கணிப்பீடு! கணிப்பீடு!!! கணிப்பீடு!!!

in 2018 ஆகஸ்ட்,பிறை

கணிப்பீடு! கணிப்பீடு!!! கணிப்பீடு!!!

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

“சந்தேகம்’ என்பதற்குத் தூய இஸ்லாத்தில் துளிகூட இடமில்லை 49:12 அது போன்றே சந்தேகங்களின் பிறப்பிடமாகக் கருதப்படும் அனுமானம், அன்னளவு, யூகம் தோராயமானது. குத்துமதிப்பு போன்றவற்றுக்கும் தூய இஸ்லாத்தில் துளிகூட இடமில்லை என்பதனை பரிசுத்த அல்குர்ஆன் இவ்வாறு பேசுகின்றது. உமக்குத் திட்டவட்டமான அறிவு இல்லாத வி­யங்களை நீர் பின்பற்ற வேண்டாம். 17:36

பாவி ஒருவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதைத் தீர்க்கமாக விசாரித்து அறிந்துகொள்ளுங்கள். 49:06

இன்னும் அவர்கள் தங்களது இறைவனுடைய (வேத) வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால் செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது (சென்று) விழமாட்டார்கள். 25:73

(மனிதர்களில் சிலர்) இவர்களுடனும் இல்லை, அவர்களுடனும் இல்லை இரு பிரி வினர்களுக்கிடையே தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். 4:143

அவர்களுடைய இருதயங்கள் சந்தேகத்திலேயே இருக்கின்றன. ஆகவே அவர்கள் தமது சந்தேகங்களினால் (இங்குமங்குமாக) உழலுகின்றார்கள். 9:45

அவர்கள் ஒரு காலை முன்னெடுத்து வைத்தால் மறு காலைப் பின்னோக்கி வைக்கின்றார்கள். அவர்களுக்கு எதிலும் ஓர் உறுதியான நிலைப்பாடு கிடையாது. அவர்கள் தடுமாற்றத்திற்கும், அழிவுக்கும் ஆளான மக்கள் ஆவர் அவர்கள் இவர்களுடனும் இல்லை, அவர்களுடனும் இல்லை. தஃப்ஸீர் இப்னு கஸீர், 4, பக்கம் 289,290

மேலும் மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் (அந்தப் பக்கமும் இல்லாமல் இந்தப் பக்கமும் இல்லாமல் மதில் மேல் பூனை போன்று) விளிம்பில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகின்றனர் அவர்கள் இம்மையையும் இழந்து விட்டார்கள். மறுமையையும் இழந்து விட்டார்கள். இதுதான் பகிரங்கமான நஷ்டமாகும். 22:11 அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் அனுமானம், யூகம், சந்தேகம் என்பது எவ்வளவு பெரிய பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. மேலும், அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள். உமக்கு சந்தேகம் தருபவற்றை விட்டு நீர் விலகி விடுவீராக, சந்தேகமற்ற உறுதியான வி­யங்களின் பால் நீர் சென்று விடு வீராக என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள். நுஃமான் பின் பUர்(ரழி) ஹஸ்ஸான் பின் அபீ ஸனான்(ரஹ்) புகாரி பாகம் 2, பக்கம் 700, பாடம் 3, ஹதீஃத் எண் 52, திர்மிதி, அஹ்மத். உமக்கு சந்தேகம் ஏற்படுத்துவதை விட்டும் விலகி விடுவீராக, உமக்கு சந்தேகம் ஏற்படாதவைகளின் பக்கமாகச் சென்றுவிடுவீராக. நிச்சயமாக உண்மையானது அமைதி, பொய்யானது சந்தேகம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ முஹம்மது ஹஸன் இப்னு அலி(ரழி) திர்மிதி, 2518,

ரியாதுஸ் ஸாலிஹீன் 55, 593 எவர் சந்தேகத்திற்கிடமானவைகளைத் தவிர்த்துக் கொள்கின்றாரோ அவர் தனது மார்க்கத்திற்கும் தனது மானம் மரியாதைக்கும் களங்கம் ஏற்படுத்துபவைகளை விட்டும் விலகித் தூய்மையானவராகி விடுகின்றார் எவர் சந்தேகமானவைகளில் போய் விழுகின்றாரோ அவர் பாவமானவைகளில் சென்றுவிடக்கூடும் எச்சரிக்கை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நுஃமான் பின் பUர்(ரழி) அவர்கள் புகாரி 52, ரியாதுஸ் ஸாலிஹீன் 588, முஸ்லிம் 1599.

நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கும் போது அவர்களைச் சந்திக்க அவர்களின் துணைவியார் ஸஃபிய்யா(ரழி) அவர்கள் வந்தார்கள். சிறிது நேரம் நபி(ஸல்) அவர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு வீட்டிற்குத் திரும்ப ஆயத்தமானார்கள் அது இரவு நேரமாக இருந்தது. எனவே ஸஃபிய்யா(ரழி) அவர்கள் வீட்டைச் சென்றடையும் வரை அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் செல்லலானார்கள். அவர்களது இல்லம் மதீனாவின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருந்தது. அவர்களிருவரும் சிறிது தூரம் வந்ததும் அன்ஸாரித் தோழர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களின் எதிரில் வந்தனர் (தமது துணைவியாருடன் சென்று கொண்டிருந்த) நபி(ஸல்) அவர்களைப் பார்த்தபோது அவ்விருவரும் வேக மாகச் சென்றனர்.

உடனே அவர்களை நோக்கி நபி(ஸல்) அவர்கள் சற்று பொறுங்கள். இவர் (எனது மனைவி) ஸஃபிய்யா என்று கூறினார்கள். இதைக் கேட்ட அவ்விருவரும் அல்லாஹ் தூயவன் அல்லாஹ்வின் தூதரே (உங்கள் மீதா நாங்கள் சந்தேகப்படப் போகிறோம்?) என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஷைத்தான் ஆதமுடைய மகனின் இரத்த நாலங்களிலெல்லாம் ஓடுகிறான். அவன் உங்கள் உள்ளங்களில் ஏதேனும் சந்தேகத்தையோ அல்து தீய எண்ணத்தையோ விதைத்துவிடுவான் என நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்கள். புகாரி: 3281, முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜா முஸ்னத் அஹமத் தாரமி 4912

மேற்காணும் அறிவிப்புகளின் மூலம் அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் சந்தேகம் என்பவற்றுக்கு முற்று முழு தாகத் தடை விதித்துள்ளார்கள் என்பதைச் சந்தேகமின்றி எம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. அந்த அடிப்படையில் சந்தேகங்கள் எழுவதற்கு மூல ஊற்றுக் கண்களாகத் திகழும் அனுமானம், அன்னளவு, யூகம் தோராயமானது, குத்துமதிப்பு போன்ற பொருளைக் கொண்டதாக கணிப்பு, கணிப்பீடு எனும் சொற் பிரயோகமும் திகழ்கிறது. எனவே கணிப்பு, கணிப்பீடு என்பது சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.

எனவே துல்லியமான சந்திரக் கணக்கீட்டை அடிப்படை யாகக் கொண்ட ஹிஜ்ரிக் கமிட்டிக்கும், ஜமாஅத்துல் முஸ்லிமீனுக்கும் கணிப்பு, கணிப்பீடு என்பதற்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை என்பதைத் தெளிவாக நாம் புரிந்துகொள்ளனும். துல்லியமான இந்த சத்தியப் பிரசாரம் மக்கள் மன்றத்தில் சென்றடைந்து விடக்கூடாது என்ற கெட்ட எண்ணத்தில் சிலர் வேண்டுமென்றே மறுபடியும் இந்த சொற்பிரயோகத்தைத் தொடர்ந்தும் பிறை விஷயத்தில் பாவிக்கின்றார்கள் என்பதை நடுநிலையானர்களும், புத்திஜீவிகளும் சிந்தனையாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். கணிப்பிற்கும், துல்லியமான கணக்கீட் டிற்கும் இடையே மலைக்கும், மடுவிற்கும் இடையிலுள்ள பெரியளவிலான வித்தியாசத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போட முனையக் கூடாது. ஒரு பாத்திரத்தில் உள்ள பாலை கண் ணால் பார்த்துவிட்டு இவ்வளவு இருக்கும் என்று அனுமானிப்பது கணிப்பு எனும் சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். அதனைத் துல்லியமாகக் கணக்கிடக்கூடிய பாத்திரங்களில் ஊற்றி இத்தனை லிட்டர் என அளப்பது சந்தேகத்திற்கப்பால் உள்ள துல்லியமான கணக்கீடு ஆகும். கதிர்களிலுள்ள தானியங்களைக் கண்ணால் பார்த்துவிட்டு இவ்வளவு இருக்கும் என்று அனுமானிப்பது கணிப்பு எனும் சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். அதனை அறுவடை செய்து அளந்து அல்லது நிறுத்து கணக்கிட்டுக் கொள்வது சந்தேகத் திற்கப்பாலுள்ள துல்லியமான கணக்கீடு ஆகும். ஒரு நீளமான பொருளைக் கண்ணால் பார்த்துவிட்டு இவ்வளவு நீளம் இருக்கும் என அனுமானிப்பது கணிப்பு எனும் சந்தே கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.

அதனை அளவுகோலால் அளந்து இவ்வளவு நீளமானது எனக் கணக்கிடுவது சந்தேகத்திற்கப்பாலான துல்லியமான கணக்கீடு ஆகும். கொடிகளிலுள்ள திராட்சைப் பழங்களைக் கண்ணால் பார்த்துவிட்டு இவ்வளவு இருக்கும் என்று அனுமானிப்பது கணிப்பு எனும் சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். அதனைப் பறித்து நிறுத்துப் பார்ப்பது சந்தேகத்திற்கப்பாலான துல்லியமான கணக்கீடு ஆகும்.

ஒரு பேரீச்ச மரத்திலுள்ள கனிகளைக் கண்ணால் பார்த்து இவ்வளவு இருக்கும் என்று அனுமானிப்பது கணிப்பு எனும் சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். அதனைப் பறித்து நிறை போட்டுப் பார்ப்பபாதனது சந்தேகத்திற்கப்பாலான துல்லியமான கணக்கீடு ஆகும். மோசடி செய்து விற்பதற்காக ஆடு, ஒட்டகம் போன்றவற்றின் மடியிலுள்ள பாலைக் கறக்காமல் அதன் மடியைப் பெரிதாகக் காட்டி விற்பனை செய்வதையும், கொடிகளிலுள்ள, திராட்சைப் பழங்களைக் குத்துமதிப்பாக கணித்து அளவிடப்பட்ட உலர்ந்த திராட்சைக்கு அதனை விற்பனை செய்வதையும், கதிர்களிலுள்ள தானியங்களைக் கண்ணால் பார்த்துவிட்டு இவ்வளவு இருக்கும் என்று அனுமானித்து அதனை அளவிடப்பட்ட தானியங்களுக்கு விற்பனை செய்வதையும், ஒரு பேரீத்த மரத்திலுள்ள கனிகளைக் கண்ணால் பார்த்து அனுமானித்து அதனை அளவிடப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழத்திற்கு விற்பனை செய்வதையும் அல்லாஹ் வுடைய தூதர்(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். பார்க்க புகாரி : 2148, 2205

மேலேயுள்ள அல்லாஹ்வுடைய குர்ஆன் வசனங்களும் அல்லாஹ்வுடைய தூதருடைய ஆதாரபூர்வமான ஹதீஃத்களும் சந்தேகத்திற்கிடமானவற்றிலிருந்து நாம் தூர விலகியிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. எனவே சந்தேகங்களின் பிறப்பிடங்களான அனுமானம், அன்னளவு, தோராயமானது, குத்துமதிப்பு, யூகம் போன்ற சந்தேகமான அர்த்தங்களையுடைய கணிப்பு கணிப்பீடு என்பதற்கும், சந்தேகத்திற்கப்பாலான துல்லியமான கணக்கீடு என்பதற்கும், எவ்விதமான சம்பந்தமும் இல்லை என்பதைத் தெளிவாக நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். தயவு செய்து ஹிஜ்ரிக் காலண்டர் சம்பந்தமாக எழுதுபவர்கள் அல்லது பேசுபவர்கள் கணிப்பு, கணிப்பீடு எனும் வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டும் பாவிக்க வேண்டாம் என்று வினயமாகக் கேட்டுக் கொள்கிறோம். நாம் ஹிஜ்ரிக் காலண்டர் வி­யமாகச் சொல்வது எல்லாமே ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று சொல்லும் துல்லியமான கணக்கீட்டு முறையை மாத்திரமே என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுகிறோம்.

Previous post:

Next post: