ஐயமும்! தெளிவும்!!

in 1989 மே,ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : சிலர் தம்மைத் தாமே ஏசிக் கொள்கின்றனர். சிலர் தமது மக்களை சபிக்கின்றனர். சிலர் அல்லாஹ் தமக்குத் தந்துள்ள  சொத்து முதலியவற்றை சபிக்கின்றனர். இவ்வாறு ஏசுவது, சபிப்பது, சந்தர்ப்பத்தில் அப்படியே நடந்து விடும் என்று கூறுகிறார்களே! அது உண்மையா? ஹதீஸின் அடிப்படையில் பதில் தரவும். எம். பி. அப்துர் ரஹ்மான், இளங்காகுறிச்சி.

தெளிவு : “உங்களுக்கு நாசம் உண்டாகும்படி உங்களை நீங்களே சபித்துக் கொள்ளாதீர்கள். இவ்வாறே உங்கள் மக்களுக்கு நாசம் உண்டாகும்படி உங்கள் மக்ளை நீங்களே சபித்து விடாதீர்கள். உங்கள் சொத்துக்களுக்கு நாசம் உண்டாகும்படியும் கூறி விடாதீர்கள், ஏனெனில் (ஒவ்வொரு நாளிலும்) ஒரு நேரம் இருக்கிறது. சரியாக குறிப்பிட்ட அந்த நேரத்தில் உங்களுக்கு கபூலாக்கப்பட்டு விடும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஜாபிர்(ரழி), முஸ்லிம்)

இந்த ஹதீஸின்படி ஒருவர் கோபத்தினால் தம்மையோ, தமது மக்களையோ, தமது சொத்து சுகங்களையோ ஏசுவது- சபிப்பது சந்தர்ப்பத்தில் பெரிய துன்பத்திற்கும், துயரத்திற்கும் அவரை ஆளாக்கிவிடும் என்பதை அறிகிறோம்.

ஐயம் : மழை பெய்யும் போது கூட நபி(ஸல்) அவர்கள் அந்த மழை நல்லவிதமாக பெய்ய வேண்டும் என்ற கருத்தில் துஆ கேட்டிருப்பதாகக் கேள்விப் பட்டேன். அந்த துஆ எது? அப்தல்லாஹ், திருச்சி.

தெளிவு : நபி(ஸல்) அவர்கள் மழை பெய்வதைப் பார்த்தால் “அல்லாஹும்ம ஸய்யிபன் நாஃபிஆ” யா அல்லாஹ் பலன் தரும் மழையை பொழிய வைப்பாயாக! என்று ஓதுவார்கள். (ஆயிஷா(ரழி), புகாரீ)

ஐயம் : “இரவு நேரத்தில் பாம்மை பாம்பு என்று கூறாதீர்கள். கயிறு என்றோ, நிலப்பூச்சி என்றோ கூறுங்கள்” என்று ஒருமுறை இலங்கை வானொலி அறிவித்தது. இது உண்மையா? ஹதீஸில் ஆதாரம் ஏதும் உள்ளதா? என். சுல்தான் இப்றாஹிம். கிருஷ்னாதிபட்டினம்.

தெளிவு : இலங்கை வானொலி அறிவித்திருந்தாலும், வேறு எவர் கூறியிருந்தாலும் இது ஹதீஸ் அல்ல என்பதை அறியவும். ஹதீஸில் இத்தகைய மூடப் பழக்கத்திற்கெல்லாம் சிறிதும் இடமில்லை.

ஐயம் : “என் சொல் இறைவசனத்திற்கு மாறுபட்டிருந்தால் என் சொல்லைப் புறக்கணித்து விட்டு இறைவனின் வசனத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றோ அல்லது இக்கருத்தினை ஒத்த வகையில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளதா? என்பதை விளக்கிட வேண்டுகிறேன்.    ராஜா ட்ராக்டர் பார்ட்ஸ் கம்பெனி, திருத்துறைப்பூண்டி.

தெளிவு: எனது சொல் அல்லாஹ்வின் சொல்லை மாற்றாது. அல்லாஹ்வின் சொல் எனது சொல்லை மாற்றிவிடும். அல்லாஹ்வின் சொல்லில் சில சொற்கள் சிலவற்றை மாற்றும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஜாபிர்(ரழி), தாருகுத்னீ)

இந்த அறிவிப்பு மவ்ழுஃ – இடைச் செருகலானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள “ஹாப்ருனுபின் வாகித்” என்பவர் பல வகையில் ஐயப்பாட்டிற்குரியவர் என்பதாக இமாம் தஹபீ, ஹாஃபிழ் இப்னுஹஜர் ஆகியோர் ஊர்ஜிதம் செய்துள்ளார்கள். ஆகவே தாங்கள் கேட்டிருக்கும் வகையில் ஸஹீஹான ஹதீஸ் எதுவுமில்லை. என்பதை அறியவும்.

ஐயம் : பர்ளான தொழுகையை ஜமாஅத்தோடு தொழும்போது கடைசி ரகாஅத்தில் இமாம் இருப்பில் அமராமல் மறதியாக எழுந்து விட்டால் பின்தொழும் நாம் கடைசி இருப்பில் உட்கார்ந்து கொண்டு சமிக்கை செய்வதா? அல்லது சமிக்கை செய்துக் கொண்டு நாமும் அவர்கூட எழுந்து நிற்பதா? அப்துஸ்ஸலாம், மஞ்சக்கொல்லை.

தெளிவு : பர்ளான தொழுகையில் 3,4 ரகாஅத்துத் தொழுகைகளில் இமாமுடன் சேர்ந்து நடு இருப்பில் எழுந்துவிட வேண்டும். ஏனெனில் நடு இருப்பு பிரதான சுன்னத்துக்களில் ஒன்றாகும். அது தவறிவிட்டால் ஸஜ்தா ஸஹ்வு மறதிக்கான ஸஜ்தா செய்தால் போதும். கடைசி இருப்பு பர்ளாக இருப்பதால் இமாம் மறதியாக எழுந்திருக்கும் போது ஞாபகமுள்ள நாம் இருப்பில் இருந்தபடியே “சுப்ஹானல்லாஹ்” என்று கூற வேண்டுமே தவிர எழுந்திருப்பது கூடாது.

ஐயம் : அல்லாஹ் மறுமை நாளில் மக்களை அழைக்கும்போது அவர்களின் தாயின் பெயரால் இன்ன பெண்ணுடைய மகனே, மகளே என்று தான் அழைப்பான் என்றும், கருணைமிக்க ரஹ்மான் அந்த நேரத்தில் கூட விபச்சாரத்தில் பிறந்தவர்களை அவர்களின் தந்தையின் பெயரைச் சொல்லி அழைத்த அவர்களைக் கேவலப்படுத்தமாட்டான் என்றும் கூறப்படுகிறதே! இதற்கு ஆதாரமுண்டா? ஷைக் முஹ்யித்தீன், திருநெல்வேலி.

தெளிவு : இது மக்களுக்கும் பயான் செய்வதாகக் கூறி, கதை அளப்போரின் கப்ஸாக்களில் ஒன்றாகும். இதற்கு ஸஹீஹான ஹதீஸ் எதுவும் ஆதாரமாக இல்லாவிடினும் ஒரு பலகீனமான ஹதீஸ் கூட கிடையாது.

ஆனல் அபூதர்தா(ரழி) வாயிலாக “நிச்சயமாக நீங்கள் உங்கள் பெயரையும் உங்கள் தந்தையின் யெரையும் கொண்டு மறுமை நாளில் அழைக்கப்படுவீர்கள். ஆகவே உங்கள் தந்தையின் பெயர்களை அழகானதாக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்று நபி(ஸல்) கூறியதாக அபுதாவூத். முஸ்னத் அஹ்மத் ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது. இவ்வறிவிப்பின் அறிவிப்பாளர் தொடரில் அபூதர்தா(ரழி) அவர்களிடம் கேட்டதாக இடம் பெற்றிருக்கும் “அப்துல்லாஹ் பின் அல்ஜகரிய்யா” என்பவர் அபூதர்தாஃ(ரழி) அவர்களைச் சந்தித்திருக்கும் வாய்ப்பிழந்தவர் என்று இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த அடிப்படையில் அபூதர்தாஃ(ரழி) வாயிலாக வந்துள்ள மேற்காணும் அறிவிப்பு லயீஃபு – பலகீனமானதாகி விடுகிறது.

இவ்வாறு இந்த அறிவிப்பு பலகீனமானதாகி விடுவதால் தாங்கள் கூறியது உண்மையாகிவிட மாட்டாது. ஏனெனில் தாங்கள் கூறியிருப்பது போன்று ஒரு ஹதீஸும் கிடையாது.

ஐயம் : நம் பகுதிகளில் கணவன் உயிரோடிருக்கும் போது இறந்த பெண்களுக்கு சிவப்புத் துணியிலும், விதவைப் பெண்களுக்கு வெள்ளைத் துணியிலும் கபனிடும் பழக்கம் இருந்து வருகிறது. பொதுவாக கபனுக்காக புதிதான மல் துணியே பயன்படுத்தப்படுகிறது. கலீபாக்கள் மற்றும் ஸஹாபாக்களின் வரலாற்றில் அவர்களின் பழைய ஆடைகளான வேஷ்டி போன்றவற்றால் கபனிடப்பட்டதாகப் பார்க்கிறோம். அப்படியானால் நாம் பழைய வேஷ்டிகளையும், பெண்கள் அவர்களின் பழைய சேலைகளையும் கபனுக்காகப் பயன்படுத்தலாமல்லவா? அது புதிய வெள்ளைத் துணியாகத் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உண்டா? கபனிடுவதில் விதவை, சுமங்கலி என்ற வேறுபாடு உண்டா?

ஷைக் முஹ்யித்தீன், திருநெல்வேலி.

தெளிவு: கபனிடுவதில் சுமங்கலி, விதவை என்ற வேறுபாடு ஹதீஸ்களின் வாயிலாக எதுவுமில்லை. கபனுக்காக புதிய துணிதான் வேண்டும் என்ற கட்டாயமும் ஹதீஸ்களில் இல்லை. கலீபாக்களும், மற்றும் சஹாபாக்களும் தமது பழைய வேஷ்டி, துப்பட்டி போன்ற ஆடைகளை கபனுக்காகப் பயன்படுத்தியதுப் போல் நாமும் பயன்படுத்துவது மேலானதேயாகும்.

ஆனால் கபன் வெள்ளை நிறமானதாக இருக்க வேண்டும் என்பது குறித்து நபி(ஸல்) அவர்களின் பின்வரும் ஹதீஸில் காணப்படுவதால் பொதுவாக கபன் வெள்ளை நிறமாக இருப்பது மேலாகும் என்பதை அறிகிறோம்.

“உங்கள் ஆடைகளில் வெள்ளை நிறமானவற்றை அணியுங்கள் ஏனெனில் வெள்ளை நிற ஆடையே உங்கள் ஆடைகளில் மேலானவையாகும். மேலும் உங்களுடைய மய்யத்துக்களை வெள்ளை நிறத் துணிகளை கொண்டே கபணிடுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (சுருக்கம்) (இப்னு அப்பாஸ்(ரழி), அபூதாவூத், திர்மிதீ)

சிக்கனத்தின் அடிப்படையில் பழைய ஆடைகளைக் கொண்டு கபனிடுவது மேலாகயிருப்பினும் நடைமுறைப்படி புதிய வெள்ளை நிற மல்துணியால் கபனிடுவதை இஸ்ராஃப்-விரயம் என்று கூறுவதும் சரியில்லை.

ஐயம் : தமக்கு நோய் ஏதுவுமின்றி தமது சொந்த வேலைக்காகச் செல்லக்கூடிய ஒருவர் டாக்டரிடம் சென்று குறிப்பிட்ட சில தினங்கள் தமக்க நோயிருந்ததாகவும் அந்த தினங்களுக்குப் பின்னர் தாம் வேலையில் சேருவதற்காக நோய் குணமாகிவிட்டதாகவும் சான்றிதழ் பெற்று வேலைக்கு செல்கிறார்களே! இதுப் பொய்யாகாதா? தாம் வேலை செய்யும் நிறுவனத்தை ஏமாற்றுவதாகாதா? ஷைக் முஹ்யித்தீன், திருநெல்வேலி.

தெளிவு : நிச்சயமாக இவ்வாறு செய்வது மாபெறும் பாவமாகிய பொய்யாக இருப்பதோடு, தாம் வேலை செய்யும் நிறுவனத்தாருக்குச் செய்யும் மாபெரும் துரோகச் செயலாகும். இவற்றுக்கெல்லாம் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும். இத்தகையோர் பின்வரும் ஹதீஸை கவனிப்பார்களாக!

நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் இருந்தபோது, அவர்கள் பெரும் பாவங்களில் மிகப்பெரியவை இன்னவை என்று உங்களுக்கு எடுத்துக் கூறட்டுமா? என்று மும்முறை கூறிவிட்டு அல்லாஹ்வுக்கு இணை வைத்தல். பெற்றோரை இம்சித்தல், பொய்சாட்சி கூறுதல் ஆகியவையாகும் என்றார்கள். (அப்துர்ரஹ்மான்பின் அபீபக்ரா(ரழி), முஸ்லிம்)

ஐயம் : புதுப் பள்ளிவாசலுக்கு திறப்பு விழா நடத்துவதையும், அதில் முஸ்லிம்கள் கலந்துக் கொள்வதையும் இஸ்லாம் புனிதமாக கருதுகிறதா? ஏழுப் பள்ளிவாசல் திறப்பு விழாக்களுக்குச் சென்றால் ஒரு ஹஜ்ஜுச் செய்ததற்குச் சமம் என்கிறார்களே இவற்றுக்கெல்லாம் ஹதீஸில் ஆதாரமுண்டா? எம். ஏ. ஹாஜி முகமத், பி.ஏ., நிரவி.

தெளிவு : ஒருவர் அல்லாஹ்வுக்கு ஒரு பள்ளிவாசல் கட்டினால் அவருக்காக சுவர்க்கத்தில் ஒரு வீட்டை அல்லாஹ் கட்டுவான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (உஸ்மான்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

இவ்வாறு பள்ளிவாசல் கட்டுவதால் உள்ள பலாபலன்களை எடுத்துக் கூறி நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசல் கட்டுவதற்காக ஆர்வமூட்டினார்களே தவிர, அதற்காக திறப்பு விழா கொண்டாட வேண்டுமென்றோ, அதற்காக முஸ்லிம்கள் செல்ல வேண்டும் என்றோ நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை.

பெரும்பாலும் இன்று பள்ளி கட்டி, திறப்பு விழா நடத்துவதெல்லாம் அதை நடத்தும் ஊர்வாசிகளின் பெருமையை அடிப்படையாகக் கொண்டே செய்யப்படுகிறது. ஓர் ஊரில் பெரியதொரு பள்ளிவாசல் கட்டப்படுகிறதென்றால் அப்பள்ளியை தொழுகையாளியைக் கொண்டு நிரப்புவதில் தான் அந்த ஊருக்கு கைர் – பரக்கத் – சிறப்பு முதலியவை இருக்கிறதே தவிர பள்ளித் திறப்புவிழா என்ற பெயரால் பிற ஊர் சகோதர முஸ்லிம்களுக்கு அழைப்புக் கொடுத்து அவர்களெல்லாம் வந்து பள்ளியை நிரப்புவதன் மூலம் என்ன பயன் இருக்க முடியும்?

“பள்ளிவாசல்களின் வகையில் மக்கள் ஒருவருக்கொருவர் பெருமையாகப் பேசிக் கொள்ளுவது யுக முடிவுகால அறிகுறிகளில் ஒன்றாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அனஸ்(ரழி), அபூ தாவூத், நஸயீ, தாரமீ)

இன்று மேற்காணும் ஹதீஸில் கூறப்பட்டிருப்பதுப் போல் அநேக ஊர்களில், நமது பள்ளியில் “மினாரா” 10 கிலோ மீட்டருக்கு அப்பால் நின்றுப் பார்க்கும்போதேத் தெரிகிறது. நமதுப் பள்ளியைப் போன்று கவர்ச்சிகரமானப் பள்ளி இந்த பகுதியிலேயே கிடையாது. அந்த ஊர் பள்ளியை விட நமதூர் பள்ளி தான் மிக அலங்காரமாக, பார்வைக்கு எடுப்பாக இருக்கிறது. என்றெல்லாம் பேசிக் கொள்வதை சர்வ சாதாரணமாகப் பார்க்கிறோம். அப்பள்ளியில் தொழுவோரைப் பார்க்கப் போனால் ஒரு ஸஃப்புக்கு இழுப்பறியாக இருக்கும்.

7 பள்ளிவாசல்களின் திறப்பு விழாக்களுக்குச் சென்றால் ஒரு ஹஜ்ஜு செய்வதற்கு சமம் என்பது ஏதோ ஒரு புண்ணியவானால் கட்டிவிடப்பட்ட சரடே அன்றி வேறில்லை. நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் இவ்வாறு ஏதுவுமில்லை. 7 பள்ளிவாசல் திறப்புவிழா மட்டுமின்றி 700 பள்ளிகளின் திறப்புவிழாவுக்குச் சென்று வந்தாலும் அவை ஒரு ஹஜ்ஜு செய்வதற்கு சமம் என்றுக் கூற முடியாது. காரணம் ஹஜ்ஜு செய்வது என்பது அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட கடமைகளில் ஒன்றாகும். பள்ளிவாசலுக்கு திறப்புவிழாச் செய்வதென்பதும், அதற்காக செல்ல வேண்டும் என்பதும் அல்லாஹ்வினாலும் அவனது ரசூலினாலும் ஏவப்பட்டவை அல்ல.

நமது இம்மார்க்கத்தில் இல்லாதோர் அமலை ஒருவர் செய்வாரேயானால் அது மறுக்கப்பட வேண்டியதாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆயிஷா(ரழி), புகாரீ, முஸ்லிம்)   

ஐயம் : ஒருவர் மற்றொருவரைப் பார்த்து சப்தமாக ஸலாம் கூறும் போது அந்த சப்தம் காதிலும் விழுகிறது. ஆனால் நமக்குக் கூறவில்லை என்ற தெளிவாகத் தெரிந்த நிலையில் அந்த ஸலாத்திற்கு பதில் அளிப்பது அவசியமா? எஸ்.எம். நாஸிர், நாகர் கோவில்.

தெளிவு : மேலும் எவரேனும் உங்களுக்கு ஸலாம் கூறினால் அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள். அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான். (4:86)

மேற்காணும் வசனத்தில் “உங்களுக்கு ஸலாம் கூறினால்” என்ற வாசகம் இடம் பெற்றிருப்பதால் எவருக்கு ஸலாம் சொல்லப்படுகிறதோ அவர் தான் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளார் என்பதை அறிகிறோம். பிறருக்கு ஸலாம் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருப்பவர் மீது பதில் ஸலாம் கூறுவது கடமை இல்லை.

ஐயம் : காலை, மாலை, சுப்ஹு, மஃரிபுத் தொழுகைக்குப் பின் குல்ஹுவல்லாஹு அஹத், குல்அஊது பிரப்பில் பலக், குல்அஊது பிரப்பின்னாஸ் ஆகிய சூராக்களை ஓதுவது மிகவும் நல்லது என்பதாகக் கேள்விப் பட்டுள்ளேன். இவற்றை ஒருமுறை மட்டும் ஓதுவதா? மும்முறை ஓத வேண்டுமா? ஹதீஸின் அடிப்படையில் பதில் எழுதவும்.

பி.எஸ். அப்துல்கதிர், கடையநல்லூர்.

தெளிவு : அப்துல்லாஹ்பின் குபைப்(ரழி) கூறுகிறார்கள்:

நாங்கள் ஒருமுறை கடினமான இருளும், மழையுமுள்ள ஓர் இரவில் நபி(ஸல்) அவர்களைத் தேடி வெளிக்கிளம்பினோம். அப்போது (ஓர் இடத்தில்) அவர்களைக் கண்டு பிடித்து விட்டோம். அந்நிலையில் அவர்கள் (என்னை நோக்கி) சொல்வீராக! என்றார்கள். அதற்கு நான் எதைச் சொல்வதென்று கேட்டேன். அப்போது அவர்கள் குல்ஹுவல்லாஹு அஹதுவையும், குல்அஊது பிரப்பில் பலக், குல்அஊது பிரப்பின்னாஸ் ஆகியவைகளை காலையிலும், மாலையிலும் (சுப்ஹுக்குப் பின்னும், மஃரீபுக்குப் பின்னும்) மும்முறை ஓதுவீராக. இவை உமக்கு எல்லாவற்றுக்கும் போதுமானவையாகும் என்றார்கள். (அப்துல்லாஹ்பின் குபைப்(ரழி), திர்மிதீ, அபூதாவூத், நஸயீ)

மேற்காணும் ஹதீஸின்படி மேற்காணும் சூராக்களை மும்முறை ஓத வேண்டும் என்பதாக அறிகிறோம்.

ஐயம் : இரவில் படுப்பதற்கு முன் குல்ஹுவல்லாஹு அஹத் சூராவையும் அதற்குப் பின்னுள்ள சூராக்களையும் ஓதி இரு கைகளிலும் ஊதி உடல் முழுவதும் தடவிக் கொள்வது குறித்து ஹதீஸில் ஆதாரமுண்டா? இஸ்மாயில் மொய்தீன், மதுரை.

தெளிவு : நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரவும் படுக்கைக்காக விரிப்பில் அமரும்போது, குல்ஹுவல்லாஹு அஹத், குல்அஊது பிரப்பில் பலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய சூராக்களை ஓதி அவற்றை தமது இருக் கைகளில் ஊதி, அவற்றால் தமது தலையிலும், முகத்திலும், உடலின் முற்பகுதியிலும் தடவுவார்கள், இவ்வாறு மும்முறை செய்வார்கள். (ஆயிஷா(ரழி), புகாரீ, முஸ்லிம்)

ஐயம் : ஜம் ஜம் நீரைக் நின்றுக் கொண்டு அருந்துகிறார்களே அப்படித் தான் அருந்த வேண்டுமா? அதற்கு ஆதாரமுண்டா? எஸ்.எம். நாஸிர், நாகர் கோவில்.

தெளிவு: நான் நபி(ஸல்) அவர்களிடம் ஜம்ஜம் தண்ணீரில் ஒருவாளிக் கொண்டு வந்தேன். அப்போது அவர்கள் அதை நின்றுக் கொண்டு குடித்தார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

ஜம்ஜம் நீரை நின்றுக் கொண்டுத்தான் குடிக்க வேண்டும் என்பதில்லை. நபி(ஸல்) அவர்களைப் போல் நின்றுக் கொண்டும் குடிக்கலாம் என்பதை அறிகிறோம்.

ஐயம் : சிலர் வெள்ளிப் பாத்திரங்களில் தண்ணீர் முதலியவை குடிப்பது தான் கூடாது, வெள்ளிப் பாத்திரங்களில் சந்தனம் போன்ற பொருட்களை குழப்பிக் கொடுப்பது கூடும் என்கிறார்கள். இவ்வாறு செய்வதற்கு மார்க்கமுண்டா,  நைனா முஹம்மத், இளங்காங்குறிச்சி.

தெளிவு : வெள்ளி, தங்க பாத்திரத்தில் நீங்கள் குடிக்க வேண்டாம். இவ்வாறே இவற்றின் தட்டுகளில் சாப்பிட வேண்டாம். இவை அவர்களுக்கு(காஃபிர்களுக்கு) இம்மையிலும், உங்களுக்கு(முஸ்லிம்களுக்கு) மறுமையிலும் உள்ளன” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஹுதைபா(ரழி), புகாரீ, முஸ்லிம்).

    இதன் அடிப்படையில் தங்கம். வெள்ளிப் பாத்திரங்களை எக்காரணத்தை முன்னிட்டும் அறவே உபயோகிக்கக் கூடாது என்பதை அறிகிறோம்.

ஐயம் : பிறரிடம் இருந்து உதவியைப் பெற்றவர்கள் அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிலர் “ஷுக்ரிய்யா” என்றும், சிலர் “மிக்க நன்றி” என்றும் இவ்வாறு ஒவ்வொருப் பகுதியிலுள்ளவர்கள் தமது பழக்கத்திற்க்கேப்ப ஏதோ ஒன்றைக் கூறுகிறார்கள். இது வகையில் நபிவழி என்ன?  முஹம்மது இப்றாஹீம், சென்னை.

தெளிவு : “மக்களுக்கு நன்றி செலுத்தாதவர் அல்லாஹ்வுக்கு நன்றி செலத்தியவர் அல்லர்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), திர்மிதீ, அஹ்மத்)

இதன்படி பிறருடைய உதவியைப் பெறுவோர் அனைவருக்கும் அவருக்காக நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளார் என்பதை அறிகிறோம்.

ஒருவருக்கு உதவி செய்யப்பட்டு, அவர் உதவி செய்தவரை நோக்கி “ஜஜக்கல்லாஹு கைரா” அல்லாஹ் உமக்கு நற்கூலி அளிப்பானாக! என்று கூறுவாரேயானால் (அவருடைய உதவிக்கு நன்றி செலுத்தி) அவரைப் புகழும் வகை யில் மிக அதிகமாகவே நடந்துள்ளார்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (உஸாமத்துப்னிஜைத்(ரழி), திர்மிதீ)

ஆகவே பிறருக்கு நன்றி செலுத்தும் போது “ஜஜக்கல்லாஹு கைரா” என்று கூறுவததான் நபிவழி என்பதை அறிகிறோம்.

Previous post:

Next post: