் உள்ள வெப்பத்தைப் போன்று மூன்று மடங்கு) நமது காற்று மண்டலத்தில் 78% நைட்ரஜன் வாயு உள்ளது. சுமார் 21% ஆக்ஸிஜன் உள்ளது. மின்னலின் போது ஏற்படும் வெப்பமானது காற்றில் உள்ள நைட்ரஜனில் கடினமான அணுக்களை உடைத்து ஆக்சிஜனுடன் சேர்ந்து நைட்ரஜன் சேர்மங்களான அமோனியா, நைட்ரேட், நைட்ரஸ் ஆக்ஸைடாக மாற்றுகிறது. இவை உயிர் உள்ள தாவரங்கள், மிருகங்கள், மனிதர்களுக்குத் தேவையான அமினோ அமிலம், புரோட்டின், டி.என்.ஏ. உற்பத்திக்கு மிக அவசியமான ஒன்றாகும்.

இப்படி மின்னலினால் உண்டாகும் இயற்கை உரமான அமோனியா நைட்ரேட்கள் வருடத்திற்கு 10 மில்லியன் மெட்ரிக் டன்னாக உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த இயற்கை உரங்கள் மழை நீரில் கலந்து பயிர்கள் தாவரங்களில் சேர்ந்து நல்ல விளைச்சலைக் கொடுத்து நமக்கு ஆதரவாக உள்ளது. ஆண்டு தோறும் சுமார் 20 மில்லியன் இடி மின்னல் உலகெங்கும் உருவாகிறது. சுமார் 8,60,000 மின்னல்கள் தினமும் பளீரிடுகிறது.

மின்னலினால் உருவாகும் இயற்கை உரத்தை ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள EULINOX என்ற அமைப்பை (EUROPIAN LIGHTING NITROGEN OXIDE PROJECT)  ஏற்படுத்தி ஆய்வு செய்கிறார்கள். கடந்த 19ம் நூற்றாண்டு வரை இறைவன் வழங்கிய இயற்கை உரத்தையும், மக்கிய குப்பை, ஆடு, மாடு, கழிவுகள் போன்ற பசுந்தாள் உரங்களைக் கொண்டே பயிர் விளைச்சலை அதிகப்படுத்தினர். 100 வருடங்களுக்கு முன்னர் நிலத்தடி நீர், நிலம், கடல் எதுவும் இரசாயன மாசுபடாமல் தூய்மையாக இருந்து மக்களுக்கு உதவின. 20ம் நூற்றாண்டில் செயற்கை இரசாயன உரங்கள் பூச்சிக் கொல்லி மருந்துகள் அனைத்தும் விளைநிலங்களில் தொடர்ந்து கொட்டி சுற்று சூழலை மாசுபடுத்தி விட்டனர்.

குறிப்பாக, இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளில் பசுமைப் புரட்சி என்ற பெயரில் ரசாயன உரங்களை மண்ணில் இட்டு, மண்ணில் உள்ள கோடிக்கணக்கான மண் புழுக்களையும், நுண்ணுயிரிகளையும் கொன்றுவிட்டனர். உண்ணும் விளை பொருட்கள் மீது விமான பூச்சி மருந்துகளை அடித்து உண்ணும் உணவு விஷம், தண்ணீர் விஷம், சுவாசிக்கும் காற்றும் விஷமாகியது. இறைவன் வழங்கிய இயற்கை வளங்களான தண்ணீர் கூட இன்று விலை பேசி விற்கப்படுகிறது.

அளவிற்கதிகமான நைட்ரஜன் கடலில் கலப்பதால், 100 வருடங்களுக்கு முன்பு நைட்ர ஜன் அளவை விட சுமார் 50 மடங்கு அதிகம் கடல் நீரில் உள்ளது. மெக்ஸிகோ வளைகுடா கடற்பரப்பில் நைட்ரஜன் தொடர்ந்து கலப்பதால் சுமார் 5800 ச.கிலோ மீட்டர் கடல் நீரானது உயிரினங்கள் வாழ முடியாத செத்த கடலாய் (DEAD ZONE) மாறி விட்டது.

மனிதனின் சுயநலம், பேராசையின் காரணமாக பூமியின் நிலம், நீர், காற்றை மாசு படுத்தி வருகிறான். இதன் காரணமாக கடும் எதிர் விளைவுகளான, வெப்பச் சூடேற்றம் (Global Warming)  கடும் புயல், நில நடுக்கம், சுனாமி, உயிர்க் கொல்லி நோய்கள் தொடர்கின்றன. அல்லாஹ் மனிதர்களுக்கு அணுவளவும் தீங்கிழைப்பதில்லை. ஆனால் மனிதன் தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொள்கிறான்.

மனிதர்களில் கைகள தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின் (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான். அல்குர்ஆன் 13:12

Previous post:

Next post: