உருவப்படம் வரையலாமா?  ( பகுதி-1 )

in 2019 மே

உருவப்படம் வரையலாமா?  ( பகுதி-1 )

M.A. ஹனீபா, பொட்டல்புதூர்

அறிவியல், நவீன கண்டுபிடிப்புகள், நவீன கருவிகள் இவற்றுக்கு இஸ்லாம் எதிரானதல்ல. ஒவ்வொரு நவீன கருவியும் அறிமுகமான தொடக்கத்தில் மார்க்கத்தின் மீதான அளவிலா பற்றின் காரணமாக அவற்றை இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்த்துத் தடை செய்து வந்தனர். பின்னர் படிப்படியாக அனுமதித்து நடைமுறைப்படுத்தலாம் என தீர்ப்பு வழங்கினார்கள்.

“குர்ஆன் மொழி பெயர்ப்பைத் தமிழில் தருவது ஹராம்” என்று தீர்ப்பு வழங்கினர் இன்று குர்ஆனுக்குத் தமிழ் மொழி பெயர்ப்புகள் பல வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை மார்க்க அறிஞர்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஒலிபெருக்கி அறிமுகமான காலத்தில் அது “ஷைத்தானின் கருவி ஷைத்தானின் கருவியைப் பயன்படுத்துவது ஹராம்” என்று அறிஞர்கள் தீர்ப்பு வழங்கினார்கள். அதனால் தொழுகைப் பள்ளிகளில் ஒலி பெருக்கி அமைப்பதற்குத் தடையாக இருந்தது. பின்னர் துணிச்சலுடன் சில அறிஞர்களும் பள்ளி நிர்வாகிகளும் முன்வந்து பள்ளிகளில் ஒலிபெருக்கி அமைத்தனர். இன்று ஒலிபெருக்கி வழியாக அறிஞர்கள் மார்க்கப் பிரச்சாரம் செய்கின்றனர்.

தொலைக்காட்சிப் பெட்டி, டிவி அறி முகமான அந்தக் காலத்தில் “டிவியில் உருவங்கள் வருகின்றன. எனவே, ஷைத்தான் பொட்டியான டிவி ஹராமானது” என்று தீர்ப்பு வழங்கினார்கள். இந்தக் காலத்தில் அறிஞர்கள் டிவியில் தோன்றி மார்க்கப் பிரச்சாரம் செய்கின்றனர். இவ்வாறு நவீன கருவிகளுக்கெல்லாம் துவக்கத்தில் எதிர்ப்பும் அவை நடைமுறைக்கு வந்த பின்னர் அவற்றிலுள்ள நன்மைகளைக் கண்டு, படு உற்சாகத்துடன் அறிஞர்கள் அதில் பங்காற்றுவதைப் பார்க்கிறோம்.

அந்த வகையில், “உருவப்படம் வரைவது ஹராம்” என்று முன்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று விளம்பர சுவரொட்டிகளில் தம் உருவப்படம் வரவில்லை என்றால் ஹராம் என்று சொல்லுமளவுக்கு பத்திரிக்கை, நோட்டீஸ், சுவரொட்டி, கம்ப்யூட்டர், டிவிடிக்கள், இணைய தளங்கள் என அறிஞர்களின் உருவங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

கல்விப் பாடங்கள், அறிவியல் கல்வி, சமூக அவலங்கள் என பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்ட பயனுள்ளவைகள் தொலைக்காட்சியில் கண்டு மக்கள் அறிவை வளர்த்துக் கொள்கின்றனர். ஒரு டிவிடியில் லட்சக்கணக்கான உருவப்படங்கள் பதிவு செய்யப்படுகின்றன என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

உருவப்படம் ஹராம் என்று சொல்பவர்களாலும் உருவப்படங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க இயலாது என்று சொல்லுமளவுக்கு இன்று உருவப்படங்கள் கட்டாயத் தேவை என்ற காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எனவே, இஸ்லாம் உருவப்படம் வரை தலைத் தடை செய்துள்ளது என்பதை எவ்வாறு விளங்க வேண்டும் என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

ஓரிறைவனை வணங்குவது இஸ்லாமின் அடிப்படைக் கொள்கை. எல்லா இறைத் தூதர்களும் ஓரிறைக் கொள்கையின் அடிப்படையில் வாழ்க்கை நெறியினைப் போதித்தனர். ஒரு சமூகத்துக்கு அனுப்பப்பட்ட நபியின் மறைவுக்குப் பின், அச்சமுதாயத்தினர் மன ஆசைக்கு உட்பட்டு, தான்தோன்றித் தனமாக வாழ்க்கையை அமைத்து, “இதைத்தான் அல்லாஹ் எங்களுக்கு ஏவினான்” என்றும் வாய் கூசாமல் இறைவனின் மீது இட்டுக்கட்டிப் பொய்யுரைத்தனர்.

அவர்கள் ஏதேனும் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்துவிட்டால், “எங்கள் மூதாதையர்களை இதன் மீதிருக்கவே கண்டோம் அல்லாஹ்வும் இதையே எங்களுக்கு ஏவினான்” என்றும் கூறுகின்றனர். அல்லாஹ் மானக்கேடானவற்றை ஏவமாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (இட்டுக் கட்டிக்) கூறுகின்றீர்களா? என்று (நபியே) நீர் கேட்பீராக!  (அல்குர்ஆன் : 7:28)

மானக்கேடான காரியங்களைச் செய்வதற்கு மட்டுமல்லாமல், இறைவனுக்கு இணை தெய்வங்களை ஏற்படுத்தி அவற்றை வணங்குவதற்கும் முன்னோர்களை ஆதாரம் காட்டி நியாயப்படுத்தினர்.

“எங்கள் மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களை விட்டுவிட்டு அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்க வேண்டும் என்பதற்காகவா நீர் எம்மிடம் வந்துள்ளீர்?” என்று கூறினர். (அல்குர்ஆன்: 7:70) “எமது மூதாதையர்கள் வணங்கியதை நாங்கள் வணங்குவதை விட்டும் எங்களைத் தடுக்கின்றீரா? என்று கூறினர். (குர்ஆன்: 11:62)

இஸ்லாத்தின் மீளெழுச்சியின்போது ஓரிறைக் கொள்கையை எதிர்த்தவர்கள். “எம் மூதாதையர்களை எந்த வழியில் கண்டோமோ அந்த வழியை நாங்களும் பின்பற்றுவோம்” என்று கொள்கையளவில் பல தெய்வக் கொள்கையை நம்பிக் கொண்டிருந்தனர்.

உருவச் சிலைகளை வணங்கி வழிபாடு நடத்தி, “எங்கள் முன்னோர்களை இப்படித் தான் கண்டோம். நாங்களும் அவர்களையேப் பின்பற்றுவோம்” என்றும் கூறி வந்தனர். இக்கருத்தைக் குர்ஆன் நெடுகிலும் பல வசனங்களில் காணலாம்.

உருவச் சிலைகள், உருவப்படங்கள் ஆகியவை இறைவனுக்கு இணை கற்பித்தல் எனும் மாபெரும் பாவத்தைச் செய்திடத் தூண்டுதலாக அமைந்துள்ளன. தந்தை தெய்வமாக வணங்கிய உருவத்தை மகன் வணங்கி வழிபடுவது இயல்பு.

இவ்வாறு தலைமுறை தலைமுறையாக உருவச்சிலைகள், உருவப்படங்கள் தொடர்ந்து வணங்கி வழிபாடு நடத்தப்பட்டுவந்தன. இறைவனுக்கு இணை வைக்கும் கொடிய பாவத்திலிருந்து மக்களை மீட்டெடுக்க உருவச் சிலைகள் செய்வதும், விற்பதும், உருவப்படங்கள் வரைதலும், விற்பதும் குற்றமெனத் தடை விதித்து கடுமையாக எச்சரித்துள்ளது இஸ்லாம்!

கப்ர் – மண்ணறையை வணங்குதல் :

நபி(ஸல்) அவர்களுக்கு மரண வேளை நெருங்கியபோது தங்களின் போர்வை யைத் தங்களின் முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும்போது அதைத் தம் முகத்தை விட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தனர். அந்த நிலையில் அவர்கள் இருக் கும்போது “தங்கள் நபிமார்களின் அடக்கஸ் தலங்களை வணக்க ஸ்தலங்களாக ஆக்கிய யூத-கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்” எனக் கூறி யூத-கிறிஸ்தவர்களின் செய்கை பற்றி எச்சரித் தார்கள். (அறிவிப்பாளர்கள் : ஆயிஷா(ரழி) இப்னு அப்பாஸ்(ரழி), நூல்கள்: புகாரி:435-437, முஸ்லிம்: 826, நஸயீ:2047, அபூதாவூத் : 3227, அஹ்மத்)

ஓர் இறைவனை வணங்கும்படி ஓரிறைக் கொள்கையின் பக்கம் அழைத்த நபிமார்களையும் யூத, கிறிஸ்தவர்கள் விட்டு வைக்கவில்லை. இறைவனிடமிருந்து செய்திகளைப் பெற்று மக்களுக்கு அறிவுரைகளைப் போதிக்க நியமிக்கப்பட்ட நபிமார்கள் மரணித்து விட்டால், அவர்களின் அடக்கத்தலத்தில் ஆலயம் எழுப்பி வணக்க ஸ்தலமாக்கி நபிமார்களின் மண்ணறைகளை வணங்கி வழிபாடு செய்தனர்.

உம்மு ஹபீபா(ரழி)வும் உம்மு ஸலமா (ரழி)வும் தாங்கள் அபிசீனியாவில் கண்ட உருவங்கள் இடம்பெற்ற (கிறிஸ்தவ) கோவிலைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், அவர்களுள் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கஸ்தலத்தின் மேல் வணக்கஸ்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர் என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் : ஆயிஷா(ரழி), நூல்கள்: புகாரி : 427,434,1341,3873, முஸ்லிம் : 822, நஸயீ : 704, அஹ்மத் : 23731)

சமகாலத்தில் மக்களுடன் சேர்ந்து வாழ்ந்த நல்ல மனிதர் மரணமடைந்தால் அவரை அடக்கம் செய்து அவருடைய சமாதி மீது வணக்கஸ்தலத்தை நிறுவி, அதில் அவரு டைய உருவப்படங்களைப் பொறித்துவிடுவார்கள். சமாதி, உருவ வழிபாடுகள் இப்படித் துவங்கி, பின்னாளில் சமாதிகளும் உருவங்களும் தெய்வங்களாக வழிபட்டுக் கொண்டாடப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, கிறிஸ்தவ ஆலயங்களில் இறைத்தூதர் இயேசு அவர்களின் உருவச் சிலைகளும், உருவப்படங்களும் பதிக்கப்பட்டிருக்கும். அத்துடன் இயேசுவின் அன்னை மரியாவின் உருவச் சிலைகளும் உருவப்படங்களும் பதிக்கப்பட்டு, அன்னையும், மகனாரும் வணங்கப்படுவதைப் பார்க்கிறோம்.

இயேசு, மரியா உருவ ஓவியங்கள் கிறிஸ்தவர்களின் வீட்டில் வைத்து கடவுளாக வணங்கி ஆராதிக்கப்படுகின்றன. இச் செயலுக்கு முஸ்லிம்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல “தமிழகத்து தர்ஹாக்களைப் பார்த்து வருவோம்” என நல்லவர்கள் அடக்கம் செய்யப்பட்ட சமாதிகளின் மீது தர்ஹாக்களை எழுப்பி சமாதி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

தர்ஹாக்களின் ஓவியங்கள் வீட்டில் வைத்து தீப ஆராதனையாக ஊதுவத்தி கொளுத்தி வைத்து வணங்கி ஆராதிக்கப்படுகின்றன. உருவ வழிபாடு கூடாது என இஸ்லாம் தடை விதித்திருப்பதால் தர்ஹாக்களில் உருவங்கள் பொறிக்கப்படவில்லை. மாறாக, சமாதியில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் வணங்கப்படுகிறார்கள் (தர்ஹாவின் சமாதி வழிபாடும், இறைவனுக்கு இணை கற்பிக்கும் செயலாகும் என்பது தனி விடயம்)

உருவ வழிபாடுகளை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை! சமாதி வழிபாடு, உருவ வழிபாடு இவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்திட வேண்டும் என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.

“மண்ணறை(கப்ரு)கள் மீது அமராதீர்கள், அவற்றை நோக்கித் தொழாதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூமர்ஸத் கன்னாஸ்(ரழி) நூல்கள்: முஸ்லிம்: 1768, திர்மிதீ: 971, நஸயீ : 760, அபூதாவூத் : 3229, அஹ்மத்)

நாங்கள் ஃபளாலா பின் உபைத்(ரழி) அவர்களுடன் ரோம் நாட்டிலுள்ள ரோடிஸ் தீவில் இருந்தோம். அங்கு எங்கள் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். அப்போது ஃபளாலா பின் உபைத்(ரழி) அவர்கள், எங்கள் நண்பரின் கப்ரைத் தரை மட்டமாக அமைக்கும்படி உத்தரவிட்டார்கள். “அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கப்ரைத் தரைமட்ட மாக்கும்படி உத்தரவிட்டதை நான் கேட்டுள்ளேன்” என்று சொன்னார்கள். (அறிவிப்பாளர் : ஸுமாமா பின் ஷிஃபை(ரஹ்) நூல்கள் : முஸ்லிம்: 1763, நஸயீ: 2030, அபூதாவூத்:3219, அஹ்மத்)

அலீபின் அபீதாலீப்(ரழி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அதே அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர். (தரையை விட) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதீர்!” என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபுல் ஹய்யாஜ் அல் அசதீ(ரஹ்) நூல்கள்: முஸ்லிம் : 1764, திர்மிதீ : 970, நஸயீ: 2031, அபூதாவூத் : 3218, அஹ்மத்)

“இறைவனுக்கு இணைவைக்கும் செயற்பாடுகளை இறைவன் மன்னிக்கவே மாட்டான்” (அல்குர்ஆன் 4:116) என அறுதியிட்டுக் கூறியிருப்பதால், உருவ வழிபாடு என்பது இணைவைக்கும் செயல், அதனால் இஸ்லாம் உருவங்கள் வரைவதை செதுக்குவதைத் தடை செய்திருக்கின்றது.

உயிரினங்களின் உருவப்படங்கள் வரை வதைத் தடை செய்வது தொடர்பான நம் அறிவுக்கெட்டிய சில அறிவிப்புகளைப் பார்த்துவிடலாம்.

முதல் வகை ஹதீஃத்கள் :

  1. நான் இப்னு அப்பாஸ்(ரழி) உடன் இருந்தபோது ஒருவர் வந்து, அப்பாஸின் தந்தையே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்துபவன். நான் உருவங்களை வரைகிறேன்” எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ்(ரழி) நபி(ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். “யாரேனும் ஓர் உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும் வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான். அவர் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன் என்றார். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சு விட்டார். அவரின் முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ்(ரழி), உமக்குக் கேடு உண்டாகட்டும்! நீர் உருவம் வரைந்துதான் தீர வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்ற வற்றை வரைவீராக! என்றார். (அறிவிப்பாளர்: ஸயீது இப்னு அபில் ஹஸன் (ரஹ்) நூல்கள் : புகாரி : 2225, 5963, முஸ்லிம் : 4290,4291, திர்மிதீ : 1751, நஸயீ : 5359, அபூதாவூத் : 5024,
  2. நான் சிறிய மெத்தை ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதில் உருவப்படங்கள் வரையப்பட்டிருந்தன. (வீட்டுக்கு வந்த) இறைத் தூதர்(ஸல்) அவர்கள் அதைக் கண்டதும் வாசற்படியிலேயே நின்றுவிட்டார்கள், உள்ளே வரவில்லை, அவர்களின் முகத்தில் அதிருப்தி(யின் அறிகுறி)யினை நான் அறிந்து கொண்டு, இறைத்தூதர் அவர் களே! நான் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கோருகி றேன். நான் என்ன குற்றம் செய்துவிட்டேன்? என்று கேட்டேன். அதற்கு இறைத் தூதர்(ஸல்) அவர்கள், “இது என்ன மெத்தை?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “தாங்கள் இதில் அமர்ந்து கொள்வதற்காகவும், தலை சாய்த்துக் கொள்வதற்காகவும் இதைத் தங்களுக்காகவே நான் விலைக்கு வாங்கினேன்” என்றேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இந்த உருவப்படங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். மேலும் அவர்களிடம் நீங்கள் படைத்தவற்றுக்கு (நீங்களே) உயிர் கொடுங்கள் என (இறைவன் தரப்பிலிருந்து இடித்து)க் கூறப்படும்” என்று சொல்லிவிட்டு, “உருவப்படங்கள் உள்ள வீட்டில் நிச்சயமாக (இறை வனின் கருணையைக் கொண்டுவரும்) வானவர்கள் நுழைவதில்லை” என்று கூறி னார்கள். (அறிவிப்பாளர் : ஆயிஷா(ரழி), நூல்கள் : புகாரி : 5181, 5937, முஸ்லிம்:4287, அஹ்மத் முவத்தா மாலிக்)
  3. நான் அபூ ஹுரைரா(ரழி) அவர்களு டன் மதீனாவில் ஒருவரது வீட்டினுள் நுழைந்தேன். அதன் மேல் தளத்தில் உருவப்படங்களை வரைபவர் உருவங்களை வரைந்து கொண்டிருந்தார். அப்போது அபூ ஹுரைரா(ரழி), “என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனை விட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்க முடியும்? அவர்கள் ஒரு தானிய விதையையாவது படைத்துக் காட்டட்டும். ஓர் அணுவையாவது படைத்துக் காட்டட்டும் என்று அல்லாஹ் கூறுவதாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்” என்றார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஸுர்ஆ பின் அம்ர் பின் ஜரீர்(ரஹ்) நூல்கள்: புகாரி:5953,7559, முஸ்லிம் : 4292, அஹ்மத்)

முஸ்லிம் ஹதீஃத் 4292ல், “மதீனாவில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த மர்வான் அல்லது ஸயீத் பின் அல்ஆஸுக்கு உரிய புதுமனை ஒன்றுக்கு நானும் அபூஹுரைரா (ரழி) அவர்களும் சென்றோம். அந்த மனையில் ஓவியர் ஒருவர் உருவப் படங்களை வரைந்து கொண்டிருந்தார்” என்று அறிவிக் கப்பட்டுள்ளது.

  1. வட்டி(வாங்கி) உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும், பச்சை குத்தி விடுபவனையும், பச்சை குத்திக் கொள்ப வனையும், உருவப்படங்களை வரைகின்ற வனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். (அறிவிப்பாளர் : அபூஜுஹைஃபா(ரழி) நூல்கள் : புகாரி : 5962, அஹ்மத்:18281)
  2. நாயும் உயிரினங்களின் சிலைகள் அல்லது உருவப்படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூ தல்ஹா (ரழி) நூல்கள் : புகாரி 3225, முஸ்லிம் : 4278, திர்மிதீ : 2804, நஸயீ:4282, அபூதாவூத் : 4153, இப்னுமாஜா : 3649, அஹ்மத்)
  3. “உருவச் சிலைகளோ, உருவப் படங்களோ உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம் : 4293)

மேற்காணும் ஆறு அறிவிப்புகளும் உயி ரினங்களின் உருவ ஓவியம் தீட்டுவதை வன்மையாகக் கண்டித்து எச்சரிக்கின்றன. உருவச் சிலையும், உருவப்படமும், நாயும் உள்ள வீட்டில் நன்மையைக் கொண்டு வரும் வானவர்கள் நுழையமாட்டார்கள் எனக் கூறி வீடுகளில் இவற்றைத் தவிர்க்கும் படியும் அறிவிக்கின்றன.

இவ்வகை அறிவிப்புகளின் கருத்துகளில் ஏறத்தாழ சற்று வார்த்தைகள் வித்தியாசத்தில் இன்னும் அநேக அறிவிப்புகள் உள்ளன. இந்த ஆதாரங்களின் அடிப்படைப் படிப்பினையாக, உருவப்படம் வரைந்தவர் அந்த உருவத்துக்கு உயிர் கொடுக்கும்படி மறுமையில் வேதனை செய்யப்படுவார். அவரால் உயிர் கொடுக்க இயலாது. அதனால் வேதனையும் நீங்காது.

அடக்க ஸ்தலத்தில் ஆலயம் எழுப்பி அங்கு அடக்கம் செய்யப்பட்டவரின் உருவப்படத்தை வரைந்து வைப்பவர்கள். இவர்கள் படைப்பினங்களில் மகா மட்டமானவர்கள்.
“என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனை விட அக்கிரமக்காரன் யார்?” என்று அல்லாஹ் கேட்கிறான். (புகாரி : 7559)

உருவப்படங்கள் வரைபவர்களை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.  (புகாரி : 5962)

உருவப்படங்களும், நாயும் உள்ள வீட்டில் அருளைக் கொண்டுவரும் வானவர்கள் நுழைய மாட்டார்கள்.

ஆகியவற்றை எடுத்துச் சொல்லி உருவப் படம் வரையக்கூடாது, புகைப்படக் கருவியைக் கொண்டு உயிரினங்களின் உருவங்களைப் புகைப்படம் எடுக்கக் கூடாது, ஒளிப்பதிவு செய்யும் கருவியைக் கொண்டு உயிரினங்களின் உருவங்களை ஒளிப்பதிவு செய்யக்கூடாது, வீடுகளில் உருவப்படங்களை வைத்திருக்கக் கூடாது எனத் தீர்ப்பு வழங்குகின்றனர் சில அறிஞர்கள்.

முதல் வகையான மேற்கண்ட இவ்வறிவிப்புகளின் எச்சரிக்கை மட்டும் இருந்திருந்தால் மறு பேச்சுக்கே இடமில்லாமல், உயிரினங்களின் உருவப் படங்கள் வரைவதற்கும், உருவப் படங்களை பயன்படுத்துவதற்கும் இஸ்லாத்தில் தடையுள்ளது என்று சொல்லி முடித்து ஒதுங்கி விடலாம். ஆனாலும், விதிவிலக்காக வேறு சில அறிவிப்புகளும் உள்ளன அவற்றையும் இங்கு ஒப்புநோக்க வேண்டும்.

இரண்டாம் வகை ஹதீஃத்கள் :

  1. எங்களிடம் திரைச் சீலையயான்று இருந்தது. அதில் பறவையின் உருவம் இருந்தது. ஒருவர் வீட்டுக்குள் நுழையும் போது அந்தத் திரையே அவரை வரவேற்கும். என்னிடம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், இதை அப்புறப்படுத்து. நான் வீட்டுக்குள் நுழையும்போதெல்லாம் இவ்வுலக(த்தின் ஆடம்பர)ம்தான் என் நினைவுக்கு வருகிறது என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் : ஆயிஷா(ரழி) நூல்கள்: முஸ்லிம் : 4279, திர்மிதீ : 2468, நஸயீ: 5353, அஹ்மத்)
  2. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தபோது, எனது வீட்டுவாசலில் நான் குஞ்சம் உள்ள திரைச் சீலையயான்றைத் தொங்கவிட்டி ருந்தேன். அதில் இறக்கைகள் கொண்ட குதிரைகளின் உருவங்கள் இருந்தன. உடனே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அதை (அகற்றுமாறு) உத்தரவிட அவ்வாறே அதை நான் அகற்றிவிட்டேன்.   (அறிவிப்பாளர் : ஆயிஷா(ரழி) நூல்: முஸ்லிம் : 4281)
  3. ஆயிஷா(ரழி) அவர்களிடம் உருவச் சித்திரங்கள் பொறித்த திரைச் சீலை ஒன்று இருந்தது. அதனால் வீட்டின் ஒரு பகுதி (யிலிருந்த அலமாரி)யை அவர்கள் மறைந்தி ருந்தார்கள். (அதை நோக்கித் தொழுத) நபி(ஸல்) அவர்கள், இதை அகற்றி விடு. ஏனெனில், இதிலுள்ள உருவப்படங்கள் என் தொழுகையில் என்னிடம் குறுக்கிட்டுக் கொண்டேயிருக்கின்றன என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் : அனஸ்(ரழி) நூல்கள் : புகாரி : 5959, முஸ்லிம்: 4284, அஹ்மத் :12122, முஸ்லிம் நூல் அறவிப்பில், ஆகவே அதை நான் அப்புறப்படுத்தி அதைத் தலையணை (இருக்கை)களாக ஆக்கிவிட்டேன்” என்று இடம் பெற்றுள்ளது)
  4. நான் என்னுடைய அலமாரி(நிலைப் பேழை) ஒன்றின் மீது (மிருகங்களின்) உருவங்கள் (வரையப்பட்டு) இருந்த ஒரு திரைச் சீலையைத் தொங்க விட்டிருந்தேன். அதை நபி(ஸல்) அவர்கள் கிழித்துவிட்டார்கள் எனவே, அதிலிருந்து நான் இரண்டு மெத்தை இருக்கைகளைச் செய்து கொண்டேன். அவை வீட்டில் இருந்தன அவற்றின் மீது நபி(ஸல்) அவர்கள் அமர்வார்கள்.  (அறிவிப்பாளர் : ஆயிஷா(ரழி) நூல்: புகாரி:2479)  (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: