“நான் எந்த ஜமாஅத்திலும் இல்லை” என்போரே!

in 2014 ஜூன்,பொதுவானவை

Y.அஜ்மல்கான், ஜெகதாப்பட்டினம்,

இயக்க வழிபாட்டினரை விட்டுப் பிரிந்து அவர்களின் அரசியல் லீலைகள் மற்றும் குர்ஆன் ஸுன்னாவின் கொள்கைகளுக்கு மாற்றான விளக்கங்களால் கொதித்துப் போய் பல சகோதரர்கள் அந்தந்த ஊர்களின் பெயராலும் மன்றங்களின் பெயராலும் ஜமாஅத்தாகச் செயல்படுகிறார்கள். இவர்களின் இந்த முயற்சி இயக்க வழிபாடுகளில் நீங்கள் சிக்கி இருந்ததைப் போன்றுதான் விளைவுகளை ஏற்படுத்தும். உங்களின் கோபம் எல்லாம் இந்த இயக்கத்திலிருந்து அங்கு சென்றால் அங்கே வலை விரித்து ஆளைப் பிடிக்கின்றார். ஆக இப்படி எங்கு சென்றாலும் தப்பவே முடியாது என்று ஒரு முடிவில் உள்ளீர்கள். அதனால் தான் ஊருக்கு ஊர் தெளஹீது ஜமாஅத்களும், இஸ்லாமிய மன்றங்களும் வைத்துள்ளீர்கள்.

நபி(ஸல்) அவர்கள் எண்ணிக்கை குறைவான இஸ்லாத்தைச் சொன்ன ஆரம்பக் கட்டத்திலும் சரி, எண்ணிக்கையில் அதிகமாக வாழ்ந்த மதீனா வாழ்விலும் சரி அவர்கள் ஜமாஅத்தாகத் தான் முஸ்லிம்களை ஒருங்கிணைத்தார்கள். அந்த ஜமாஅத் இன, மொழி, நாடு என இவற்றைக் கடந்து ஒரே தலைவரின் கீழ் செயல்பட்டது. இஸ்லாம் ஓர் ஊருக்கோ, ஓர் இன மக்க ளுக்கோ, ஒரு நாட்டிற்கோ மட்டும் சொந்த மானது இல்லை. உலக அளவில் ஒரே தலைமையில் கீழ் செயல்பட்ட நபி(ஸல்) அவர்கள் போன்று செயல்பட்டால் அவர்களின் கட்ட ளைக்குக் கட்டுப்பட்டால் உன்னத ஜமாஅத் ஏற்படும். எல்லோரின் எதிர்ப்பார்ப்பும் அதுதான்.

நாம் வீட்டை விட்டு வெளியேறும்போது ஓதும் துஆ, வாகனத்தில் அமர்ந்தவுடன் ஓதும் துஆ, தும்மும்போது ஓதும் துஆ, தொழுகையில் இரு சஜ்தாக்களுக்கிடையில் ஓதும் துஆக்களை ஏன் ஓதுகின்றோம்? அல்லாஹ்வுடைய தூதர் நமக்குக் காட்டிய துஆக்கள் (நடைமுறைகள்). இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. இதே போலத்தான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், கற்பனை செய்யப்பட்ட பிரிவுப் பெயர்கள் (பல்வேறு ஜமாஅத்கள்) தலை தூக்கும்போது அவர்கள் இட்ட கட்டளைதான் “”ஜமாஅத் அல்முஸ்லிமீனையும் அதனுடைய இமாமையும் பற்றிப் பிடிப்பீராக” ஹதீஃதின் சுருக்கம். ஆதாரம் புகாரீ, முஸ்லிம். நபி(ஸல்) இட்ட மற்றையக் கட்டளைகளை நாம் செயல் படுத்துவது போல் இஸ்லாத்தின் பெயரால் புதிய, பழையப் பிரிவுகளுக்கு இடம் கொடுக் காமல் ஜமாஅத் அல்முஸ்லிமீன் என்ற ஜமா த்தை செயல்படுத்த அழைப்பு விடுக்கின்றோம்.

இந்த ஜமாஅத் அல்முஸ்லிமீன் என்ற ஜமாஅத் அபூ அப்தில்லாஹ்வின் கற்பனையில் முளைத்ததல்ல. இது அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களின் கட்டளை என்று விளங்க வேண்டும். எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு சொன்ன இறைவன் உதாரணமாக கலாலா (சொத்துரிமை), தலாக் (விவகாரத்து) வணக்க வழிபாடுகள் இன்னும் பிற… முஸ்லிம்களின் பிரிவுக் குடுமிச் சண்டைகளுக்கு தீர்வே சொல்ல வில்லையா? அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் தீர்வைத் தந்துவிட்டார்கள். இந்த ஒரு ஜமாஅத்தை அன்றி வேறு ஒரு ஜமாஅத்திற்கு அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அனுமதி தரவே இல்லை. தனி இயக்கப் பெயர்களாக இருந்தாலும் சரியே! அல்லது உள்ளூர் இஸ்லாமிய மன்றங்களின் பெயராக இருந்தாலும் சரியே!

ஜமாஅத் அல் முஸ்லிமீனும் ஒரு பிரிவுதான்; நாங்கள் விளக்கக் கடமைப்பட்டுள்ளோம். இயக்க வழிபாட்டுக்காரர்களிடம் நீங்கள் செயல்படுத்தும் TNTJ, INTJ, சலஃபி, SIM, JAQH  இவை பிரிவுகள்தான் என்று நாம் கூறும்போது அந்த இயக்கவான்கள் நம்மைப் பார்த்து நீங்களும் ஒரு பிரிவுதான் என்று மக்களை மதி மயக்குகிறார்கள். (ஜுக்ருஃபுல் கெளல் 6:112) நாம் சொல்வது நபி(ஸல்) இட்ட கட்டளை இல்லையா? என்றால் உடனே “”ஜமாஅத் அல் முஸ்லிமீனை” மட்டும் தமிழில் மொழிப் பெயர்க்கவில்லை. ஹதீஃது முழுவதும் மொழிப் பெயர்த்து விட்டு ஜமாஅத் அல் முஸ்லிமீனை மட்டும் அரபி பதத்தில் வைக்கின்றீர்கள்” என நம்மைப் பார்த்துக் கேட்டார்கள். நாம் அவர்களுக்கு உங்களுடையப் பெயரை “”ஏன்” ஜெயினுலாப்தீன், ரஹ்மத்துல்லாஹ் என்று வைக்க வேண்டும் (உ.ம்) ரஹ்மத்துல்லாஹ் அல்லாஹ்வின் அருள் என்று ஏன் தமிழில் உங்களுடைய பெயரை மொழிப் பெயர்ப்புச் செய்யவில்லை. உங்களுடைய பெயரும் இடு குறிப்பெயரே! அதேபோல் ஜமாஅத் அல்முஸ்லிமீனும் இடு குறிப்பெயரே! என்றோம். உடனே வாய் அடைப்பட்டு மக்களை திசை திருப்ப அப்போது ஸ்ரீலங்காவில் உள்ள ஜமாஅத் அல்முஸ்லிமீன் தான் உங்களுக்கு பல வருடங்கள் முன்னால் உள்ளது; அதுதான் உண்மை” என்றார்கள்.

அதற்கு நாம் “”நீங்கள் ஏன் உண்மை என்று விளங்கிய ஸ்ரீலங்கா ஜமாஅத்தில் இல்லை என்றோம்” விழிப் பிதுங்கி நிற்கின்றார்கள். எனக்கு ஒரு ஞாபகம் வருகிறது. பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது லேட்டாக (தாமதம்) வரும் மாணவனிடம் ஆசிரியர் கேட்கும்போது மாணவன் தவறை உணராமல், ஒரு பொய் சொல்ல அதை விசாரித்த ஆசிரியர் அந்த மாணவன் ஏற்கனவே சொன்னப் பொய்யை மறைக்க மறு பொய் சொல்லுவது போல் இப்படி கடைசியாக மாட்டிக் கொள்ளும் அவல நிலை இந்த இயக்கவான்களிடமும் உள்ளது.

பிறை விசயத்தில் ஒட்டகக் கூட்டத்தார் ஹதீஃதை வைத்து அந்நஜாத் ஆசிரியர் 10 கேள்விகளைக் கேட்டார்கள். பல வருடங்கள் கழித்து மக்கள் பிறை உடைய விசயத்தில் விழித்தவுடன், அதை பலஹீனமான ஹதீஃதாக மாற்றினார் ததஜ இயக்குனர். இயக்கங்களை இயக்கும் இயக்குனர்கள் தன்னைக் கண்மூடிப் பின்பற்றும் மக்களை சிந்திக்க விடாமல் வைக்கப் படாதபாடு படுகிறார்கள்.

ஸ்ரீலங்காவில் உமர் அலி தலைமையில் செயல் படும் ஜமாஅத் அல்முஸ்லிமீன் குர்ஆனுடைய வசனங்களுக்கு மாறுபட்டு உம்மத்தன் வாஹி தாவை உடைக்கும் ஜமாஅத் ஆக உள்ளது. அவர்களிடம் பைஅத் பெற வேண்டுமாம். பைஅத் பெற்றவர் பைஅத் பெறாதவர் என உம்மத்தன் வாஹிதாவை உடைக்கும் பிரிவினையை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான் “”இன்னும், நிச்சய மாக உங்கள் சமுதாயம் ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே தக்வாவுடன் (இறை உணர்வு) நடங்கள்; வசன எண் 23:51-55 வரையும் பார்க்கவும். இப்படி ஜமாஅத்தின் பெயர் மட்டும் சரியாக வைத்து விட்டு 23:51 வசனத்திற்கு மாற்றமாக ஒரே சமுதாயத்தை பைஅத் பெற்றவர்-பெறாதவர் என்று உடைக்கும்போது குர்ஆனுக்கு முரண் பட்ட ஜமாஅத்தாக ஸ்ரீலங்காவிலும், பாகிஸ் தானிலும் செயல்படுகிறது. அவர்களும் நம்மூர் இயக்கவான்களைப் போல் போட்டிப் பள்ளி கள் (மஸ்ஜித் ழிரார்கள்) கட்டி, கூலிக்கு வேலை செய்யும் தொழுகைத் தொழில் புரியும் இமாம்கள், புரோகிதர்களைக் கொண்டு தூத ரின் நடைமுறைக்கு மாற்றம் செய்கிறார்கள்.

“ஜமாஅத் அல்முஸ்லிமீன்’ என்ற ஜமா அத்தை ரிஜிஸ்ட்டர்டு செய்து விட்டார்கள். அவர்களின் மூடத்தனம் அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடை தூதரின் கட்டளையை பதிவு செய்வதற்கு ஸ்ரீலங்கா ஜமாஅத்திற்கு யார் அங்கீகாரம் கொடுத்தது? (உம்) என்னு டைய சொத்தை வேறொருவர் ரிஜிஸ்டர் செய்தால் இதை என்னவென்பது? பகல் கொள்ளையல்லவா?

அன்பர்களே! அபூ அப்தில்லாஹ், ஒரு போதும் அந்த ஜமாஅத்தை ரிஜிஸ்ட்டர்டு செய்யவில்லை. “”எனக்கு சொந்தமில்லாத ஜமா அத்தை நான் எப்படி உரிமை கொண்டாட முடியும் என்கிறார்” இறுதி இறைத் தூதரின் கட்டளைகளைச் செயல்படுத்த முன் வாருங்கள் என அழைக்கின்றார். 2010-ல் பெரம்பலூரில் இரண்டு நாள் நிகழ்ச்சி முஸ்லிம்களிடையே ஒற்றுமை ஏற்படுத்தும் விதமாக பல ஊர் மக்களுக்கும், பல இயக்கக்காரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. நூற்றில் இருந்து இரு நூறு சகோதரர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ். ஒரு காதியானி சகோதரரும் கலந்துக் கொண்டார். அவர் காதியானியாக இருந்தாலும் அவருடைய முயற்சியும், துணிச்சலும் மற்ற இயக்க வான்களிடம் இல்லையே! என்று சொல்லும் போது முஸ்லிம்களின் நிலை கவலைக்குரிய தாகவே உள்ளது.

நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் நபிகளார் கற்றுத் தந்த முறைகளில் செயல்பட ஜமாஅத் அவசியம். தனித்தனியாகச் செயல் பட எவ்வித ஆதாரமும் இல்லை. அவ்வாறு செயல்பட்டால் அறியாமைக் கால மரணத்தைத் தழுவுவார் என நபி(ஸல்) கூறியுள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்; ஜமாஅத் துடன் இணைந்து செயல்படுங்கள். இல்லையெனில் மந்தையை விட்டுத் தனியே ஒதுங்கிப் போய்விட்ட ஆட்டின் நிலைமைதான் உங்க ளுக்கும் ஏற்படும். ஏனெனில் தனியே சொல்லும் ஆட்டைதான் ஓநாய் விழுங்குகின்றது”
அறிவிப்பாளர்: அபூதர்தா(ரழி) நூல்: அபூதாவூது.

எல்லா நபிமார்களும் ஜமாஅத்துடனே இணைந்து வாழ்ந்தார்கள்; அவர்களின் அந்த ஜமாஅத்களை விட்டுப் பிரிந்து அந்த சமூகம் சென்று விடக்கூடாது என்பதை (42:13 முதல் 16 வரை படியுங்கள்) விளங்கலாம்.

நம் உயிரை விட மேலான நபி(ஸல்) (33:6) அவர்களின் கட்டளையைத் திரும்பத் திரும்ப ஞாபகமூட்டியும் தனித்தே செயல்படுவேன் என்றால் செவிடன் காதில் ஊதிய சங்குப் போல் அமைந்துவிடும்.

இன்னும் பலர் ஏன் அபூ அப்தில்லாஹ் அந்த ஜமாஅத்திற்கு அமீராக உள்ளார்? வேறு யாரும் இல்லையா? என்கிறார்கள். இவர்களுக்கு நம் முடைய பதில் யாரை ஜமாஅத்துடைய புதிய அமீராக நியமிக்கப்பட்டாலும் அவர் ஏன் என்றுதான் கேட்பார்கள். கருப்பு நிற அடிமை உங்களுக்கு அமீராக நியமிக்கப்பட்டாலும் அவர்களுக்குக் கட்டுப்படத்தான் நபி(ஸல்) நமக்குக் கட்டளையிட்டார்கள். அபூ அப்தில்லாஹ் பல முறை ஜமாஅத்துக்கான அமீரைத் தேர்வு செய்ய அழைத்தும் இன்று வரை அழைத்தும் யாரும் முன்வரவில்லை. எங்களில் வயதில் மூத்தவரை அமீராக நாங்கள் ஏற்றுக் கொண்டதில் என்ன தவறு இருக்கின்றது?

அபூ அப்தில்லாஹ் அவர்கள் இயக்கவான்களின் இயக்குநர்கள் போல் பதவி மோகம் கொண்டு அரசியல் சதுரங்கம் ஆடவில்லை. மாநில மேலாண்மை குழுவின் தனக்கு பிடித்த வரை வைத்து மாநில தலைவர், நிறுவனர், அமைப்பாளர் என்று உலவி வருகிறாரா? இல்லையே! இன்னும் அமீர் என்ற சொல் நமக்குப் பொருந்தாது இஸ்லாமிய அரசில் மட்டுமே அமீர் என்ற தலைவர் பதவிப் பொருந்தும் என அமீர் ஓர் ஆய்வு(?) என்று பீ.ஜை. நவீன முஜ்த்த ஹித்(?) எழுதி தன்னுடைய அமைப்புகளுக்கு மாநில செயலாளர், பொருளாளர், மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் என்பதை நிறுவ அவருக்கு இப்படி ஒரு எண்ணத்தை ஷைத்தான் ஏற்படுத்தி விட்டான்.

நபி(ஸல்) அபீசீனியாவிற்கு 11(அ)12 முஸ்லிம்களை ஹிஜ்ரத் செய்ய வைத்தபோது ஜாஃப்ர் பின் அபூ தாலிப்(ரழி) அமீராக நியமித்து அனுப்பும்போது எங்கிருந்தது இஸ்லாமிய அரசு? மக்காவில் நபி(ஸல்) வாழ்ந்த ஜமாஅத் தில் அவர்களை அமீராக ஏற்றுக் கொண்ட போது எங்கிருந்தது இஸ்லாமிய அரசு?

ஜமாஅத்துடன் கூடி வாழும் இஸ்லாமிய அடிப்படையை முஸ்லிம்களே தகர்த்தெரியாதீர்கள். 3:110 கூறுவது போல் உன்னத சமுதாயம் அமைய நபி(ஸல்) இட்டக் கட்டளைகளையும், முன் சென்ற நபிமார்களின் வழி முறைகளையும் பின்பற்றி ஈருலக பாக்கியங்களை அடையக் கூலியைக் கேட்காத மக்களில் நம்மையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக. ஆமீன். நம்முடைய இந்த ஜமாஅத்தில் உள்ளவர்கள் நேர்வழிப் பெற்றவர்கள் என்றக் கூற்றையும் கூறவில்லை. நேர்வழியை அல்லாஹ்தான் நாடியவருக்கு காட்டுகின்றான்; பிளவு ஜமாஅத்களுக்கும் கலர் கொடிகளுக்கும் இடம் கொடுக்காமல் தூதரின் கட்டளையை நிறைவேற்ற முன் வாருங்கள்.

Previous post:

Next post: