மானக்கேடான செயல்களைச் செய்யாதீர்கள்!

in 1989 மே

குர்ஆனின் நற்போதனைகள்: (தொடர்: 7)

மானக்கேடான செயல்களைச் செய்யாதீர்கள்!

தொகுப்பு A.முஹம்மது அலி, M.A.,M.Phil.,

1. நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்ய கட்டளையிடவில்லை. (7:28)

2. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்குக் கொடுப்பதையும் கொண்டு உங்களை ஏவுகிறான். அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் விலக்குகிறான். (16:90)

3. மானக்கேடான செயல்களின் பக்கம் வெளிப்படையாகவோ ரகசியமாகவோ நெருங்காதீர்கள். (6:151)

4. நிச்சயமாக தொழுகை (மனிதனை) மானக் கேடானவற்றையும், தீமையையும் விட்டு விலக்கும்; நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு(தியானம்) மிகவும் பெரிதாகும். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான். (29:45)

5. ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ (அவனை ஷைத்தான்) மானக் கேடானவற்றையும், வெறுக்கத் தக்கவற்றையும் (செய்ய) ஏவுவான். (24:21)

6. நிச்சயமாக ஷைத்தான் தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும், அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான். (2:169)

7. (தான தர்மங்களால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான். ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான். (2:268)

8. (இறை பக்தியுடையோர்) மானக்கேடான ஏதேனும் ஒரு செயலைச் செய்து விட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் மனப்பூர்வமாக அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள். (3:135)

(அடுத்தத் தொடர்: மானக்கேடான செயல்கள் யாவை?)

Previous post:

Next post: