இவர்கள் உலமாக்களா? உளறும் மாக்களா?

in 1990 அக்டோபர்

இவர்கள் உலமாக்களா? உளறும் மாக்களா?

தெள்ளத் தெளிவாக தெரியும் உண்மையை மறைப்பவனைப் பார்த்து நாம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறான் என்போம். அதாவது உண்மையை மறைக்க முயல்பவனுக்கு இக்கூறு சரியாகலாம். ஆனால் எதனையும் மறைக்காமல் அப்படியே எடுத்துரைத்து விட்டு அதற்கு விளக்கமளிக்கையில் மாற்றிச் சொல்பவர்களை என்னென்று விளிப்பது. இங்கு நமக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு இடையன் தன்னிடமுள்ள ஒரு ஆட்டை விற்க சந்தைக்கு சென்று கொண்டிருந்தான். அவன் ஒரு அறிவிலி. எனவே அவனை ஏமாற்றி அவன் எடுத்துச் செல்லும் ஆட்டைக் கைப்பற்ற 3 திருடர்கள் திட்டமிட்டனர். அவர்களது திட்டப்படி முதல் திருடன் வழிப்போக்கனைப் போல் இடையனை வழியில் சந்தித்தான், என்ன? கழுதையை இழுத்துக் கொண்டு எங்கு செல்கிறாய்? என வினவினான். இடையன் தான் இழுத்து வரும் ஆட்டைப் பார்த்தான். வழிப் போக்கனைப் பார்த்தான். தனக்குள் சிரித்துக் கொண்டே என்ன கழுதை என்கிறாயே! என்றான். வழிப்போக்கன் என்னப்பா நீ கழுதையை ஆடு என்கிறாய்! உனக்கு கண்ணில் கோளாரா? எனக்கு கண்ணில் கோளாரா? என வேறு ஒருவரிடம் கேட்டுத் தெரிந்து கொள் எனச் சொல்லி சிரித்து விட்டுச் சென்றான்.

இடையன், வழிப்போக்கனின் சொல்லை சட்டை செய்யாமல் நடந்தான். இரண்டாவது திருடன் அடுத்த வழிப்போக்கன் போல் சிறிது தூரத்திற்குப் பின் வந்தான். இடையனை வழியில் சந்திப்பது போல் சந்தித்தான். பின் எங்கு செல்கிறாய்? இந்த கழுதையை எங்கு இழுத்துச் செல்கிறாய்? என்றான். இடையனுக்கு சந்தேகம் துளிர்விட ஆரம்பித்தது. தான் இழுத்துச் செல்வது ஆடா? கழுதையா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. இருப்பினும் முதல் வழிப்போக்கனிடம் கூறியது போலவே கூறினான். இரண்டாவது வழிபோக்கனும் முதல் வழிப்போக்கனைப் போல் பதிலளித்துவிட்டு ஏளன சிரிப்பு சிரித்துவிட்டுச் சென்றான்.

இடையன், இரு வழிப்போக்கர்கள், தான் ஆட்டை இழுத்துச் செல்லவில்லை, கழுதையை இழுத்துச் செல்வதாகக் கூறியதும், தன்னைக் கண்டு ஏளனச் சிரிப்பு சிரித்ததும் அவனுக்கு மனவருத்தத்தைக் கொடுத்தது. இருப்பினும் தனது ஆட்டை இழுத்துக் கொண்டே சென்றான். மூன்றாவது திருடன் அடுத்த வழிப்போக்கனைப் போல் சிறிது தூரம் நடந்ததும் தென்பட்டான். அவனும் இடையனை நோக்கி முந்திய இருவர் கூறியது போலவே வினவினான். இடையனின் சந்தேகம் உறுதியாயிற்று. தான் ஆட்டை இழுத்துச் செல்லவில்லை. கழுதையைத்தான் ஆடாக நினைத்து இழுத்துச் செல்கிறோம் என நம்பலானான். எனவே ச்சீ போ கழுதை என தான் இதுவரை இழுத்து வந்த ஆட்டை துரத்தி விட்டான். இதனை எதிர்பார்த்திருந்த மூன்று திருடர்களும் இடையன் கண் மறைந்ததும் ஆட்டை அபகரித்து சென்றனர்.

இந்த கதையை இரத்தின சுருக்கமாக “ஆட்டை கழுதையாக்கிய அறிவாளி திருடர்கள்” என்பர். அதாவது ஆட்டை அப்படியே கண்முன் வைத்து கழுதையாக்கினார்கள் அந்த அறிவாளி திருடர்கள். இடையன் அறிவிலியாக இருந்ததால் அவர்களின் கூற்றை உண்மையென நம்பி ஏமாந்தான். நாட்டு நடப்பில் ஆட்டைக் கழுதையாக்கிய அதிராம்பட்டினத்தினர் என்பர். ஓரிரு மாதங்களுக்கு முன் ஞாயிற்றுக்கிழமை டில்லி ஒளிபரப்பிய TV நாடகங்களில் இக்கதை பஞ்சதந்திர கதையாக வெளியானது. இதே இடையனின் நிலையில் தான் இன்றைய தமிழக முஸ்லிம் சகோதர, சகோதரிகளில் இக்கதை பஞ்சதந்திர கதையாக வெளியானது. இதே இடையனின் நிலையில் தான் இன்றைய தமிழக முஸ்லிம் சகோதர, சகோதரிகள் இருப்பதாக காயல்பட்டணம் மஹ்ழரா மவ்லவிகள் நினைக்கிறார்கள் போலும். ஆனால் இதில் ஒரு சிறிய மாற்றம்.

நாம் மேலே குறிப்பிட்டக் கதையில் ஒதே ஒரு இடையனை ஏமாற்ற மூன்று நபர்கள் முயன்றுள்ளனர். ஆனால் நாம் எடுத்து வைக்கவிருக்கும் ஆதாரத்தில் தமிழகத்திலுள்ள பல லட்ச முஸ்லிம்களை 22 மவ்லவிகள் ஏமாற்ற முயன்றுள்ளனர். அதுவும் எப்படி? குர்ஆன், ஹதீஸ்படி நடக்கக் கூடாது என குர்ஆன், ஹதீஸே கூறுவது போல ஆயத்துக்களையும், நபி மொழிகளையும் எடுத்து வைத்துள்ளனர்.

உள்ளங்கைப் புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. நடந்துள்ள விஷயத்தையும், அவர்கள் கைப்பட எழுதியுள்ள பதிலையும் அப்படியே தருகிறோம். நீங்களே! இவர்களது ஏமாற்று விந்தையை கணக்கிடுங்கள். இவர்களை அடையாளம் கண்டுக் கொள்ளுங்கள்.

இவர்களது கடிதத்தில் அரபி ஆதாரங்களுக்கு எண்ணிட்டிருப்பதும், அடிக்கோடிட்டிருப்பதும் நாம். எண் 1ல் குர்ஆன் வசனம் 11:113ஐக் குறிப்பிட்டுள்ளார்கள். இதுவரை நாம் குர்ஆனுக்கு வேறு மொழியில் மொழி பெயர்ப்பு செய்பவர்கள்தான் தன்னிலை விளக்கமாக ஒருசில சொற்களை அடைப்புக் குறிக்குள் தருவதைக் கண்டிருக்கிறோம். ஆனால் இந்த மவ்லவிகளோ, அரபி ஆயத்திலேயே, அல்லாஹ்வின் அழகிய சொற்களிலேயே அடைப்புக்குறிக்குள் தங்களது விஷமக் கருத்தை புகுத்தி எழுதி அதனை மொழிபெயர்த்தும் உள்ளனர். உங்களிடமுள்ள குர்ஆனின் மொழி பெயர்ப்புக்களுடன் இவர்களது விஷய விளையாட்டை ஒப்பிட்டுப் பாருங்கள். அல்லாஹ் தனது அடியார்களுக்கு விளக்குவதைவிட தாங்கள் அருமையாக விளக்க முடியுமென செய்துள்ளார்களோ? என்னவோ?

எண்கள் 2,3ல் “திருடன்” “திருடன்” என திருடியவனே கூப்பாடிடுவது போல அமைந்துள்ளதைக் காணலாம். ஆதாரமற்ற, பொய்யான புளுகுகளையும், இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையும் கூறித் திரிவது யார் என்பதை வாசகர்களே விளங்கிக் கொள்வோர்களாக! அதற்கு சரியான ஆதாரம், அவர்களது ஆதாரம் எண். 4.

“நான்கு மத்ஹபுகளை தவிர்த்து ஏனைய எவ்வழிகளையும் பின்பற்றுதல் கூடாது. அவ்வழிகள் ஸஹாபிகளுடைய சொல்லுக்கும், ஸஹீஹான ஹதீஸிக்கும் ஆயத்துக்கும் ஒத்திருப்பினும் சரியே! ஏனெனில் நான்கு மத்ஹபுகளை விட்டும் அப்பாற்பட்டவர்கள் வழி கெட்டவர்களும், வழி கெடுப்பவர்களும் ஆவார்கள்.

எப்படியிருக்கிறது 22 மஹழரி உலமாக்கள் கூறியுள்ள ஃபத்வா! இது இமாம்களின் கூற்றாம். ஆதாரம்: அஸ்ஸாவி, இதனைத் தொடர்ந்து ஒரு குர்ஆன் வசனம் 18:23. இவ்வசனத்தின் பொருளை நீங்களே உங்களது மொழி பெயர்ப்பில் காணுங்கள். இவர்களது உளறளுக்கும், இவ்விறை வசனத்திற்கும் ஏதாவது தொடர்புண்டா? என கேள்வி கேட்டு விடாதீர்கள். இவர்கள் அரபி அறிந்த பண்டிதர்கள். அதற்கு உள் அர்த்தம். வெளி அர்த்தம் என பல அர்த்தங்கள் இருப்பதாகக் கூறி தங்களது பாண்டியத்தைக் காட்டுவார்கள். அரபியில் உள்ள குர்ஆன் இவர்களைப் போன்ற அரபி அறிஞர்களுக்கு இறங்கியது. அவர்களால் மட்டுமே விளங்கிக் கொள்ள முடியும். எல்லோராலும் விளங்க முடியாது எனக் கூற ஆரம்பித்து விடுவார்கள். ஏனெனில் இவர்கள் உல(ளறும்) மாக்களல்லவா? தாங்கள் அரபி படித்த பாண்டித்யர்கள் என்பதை நிரூபிக்க இந்த 22 மவ்லவிகளும் அரபியிலேயே கையெழுத்தும் இட்டுள்ளார்கள். கேள்விக் கேட்டதாக 17 நபர்களின் பெயர்களை தங்களது கைகளால் எழுதியுள்ளனர். உண்மையில் அந்நபர்கள் கேட்டார்களா, என்பது வேறு விஷயம்.

இவர்கள் எழுதியுள்ள உளறல்களை அப்படியே தருகிறோம் காண்பீர்களாக. இம்மார்க்க திருடர்களை, பித்தலாட்டக்காரர்களை விளங்கிக் கொள்வீர்களாக! இதே போலத்தான் புரசை நிஜாமுத்தீன் எழுதிய “தராவீஹ் 20 ரகாஅத்துகளா?” என்ற நூலில் 147 உலமாக்கள் உளறியிருந்ததை நாம் ஜனவரி 1988 இதழில் குர்ஆன் ஆதாரங்களில் போஸ்ட்மார்டம் செய்து குறிப்பிட்டிருந்ததும் கவனிக்கத் தக்கது.

இவர்களது இப்படிப்பட்ட உளறல்களுக்குக் காரணமென்ன என்பதை இவ்விதழின் சிறப்பு ஆக்கமான “இன்றைய அரபி மதரஸாக்கள் – ஓர் ஆய்வு” (பக்கம் 93) பார்க்க.

அவர்கள் இந்த குர்ஆனை(கவனமாக) சிந்திக்க வேண்டாமா? (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 5:82)

Previous post:

Next post: