தான தர்மங்களைக் குறித்த சில நினைவூட்டல்!

in 2021 ஏப்ரல்

தானதர்மங்களைக் குறித்த சில நினைவூட்டல்!

M.A. ஹனிபா, பொட்டல்புதூர்.

தர்மங்கள் செய்வதை இஸ்லாம் அதிகமாக ஆர்வமூட்டியுள்ளது. அவற்றில் சில…

‘மேலும், அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள். (செலவு செய்யாமல்) அழிவின் பக்கம் உங்கள் கைகளைக் கொண்டு செல்லாதீர்கள். நன்மையும் செய்யுங்கள், நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கிறான்.” (2:195)

“நம்பிக்கையாளர்களில், தர்மங்களைத் தாராளத் தன்மையுடன் வழங்குவோரையும் தங்கள் உழைப்பைத் தவிர வேறு எதனையும்(தர்மம் செய்ய) பெற்றுக் கொள்ளாதோரையும் குறை கூறி, ஏளனம் செய்வோரை அல்லாஹ்வும் ஏளனம் செய்கின்றான். இன்னும் அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.” (அல்குர்ஆன் : 9:79)

அபூ மஸ்வூத் அல்அன்சாரி(ரழி) அறிவித்தார் :

தானதர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டபோது நாங்கள் கூலி வேலை செய்யலானோம். அபூ அகீல் ஹப்ஹாப்(ரழி) அவர்கள் (கூலி வேலை செய்து) ஒரு ஸாவு (பேரீச்சம் பழம்) கொண்டு வந்தார். மற்றொரு மனிதர் அதைவைிட அதிகமாகக் கொண்டு வந்தார். இதைக் கண்ட நயவஞ்சகர்கள், (அரை ஸாவு கொண்டு வந்தார். மற்றொரு மனிதர் அதைவிட அதிகமாகக் கொண்டு வந்தார். இதைக்கண்ட நயவஞ்சகர்கள், (அரை ஸாவு கொண்டு வந்த) இவருடைய தர்மமெல்லாம் அல்லாஹ்வுக்கும் தேவையில்லை. (அதிகமாகக் கொண்டு வந்த) இந்த மற்றொரு மனிதர் பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காகவே இதைக் கொண்டு வந்திருக்கிறார் என்று (குறை) கூறினார்கள்.

அப்போதுதான் “(நயவஞ்சகர்களான) அவர்கள் எத்தகையவர்களென்றால், இறை நம்பிக்கையாளர்களில் மனமுவந்து வாரி வழங்குவோரின் தானதர்மங்களைப் பற்றியும் குறை பேசுகிறார்கள். (இறை வழியில் செலவழிப்பதற்காக) சிரமப்பட்டு சம்பாதித்ததைத் தவிர வேறெதுவுமட் இல்லாதவர்களைப் பற்றியும் அவர்கள் நகைக்கிறார்கள். அல்லாஹ் அவர்களை நகைக்கிறான். மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு” எனும் (திருக்குர்ஆனட் 9:79வது) இறைவசனம் அருளப்பெற்றது.

“பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும்ட நரக நெருப்பிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள இயன்றவராக எவர் இருக்கிறாரோ அவர் அவ்வாறே செய்து கொள்ளட்டும்” (நபிவழி: முஸ்லிம்: 1845,1846)

அபூ மஸ்வூத் அல் அன்ஸாரி(ரழி) அறிவித்தார் :

“நபி(ஸல்) அவர்கள் தர்மம் செய்யும்படி கட்டளையிட்டால், எங்களில் ஒருவர் கடைவீதிக்குச் சென்று சுமை தூக்கி ஒரு முத்து கூலியைப் பெற்று அதை தர்மம் செய்வார்! ஆனால், இன்று அவர்களில் சிலருக்கு ஒரு லட்சம் தங்கக் காசுகள் உள்ளன”

“அபூ மஸ்வூத்(ரழி) தம்மையே! இவ்வாறு (அவர்களில் சிலருக்கு என்று) குறிப்பிட்டதாக நாம் கருதுகிறோம்! என்று அறிவிப்பாளர் ஷகீக்(ரஹ்) கூறினார். (புகாரி: 1416, 2273, நஸாயீ 2482, நஸாயீ நூல் அறிவிப்பு ஒரு லட்சம் திர்ஹம்கள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது)

நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்த நபித்தோழர்களின் நிலை மேற்கண்டவாறு இருந்தது.

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “ஒரு திர்ஹம், ஒரு லட்சம் திர்ஹம்களை வென்றுவிட்டது” என்று கூறினார்கள். மக்கள் (வியப்புடன்) “அது எப்படி?” என்று (விளக்கம்) கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “ஒருவரிடம் இரண்டு திர்ஹம்கள் (மட்டுமே) இருந்தன.

அவர், அவற்றில் (பாதியாகிய) ஒரு திர்ஹத்தை தர்மம் செய்து விட்டார். (மற்ற) ஒருவர் (குவிந்து கிடக்கும்) தனது பொருள்களின் ஒரு பக்கம் சென்று, அவற்றில் (ஒரு சிறு பகுதியாகிய) ஒரு லட்சம் திர்ஹம்களை எடுத்து தர்மம் செய்தார். (இவ்விருவரில் தம் பொருளில் பாதியாகிய ஒரு திர்ஹமைத் தர்மம் செய்தவரே. அதிக தர்மம் செய்து அதிக நற்பலனை அடைந்தவர் ஆவார்!” என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரழி), நூல்கள்: நஸாயீ: 2480,2481, அஹ்மத், : 8573)

“நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களின் பாவமன்னிப்புக் கேட்பதை ஏற்றுக் கொள்வான் என்பதையும், அவர்களது தர்மங்களை அங்கீகரிப்பான் என்பதையும் மேலும், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையோனுமாவான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?” (அல்குர்ஆன்: 9:104)

“அல்லாஹ் வட்டியை அழித்து தர்மத்தை வளர்க்கின்றான்” (குர்ஆன் : 2:276)

“தொழுகையை நிலைநாட்டுங்கள், ஜகாத்தையும், கொடுத்து வாருங்கள்”

  1. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல்.
  2. தொழுகையை நிலைநிறுத்துதல்,
  3. ஜகாத் வழங்குதல்,
  4. ரமழானில் நோன்பு நோற்றல்,
  5. ஹஜ் செய்தல்.

ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரழி), அறிவித்தார். (நூல்கள் : புகாரி 8, முஸ்லிம்: 18-20, திர்மிதீ: 2534, நஸாயீ 4915, அஹ்மத் 4567)

இஸ்லாமிய தொழுகைக்கு அடுத்தபடியாக மிகப்பெரும் நடமை “ஜகாத்” ஆகும். இறை வணக்கத்தின் தொடரில், “தொழுகையை நிலைநாட்டுங்கள்” ஜகாத்தையும் கொடுத்துவாருங்கள். என தானதர்ம சிந்தனையைத் தூண்டும் அநேக வசனங்கள் இறைமறையில் திரும்பத் திரும்ப இடம்பெற்றுள்ளன.

“ஜகாத்” என்றால் கத்தம், தூய்மை என்று பொருள். தமது செல்வத்திலிருந்து குறிப்பிட்ட ஒரு பகுதியைத் தேவை உள்ளவர்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் கொடுப்பது ஜகாத். இதனால் அப்பொருளும் மனிதரின் மனமும் தூய்மையாகிவிடுகின்றன.

இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட செல்வத்திலிருந்து மக்களின் உரிமையைக் கொடுக்கவில்லை என்றால் அச்செல்வமும் அவர் மனமும் தூய்மையற்றவை. அவன் மனதில் நன்றி கெட்ட தன்மை நிறைந்து விடும். இறைவனட் அவனுக்கு, அவனுடைய வாழ்வாதார அடிப்படைத் தேவைகளுக்கு மேல் அதிகமான செல்வத்தை வழங்கி அருள் புரிந்திருக்கிறான். அந்த உதவிக்கு நன்றி செலுத்துவதற்கும் மனம் வேதனைப்படும் அளவுக்கு அவன் மனம் குறுகிய, தன்னலம் கொண்டதாக, பொருளாசையுடையதாக திசை மாறிச் சென்று விடுகிறது.

இறைவன் ஜகாத்தைக் கடமையாக்கி ஒவ்வொரு மனிதனையும் சோதிக்கிறான். ஒருவன் தன் தேவைக்கு மிஞ்சிய பொருளிலிருந்து இறைவனுக்குரியதை எடுத்து மகிழ்ச்சியோடு மக்களுக்கு உதவழி செய்தால் அவனே இறைவனின் கட்டளைக்குப் பணியும் உண்மை அடியானாவான். ஈமான், இறை நம்பிக்கை உள்ளவர்களின் கூட்டத்தில்  சேர்த்துக்  கணிக்கப்படுவதற்கு  அவனே  தகுதியுள்ளவன்.

“எண்ணங்களைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன”

படைத்த இறைவன் மனிதனின் உள்ளத்தையும் உள்ளத்தில் ஓடும் எண்ணங்களையும் அறியக்கூடியவன். மனிதன் நன்றி மறந்தவனாகவும், அவசரக்காரனாகவும், பேராசைக்காரனாகவும் இருக்கிறான் என்றே இறைமறை வசனங்கள் சான்று அளிக்கின்றன.

மனிதன் தமது செல்வங்களின் மீது பேராசை கொள்ளும்போது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக நடந்து கொள்கிறான். அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல், தம் கரங்களாலேயே அழிவைத் தேடிக்கொள்கிறான்.

மேலும், அல்லாஹ்வின்ட பாதையில் செலவு செய்யுங்கள். (செலவு செய்யாமல்) அழிவின் பக்கம் உங்கள் கைகளைக் கொண்டு செல்லாதீர்கள். நன்மையும் செய்யுங்கள், நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கிறான்”.  (2:195)

இறையச்சத்தின் மீது இறைவணக்கம் அமையவேண்டும். ஜகாத் என்னும் கடமையான தர்மம் இறையச்சத்துடன் தமது செல்வங்களை முறையாகக் கணக்கிட்டு வழங்கவேண்டும்.

மாறாக, ஜகாத் வழங்கத் தகுதிப் பெற்ற செல்வந்தர்கள், தமது செல்வங்களை மறைத்து அல்லது குறைவாக மதிப்பீடு செய்து நிறைவான ஜகாத்தை வழங்காமல், தாம் விரும்பிக் கொடுப்பதே ஜகாத் ஆகும் என்று இன்னின்ன பொருளுக்கு ஜகாத் கடமை. இன்னின பொருளுக்கு ஜகாத் கடமை இல்லை என சுய எண்ணத்துடன் ஜகாத்தின் அளவை தீர்மானித்து வழங்கினால் அது இம்மையில் இறைவனின் அருளுக்குத் தகுதியற்றதாகிவிடும். மறுமையிலும் கைச்சேதத்தை ஏற்படுத்திவிடும்.

(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி அதைக்கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். (இன்னும்) “இதுதான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது. ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்) அல்குர்ஆன் : 9:35

Previous post:

Next post: