மறைவழியில் இறைவனிடம் கையேந்துவோம்

in 1992 ஏப்ரல்,பொதுவானவை

பிரார்த்தனை (துஆ):

(எங்களிறைவனே! உனது ஆணைகளை நாங்கள் செவி மடுத்தோம்;

(உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிபட்டோம்;

எங்கள் இறைவனே! உன்னிடமே (பாவ) மன்னிப்புக் கோருகிறோம்;

(நாங்கள்) மீள்வதும் உன்னிடமே.   (அல்குர்ஆன் 2:285)

(நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம் “ஓசை தரும் கருப்பான மண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப் போகிறேன்” என்றும்,
(15: 28)

(நபியே! நினைவுகூறுவீராக!) நிச்சயமான
நான் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்” என்று உம்முடைய இறைவன் கூறிய
வேளையில்; (38:71) “நான் அவரைச் செவ்வைப்படுத்தி, எனது ஆவியிலிருந்து
அவருக்குள் ஊதிய பொழுது: அவருக்கு நீங்கள் விழுந்து ஸுஜூது செய்யுங்கள்” (எனக்
கூறியதும்; 38:72)

அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில்
என் ஆவியிலிருந்து ஊதியதும், அவருக்கு சிரம் பனியுங்கள்” என்றும் கூறியதை (நினைவு
கூறுவீராக)!
(15:29)

இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்)
பெயர்களையும் ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்
காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை
எனக்கு விவரியுங்கள்” என்றான். (2 :31)

“ஆதமே! அப்பொருட்களின் பெயர்களை
அவர்களுக்கு விவரிப்பாயாக!” என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு
அறிவித்தபோது “நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை
அறிவேன். என்றும் நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக்
கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?” என்று (இறைவன்)
கூறினான். (2:33)

இதே சிறப்புக்களை மறுமையில் ஆதம்(அலை)
அவர்களிடம் கூறி அல்லாஹ்விடம் நமக்காக பரிந்துரை. சிபாரிசு செய்யும்படி மக்கள்
அனைவரும் வேண்டுவார்கள் என நபி(ஸல்) அவர்களும் கூறினார்கள்.

(அறிவிப்பு : அனஸ்(ரழி); ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்)

இவ்வளவு சிறப்புக்களைக் கொண்ட
ஆதம்(அலை) அவர்கள், தனது அருமை மனைவி ஹவ்வா(அலை) அவர்களுடன் சுவர்க்கத்தில்
இன்புற்றிருந்தார்கள். நமது பரம விரோதி ஷைத்தான் அவ்விருவரையும் அல்லாஹ்வின்
ஆணைக்கு மாறுபடச் செய்தான். அல்லாஹ்வின் ஒரே ஒரு ஆணையை மீறியதால் அல்லாஹ்வின்
கோபத்திற்கு ஆளானார்கள். உலகத்திற்கு அனுப்பப்படுகிறார்கள். அப்போது அல்லாஹ் ஒரு
அறிவுரை கூறி அனுப்புவதைப் பாருங்கள்:


நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கி விடுங்கள்;
என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்.
அப்போது யார் (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை;
அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 2:38)

ஆதம்(அலை) அவர்கள் அல்லாஹ்வின் நேரடிப்
பார்வையில் படைக்கப்பட்டிருந்தாலும்; அவனே அவரை செவ்வையாக உருவாக்கியிருந்தாலும்; அவனே அவருக்கு அவனது (ரூஹை) உயிரை ஊதியிருந்தாலும்; அவனே அவருக்கு ஆசானாக
இருந்திருந்தாலும்; அவர் அல்லாஹ்வின் நேரடிப் பார்வையில், அவனருகில் தனது அருமை
மனைவி ஹவ்வா(அலை) அவர்களுடன் ஒரு சில காலங்கள் வாழ்ந்திருந்தாலும்; அவர் இவ்வுலகில்
வாழும் போது தன் இஷ்ட்டத்திற்கு வாழ முடியாது; அவரது சொந்த ஊகங்களின்படி
சட்டமியற்றி வாழ முடியாது; அல்லாஹ்விடமிருந்து அவருக்கு அவ்வபோது அனுப்பப்படும்(வஹி)
இறை ஆணைப்படியே வாழ வேண்டும். அதுவே இறைவன் தரும் நேர்வழி -நல்வழி  அவ்வழியில்
நடப்பவரே இருலோகத்திலும் ஈடேற்றம் பெறுவர்; அவர்களுக்கு எவ்வித பயமும் இருக்காது;
எதற்கும் துக்கம் சஞ்சலம் அடையமாட்டார்கள் என அல்லாஹ் மேற்கூரிய 2:38 திருக்குர்ஆன்
வசனத்தில் தெளிவுப்படுத்துகிறான்.

இது நமது தந்தை ஆதம்(அலை) அவர்களுக்கு
மட்டுமல்ல. உலகம் அழியும் கடைசி நாள்வரை இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும்
கூறப்பட்ட அறிவுரையாகும். இச்சட்டத்தில் யாருக்கும் எவருக்கும் வேற்றுமை
பாராட்டப்பட மாட்டாது. சலுகைகள் அளிக்கப்பட மாட்டாது. எனவேத் தான் நமது அருமை
நபி(ஸல்) அவர்களையும் அல்லாஹ் கீழ்கண்டவாறு சொல்ல வைக்கின்றான்.


(இறை) தூதர் நம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை (அப்படியே)
நம்புகிறார்-(அது மட்டுமல்ல) (அவ்வாறே) முஃமின் (இறை நம்பிக்கையாளர்)களும் நம்புகின்றனர்; (இவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும்; அவனது வானவர்(மலக்கு)களையும்; அவனது வேதங்களையும்; அவனது (எல்லா) இறைத்தூதர்களையும்-நம்புகின்றார்கள். (இவ்விஷயத்தில்) நாம் இறைத்தூதர்களில் எவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை, (என்றும்)
இன்னும் நாங்கள் செவி மடுத்தோம்;  (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிபட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடம் (பாவ) மன்னிப்புக் கோருகிறோம்; நாங்கள் மீள்வதும் உன்னிடமே” என சரணடைவார்கள்.  (அல்குர்அன் 2:285)

இவ்விறைவசனம் மூலம் அல்லாஹ்வின்
நேரடி தொடர்பு கொண்ட நபிமார்கள், ரசூல் மார்கள் அனைவரும் அல்லாஹ்வின் ஆணைப்படியே
நடக்க வேண்டும். அவர்களது சொந்த இஷ்ட்டத்திற்கு வாழக் கூடாது; வாழவும் தலைப்பட மாட்டார்கள். அல்லாஹ்வின் ஆணைகளை, கட்டளைகளை எவ்வித வெறுப்பும், மறுப்புமின்றி
அப்படியே செயலாற்றியிருப்பார்கள். ஆனால் அவ்விறைத் தூதர்களையும், அல்லாஹுவையும்
முழுமையாக நம்பியவர்களும், நம்புகிறவர்களும் அப்படியே நடக்க வேண்டும், நடக்கிறார்களா?
என்பது வேறு விஷயம். அல்லாஹ்வின் ஆணைகளில் எதிர் கேள்வி கேட்பதோ, விமர்சிப்பதோ
கூடாது. அதுவே உண்மை முஃமின் (இறை நம்பிக்கையாளர்)களின் அடையாளமாகும்.

யா அல்லாஹ்! உனது ஆணைகளை
செவிமடுத்தோம் – சமிஃனா, அப்படியே வழிபட்டோம்- வஅதஃனா.

இதுவே நமது மூல மந்திரமாக
இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் தான் 2:38 வசனத்தில் குறிப்பிடப்பட்டப்படி
இருலோகத்திலும் ஈடேற்றம் பெற்றவர்களாவார்கள். எத்தகைய பயமும் அவர்களுக்கு இருக்காது;
எவ்விஷயத்திலும் அவர்களை துக்கம், சஞ்சலம் பாதிக்காது. அப்படியே துக்கம், கஷ்டம்
பாதித்தால்

நிச்சயமாக நாம் அல்லாஹ்விடமிருந்து
வந்தோம் நிச்சயமாக அவனிடமே மீள இருக்கின்றோம்.
(2:158)


எனக் கூறி அல்லாஹ்வை துதிப்பார்கள்.
அப்படிப்பட்ட நல்லடியார்கள் கூட்டத்தில் நம்மை அல்லாஹ் ஆக்கி வைப்பானாக!

Previous post:

Next post: