முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் தடைக்கல்லாக இருப்பவை எவை? எவை?

in 2021 ஏப்ரல்

முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் தடைக்கல்லாக இருப்பவை எவை? எவை?

H.S. ஜாஹிர் ஹுஸைன், சென்னை.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஈமானிய உணர்வின் மூலம் அவரவர்கள் தங்களால் முடிந்த அளவு என்று சொல்வதை விட அளவுக்கு அதிகமாகவே தங்களின் பங்களிப்பால் இஸ்லாத்திற்காக பெரும் தியாகங்கள் செய்திருக்கிறார்கள். உத்தம சஹாபாக்கள், அந்த தியாகங்கள் என்பது உயிராலும், உடலாலும், பொருளாலும், ஹிஜரத் செய்வதன் மூலமும், சொத்து சுகங்களை இழந்ததின் மூலமும், வேர்வை சிந்தி, இரத்தம் சிந்தி, பல தற்காப்புப் போர்கள் செய்து உடல் அங்க அவயங்கள் சிதைத்து, முஃமின்களுக்கு இவ்வுலகம் ஒரு சிறைச்சாலை என்ற நபிமொழியின் கொள்கையை பின்பற்றி எளிமையாகவும், சிக்கனமாகவும், பட்டினி கிடந்து இன்னும் இவை போன்ற தியாகங்கள் செய்து இஸ்லாத்தை வளர்த்து, வளர்ச்சியடைய வைத்து அல்லாஹ்வுக்கும் அவனின் தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்து ஒரு உலக சாம்ராஜ்யமாக இஸ்லாமிய ஆட்சியும் அமைத்து உருவாக்கி விட்டு சென்றுள்ளார்கள் நபியும், நபியின் காலத்து முஸ்லிம்களும்,

நபி அதற்கு பிற்பாடு குலபாயே ராஷிதீன்கள் காலம் வரை முஸ்லிம் சாம்ராஜ்யம் ஒன்றாகத்தான் இருந்தது. பிற்பாடு ஒரு தலைமையை உருவாக்குவதற்காக இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை தனித்தனி இஸ்லாமிய நாடுகளாக உருவாக்கி கொண்டார்கள் முஸ்லிம்கள், இதனுடைய விளைவு என்னவானது? ஒரு தலைமையின் கீழ் கட்டுப்பாட்டில் இருந்த முஸ்லிம் சமுதாயம் பல தலைமையின் கீழ் கட்டுப்பாட்டில் அமைந்துவிட்டது. இதன்மூலம் தனி நபர் வழிபாடு உருவாக்கப்பட்டு அந்த வழிபாட்டின் மூலம் இஸ்லாமிய கொள்கைகள் தூர விலகி செல்ல பிரிவுகளும் பிளவுகளும் ஷிர்க், பித்அத், அனாச்சாரங்கள், மாற்றுமத கலாச்சாரம் இன்னும்  இதுபோன்ற வழிகேடுகள் புதிது புதிதாக செயல்படுத்தப்பட்டன.

இதனால் தூய இஸ்லாம் களங்கப்படுத்தப்பட்டு கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற அடிப்படையில் இஸ்லாமிய நாடுகளில் நாட்டின் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டன். இதனால் யெயரளவு முஸ்லிம் நாடாக ஆக்கப்பட்டன. இதன்மூலம் தூய இஸ்லாத்தை கடைபிடிக்கும் முஃமினான முஸ்லிம்களுக்கு இவ்வுலகம் சிறைச்சாலையாக ஆக்கப்பட்டது. இது ஒரு பக்கம் தனியாக இருக்கையில் மறுபக்கம் இஸ்லாம் அல்லாத மாற்று மதத்தவர்கள் நாட்டில் வாழக்கூடிய அதிலும் குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் முஸ்லிம்களின் நடைமுயையும், இஸ்லாமிய கொள்கைகளும் எந்நிலையில் சென்றுக்கொண்டிருக்கிறது என்பதை நாம் சொல்ல தேவையில்லை என்ற அளவிற்கு எல்லோரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நிலைமை இவ்வாறு இருக்கையில் இனி அடுத்தடுத்த தலைமுறைகளைப் பற்றி நினைத்து பார்ப்பதற்கு நாம் இஸ்லாத்தில் தான் இருக்கிறோமோ என்று ஐயப்பாடு நிலவுகிறது.

ஆனால் தூய இஸ்லாம் என்பது ஒரு பக்கம் தனியாகத்தான் இருக்கிறது. அதை ஒருசில நபர்கள்தான் தங்களுடைய வாழ்க்கையில் கடைபிடித்து வருகிறார்கள். மேலும் பெரும்பாலானவர்கள் நடைமுறை இஸ்லாத்தைத்தான் பின்பற்றி வருகிறார்கள். பின்பற்றி வருவதோடு தங்களுடைய அடுத்த தலைமுறைக்கும் வளர்ந்துவிட்டு செயல்கிறார்கள். அதனால் முஸ்லிம் சமுதாயத்திற்குத்தான் நஷ்டமாக இருக்கிறது. அந்த நஷ்டம் என்பது குண்டு கலாச்சாரம், கலவரம், குழப்பங்கள், ஆபத்துகள், பிரச்சனைகள், போர்கள், பதவி சண்டைகள், பிரிவினைவாதம், பயங்கரவாரம், தீவிரவாதம், உயிரிழப்புகள், அச்சுறுத்தல்கள, சொத்து சுகங்ள் இழப்புகள், மானம் மரியாதை உரிமை இழப்புகள், அகதி வாழக்கை போன்றவை எல்லாம் ஏற்படுகிறது.

ஆகையால் நமக்குள் ஒற்றுமையின்றி வளர்ச்சியின்றி ஒரு கீழ்த்தரமான நிலையில் முஸ்லிம் சமுதாயம் சென்று கொண்டிருக்கிறது. இதை தடுத்து நிறுத்தி மீண்டும் தூய இஸ்லாம் தலைத்தோங்கி நபி(ஸல்) குலபாயே ராஷிதீன்கள் காலத்தில் இருந்த ஒன்றுபட்ட ஒரு தலைமையின் கீழ் ஆளுகைக்கு உட்பட்டு இஸ்லாமிய சாம்ராஜ்யம் உருவாவதற்கு பாடுபட்டு சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தி வளர்ச்சியடையச் செய்ய வேண்டும். அதற்கு தற்போது தடைக்கல்லாக இருக்கக்கூடிய அம்சங்களை அப்புறப்படுத்த ஒவ்வொரு முஸ்லிம்களும் கடமைப்பட்டுள்ளார்கள். அந்த அம்சங்களில் முக்கியமானவற்றை நாம் கீழே பட்டியலிடுகிறோம்.

மத்ஹபுகள் :

மத்ஹபுகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை ஷாஃபி, மாலிக்கி, ஹனபி, ஹன்பலி ஆகும். நான்கு மத்ஹபுகளுக்கும் நான்கு ஸ்தாபனர்கள் இருக்கிறார்கள்.

இந்த நான்கு மத்ஹபுகள்தான் சமுதாயத்திலேயும், மக்களிடத்திலேயும் பிரபல்யம் அடைந்துள்ளன. இந்த 4 மத்ஹபுகளை தவிர இன்னும் நிறைய மத்ஹபுகள் இருக்கின்றன. அவை எல்லாம் பிரபல்யம் அடையவில்லை. இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் எத்தனை மத்ஹபுகள் இருந்தாலும் அந்தந்த மத்ஹபுகளின் ஸ்தாபனர்கள் அவர்கள் எல்லோரும் இஸ்லாமிய கொள்கைகளுக்கு விரிவுரை கொடுத்தார்களே தவிர, அவர்கள் எல்லாம் முஸ்லிம் சமுதாயத்தை பிரித்து கூறுபோடவில்லை என்று அவர்கள் கைப்பட எழுதிய நூல்கள் மூலம் நாம் தெரிந்துக் கொள்கிறோம். அவர்கள் அனைவரது ஒருமித்த கருத்து என்னவெனில் குர்ஆன், ஹதீஃதுக்கு மாற்றமாக எங்களின் கருத்துக்கள் இருந்தால் அவைகளை எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று அறிவிப்பும் செய்து விட்டார்கள்.

பிற்காலத்தில் மத்ஹபுகளை பின்பற்றுகிறோம் என்று சொல்லக்கூடியவர்கள் முஸ்லிம் சமுதாயத்தை கூறுபோட்டு 4 பிரிவுகளாக பிரித்துக் கொண்டார்கள். இதனுடைய விளைவு என்னவானது? மத்ஹபுகளின் உண்மையானக் கருத்துக்களையும் தூய இஸ்லாமிய கொள்கைகளையும் மக்களிடத்தில் மறைத்துவிட்டார்கள்.

“என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்” என்று (நம்) தூதர் கூறுவார். அல்குர்ஆன்”25:30

இன்றைய சமுதாயத்தில் திருகுர்ஆனை புறக்கணித்துவிட்டு இட்டுக்கட்டப்பட்ட பொய்யான மத்ஹபு கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் சமுதாயம் ஒற்றுமையின்றி சமுதாயத்தின் வளர்ச்சியை தடுத்து அறியாமை காலத்திற்கு சென்றுவிட்டார்கள். இது மத்ஹபுவாதிகளின் பங்காகும்.

தரீக்காக்கள் :

இதுவும் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளத. அதாவது காதிரிய்யா, சாதுலிய்யா, நக்ஷபந்தியா, ரிஷவந்தியா என்ற பிரிவுகளாக இயங்குகிறார்கள். இவர்கள் இஸ்லாத்தில் இல்லாத புதிய புதிய திக்ருகளை நவீன காலத்திற்கு தகுந்தாற்போல் அமைத்துக் கொண்டார்கள்.

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரை கொண்டு, திக்ர் (தியானம்) செய்யுங்கள். இன்னும், காலையிலும், மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள். (அல்குர்ஆன் : 33:41,42)

பெரிய பெரிய நாதாக்கள் சொன்ன திக்ருகள் என்று சொல்லிக்கொண்டு நபி(ஸல்) அவர்கள் சொல்லித்தராக திக்ருகளை செய்கிறார்கள். வாழ்க்கையில் இவர்கள் திக்ரை தவிர வேறு அம்சங்களை எல்லாம் பார்க்கவும் மாட்டார்கள் செய்யவும் மாட்டார்கள். வாழ்நாள் முழுவதும் திக்ரிலேயே காலத்தை கழிப்பார்கள். சமுதாயத்தில் என்ன நடக்கிறது? நாட்டில் என்ன நடக்கிறது? என்பதையெல்லாம் பற்றி அவர்கள் கவலைப்படுவது இல்லை. மேலும் கண்டுகொள்ளவும் மாட்டார்கள். இவர்கள் நிறைய தர்ஹாக்கள் கட்டி வைத்துள்ளார்கள். திக்ருகளில் கலந்துக் கொள்ளாதவர்களை தர்ஹா வழிபாட்டின் மூலம் மக்களை அழைத்து தங்களின் வழிகெட்ட பஜனை சபைகளுக்கு வலு சேர்த்துக் கொள்கிறார்கள். இவர்களுமு் முஸ்லிம்களைப் பிரிந்து அறிவற்ற மனித சமுதாயமாகவே அமைத்துக் கொண்டார்கள். இவர்களின் திக்ருகள் அதிகமாக அந்தரங்க இருட்டறை சபைகளில்தான் நடக்கும். ஆகையால் பிரகாசிக்க வேண்டிய முஸ்லிம் சமுதாயத்தை இருட்டில் தள்ளி விடிவுகாலம் இல்லாமல் ஆக்கிவிட்டால்கள். இதனாலும் முஸ்லிம் சமுதாயம் பிரிந்துவிட்டார்கள். இதனாலும் முஸ்லிம் சமுதாயம் பிரிந்து ஒற்றுமையின்றி வளர்ச்சி பெறாமல் சிதைந்து விட்டார்கள்.

இயக்கங்கள் :

இதில் மன்றம், சங்கம், லீக், கழகம். பேரவை போன்றவை எல்லாம் நிறைய அடங்கியுள்ளன. ஆகையால் இவைகளையெல்லம் மொத்தமாக அமைப்புகள் என்று கூட சொல்லலாம். இவர்களில் அரசியல் பிரிவு, ஆன்மீக பிரிவு என்றெல்லாம் தனித்தனியாக வைத்திருக்கிறார்கள். மேலும் மத்ஹபுகளையும், தரீக்காக்களையும் ஆதரிப்பவர்களும் உண்டு. இவர்களில் ஒரு பிரிவினர் தவ்ஹீது என்று சொல்லிக்கொண்டு புதிய  பிரிவையும் உண்டுபண்ணியுள்ளார்கள். இந்த இயக்கங்கள் எல்லாம் எண்ணிக்கையற்றவையாகவே இருக்கின்றன. காரணம் நாளொரு மேனியும் பொழுதொரு இயக்கங்களாக புதிது புதிதாக உருவாகி வருகின்றன. இவர்களின் ஒட்டுமொத்த கருத்து என்னவென்றால் நாங்கள் எல்லோரும் தனித்தனியாக பிரிந்திருந்தாலும் நன்மையான அழகான செயல்களைத்தான் செய்து கொண்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள்.

“(தம்) செயல்களில் மிகப்பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள்தான். (அல்குர்ஆன் : 18:103,104)

ஆகையால் இவர்கள் எல்லோரும் இஸ்லாத்தை விட்டுவிட்டு இயக்கத்தில் இருந்து கொண்டு நன்மையான செயல்களை எண்ணிப்பார்க்கிறார்கள். இஸ்லாம் அல்லாஹ்வாலும் அவனுடைய தூதராலும் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் இயக்கங்கள் அல்லாஹ்வினாலும், அவனுடைய தூதரினாலும் அங்கீகரிக்கப்பட்டதா?

சில நேரங்களில் இயக்கவாதிகள் ஒத்த கருத்துக்கள் என்று சொல்லிக்கொண்டு ஒன்று சேருவார்கள். தேவைப்பட்டால் பிரிந்தும் கொள்வார்கள். ஆகையால் இவர்கள் சமுதாயத்தை கேலி கூத்தாக ஆக்கிவிட்டார்கள். ஆதலால் இவர்களை நாம் சமுதாயத்தின் கேலிகூத்தாடி பிரிவினைவாதிகள் என்றுகூட சொல்லலாம்.

ஒவ்வொரு இயக்கத்திற்கும் துணை அமைப்புகள், உள் பிரிவு அமைப்புகள் என்றெல்லாம் நிறைய இருக்கின்றன. அவரவர்களின் இயக்கத்திற்கு தகுந்தாற்போல் தூய இஸ்லாமிய கொள்கையை சகட்டுமேனிக்கு வளைத்டது, திரித்து போட்டிருக்கிறார்கள். ஆகையால் இவர்கள் எல்லோரும் இஸ்லாத்தைப் பற்றி பேசாமல் இயக்கத்தைப் பற்றித்தான் அதிகமாக பேசி தங்களுடைய வாழ்நாளை கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் இயக்கங்களின் தலைவர்கள் சொல்வதுதான் வேதவாக்காக நினைத்து தொண்டர்கள் பின்பற்றி கொண்டிருக்கிறார்கள். இஸ்லாத்திற்கு கட்டுப்படாமல் இயக்கத்திற்குத்தான் கட்டுப்படுகிறார்கள். இதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சி என்று நாம் சொல்கிறோம். இவர்கள் எல்லோரும் அவ்வப்போது ஒற்றுமையைப் பற்றி பேசுவது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. ஆகையால் இவர்கள் எல்லோரும் அவரவர்களின் இயக்கத்தைத்தான்  வளர்க்கிறார்களே தவிர இஸ்லாத்தை வளர்ப்பது கிடையாது. ஆகவே இந்த இயக்கவாதிகள் எல்லோரும் முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமைக்கும், வளச்சிக்கும் ஒரு பெரும் தடைக்கல்லாகவே இருக்கிறார்கள்.

இன்ஷா அல்லாஹ்! அடுத்த தொடரில் மேலும் முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் தடைக்கல்லாக இருக்கக்கூடியவைகளில் தனிப்பள்ளி, ஆலிம்கள். மதரஸாக்கள், ஃபத்வாக்கள், வள்ளிகளில் போர்டு மாட்டி வைத்தல், தலைப்பிறை, பைஅத், ஜும்ஆ உர்தூ பயான் (தமிழாக்கத்தில்) போன்ற அம்சங்களை தனித்தனியாக பார்ப்போம்.         (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: