குழந்தைக்கு பெயரிடுவதும் அகீகாவும்….

in 2021 ஜுன்

குழந்தைக்கு பெயரிடுவதும் அகீகாவும்….

M.A.  ஹனிபா

பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்காக வும், மார்க்க ரீதியாக நிறைவேற்ற வேண்டிய செயலைச் சார்ந்தது. “அகீகா” என்பதா கும். குழந்தை பிறந்த ஏழாம் நாளில், அந்தக் குழந்தைக்காக ஓர் ஆடு அறுக்கப்பட்டு, தலைமுடி மழிக்கப்பட வேண்டும். அன்றே குழந்தைக்கு பெயரிட வேண்டும். இதுதான் “அகீகா” கொடுப்பதன் முறை!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “பையன் (பிறந்த) உடன் “அகீகா” (கொடுக்கப்பட்டால்) உண்டு. எனவே, அவனுக்காக (ஆடு அறுத்து) “குர்பானி” கொடுங்கள். அவன் (தலைமுடி களைந்து) பாரத்தை இறக்கிவிடுங்கள்” என்று சொல்ல கேட்டிருக்கிறேன். (அறிவிப்பாளர் : சல்மான் இப்னு ஆமிர்(ரழி), நூல்கள்: புகாரி 5472, நஸயீ, அபூதாவுத், இப்னு மாஜ்ஜா)

குழந்தைகள் அகீகாவுக்குப் பொறுப்பாக்கப்பட்டுள்ளார்கள். ஏழாம் நாள் (பிராணி) அறுக்கப்பட வேண்டும். பெயரிடப்படவேண்டும். தலை மழிக்கப்பட வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஸமுரா(ரழி), நூல்: திர்மிதீ : 1559)

அகீகாவுக்கென அறுத்து பலியிடும் ஆட்டின் இறைச்சியைப் பங்கிடுவது குர்பானிச் சட்டம் போன்றதாகும். குர்பானி இறைச்சியின் சட்டம் அறிய,

“தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும், குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்லி குர்பானி கொடுப்பவர்களாகவும் (வருவார்கள்) எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள், கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்”. (அல்குர்ஆன்: 22:28)

“இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள் அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியி ருக்கிறோம்.உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது. எனவே (அவை உரிய முறையில்) நிற்கும்போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி குர்பானி செய்)வீர்களாக. பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள். (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப் போருக்கும் உண்ணக் கொடுங்கள். இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம். (அல்குர் ஆன்: 22:36)

குர்பானி இறைச்சியை உண்ணலாம், தர்மமும் செய்யலாம் :

ஏழாம் நாள் பெயரிடப்பட வேண்டும் என்று நபிமொழியிலிருந்து அறிந்தாலும், பிறந்த அன்றும் குழந்தைக்குப் பெயர் சூட்டலாம், மர்யம் (அலை) பிறந்த அன்று அவரது தாயார் அவருக்கு மர்யம் என்று பெயரிட்டதாக குர்ஆன் வசனம் கூறுகிறது.

அவர் (தனது எதிர்பார்ப்புக்கு மாறாக) அதைப் பிரசவித்தபோது “என் இறைவனே! நிச்சயமாக நான் பெண் குழந்தையையே பிரசவித்து விட்டேன்’ என்றார். அவர் பிரசவித்ததை அல்லாஹ் நன்கறிந்தவன். மேலும் ஆண், பெண்ணைப் போலல்ல இன்னும் நான் அதற்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். அவளையும் அவளது சந்ததியினரையும் விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்குகளிலிருந்து நிச்சயமாக உன்னிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன் (என்றார்) (அல்குர்ஆன் : 3:36)

ஆண் குழந்தை சார்பில் சம வயதுடைய இரண்டு ஆடுகளும், பெண் குழந்தை சார்பில் ஓர் ஆடும் (அறுக்க வேண்டும்) என்று நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (அறிவிப்பாளர் : ஆயிஷா(ரழி), நூல்கள்: திர்மிதி 1549, இப்னுமாஜா)

ஹஸன்(ரழி) ஹுஸைன்(ரழி) சார்பாக (ஒவ்வொருவருக்கும்) ஓர் ஆட்டை நபி (ஸல்) அவர்கள் அகீகா கொடுத்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி, நூல்: அபூதாவூத்)

அறியாமை காலத்தில் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் ஆட்டை அறுத்து குழந்தையின் தலைமுடியை நீக்கி ஆட்டின் இரத் தத்தைத் தலையில் தடவுவோம். (அல்லாஹ் எங்களுக்கு) இஸ்லாத்தைத் தந்தபோது ஓர் ஆட்டை அறுப்போம். குழந்தையின் தலைமுடியை நீக்கி, தலையில் குங்குமப் பூவைப் பூசுவோம். (அறிவிப்பாளர்: புரைதா(ரழி) நூல்கள்: நஸாயீ, அஹ்மத்)

ஆண் குழந்தைக்கு இரண்டு ஆடுகளும், பெண் குழந்தைக்கு ஒரு ஆடும் என்றும் அறிவிப்புகள் உள்ளது போல், ஆண் குழந்தைக்கு ஓர் ஆட்டை அகீகா கொடுத்ததாகவும் அறிவிப்புகள் உள்ளன. இருவிதமாகவும் செய்து கொள்ளலாம்.

ஏழாம் நாள் அகீகா கொடுப்பது சம்பந்தமாக வரும் அறிவிப்புகள் தவிர, 14, 21ம் நாள் அகீகா கொடுக்கலாம் என வரும் அறிவிப்புகளும், குழந்தையின் தலைமுடி இறக்கி முடியின் எடைக்கு எடை வெள்ளியை தர்மம் செய்யவேண்டும் என்று வரும் அறிவிப்புகளும் பலவீனமானவை)

கடன் வாங்கியாவது குழந்தைக்காக ஆடு அறுத்துப் பலியிட வேண்டும் என்று அகீகா கட்டாயக் கடமையல்ல. பொருளாதார வசசியுடையோர் ஆடு அறுத்துப் பலியிடலாம்.பொருள் வசதி இல்லாதவர் பெயர் சூட்டி தலைமுடி இறக்கினால் போதும்.    (அல்லாஹ் மிக்க அறிந்தவன்)

Previous post:

Next post: