குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

in 2018 ஏப்ரல்,குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

ஆய்வுத் தொடர் -3

அபூ அப்தில்லாஹ்

மறுபதிப்பு :

மேலும் ஆராய்வோம்! இந்த வசனம் சம்பந்தமாக இன்னும் தெளிவாக ஆராய்ந்து அறிவதற்கு முயற்சிப்போம். காரணம் இந்த வசனத்தின் தெளிவான விளக்கத்தை நாம் அடைந்து கொள்வது. அல்குர்ஆனின் இதரஅனைத்து வசனங்களையும் பிரித்தறிந்து கொள்வதற்கும். “முஹ்க்கமாத்” வசனங்களைத் தெளிவாகப் புரிந்து செயல்படுத்துவதற்கும். அது நமக்குப் பெரிதும் உதவும்.

இந்த 3:7 வசனத்திலிருந்து, இரண்டு வகையான வசனங்கள் அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன என்பது ஐயத்திற்கிடமின்றி நமக்குத் தெளிவாக விளக்குகின்றது. அதிலும் “”முஹ்க்கமாத்” வசனங்களே அல்குர்ஆனின் அடிப்படை நோக்கமாகும் என்பதும் தெளிவாகப் புரிகின்றது. “முதஷா பிஹாத்” வசனங்கள் மார்க்க அடிப்படையில் செயல்பாட்டுக்குரிய வசனங்கள் அல்ல என்பதும் தெளிவாகப் புரிகின்றது. ஒன்றைச் செயல்படுத்துவதாக இருந்தால், அதைப் புரிந்து கொள்வது அவசியமாக இருக்கிறது. “”முதஷாபிஹாத்” வசனங்களின் உண்மையான (தீர்க்கமான) கருத்துகளை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியார் என்று அல்லாஹ்வே தெளிவாக அறிவித்திருப்ப தால், அறியாத ஒன்றை செயல்படுத்தும்படி அல்லாஹ் நம்மை நிர்ப்பந்திக்க மாட்டான் என்பது தெளிவான விஷயம். “வமாஜஅல அலைக்கும் ஃபித்தீனிமின் ஹரஜின்” இம்மார்க்கத்தில் நாம் உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை” என்று அல்லாஹ் 22:78 அல்குர்ஆன் வசனத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளான்.

இன்னும் நபி(ஸல்) அவர்கள் “இன்னமா புஹிஸ்தும் முயஸ்ஸரீன்” “நீங்கள் எளிதாக் கப்பட்டவர்களாகவே தோற்றுவிக்கப்பட் டிருக்கிறீர்கள்” (புகாரீ) என்று இதை ஊர்ஜிதப்படுத்தி இருக்கிறார்கள். ஆக ஒன்றுக்கு மேற்பட்ட பொருளைத்தரும் “முதஷாபிஹாத்” வசனங்களின் உண்மைக் கருத்துக்களை அல்லாஹ்வே அறிவான் என் பதிலிருந்து, அவை மார்க்க வி­யங்களில் மனிதர்களால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை அல்ல என்று விளங்கிக் கொள்கிறோம். இதிலிருந்து மார்க்க வி­யங்களில் நடைமுறைப்படுத்த வேண்டிய “முஹ்க்கமாத்” வசனங்கள் ஒரே கருத்தைச் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகவும் பகிரங்கமாகவும் அறிவிக்கக் கூடியவையாக இருக்கின்றன. இதை அல்லாஹ் அல்குர் ஆனில் பல இடங்களில் “”ஆயாத்துல்முபீன்” தெளிவான வசனங்கள், எனக் குறிப்பிட்டு பலமுறை ஊர்ஜிதம் செய்கிறான்.

ஆக நம்மால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய “முஹ்க்கமாத்” வசனங்களில், இப்படியும் பொருள் எடுக்கலாம். அப்படியும் பொருள் கொள்ளலாம் என்று யாராவது சொல்வார்களேயானால் அவர்கள் உள்ளத்தில் மாறுபாடு இருக்கிறது; மக்களை வழிகெடுக்க அவர்கள் முற்படுகிறார்கள் என்பதை அறிந்து, அவர்கள் விஷயத்தில் நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது நமது அபிப்பிராயம் அல்ல. அதே குர்ஆன் வசனமும், அதற்கு நபி(ஸல்) அவர்கள் கொடுத்த விளக்கமும் தெளிவாக எச்சரிக்கின்றன. மார்க்க விஷயங்களில் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமற்ற “முதஷாபிஹாத்” வசனங்களை அல்லாஹ் ஏன் இறக்கி இருக்க வேண்டும்? என்ற பெரிய சந்தேகம் நமக்குஎழக்கூடும். இன்ஷா அல்லாஹ் அதன் தெளிவை பின்னால் நாம் விரிவாக ஆராய்வோம். இப்போது நாம் அவசியமாக விளங்கிக் கொள்ள வேண்டிய விஷயம் மார்க்க வி­யங்களில் நாம் நடைமுறைப்படுத்த வேண்டிய “முஹ்க்கமாத்” வசனங்கள் தெள்ளத் தெளிவானவை. அவற்றிற்கு மனிதர்கள் யாரும் எந்தவித விளக்கமும் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை.

இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால், நபிமார்களையே அல்லாஹ் தனது கண்காணிப்பில் வைத்து, தன்னால் அறிவிக்கப்பட்டதைக் கூட குறைய எதுவும் செய்யாமல் அப்படியே மக்களுக்கு அறிவிக் கும்படி கட்டளையிடுகிறான். அது விஷயத்தில் அவர்கள் குறைவு செய்தால் மிகக் கடுமையாகத் தண்டிப்பதாகவும் எச்சரிக்கிறான். நபிமார்களும் தங்கள் சுய அபிப்பிராயங்களையோ, யூகங்களையோ, மார்க்கக் கட்டளைகளில் நுழைக்க அல்லாஹ் ஒரு சிறிதும் அனுமதிக்கவில்லை. மார்க்கச் செயல்பாட்டுக்குரிய அறிவிப்புகள் அப்படியே எவ்வித மாற்றமும் இல்லாமல் மக்களைப் போய்ச் சேரவேண்டும், என்ற விஷயத்தை, அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருந்திருக்கிறான். இவையனைத்தும் நமது அபிப்பிராயங்களோ, யூகங்களோ அல்ல. இவையனைத்தையும் தெளிவுபடுத்தும் குர்ஆன் வசனங்களே தெள்ளத் தெளிவாக இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். மார்க்க விஷயங்கள் அல்லாஹ்வின் அறிவிப்புப்படியே இருக்கவேண்டும் என் பதற்குரிய ஆதாரங்கள் : ஆதம்(அலை) சுவர்க்கலோகத்தில் வாழ்ந்து அனுபவ வாயிலாக (தன்னுடைய சந்ததிகளைவிட)சுவர்க்கத்தையும், மலக்கு களையும், ஷைத்தானையும் நேரடியாகவும், தெளிவாகவும் அறிந்திருந்தார்கள்.

அப்படிப்பட்ட ஆதம்(அலை) இவ்வுலகிற்கு வந்தபின், தான் பெற்றுள்ள அனுபவங்களை வைத்து சுய அபிப்பிராயங்களையும், யூகங்கள்படியும் மார்க்க காரியங்களைச் செய்து கொள்ள அல்லாஹ் அனுமதிக்கவில்லை. அல்லாஹ் அவர்களுக்கு இட்ட கட்டளையைக் கீழ்காணும் வசனம் தெளிவுபடுத்துகிறது. நாம் சொன்னோம், “”நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நேர்வழி (யைக் காட்டும் அறிவுரைகள்) வரும், யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ, அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்”. (அல்குர்ஆன்:2:38) அல்குர்ஆன் 20:123 வசனமும் இதையே ஊர்ஜிதப்படுத்துகிறது.

கப்ரு வணங்கிகள் அடிக்கடி ஓதி மக்களை ஏமாற்றும் ஒரு சொற்றொடர் “லா கவ்ஃபுன் அலைஹிம் வலாஹும் யஹ்சனூன்” அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். இந்த 2:38 வசனத்தில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது அல்லாஹ்வின் வழிகாட்டலின் படிநடப்பவர்களுக்குப் பயமோ, துக்கமோ இல்லை. அவுலியாக்கள் அப்படி நடந்து வந்ததால் அவர்களுக்குப் பயமோ துக்கமோ இல்லை.

இந்த சொற்றொடரைக் காட்டி அவுலியாக்களிடம் போய்க் கேட்கலாம். அவர்கள் கொடுப்பார்கள், அல்லது அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்று மக்களை வழிகெடுப்பவர்கள் 3:7 வசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி தங்கள் உள்ளங்களில் மாறுபாடு உடையவர்களேயாவார். இந்த 2:38, 20:123 வசனங்களிலிருந்து மார்க்கம் என்றால் அது அல்லாஹ்வின் அறிவிப்பின்படியே இருக்க வேண்டும். மறுமை விஷயத்தில் ஓரளவு அனுபவமுள்ள ஆதம்(அலை) அவர்களையே சுயமாக நடந்துகொள்ள அல்லாஹ் அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் மறுமையைப் பற்றி அறவே அனுபவமில்லாத மற்ற மனிதர்கள் தங்கள் சுய அபிப்பிராயப்படியும், யூகங்களின் படியும் நிச்சயமாக நடக்க முடியாது என்பது நமக்குத் தெளிவாகப் புரிகின்றது. அப்படி நடப்பவர்கள் நரகத்திற்குரியவர்கள் என்பதையும் அடுத்த வசனம் உறுதிப்படுத்துகின்றது. “அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் வசனங்களைப் பொய்ப்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக நெருப்பின் தோழர்களாவர் அவர்கள் அ(ந்நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர். (2:39). 20:124-127ம் எண்ணுள்ள வசனங்களும் இதையே ஊர்ஜிதப்படுத்துகின்றன.

ஆதம்(அலை) அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களைத் தொடர்ந்து எல்லா நபிமார்களுக்கும் வஹீ மூலம், தனது நேர்வழியை அல்லாஹ் தெளிவுபடுத்தினான். ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ, அவர்களுக்கு அச்சமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” (7:35)

இந்த வசனத்திலும்கபுரு வணங்கிகள் மக்களை அவுலியாக்களின் பேரால் ஏமாற்றப் பயன்படுத்தும் “லாகவ்ஃபுன்” என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளதை ஊன்றிக் கவனிக்கவும். ‘

“அல்லாஹ்வின் ஆணைப்படி ஒழுகுவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் யாதொரு தூதரையும் அனுப்பி வைக்கவில்லை”. (4:64)

நூஹுக்கு எதனை அவன் உபதேசித் தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கிறான். ஆகவே, (நபியே) நாம் உமக்கு வஹி மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால், “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதேயாகும். (42:13)

மார்க்கத்தில் பிரிவுகள் இல்லை; இஸ்லாத்தில் பிரிவுகளைக் கற்பிக்கக் கூடாது என்பது இந்த வசனத்திலிருந்து தெளிவாகின்றது. மார்க்கக் காரியங்களில் கூடுதல் குறைவு செய்யக் கூடாது. வஹியாகப் பெறுவதை அப்படியே மக்களுக்கு அறிவித்து விட வேண்டும் என்று இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்களை மிகக் கடுமையாக எச்சரித்து இறக்கப்பட்ட பல குர்ஆன் வசனங்களைப் பார்க்கிறோம். நேரான மார்க்கத்தில்தான் நபியே உம்மை ஆக்கி இருக்கிறோம். அதனைப் பின்பற்றி நடப்பீராக. அறிவற்றவர்களின் வழியைப் பின்பற்றாதீர். (45:18)

(நபியே)! நீர் இப்றாஹீமுடைய நேரான மார்க்கத்தைப் பின்பற்றுவீராக! என்று உமக்கு நாம் வஹி அறிவித்தோம். (16:123)

“வஹி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டதைப் பலமாகப் பிடித்துக் கொள்ளும். நிச்சயமாக நீர் நேரான பாதையில்தான் இருக்கின்றீர்” (43:43)

“நிச்சயமாக இது உமக்கும், உமது சமூகத் திற்கும் நல்லுபதேசமாகும்”. (43:44)

(நபியே!) உமது முகத்தை இஸ்லாமிய மார்க்கத்தின்பால் திருப்பிவிடுவீராக. (30:30)

(நபியே!) உமது இறைவனால் உமக்கு வஹி மூலம் அறிவிக்கப்பட்டவற்றையே நீர் பின்பற்றும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கி றான். (33:2)

“அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு அருளப்பட்டதன் பின் எதுவும் உம்மை அவற்றை விட்டும் நிச்சயமாகத் திருப்பி விடாதிருக்கட்டும்”. (28:87)

“அல்லாஹ்வின் வழிகாட்டலே மெய் யான வழிகாட்டல்” (3:73)

“அல்லாஹ்வின் மார்க்கம் விட்டு, வேறு மார்க்கம் விரும்புகிறீர்களோ?” (3:83)

“நேர்வழி செல்லுங்கள், வேறு வழி தேட வேண்டாம்”. (6:153)

“(நபியே!) இவர்கள் எவ்வி­யத்தில் தர்க் கித்துக் கொண்டார்களோ, அதனை நீர் தெளிவாக்குவதற்காகவே இவ்வேதத்தை உம்மீது நாம் இறக்கி வைத்தோம்; அன்றி, விசுவாசமுடைய மக்களுக்கு (இது) நேரான வழியாகவும், ஓர் அருளாகவும் இருக்கிறது” (16:64)

“அல்லாஹ்வின் வழிதான் நிச்சயமாக நேரான வழி” என்று கூறிவிடும். (2:120)

இவ்வளவு தெள்ளத் தெளிவான இத்தனை வசனங்களைப் பார்த்த பின்பும், வஹி வந்து கொண்டிருந்த நபி(ஸல்) அவர்களின் சுய அபிப்பிராயங்களையோ, யூகங்களையோ மார்க்கமாக்க அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்பதைத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பின்பும், நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னுள்ள மனிதர்களின் சுயவிளக்கங்களை ஏற்று நடக்க வேண்டும் என்று சொல்பவர்கள் யாராக இருக்க முடியும்? என்பதை நாம் சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம். 3:7ம் வசனம் குறிப்பிடும், உள்ளத்தில் மாறுபாடு உடையவர்களாகத்தான் அவர்கள் இருக்க முடியும்.

நபி(ஸல்) அவர்களே அல்லாஹ்வின் கண் காணிப்பில் இருந்தார்கள்; அவர்களின் சொந்த விருப்பங்களும் நிராகரிக்கப்பட்டன என்பதற்குரிய ஆதாரங்கள். “”(நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக. நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்” (52:48)

உஹத் யுத்தத்தில், நபி(ஸல்) அவர்கள் எதிரிகளால் மிகவும் சிரமத்திற்குள்ளா னார்கள். முகத்தில் படுகாயம் ஏற்பட்டு, வேதனை தாங்க முடியாத நிலை. அப்போது அவர்கள், “”தங்களுடைய நபிக்கு இந்த அளவு சிரமத்தைக் கொடுத்த இந்த சமூகம், எவ்வாறு சித்தியடையும்? என்று கேட்டு விட்டார்கள் இதைக் கண்காணித்துக் கொண்டிருந்த அல்லாஹ்(ஜல்) இதைக் கண்டித்து, உடனே வஹி இறக்கினான். “”(நபியே!) உமக்கு இவ்வி­யத்தில் யாதொரு அதிகாரமும் இல்லை (தீர்ப்பு அவனுடையது) அவன் அவர்களை மன் னித்து விடலாம் அல்லது வேதனைப்படுத் திடலாம், நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களாக இருக்கிறார்கள்.” (3:128)

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தமது மனைவியர்களைத் திருப்திப்படுத்த அல்லாஹ் ஹலாலாக்கிய ஒன்றை தமக்கு ஹராமாக்கி இருப்பதாகச் சத்தியம் செய்து விட்டார்கள். இதைக் கண்காணித்துக் கொண்டிருந்த அல்லாஹ், உடனே வஹி மூலம் அறிவித்து, அவர்களின் சத்தியத்தை (பரிகாரமுடன்) முறிக்கச் செய்துவிட்டான். “”நபியே! உம் மனைவியரின் திருப்திக்காக அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்! மேலும், அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்” (66:1)

“”அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சிலபோது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்குக் கடமையாக்கி இருக்கிறான். மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும் அவன் நன்கறிந்தவன், ஞானமிக்கவன்” (66:2)

நபி(ஸல்) அவர்களே, தமது விருப்பங்களை மார்க்கமாக்க அல்லாஹ் அனுமதி யளிக்கவில்லை என்பதை மேலே காட்டிய வசனங்களிலிருந்து நன்கு அறியலாம். அடுத்து, மார்க்க விஷயத்தில், அல்லாஹ்வின் அனுமதியன்றி, ஒன்றைச் சொல்ல, நபி(ஸல்) அவர்கள் எந்த அளவு பயந்து இருந்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள். வேதக்காரர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, குகை வாசிகளைப் பற்றித் தங்களுக்கு அறிவிக்குமாறு கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களும், அல்லாஹ் வஹி அறிவிப்பான் என்ற நம்பிக்கையில், நாளை சொல்லுகிறேன் என்று கூறி விட்டார்கள். எதிர்பார்த்தபடி வஹி மறுநாள் வரவில்லை நாட்கள் பதினைந்து ஆகியும் வரவில்லை, வேதக்காரர்கள், “நாளைச் சொல்வதாகச் சொன்னீர்களே” என்று ஒவ்வொரு நாளும் வந்து கேட்டு, தொந்தரவு, ஏளனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். நபிகளாரோ பதில் சொல்ல முடியாது தவித்தார்கள். இக்கட்டான இந்த நிலையிலும் தமது அபிப்பிராயத்தையோ, யூகத்தையோ சொல்ல முன் வந்தார்களில்லை. நபி(ஸல்) அவர்கள் குழம்பித்தவித்திருந்த 15 நாட்களுக்குப் பிறகு அல்லாஹ்விடமிருந்து வஹி வந்தது. \

“நபியே! இன்ஷா அல்லாஹ் சொல்லாமல், நாளை சொல்வேன் அல்லது செய்வேன் என்று சொல்லாதீர்” (18:23,24) என்று எச்சரித்துவிட்டு, அவர்களைப் பற்றிய விபரங்களை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தான். (தஃப்ஸீர் இப்னுகஸீர்) பின்னர், அல்லாஹ் அறிவித்துக் கொடுத்ததை, வேதக்காரர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பெரும் இக்கட்டான நிலையிலும்கூட, நபிகளார், தம் சொந்த அபிப்பிராயத்தை, யூகத்தைக் கூற முன்வந்தார்களில்லை. இதிலிருந்து அறிவுடையோர் படிப்பினை பெற வேண்டியவர்களாக இருக்கிறார்கள். “ஃபஸ்அலூ அஹ்லதிக்ரி இன்குன்த்தும் லாதஃலமூன்” “நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் திக்ரை உடையவர்களிடம் கேளுங்கள்” என்ற அல்லாஹ்வின் கட்டளைப்படி, ஒருவர் நம்மிடம் மார்க்கம் பற்றிய ஒரு விஷயத்தைக் கேட்டால், அது, குர்ஆனின் இன்ன அத்தியாயத்தில், இன்ன வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று எடுத்துக் கூற வேண்டும், அல்லது நபி(ஸல்) அவர்களின் ஹதீதை ஆதாரத்துடன் எடுத்துக் கொடுக்க வேண்டும். இதை விடுத்து, முன்னோர்களின் அபிப்பிராயங்களையும், யூகங்களையும் எடுத்துச் சொல்வது பெருந் தவறாகும்.

அதேபோல் இவர்கள் சொந்த அபிப்பிராயங்களை, யூகங்களை சொல்லுவதும் குற்றமாகும். அதனால்தான், “திக்ரை” உடையவர்களிடம் கேளுங்கள் என்று அல்லாஹ் சொல்லி இருக்கிறானே அல்லாமல் “அஹ்லல் இல்மி” அறிவுடையவர்களிடம் கேளுங்கள் என்று சொல்லவில்லை.இதற்கும் குர்ஆன் வசனமே தெளிவான ஆதாரமாக இருக்கிறது. (நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹி கொடுத்து, நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர, வேறல்லர், ஆகவே, நீங்கள் அறிந்து கொள்ளாமல் இருந்தால், வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள் (என்று கூறுவீராக)” (16:43) இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள், முன்னரே உலகில் நடந்து முடிந்துவிட்டவையாகும். தெரியாவிட்டால், இவற்றைத் தெரிந்து வைத்திருப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது மட்டுமே, இந்த இடத்தில் கேட்கப்படுபவர் வேதத்தின் மூலம் தெரிந்து வைத்திருப்பதை சொல்லக் கடமைப்பட்டிருக்கிறாரே தவிர, தனது சொந்த அபிப்பிராயங்களையோ, யூகங்களையோ, அவர் ஒருபோதும் சொல்லக்கூடாது.

அப்படிச் சொல்வது பெருங் குற்றமாகும். இது விஷயத்தில் மனிதர்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களையே, அல்லாஹ் எந்த அளவு கண்டிக்கிறான் என்பதை, கீழ் வரும் இறை வசனங்கள் இன்னும் தெளிவாக நிரூபிக்கின்றன. “அன்றியும், நம்மீது, சொற்களால் சிலவற்றை இட்டுக்கட்டிக் கூறியிருப்பாரா னால் அவரை நம் வலக்கரப்பிடியாகப் பிடித்து, அவருடைய நாடி நரம்பை நாம் தரித்து விடுவோம், அன்றியும் உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை” (69:44, 45,46,47) (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: