அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே!

in 2010 ஜுன்,புரோகிதம்

அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே!

அபூ அப்தில்லாஹ்

அகிலங்கள் அனைத்தையும் அவற்றிலுள்ள வற்றையும், ஜின் மனிதப் படைப்புகளைச் சோதனைக்காகப் படைத்து, உணவளித்து, நிர்வகித்து வரும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும். இந்தப் பேருண்மைகளை அந்த இறைவனின் இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆன் 1:1-7, 62:14, 67:1-3, 51:55-58, 8:26, 16:72, 30:40, 40:64, 22:28. 20:132, 6:151, 17:31, 34:24, 35:3, 67:21, 29:60, 5:114, 2:60 போன்ற எண்ணற்ற இறை வாக்குகளை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் நிச்சயமாக அறிய முடியும்.அதே போல் சகல அதிகாரங்களும், விதிக்கவும், விலக்கவுமான முழு அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதை 2:210, 5:3, 3:19,85, 154, 4:47, 6:58, 33:36,66-68, 2:38,39, 7:54, 12:40, 67, 5:44,45,47, 6:50,62, 4:64, 2:284, 6:57, 42:21, 17:85, 18:50, 19:39,64, 22:67, 28:44, 30:4, 32:5, 33:37,38, 40:78, 44:4,5, 45:17,18, 46:25, 47:21, 49:79, 51:44, 54:3,12, 57:14, 65:5,8,12, 82:19, 97:4, 2:117. 3:47, 8:42,44, 19:21,35, 40:68, 43:79, 44:5, 51:4, 65:1, 40:12, 39:3, 10:3,18, 31, 11:73,76,101,123, 13:2,11,31, 14:22, 15:66, 16:1,33,77,116, 28:70, 88 போன்ற எண்ணற்ற இறைவாக்குகளை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் மட்டுமே உணர்வு பெற்று அதன்படி நடக்க முடியும்.

அல்லாஹ்வின் முழுக் கண்காணிப்பில் (52:48) இருந்த இறைவனின் இறுதித்தூதர், அவனின் வழிகாட்டலோடு கட்டளையிடவும், விதிக்கவும் விலக்கவும் அல்லாஹ்வின் அனுமதி பெற்றிருந்தார்கள் என்பதை 7:157, 2:213, 16:44,64, 9:128 போன்ற இறைவாக்குகளை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் அறிய முடியும். இறை நம்பிக்கையாளர்கள் கண்டிப்பாக இறைவனின் இறுதித்தூதரை மட்டுமே பின்பற்றியாக வேண்டும், வேறு யாரையும் பின்பற்றக் கூடாது என்பதைத் தெளிவாக விளக்கும் 7:157, 3:32, 132, 4:59, 5:92, 8:1, 20, 46, 20:90, 24:54,56, 47:33, 58:13, 64:12, 3:50, 26:108,110,126,131, 144,150,163,179, 43:63, 71:3 போன்ற எண்ணற்ற இறை வாக்குகளை மனிதர்களில் யாருடைய சுய விளக்கமும் – மார்க்கத்தில் இன்றி நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் இறைவனின் இறுதித் தூதரை மட்டுமே பின்பற்றியே ஆக வேண்டும். அவர்களைப் பின்பற்றாதவர்கள் நேர்வழியில் இல்லை என்பதை உறுதியாக அறிந்து கொள்ள முடியும்.

இப்படி அல்லாஹ்வோடு வஹியின் தொடர்புடன் இருந்த நபி(ஸல்) அவர்களே தன்னுடைய சுயகருத்துக்களை மார்க்கமாக்கக் கூடாது. மக்களின் ஆதரவைப் பெற அல்லாஹ் அறிவித்ததை மக்களிடம் எடுத்துச் சொல்லாமல் இருக்கக் கூடாது. அல்லாஹ் அறிவித்ததை அப்படியே அறிவித்துவிட வேண்டும். இல்லை என்றால் தமது தூதுத்துவப் பணியை முழுமையாகச் செய்தவராகமாட்டீர் என்று அல்லாஹ் எச்சரித்துள்ளதை 5:67 இறைவாக்கை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் உணர முடியும்.

மனித இயல்பின்படி மக்களின் ஆதரவைப் பெற, மக்களிடையேயுள்ள செல்வாக்குப் போய்விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக அறிஞர்களும், தங்களுக்கு சத்தியம்-நேர்வழி இதுதான் எனத் திட்டமாகத் தெரிந்த பின்னரும், அதை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கத் தயங்குகின்றனர். மக்கள் செல்லும் தவறான வழியிலேயே அவர்களும் செல்ல முற்படுகின்றனர். இதற்கு இறைவனுடன் வஹ்யின் தொடர்புடன் இருந்த நபிமார்களும் விதிவிலக்கல்ல என்பதை 17:73,74,75 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. ஆயினும் அல்லாஹ் அவர்களின் பாதங்களைச் சத்தியத்தில், நேர் வழியில் உறுதிப்படுத்தி வைத்ததாக 17:74ல் சொல்கிறான்.

மேலும் அல்லாஹ் மார்க்கமாக்காததை இறைத்தூதர் சுயமாக மார்க்கமாக்க முற்பட்டால் அவர்களை மிகக் கடுமையான வலக்கரப் பிடியாகப் பிடித்து அவர்களின் நாடி நரம்பைத் தரித்துவிடுவதாக மிகக் கடுமையாக எச்சரித்தது 69:44,45,46,47 இறைவாக்குகளில் காணப்படுகிறது. இவ்வளவு கடுமையான எச்சரிக்கைக்குப் பின்னரும் மனித சுபாவப்படி இறுதி இறைத் தூதர் அவர்கள், சில சம்பவங்களில் அல்லாஹ் விரும்பாததைச் செய்து அல்லாஹ்வின் கண்டனத்திற்கு ஆளானார்கள் என்பதை 66:1,2, 80:110, 45:18, 17:39,86, 43:43,44, 6:5254, 33:1,2, 6:68,159, 25:52, 42:52, 28:85-88 , 49:16, 52:48, 5:44.45.47, 2:120, 5:48, 6:50,150, 11:12, 3:79, 17:54, 5:100, 15:87-99, 42:36-43, 39:64,65,66, 13:38,3:128, 17:86,39, 30:30, 7:188, 5:67,49 போன்ற இறை வாக்குகள் தெளிவுபடுத்துகின்றன. இதோ அல்குர்ஆன் கூறுகிறது:

ஆதமே! நீரும் உம் மனைவியும், இச்சுவன பதியில் குடியிருங்கள். நீங்கள் இருவரும் விரும்பியவாறு அங்கு தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்காதீர்கள். (மீறினால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் ஆகிவிடுவீர்கள் என்று சொன்னோம்! (2:35, 7:19)

ஆதமே! நிச்சயமாக இவன் (ஷைத்தான்) உமக்கும் உம்முடைய மனைவிக்கும் பகைவனாவான். உங்களிருவரையும் இச்சுவனபதியி லிருந்து வெளியேற்ற (இடம்) தரவேண்டாம். இன்றேல் நீர் பெரும் இன்னலுக்குள்ளாவீர். (20:117)

இப்போது மதி மயக்கும் ஷைத்தானின் ஆசை வார்த்தை பாரீர்: (அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது (இச்சுவனத்தில்) என்றென்றும் தங்கி விடுவீர்கள், என்பதற்காகவேயன்றி இந்த மரத்தை விட்டும் உங்களை இறைவன் தடுக்கவில்லை என்று கூறினான். (7:20)

நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன் என்று சத்தியம் செய்து கூறினான். (7:21)

இப்போது சிந்தியுங்கள்! ஆதிபிதா ஆத முக்கு அல்லாஹ்வின் அழகிய உபதேசம் அழகாகவும், சரியாகவும் தெரிந்ததா? அல்லது ஷைத்தானின் இந்த மயக்கு மொழி அழகாகவும் சரியாகவும் தெரிந்ததா? சொல்லுங்கள். அதே நிலையில்தான் ஆதத்தின் சந்ததிகளான நமக்கும் அல்லாஹ்வின் அழகிய உபதேசங்களான அல்குர்ஆன் கூறும் அறிவுரைகளைவிட ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகளான புரோகிதர்களின் மயக்கு மொழிகளான சுய விளக்கம் அழகாகவும் சரியாகவும் தெரிந்து, நம்மில் பெருந்தொகையினர் இந்தப் புரோகிதர்கள் பின்னால் செல்கிறார்கள். ஷைத்தான் தனது வழிகெடுக்கும் போதனையை நற் போதனை என்று சத்தியம் செய்து சொன்னது – -போல், இந்தப் புரோகிதர்களும் தங்களின் வழிகெடுக்கும் போதனைகளை நற்போதனைகள் என சத்தியம் செய்து சொல்கிறார்கள்.

இதோ ஷைத்தானைப் பற்றியும் அவனது நேரடி ஏஜண்டுகளான புரோகித ஷைத்தான்கள் பற்றியும் அல்லாஹ்வின் எண்ணற்ற எச்சரிக்கைகள்; சிரமம் பாராமல் அல்குர்ஆனை எடுத்து நேரடியாகப் படித்துப் பாருங்கள். 2:168,208,268,4:38,60,76,83,118,119,120, 6:43,68,142, 7:22,23,27,30,12:5,16:63, 17:27,53, 64, 19:68,83, 20:117, 22:3, 23:97, 26:221, 28:15, 35:6, 36:60, 43:62 இந்த இறைவாக்குகள் அனைத்தையும் யார் சிரமம் பாராமல் நேரடியாகப் படித்து விளங்குகிறார்களோ அவர்கள் மட்டுமே ஷைத்தான் அவனது நேரடி ஏஜண்டான புரோகிதர்கள் மூலம் எந்த அளவு மனித சமுதாயத்தை வழிகெடுத்து நரகத்தை நிரப்புகிறான் என்பதை அறிய முடியும்.

ஆதி பிதா ஆதமே ஷைத்தானின் வலையில் சிக்கினார் (2:36) அவரது மகன் ஷைத்தானின் வலையில் சிக்கி தன் சகோதரனையே கொன்றான். (5:27-31) இப்படி ஷைத்தானின் சபதப்படியும், அல்லாஹ் அவனுக்களித்த வாக்குறுதிப்படியும் ஆதத்தின் சந்ததிகளில் மிகமிகப் பெரும்பான்மையினர் ஷைத்தானின் வலையில் சிக்கி அவனுடன் நரகை அடையக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள். (17:62-65, 32:13, 7:16-18, 11:118,119) ஒவ்வொரு நபிக்கும் பிறகு அவரது போதனைப்படி நடப்பதாகப் பொய்யாகக் கூறிக் கொண்டு இப்புரோகித ஷைத்தான்கள் ஒவ்வொரு சமுதாயத்திலும் புகுந்து கொண்டு கோணல் வழிகளையே நேர்வழியாகப் போதிக்க ஆரம்பித்தார்கள். இப்படித்தான் ஒரே நேர்வழி பல கோணல் வழிகளாகி எண்ணற்ற மதங்களாகப் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளன.

புரோகிதர்கள் பின்னால் சென்று அவர்களின் போதனைப்படி நடப்பவர்கள் நரகத்தை நிரப்புகிறவர்கள் என்று அல்லாஹ் 32:13, 11:118,119 போன்ற இறைவாக்குகளில் எச்சரிக்கின்றான். அல்குர்ஆனில் இப்புரோகிதர்களை 2:256,257, 4:51, 60,76, 5:60, 16:36, 39:17 ஆக எட்டு இடங்களில் வரம்புமீறி வழி கெடுக்கும் “தாஃகூத்”” என்றும் 51:53, 52:32 ஆகிய இரண்டு இடங்களில் தாஃகூன் என்றும் குறப்பிடுகிறான் அல்லாஹ். மனிதனின் பலகீனத்தின் காரணமாக ஷைத்தானின் வசீகர வலையிலிருந்து அல்லாஹ்வின் அருள் பெற்றவர்களைத் தவிர வேறு யாரும் தப்ப முடியாது என்பதை 3:175, 4:118-122, 16:100, 17:62-65 போன்ற இறைவாக்குகளை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் நிச்சய மாக உணர முடியும்.

இறைவனால் தெரிவு செய்யப்பட்ட இறைத் தூதர்களையும் ஷைத்தான் விட்டு வைக்கவில்லை என்பதை 6:68,112, 22:52 இறைவாக்கு கள் உறுதிப்படுத்துகின்றன. இறுதித் தூதரையே மிகக் கடுமையாக எச்சரித்த எண்ணற்ற இறை வாக்குகள் அல்குர்ஆனில் இருக்கின் றன.

(நபியே! தீர்ப்பு செய்யும்) அதிகாரம் உமக்கு இல்லை. அவன் அவர்களை மன்னித்து விட லாம்; அல்லது அவர்களை வேதனைப்படுத்த லாம். (ஆயினும்) நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே! (3:128)

அல்லாஹ் இறக்கிவைத்த (சட்டத்)தைக் கொண்டே அவர்களிடையே தீர்ப்புச் செய்வீராக; அவர்களுடைய மன இச்சைகளைப் பின் பற்றாதீர். அல்லாஹ் உம்மீது இறக்கி வைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பி விடாதபடி அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக…. (5:49)

……நம் வசனங்களைப் பொய்ப்பிக்கிறவர்கள், மறுமையை நம்பாதவர்கள் ஆகியோரின் மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். (6:150) இவை எல்லாம் உம்முடைய இறைவன் உமக்கு வஹீ (மூலம்) அறிவித்துள்ள ஞான உபதேசங்களாகும். ஆகவே அல்லாஹ்வுடன் வேறு இறைவனை ஏற்படுத்தாதீர். (அப்படிச் செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும் துரத்தப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர். (17:39)

(நபியே!) நீர் இந்நிராகரிப்போருக்கு வழி படாதீர்; இதன் மூலம் (குர்ஆன்) அவர்களுடன் பெரும் போராட்டத்தை மேற்கொள்வீராக. (25:52)

அல்லாஹ்வின் வாக்குகள் உமக்கு அருளப் பட்டதன் பின், எதுவும் உம்மை அவற்றை விட்டும் திருப்பிவிடாதிருக்கட்டும். (28:87) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டவற்றையே நீர் பின்பற்று வீராக.. (33:2)

உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டவற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துகொள்வீராக; நிச்சய மாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர். (43:43)

மேலும் கீழ்வரும் இறைவாக்குகளையும் சிரமம் பாராமல் நேரடியாக அல்குர்ஆனில் படித்து விளங்குங்கள். 2:120,145,216, 3:74,79, 83, 4:27,28, 64,105, 5:44,45,47,48,67,100, 6:35, 52-52, 116,123,150,159,161, 7:188,11:12, 13:38, 15:39, 87-99, 16:116,123, 17:54,73,74,75,86,89, 28:85,86,88, 30:30, 33:1,2, 35:10, 40:35,83, 42:36-43, 52, 43:44, 45:18, 48:28, 49:16, 52:48, 66:1,2, 69:43-47 இவை எமது பார்வையில் பட்டவை. கவனமாகப் பரிசீலித்தால் இன்னும் எத்தனை இறைவாக்குகள் கிடைக்குமோ. இப்போது நமது சிந்தனைக்கு வரவேண்டியவை வஹ்யின் மூலம் அல்லாஹ்வுடன் நேரடித் தொடர்பில் இருந்த இறுதித் தூத ரையே ஷைத்தான் வழி தவறச் செய்ய முயற்சித்ததையும், அவர்கள் அல்லாஹ்வின் கண்காணிப் பில் (52:48) இருந்ததால் அல்லாஹ் வஹ்யின் மூலம் அவர்களைத் திருத்தி நேர்வழியில் இட்டுச் சென்று மனித இனத்தின் நேர்வழியை உறுதி செய்துள்ளான் என்பதே! அல்லாஹ் வஹ்யின் மூலம் நபியை திருத்தாவிட்டால் நமக்கு நேர்வழி கிடைத்திருக்காது.

அடுத்து, நபியின் மரணத்திற்குப் பிறகு, கலீஃபாக்களோ, நபிதோழர்களோ வஹ்யின் தொடர்புடையவர்கள் அல்லர். அவர்களை ஷைத்தான் வழிகெடுக்க முற்பட்டபோது, ஏற்கனவே இறக்கப்பட்டு, பதிந்து பாதுகாக்கப் பட்ட அல்குர்ஆனைக் கொண்டே அவர்களின் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு அவர்கள் நேர் வழி நடக்க வழி ஏற்பட்டது. இதோ ஆதாரம். நபி(ஸல்) அவர்கள் மரணித்து அவர்களின் உடம்பிலுள்ள சூடு தணியவில்லை. அதற்குள் இறைவனுக்கு இணை வைக்கும் ஒரு மாபெரும் குற்றத்தை உமர்(ரழி) அவர்களைச் செய்ய வைத்தான் சூதுமதியுள்ள ஷைத்தான். உமர் (ரழி) அவர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? சுவர்க்கத்து நன்மாராயம் பெற்ற பத்துப் பேரில் ஒருவர்; இரண்டாவது கலீஃபா, எனக்குப் பின் நபி இல்லை; அப்படி நபி வருவதாக இருந்தால் அதற்கு உமர் மிகவும் தகுதிவாய்ந்தவர் என்று நபி(ஸல்) அவர்களால் சிறப்பித்துச் சொல்லப்பட்டவர். உமரின் நாவில் அல்லாஹ் பேசுகிறான் என்று நபியால் சிறப்பித்துச் சொல்லப்பட்டவர். உமர் ஒரு வழி சென்றால் ஷைத்தான் அவ்வழி வர அஞ்சுவான் என்றும் சிறப்பித்துச் சொல்லப்பட்டவர்.

இப்படிப் பல சிறப்புகளைப் பெற்ற உமர் (ரழி) அவர்களையே ஷைத்தான் மதிமயங்கச் செய்து வழி தவறச் செய்துவிட்டான். அது என்ன? ஆம்! மரணித்து விட்ட நபி(ஸல்) அவர்களின் உடலைப் பார்த்த பின்னரும் அவர்கள் மரணிக்கவில்லை, மரணித்து விட்டதாக யாரும் சொன்னால் அவரது தலையை சீவி விடுவேன் என வாளைத் தூக்கிக் கொண்டு ஆர்ப்பரிக்கச் செய்தான் ஷைத்தான். இதற்கு முன்னரும் அல்லாஹ் மகத்தான வெற்றி எனக் குறிப்பிடும் (48:1) ஹுதைய்பியா உடன்படிக்கையை உமர் (ரழி) தவறு எனக் கோபம் கொண்டார்கள். இங்கு ஆதி பிதா ஆதத்தை அல்லாஹ் தடுத்திருந்த மரத்தை நெருங்கச் செய்ததும், ஆதம்(அலை) இவ்வுலகிற்கு இறக்கப்பட்டதன் பின் அவர்களின் முதல் சந்ததிகளிலேயே ஒருவரை ஒருவர் கொலை செய்ததும், மரணமே இல்லாத அல்லாஹ்வின் தனித்தன்மையை அவனது தூதருக்குக் கொடுத்து அதன் மூலம் இறைவனுக்கு இணை வைக்கத் தூண்டி உமர் (ரழி) அவர்களை வழி தவறச் செய்ததும் யார்? ஷைத்தானே! ஷைத்தானுக்கு அல்லாஹ் கொடுத்த தனி அதிகாரம் விளங்கவில்லையா? இந்த இடத்தில் இன்னொன்றையும் ஆதத்தின் மக்கள் தங்கள் முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆதம் தவறு செய்தார். ஆயினும் அவரது தவறு சுட்டிக் காட்டப்பட்டவுடன் தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு தன்னைத் திருத்திக் கொண்டார். அல்லாஹ்வின் அருளைப் பெற்றார். ஷைத்தான் தனது தவறை உணராமல் அதை நியாயப்படுத்தினான். இறைவனின் கோபத்திற்கு ஆளாகி நரகை அடைந்தான். அதே போல் ஆதத்தின் மகன்களில் ஒருவன் ஷைத்தானைப் பின்பற்றி தனது சகோதரனை கொலை செய்து இறைவனின் கோபத்திற்கு ஆளானான். நரகை அடைந்தான். (5:27-32)

அதற்கு மாறாக உமர்(ரழி) அவர்கள் நபிமீது கொண்ட அளவற்ற பிரியத்தின் காரணமாக அவர்கள் இறந்து விட்டதை ஏற்க முடியாமல் தடுமாறினார்கள். இறப்பே இல்லாத தனித் தன்மை இறைவனுக்கு மட்டுமே சொந்தம் என்பதை மறந்து வாளைத் தூக்கிக் காட்டி கர்ஜித்துக் கொண்டிருந்தார்கள். ஆயினும் ஆபூ பக்கர்(ரழி) அவர்கள் வந்து 3:144, 39:30 இறை வாக்குகளைப் படித்துக் காட்டி “”யார் முஹம்மதை வணஙகுகிறார்களோ அவர்கள் அறிநது கொள்ளட்டும், அந்த முஹம்மது இறந்துவிட்டார். யார் அல்லாஹ்வை வணங்குகிறார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும் அல்லாஹ் என்றும் உயிரோடிருப்பவன், நிரந்தரமானவன் என்று அபூபக்கர்(ரழி) சொன்னவுடன் தனது தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டார்கள்.

இப்போது சிந்தியுங்கள்! முதல் மனிதன் வழி தவறினார். தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டர். நபிமார்கள் தவறு செய்து வஹ்யின் மூலம் திருத்தப்பட்டார்கள். உமர்(ரழி) தவறு செய்தார். வஹ்யி வரவில்லை. மாறாக முன்னர் வஹியாக வந்திருந்த அல்குர்ஆனிலிருந்து (3:144, 39:30) இறைவாக்குகள் படித்துக் காட்டப்பட்டவுடன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டார்கள். அல்லாஹ்வின் பொருத்தம் பெற்றார்கள்.

ஷைத்தான் தவறு செய்தான். தவறை நியாயப்படுத்தினான். இறைவனின் கோபத்திற்கு ஆளாகி நரகை அடைந்தான். ஆதத்தின் மகன் தவறு செய்தான். தவறை உணர்ந்து திருந்தவில்லை. இறைவனின் கோபத்திற்கு ஆளாகி நரகை அடைந்தான். அதே வரிசையில் தான் புரோகிதர்கள் எண்ணற்ற குர்ஆன் வாக்குகளுக்கு முரணாக மக்களை தவறான வழியில் இட்டுச் செல்கிறார்கள். உரிய குர்ஆன் வசனங்களை எடுத்துக்காட்டி அவர்களின் வழிகேட்டை தெளிவுபடுத்தினாலும் ஷைத்தானைப் போல் தங்கள் வழிகேட்டை நியாயப்படுத்துகிறார்கள்.

இப்போது வெற்றி பெற விரும்பும் மக்கள் என்ன செய்யவேண்டும்? நபிமார்கள், கலீஃபாக்கள், நபிதோழர்கள் என யாரையும் விட்டு வைக்காமல் அவர்களை வழிகெடுக்க முற்பட்ட ஷைத்தான் ஆதத்தின் பிற மக்களை வழி கெடுக்காமல் விட்டு வைப்பானா? அதிலும் எண்ணற்ற குறைபாடுகள் (மனிதனின் பலகீன நிலை பாரீர் என்ற 10ம் பக்க ஆக்கத்தில் இடம் பெற்றுள்ளது) நிறைந்த ஆதத்தின் மக்கள், ஷைத்தானுடைய நேரடி ஏஜண்டுகளான புரோகிதர்களின் ஷைத்தானிய போதனைகளில் மயங்குவார்களா? அதற்கு மாறாக அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளை எடுத்து நடப்பார்களா? ஆம்! அல்லாஹ் அல்குர்ஆனில் சுமார் 75 இடங்களில் சுட்டிக் காட்டுவது போல் ஆதத்தின் சந்ததிகளில் மிகமிகப் பெரும் பான்மையினர் இப்புரோகிதர்கள் பின்னால் சென்று நரகை நிரப்பக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.

அல்லாஹ் அதிகமான இடங்களில் அதிகமானோர் விளங்க மாட்டார்கள், புரிய மாட்டார்கள், நம்பிக்கை கொள்ளமாட்டார்கள், நன்றி செலுத்தமாட்டார்கள் என்று குறிப்பிட்டுக் கூறும் பெரும்பான்மை மக்களுக்கு விளங்க வைக்கும் வழிகெடுக்கும் முயற்சியிலேயே இப்புரோகிதர்கள் ஈடுபடுகிறார்கள். அப்படியானால் இப்புரோகிதர்கள் போதிப்பது நேர்வழியாக இருக்குமா? அதற்கு மாறாக கோணல் வழிகளாக இருக்குமா என்பதை அறிவுடையோர் மட்டுமே அறிவார்கள். இப்புரோகிதர்கள் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் மறுமையில் கூலியையும் எதிர் பார்த்து மார்க்கப்பணி புரிந்தால் மட்டுமே அல்லாஹ் 5:67ல் நபிக்குக் கட்டளையிட்டிருப்பது போல், அல்குர்ஆனில் உள்ளதை உள்ளபடி, நபி(ஸல்) அவர்களின் நடை முறைகளை மட்டுமே எடுத்துச் சொல்வார்கள். தங்கள் உபதேசத்தை மக்களில் அதிகமானோர் ஏற்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஷைத்தான் அழகாகக் காட்டுவதை எல்லாம் எடுத்துரைக்க மாட்டார்கள்.

ஆனால் இப்புரோகிதர்கள் இவ்வுலக ஆதாயங்களைக் குறிக்கோளாகக் கொண்டிருப்பதால், அதற்கேற்றவாரு அதிகமான மக்களை கவர்ந்திழுக்கும் நோக்கத்துடன் ஷைத்தான் அழகாகக் காட்டும் நரகிற்கு இட்டுச் செல்லும் கோணல் வழிகளையே நேர்வழியாகக் காட்டும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதனால் மிக மிக பலகீனமாகப் படைக்கப்பட்டுள்ள மனித வர்க்கத்திலுள்ள அவர்கள் அல்குர்ஆனுக்கும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களுக்கும் சுய விளக்கம் கொடுக்க முற்பட்டு அவர்களும் வழிகெட்டு, மக்களில் பெருங் கூட்டத்தையும் வழிகெடுத்து ஷைத்தானின் சபதப்படி அவனுடன் இணைந்து நரகை நிரப்ப இருக்கிறார்கள்.

நேர்வழி நடக்க விரும்புவோரே உஷார்! மவ்லவி, ஆலிம், அல்லாமா, ஷேக் எனப் பீற்றிக் கொள்ளும் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட இப்புரோகிதர்களின் வசீகர வலையில் சிக்காதீர்கள். அல்குர்ஆனையும், ஹதீஸையும் உங்களின் தாய் மொழியிலேயே படித்து விளங்க முற்பட்டால் இப்புரோகிதர்களைவிட தெளிவாக, சரியாக உள்ளது உள்ளபடி விளங்கி அதன்படி நடந்து ஈருலகிலும் வெற்றி பெற முடியும். அல்லாஹ் அருள்புரிவானாக.

Previous post:

Next post: