ஜகாத்

in 2018 ஜூலை

அபூ ஃபாத்திமா

இஸ்லாம் விதித்துள்ள கடமைகளுள் தொழுகையும், ஜகாத்தும் மிக பிரதான இடத்தை வகிக்கின்றன. அல்லாஹ் தனது திருமறையில் தொழுகையை வலியுறுத்தும் இடங்களிலெல்லாம் ஜகாத்தைப் பற்றியும் வலியுறுத்துகிறான். தொழுகையைப் பேணித் தொழாதவனுக்குக் கேடுதான். அவன் நரகம் புகுவான் என்பதை 19:59, 74:42,43, 107:4,5 வசனங்கள் எச்சரித்துக் கொண்டிருக்கின்றன.

இதிலிருந்து தனது செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிக் கணக்கிட்டுக் கொடுக்காதவன் இணை வைப்பவனாகி நிரந்தர நரகத்தை அடைகிறான் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள் ளது. 9:34,35 வசனங்கள் இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றன. எனவே அல்லாஹ்வை அஞ்சி நடக்கும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் தங்கள் செல்வத்திற் குரிய ஜகாத்தை முறைப்படி கணக்கிட்டு அதனை உரியவர்களிடம் ஒப்படைத்து விடுவீர்களாக. “ஜகாத்” என்ற அரபி பதத்திற்கு தூய்மை, வளர்ச்சி, முன்னேற்றம், ஆக்கம், வெற்றி என பல பொருள்கள் உண்டு. ஜகாத்தை நிறைவேற்றுபவர்கள் வளர்ச்சியுற்று, வாழ்க்கையில் முன்னேறி வளமான இவ்வுலக வாழ்வைப் பெறுவதோடு உளத்தூய்மையும் அடைந்து ஆக்கத்துடன் செயல்பட்டு ஈருலக வெற்றியையும் அடைந்து கொள்கிறார்கள். இதனை “அவர்களுடைய பொருள்களிலிருந்து தானத்திற்குரியதை எடுத்துக் கொண்டு அதனால் அவர்களை உள்ளும், புறமும் தூய்மையாக்குவீராக.

இன்னும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வீராக. (9:103) என்ற வசனம் விவரிக்கிறது. மேலும் ஜகாத் கொடுக்காதவனின் பொருள் தூய்மையடையாது. அழுக் கடைந்து அவனையும் நாசத்திலாக்கி விடுகின்றது. இதனை 3:180 வசனம் உறுதிப்படுத்துகிறது. ஜகாத்தை முறையாகக் கணக்கிட்டு கொடுப்பவர்களின் செல்வங்கள் இரட்டிப்பாகப் பெறுகுகின்றன என அல்லாஹ் 30:39 வசனத்தில் வாக்குறுதி யளிக்கின்றான். ஜகாத் விதிக்கப்பட்டதின் பிரதான நோக்கம் ஒருவரது உள்ளத்திலுள்ள பேராசையைப் போக்கி அல்லாஹ்வின் அச்சத்தை ஊட்டி, நற்செயல்கள் தூண்டி அவரது உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவது கொண்டு நரகை விட்டும் தப்பிக்கச் செய்யவே. இதனை 92:17,18 வசனங்கள் பறைசாற்றுகின்றன. ஏழை, எளிய தேவையுடைய மக்களின் இடுக்கண் களைய ஜகாத் பெரிதும் உதவுகிறது. சத்தியம் நிலைநாட்டப்பட காரணமாகின்றது. இதற்கு ஆதாரம் 70:24,25, 2:195 இறை வசனங்களாகும்.

அல்லாஹ்வின் பொருத்தம் நாடி மட்டுமே ஜகாத் கொடுக்கப்பட வேண்டும். ஜகாத் பெறுபவரை தனக்கு உபகாரியாகக் கருத வேண்டுமேயல்லாது அவரை இழி வாக எண்ணக்கூடாது. தரமானதை மறைவாகவும், சமயங்களில் பகிரங்கமாகவும் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி கொடுக்க வேண்டும். இவற்றை 2:264, 267, 271 வசனங்களைப் பார்த்து படிப்பினைப் பெற்றுக் கொள்ளலாம். ஜகாத் எவற்றிற்கெல்லாம் எப்போது கடமையாகிறது? தங்கம், வெள்ளி மற்றும் வியாபாரப் பொருட்கள், ரொக்கம் இவை நம்மிடம் முழுமையாக ஒரு வருடம் இருந்தால் அவற்றிற்கு ஜகாத் கொடுப்பது கடமையாகும்.

விளைப் பொருட்கள் விளைந்து அறுவடையானவுடன் ஜகாத் கடமையாகிறது. நமது சொந்த உபயோகத்திற்குப் போக மேலதிகக் கட்டிடங்கள் இருந்தால் அவற்றின் பெரு மதிக்கு இல்லாமல் அவற்றிலிருந்து பெறப்படும் வாடகைக்கு ஜகாத் கொடுக்க வேண்டும். அதேபோல் விளை நிலங்களின் கிரயத்திற்கு இல்லாமல் அவற்றிலிருந்து பெறப்படும் விளைச்சலுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும். ஆனால் வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்துடன் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் முதலீட்டிற்கும் சேர்த்து ஜகாத் கொடுக்க வேண்டும்.

இது மனித அறிவுக்கு நியாயமற்ற தாகத் தோன்றலாம். வியாபாரம் செய்வதுக் கொண்டு பலருக்கு வேலை வாய்ப்புக் கொடுப்பதுடன் பெரும் சிரமங்கள் உழைப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளது அதே சமயம் கட்டடங்களில் முதலீடு செய்வதால் எவ்வித சிரமமோ, உழைப்போ இன்றி மாதா மாதம் வாடகை கிடைத்து விடுகிறது. இந்த நிலையில் கட்டடங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ள முதலுக்கு ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை. அதற்கு மாறாக வியாபாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள முதலுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது எப்படி நியாயம்? என்ற வினாவை எழுப்பலாம்.

இங்கு அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நடக்க வேண்டுமேயல்லாது நமது மனித அபிப்பிராயத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது. மனித அபிப்பிராயத்தில் ஒன்றுக்கொன்று முரணானவைகளும் எடுத்துச் சொல்லப்படும் போது நியாயமாகப் படலாம். இதுவே மனித இயல்பு. அதனால் அது சரியாகி விடாது. கட்டடங்களில் முதலீடு செய்யும் போது அதிகபட்ச லாபம் 1%ஐ தாண்டாது. பெரும்பாலும் 1% அல்லது ¾% லாபமே வாடகையாகக் கிடைக்கும். அதே சமயம் வியாபாரத்தில் குறைந்தது 15%லிருந்து 100% வரை லாபம் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் அபிவிருத்தி இருக்கிறது என்பதும் நபிமொழியாகும்.

கட்டடங்களின் பெருமதி அதிகரிப்பதன் மூலம் லாபம் கிடைக்கிறதே என்று எதிர்வாதம் செய்யலாம். அதேபோல் வியாபாரப் பொருள்களின் விலைகளும் அதிகரித்து லாபம் கிடைக்கத்தான் செய்கிறது. கட்டடத்தை விற்று ரொக்கமாக கைக்கு வந்துவிட்டால் முதலுக்கும் லாபத் திற்கும் சேர்த்து ஜகாத் கொடுக்கும் கடமை ஏற்பட்டு விடுகிறது. மேலும் விளைநிலங் கள் விவசாயத்திற்கென்றோ, கட்டடங்களை வாடகைக்கு விடும் நோக்கத்துடனோ அன்றி வாங்கி விற்கும் நோக்கத் துடன் அதாவது வியாபார நோக்கத்துடன் நிலங்களில் முதலீடு செய்தாலும் அவை வியாபாரப் பொருள்களாக கணக்கிடப்பட்டு, அவற்றின் விலை ஏறும்போது அதனையும் கணக்கிட்டு முதலீடு, லாபம் இரண்டிற்கும் ஜகாத் கொடுப்பது கடமையாகும். நிலங்கள், கட்டடங்களை வாங்கி விற்கும் வியாபாரிகள் தங்கள் முதலீட்டுக் கும் சேர்த்து ஜகாத் கொடுப்பதை விட்டும் தப்ப இயலாது. அது குற்றமேயாகும்.

ஜகாத் கடமையாகும் அளவுகள் : தங்கம் 7டி தோலா 87.3 கிராம். வெள்ளி 52டி தோலா 611.1 கிராம். ரொக்கம் 611.1 கிராம் வெள்ளியின் கிரயத்திற்கு அதிகமாக இருக்கும்போது, வியாபாரப் பொருட்கள் 611.1 கிராம் வெள்ளியின் கிரயத்திற்கு அதிகமாக இருக்கும்போது இவை அனைத்திற்கும் குறிப் பிட்ட அளவைத் தாண்டி விட்டால் அவற்றிலிருந்து நாற்பதில் ஒரு பங்கைக் கணக் கிட்டு ஜகாத் கொடுத்து விட வேண்டும். உதாரணமாக ஒருவரிடம் 100 கிராம் தங்கம் இருந்தால் 12.7 கிராம் தங்கத்துக்கு மட்டும் நாற்பதில் ஒன்று ஜகாத் கொடுப்பதாகாது. தன்னிடமுள்ள 100 கிராமுக்கு நாற்பதில் ஒன்றை கணக்கிட்டு அதாவது 2டி கிராமை ஜகாத்தாகக் கொடுத்து விட வேண்டும். கையிலிருக்கும் ரொக்கத்தை 611.1 கிராம் வெள்ளி கிரயத்திற்கு அதிகமாக இருந்தால் என்று ஏன் கணக்கிடக் கூடாது என்ற எண்ணம் எழலாம். இன்றைய நிலவரப்படி 611.1 கிராம் வெள்ளியின் கிரயம் 87.3 கிராம் தங்கத்தின் கிராம் தங்கத்தின் கிரயத்தை விடக் குறைவானதாகும்.

எனவே குறைந்த அளவை ரொக்க வி­யத் தில் கணக்கிட்டுக் கொள்வதே பாதுகாப் பாகும். அடுத்து இன்னொரு தப்பான எண்ணமும் முஸ்லிம்களிடையே இருந்து வருகிறது. ஜகாத்திற்குரிய பொருள்கள் ஒரு வருடம் தன்னிடமிருந்தால் மட்டுமே ஜகாத் கடமையாகும். கடனாக யாருக்கும் கொடுத்திருந்தாலோ, இன்சூரன்ஸ், பி.எப். மற்றும் பல வகைகளில் ஈடுபடுத்தி இருந் தாலோ அவற்றிற்கு ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்று கருதுகிறார்கள். ஜகாத்தை விட்டும் தப்புவதற்காகப் பிறருக்கு கடனாகக் கொடுத்து விடுகிறார்கள். இதுவும் தவறான எண்ணமாகும். நம்முடைய பொருள் நம்மிடமிருந்தாலும் சரி, அரசிடமிருந்தாலும் சரி அல்லது வேறு எங்கிருந்தாலும் சரி அது நம்முடையதாக இருக்கும் வரை அவற்றிற்கு ஜகாத் கொடுப்பது கடமையாகும். அவை தற்போது நம்மிடமில்லை என்பதைக் காரணம் காட்டி ஜகாத் கொடுப்பதிலிருந்து தப்ப முடியாது.

உதாரணமாக ஒரு வியாபாரி நம்மிடமிருந்து ஒரு லட்ச ரூபாயை வாங்கி வியாபாரத்தில் போட்டால், அழகிய முதலீட்டுடன் சேர்த்து அந்த லட்ச ரூபாய்க் கும் ஜகாத் கொடுப்பது அவர் மீது கடமையல்ல. அவர் சொந்தப் பணமான முதலீட்டுக்கு மட்டுமே அவர் ஜகாத் கொடுக்க வேண்டும். ஆனால் நாமோ நாம் கொடுத்த அந்த ஒரு லட்ச ரூபாய்க்கும் ஜகாத் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளோம். காரணம் அது நமக்குரிய பணமாகும். நமக்குச் சொந்த மானது நம்மிடமில்லாமல் வேறு யாரிடமிருந்தாலும் ஜகாத் நம்மீது கடமையாகும். நாம் ஒருவருக்கு சில லட்சங்கள் கடனாகக் கொடுத்து அவர் அதனைக் கொண்டு குடி யிருக்க ஒரு வீடு வாங்கி இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு அது அவரது சொந்தப் பணமாக இருந்தாலும் பிரத்தி யாரது பணமாக இருந்தாலும் அவர் மீது ஜகாத் கடமையில்லை. ஆயினும் நாம் அவ ருக்கு கடனாகக் கொடுத்துள்ள பணத்திற்கு நாம் ஜகாத் கொடுப்பது கடமையாகும்.

ஒரு வியாபாரி தன்னிடம் வியாபாரப் பொருளாக இருப்பவற்றின் பெருமதி + வெளியிலிருந்து அவருக்கு வரவேண்டிய பணம் = லாபம் இவற்றிலிருந்து மற்றவர் களிடமிருந்து அவர் கடனாகப் பெற்றுள்ள பணம், அரசாங்க வரிகள், மற்றும் செலவு கள், குடும்ப செலவு இவை அனைத்தையும் எஞ்சியுள்ள பணத்திற்கு 40ல் 1 வீதம் கணக்கிட்டு ஜகாத்துக் கொடுத்து விடவேண்டும். விவசாயத்தின் மூலம் கிடைக்கும் விளைப் பொருள்கள் ஐந்து வஸக் 630 கிலோவுக்கு அதிகமிருந்தால் முழுமையான அவற்றிலிருந்து மழை நீரைக் கொண்டு உற்பத்தியானால் 10ல் 1 பாகத்தையும், நீர் பாய்ச்சி உற் பத்தியானால் 20ல் 1 பாகத்தையும் ஜகாத் தாகக் கொடுத்து விடவேண்டும். மாடுகள், எருதுகள் 30 எண்ணிக்கைக்கு மேலிருந்தால் ஒவ்வொரு 30க்கும் 1 வயது நிரம்பிய கன்று ஒன்றும், ஒவ்வொரு 40க்கும் 2 வயது நிரம் பிய கன்று ஒன்றும் ஜகாத் கொடுக்க வேண்டும். ஆடுகள் 40 எண்ணிக்கைக்கு அதிகப் பட்டால் 40 முதல் 120 வரை ஒரு ஆடு, 121 முதல் 200 வரை 2 ஆடுகள் பிறகு ஒவ்வொரு 100க்கும் 1 ஆடு வீதம் ஜகாத் கொடுக்க வேண்டும். அல்லாஹ்வின் அச்சமுடைய முஸ்லிம் சகோதர, சகோதரிகள் தங்களிடமுள்ள ஜகாத்திற்குரிய பொருள்களின் ஜகாத்தின் அளவை முறையாகக் கணக்கிட்டுச் சரியாக கொடுத்து விடுவதே அவர்களுக்கு நன்மை பயக்கும். இல்லை என்றால் நரகையடைய வேண்டி வரும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். ஜகாத் பணத்தை எந்தெந்த வகையில் யார் யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டும் என்பதை அல்லாஹ் 9:60 வசனத்தில் விளக்கியுள்ளான்.

அந்த வசனம் வருமாறு. (ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின்பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன்பட்டிருப்பதற்காகவும், அல்லாஹ்வின் பாதைக் காகவும், வழிப்போக்கர்களுக் காகவுமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும். அல்லாஹ்(யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (9:60)

1. மிகவும் தரித்திர நிலையிலுள்ள ஏழைகள்,

2. தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்குப் போதுமான வருமான மில்லாதவர்கள்,

3. இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டிருப்பவர்கள்.

4. அடிமைகளின் விடுதலைக்காக,

5. கடனாளிகளின் கடனைத் தீர்ப்பதற்காக,

6. அல்லாஹ்வின் பாதைக்காக,

7. பிரயாணத்தில் தேவைப் படுபவர்களுக்காக ஆக இந்த 7 வகைகளில் ஜகாத் செலவிடப்பட வேண்டும்.

எட்டாவது வகையினர் யாரென்றால், பைத்துல்மாலுக்காக ஜகாத் வசூலிப்பவர்கள் வசதி படைத்தவர்களாக இருந்தாலும் ஜகாத்திலிருந்து அதை வசூலிப்பதற்காக பெறுவதற்கு உரிமைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். பணம் படைத்தவர்களும் பிரயாணத்தில் இருக்கும்போது தேவையுடையவர்களாக ஆகிவிட்டால் ஜகாத் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

மற்றபடி ஜகாத் கொடுக்க கடமைப்பட்டவர்கள் ஜகாத் வாங்குவது கூடாது. இன்று நாட்டில் சில ஹஜ்ரத்துமார்கள்(?) உலவி வருகிறார்கள். அவர்கள் ஜகாத் கொடுக்கும் கடமைப்பட்டவர்கள், பெரும் பணம் படைத்தவர்கள். அவர்கள் ரமழானில் தங்களுக்கு ஜகாத் பணத்தை வாங்க ஊர் ஊராகச் செல்லுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு ஜகாத் கொடுப்பதால் அது நிறை வேறாது. அவர்கள் பிரயாணத்தில் இருக்கிறார்கள். தேவையுடையவர்களாக இருக்கிறார்கள். எனவே அவர்களுக்குக் கொடுக்க லாம் என்ற முடிவுக்கு வரமுடியாது. அவர்கள் பல ஊர்களில் அவர்களுக்காக வசூலித்து தங்கள் மடிகளில் ரூபாய் நோட்டுகளை கட்டிக் கொண்டு தான் ஜகாத்தை தங்களுக்காக வசூலிப்பதற்காக (பைத்துல் மாலில் சேர்ப்பதற்காக அல்ல) பிரயாணம் செய்கிறார்கள். எனவே அவர்கள் பிரயா ணத்தில் தேவையுடையவர்களாகவும் இல்லை, பைத்துல் மாலுக்காக ஜகாத் வசூல் செய்யும் நிலையிலும் இல்லை. எனவே முன் பின் அறியாதவர்கள் பெரிய ஜுப்பா, தலைப்பாவை மாட்டிக் கொண்டு வந்தாலும் அவர்களுக்கு ஜகாத் கொடுப்பது ஆகாது.

அவர்களின் உண்மை நிலை அறிந்து கொண்டு கொடுப்பதில் தவறில்லை. இப்படி, சில ஆயிரங்களை சில்லரை யாக மாற்றி வைத்துக் கொண்டு சில செல் வந்தர்கள் ஜகாத் கேட்டு வரும் அறிமுக மற்றவர்களுக்கெல்லாம் சில ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துவிட்டு ஜகாத் கொடுத்ததாக பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள். இவர்கள் இப்படிக் கொடுப்பது சதகாவில் சேருமேயல்லாது, இவர்கள் ஜகாத் முறைப்படி கணக்கிட்டு உரியவர்களிடம் கொடுத் ததாக ஆகாது.

மேலும் நாம் போஷிக்கக் கடமைப் பட்டுள்ள பெற்றோர்கள், மனைவி மக்கள் ஆகியோருக்கு ஜகாத் கொடுத்தால் அது நிறைவேறாது. மற்றபடி சகோதர, சகோதரிகள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் அவர்கள் ஜகாத் பெறும் நிலையிலிருந்தால் அவர்களுக்கு முன்னுரிமைக் கொடுத்து கொடுப்பது சிறப்புக்குரியதாகும். காரணம் சுற்றத்தை ஆதரித்த நன்மையும், தர்மம் கொடுத்த நன்மையும் ஆக இரு நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன. அல்லாஹ்வுடைய பாதையில் அவனது சத்திய மார்க்கத்தை நிலைநாட்டுவதற்குத் தேவையான அனைத்துக் காரியங்களிலும் ஜகாத்தின் ஒரு பகுதியை செலவிடலாம். “ஃபீஸபீலில்லாஹ்” என்ற 9:60 வசனத்தில் அல்லாஹ் இதனையேக் குறிப்பிடுகிறான். மற்றபடி அல்லாஹ்வின் பாதையில் பாடுபடுகிறவர்களுக்கு மட்டும் ஜகாத் பணத் தின் அந்தப் பகுதியை செலவிட வேண்டும்.

மற்ற வகைகளுக்கு செலவிடுவது கூடாது என்ற பிக்ஹு சட்டம் தவறான அடிப்படையில் அமைந்ததாகும். பைத்துல்மால் : ஜகாத் முறையாக வசூல் செய்யப்படு வதற்கும், அது முறையாகச் செலவு செய்யப்படுவதற்கும் பைத்துல்மால் அமைத்துச் செயல்படுவதே சாலச் சிறந்ததாகும். அதுவே வேலையை துரிதமாகவும், முறை யாகவும், சரியாகவும் செய்வதற்கு வழிவகுக்கும், மேலும் ஜகாத் முடிந்தமட்டிலும் அந்தந்தப் பகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் செலவிடப்படுவதே சிறந்தது. அந்தப் பகுதியில் ஜகாத்திற்குரியவர்கள் இல்லை என்றால் மட்டுமே வேறு பகுதி களுக்கு அனுப்பி அதனை செலவிடலாம். துடிப்புள்ள வாலிபர்கள் தங்கள் தங்கள் பகுதிகளில் பைத்துல்மால் அமைத்து அப்பகுதியிலுள்ள செல்வந்தர்களிடமிருந்தது ஜகாத் நிதியை வசூலித்து ஒன்று சேர்த்து திட்டமிட்டு, நிலையறிந்து ஏழை, எளிய மக்களின் வறுமையைப் போக்க முறையான வகையில் செலவிடலாம்.

வருடாவருடம் ஏழைகளுக்கு சில சில்லறைக் காசுகளைக் கொடுத்து, அவர்களைக் காலமெல்லாம் வறுமையாளர் களாகவும், ஜகாத் பணத்தை எதிர்பார்ப்பவர்களாகவும் இருக்கும் நிலை மாறி அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் கணிசமான தொகையைக் கொண்டு அவர்களுக்குத் தெரிந்த ஒரு தொழிலில் ஈடுபட்டு அவர்கள் சுயமாகப் பொருளீட்டவும் சில வருடங்களில் அவர்களே மற்றவர்களுக்கு ஜகாத் கொடுக்கும் அளவிற்கு வளரும் வகையிலும் ஆவன செய்ய வேண்டும்.

சமுதாயத்திலுள்ள பல சகோதரர்களின் ஆற்றல்கள், பொருள் இல்லாத ஒரே காரணத்தால் விரயமாவதைத் தடுத்து அவர்களின் ஆற்றல் முறையாகப் பயன்படுத்தப்பட்டு அது அவர்களுக்கும், சமுதாயத்திற்கும் பலனளிக்கும் வகையில் செயலாற்றப்பட வேண்டும். சுருங்கச் சொல்லின் சமுதாயத்திலுள்ள வறுமை நீங்கி, ஜகாத் பெறும் தகுதி யுடையோர் சமுதாயத்திலேயே இல்லை என்ற நிலை ஏற்படும் வகையில் செயலாற்ற வேண்டும். இதுவே இஸ்லாம் வகுத்து விதித்துள்ள ஜகாத்தின் அடிப்படை நோக்கமாகும்.

Previous post:

Next post: