முஸ்லிமை சந்திக்கும்போது…?

in 2021 டிசம்பர்

முஸ்லிமை சந்திக்கும்போது…?

– மர்ஹூம்

ஒரு முஸ்லிம், இன்னொரு முஸ்லிமை சந்திக்கும்போது, ஒருவருக்கொருவர் ஸலாம் கூறுவதும் “முஸாபஹா’ செய்வதும் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திய நடைமுறையாகும். நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலான முஸ்லிம்கள் இரண்டு கைக ளாலும், மிகவும் சிறுபான்மையினர் ஒரு கையாலும், “முஸாபஹா’ செய்து வருகின்றனர். “இதில் சரியான முறை எது? என்பதை குர்ஆன், ஹதீஃத் ஆதார அடிப்படையில் விளங்குவோம்.

இரண்டு கைகளால் “முஸாபஹா’ செய்ய வேண்டும் என்போர் புகாரியில் இடம் பெற்றுள்ள ஒரு ஹதீஃதை ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர். “நபி(ஸல்) அவர்கள் இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களுக்கு “அத்தஹிய்யாத்’ கற்றுக்கொடுக்கும்போது, நபி(ஸல்) அவர்கள் தனது இரு கைகளால் இப்னு மஸ்ஊது(ரழி) அவர்களின் ஒரு கையைப் பிடித்திருந்தனர்’ என்பதுதான் அந்த ஹதீஃத்.

நபி(ஸல்) அவர்கள் தனது இரு கைகளைப் பயன்படுத்திய காரணத்தால், இரு கைகளால் “முஸாபஹா’ செய்ய வேண் டும் என்று முடிவு செய்திருக்கின்றனர் சிலர். இந்த ஹதீஃதை ஆராயும்போது இரண்டு கைகளால் “முஸாபஹா’ செய்வதற்கு இந்த ஹதீஃதில் எவ்வித ஆதாரமும் கிடையாது என்பதை உணரலாம். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் “முஸாபஹா’ செய்யும்போது இரண்டு கைகளைப் பயன்படுத்தினார்கள் என்று இந்த ஹதீஃதில் குறிப்பிடப்படவில்லை. மாறாக “அத்தஹிய்யாத்” கற்றுக் கொடுக்கும்போது, தனது இரு கைகளைப் பயன்படுத்தினார்கள் என்றே உள்ளது. ஒரு ஆசிரியர், மாணவருக்கு எதையேனும் கற்றுக் கொடுக்க விரும்பினால் தனது இரு கைகளால் மாணவரது ஒரு கையைப் பிடித்துக் கொள்ளலாம் என்று மட்டுமே இந்த ஹதீஃதிலிருந்து விளங்க முடியும்.

“முஸாபஹாவுக்கும் அதில் ஆதாரம் உள்ளது’ என்ற கருத்தை ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொண்டாலும், அந்த ஹதீஃத்படி, “முஸாபஹா’ செய்பவர்களில் ஒருவர் இரண்டு கைகளையும், இன்னொருவர் ஒரு கையையும் பயன்படுத்த வேண்டும் என்று தான் புரிந்துகொள்ள முடியும். அந்த ஹதீஃதில் நபி(ஸல்) அவர்கள் இரு கைகளையும், இப்னுமஸ்ஊது(ரழி) ஒரு கையையும் பயன்படுத்தியுள்ளனர். முஸாபஹாவுக்கு ஆதாரமாக இந்த ஹதீஃதைக் கருதுபவர்கள், ஒருவர் இரண்டு கைகளையும், இன்னொருவர் ஒரு கையையும் பயன்படுத்த வேண்டும் என்றுதான் முடிவு செய்ய முடியுமே தவிர இருவருமே இரண்டு கைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு இதில் ஆதாரமில்லை. (யார் இரண்டு கைகளைக் கொடுப்பது, யார் ஒரு கையைக் கொடுப்பது என்பதையும் முடிவு செய்தாக வேண்டும்)

ஆனால் “முஸாபஹா’ செய்யும்போது ஒரு கையைப் பயன்படுத்துவது பற்றி ஏராளமான ஹதீஃத்கள் உள்ளன. அவற்றில் சிலதைக் கீழே பட்டியல் போட்டுள்ளோம். நூல் பாடம் அறிவிப்பவர

  1. புகாரி தப்ஸீர்,அபூசயீது இப்னுமுஅல்லா (ரழி)
    2. புகாரி முஆனகா இப்னு அப்பாஸ்(ரழி)
    3. புகாரி, அஹ்மத் நேர்ச்சை அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரழி)
    4. முஸ்லிம் பழாயில் அனஸ் (ரழி)
    5. அபூதாவூத் கியாம் அன்னை ஆயிஷா(ரழி)
    6. திர்மிதி முஸாபஹா அனஸ்(ரழி)
    7. அபூதாவூத் ஹுஸ்னுல் உஷ்ரத் அனஸ்(ரழி)
    8. இப்னுமாஜா இக்ராமுர்ரஜுல் அனஸ்(ரழி)
    9. அஹ்மத் பாகம்3, பக்.111 அனஸ்(ரழி)
    10.திர்மிதீ பாகம்2, பக்.97 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது(ரழி)
    11. அத்காருன்னவவீ, பக். 228 அனஸ்(ரழி)
    12. தாரமீ, பாகம்2,பக்.286 அனஸ்(ரழி)
    13. அஹ்மத், பாகம்5,பக்.267 அபூஉமாமா(ரழி)
    14.தர்கீப், தர்ஹீப், பாகம்5, பக்.103 ஹுதையா(ரழி)
    15. அஹ்மத், பாகம்3,பக்.142, அனஸ்(ரழி)
    16. அஹ்மத். பாகம்4, பக்.291, பராஇப்னு ஆஸிஃப்(ரழி)
    17. தர்கீப்தர்ஹீப் பாகம்5,பக்.104 சல்மான் ஃபார்ஸி(ரழி)
    18. அஹ்மத், பாகம்5, பக்.360, அபூ உமாமா(ரழி)
    19. இப்னு அஸாகிர் இப்னு உமர்(ரழி)
    20. அஹ்மத், பாகம் 5, பக்.163 அபூதர்(ரழி)

இன்னும் பல ஹதீஃத்களும் ஒரு கையால் “முஸாபஹா’ செய்வது பற்றி தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இரண்டு கைகளால் “முஸாபஹா’ செய்வதற்கு நேரடியாக எந்த ஒரு ஹதீஃதையும் நாம் காண முடியவில்லை, புகாரியில் இடம்பெற்றுள்ள அந்த ஒரே ஒரு ஹதீஃதும் “முஸாபஹா’ பற்றியது அல்ல. அது “முஸாபஹா’வுக்கு உரியது என்று வைத்துக் கொண்டாலும், ஒரு கையால் “முஸாபஹா’ செய்பவர்கள் தான் அந்த ஹதீஃதையும் செயல்படுத்துகிறார்கள். யாரேனும் நம்மிடம் “முஸாபஹா’வுக்கு இரண்டு கைகளை நீட்டினால் நீங்கள் ஒரு கையை மட்டும் நீட்டுங்கள்! அந்த ஹதீஃதில் உள்ளபடி அப்போதும் நாம் அமல் செய்துவிட்டோம். ஏனெனில் அந்த ஹதீதில் நபி(ஸல்) இரண்டு கைகளையும், நபி தோழர் ஒரு கையையும் பயன்படுத்தி னார்கள் என்றுதான் உள்ளது. இரண்டு நபர் களும் இரண்டு கைகளைக் கொடுக்க அந்த ஹதீஃதில் ஆதாரம் எதுவும் கிடையாது.

எவ்வித ஆதாரமுமில்லாமல் ஏன் மக்களிடம் இந்தப் பழக்கம் வேரூன்றியது தெரியுமா? அதற்கும் ஒரு பின்னணி உண்டு. ஹில்று(அலை) அவர்கள் பல மனிதர்களின் தோற்றத்தில் வருவார்களாம். சிலருடன் “முஸாபஹா’ செய்வார்களாம், அவர்க ளால் “முஸாபஹா’ செய்யப்பட்டு விட் டால், உடனே அவர் இறை நேசராம் ஹில்று(அலை) அவர்களின் வலது கைப், பெருவிரலில் எலும்பு இருக்காதாம், இரண்டு கைகளால் “முஸாபஹா’ செய்யும் போது மற்றவரின் வலது கைப் பெரு விரலை அழுத்திப் பார்க்க வேண்டுமாம். எலும்பு இல்லாவிட்டால் ஹில்று(அலை) என்று புரிந்து கொள்ள வேண்டுமாம். இந்தக் கதையை அடிப்படையாக வைத்தே இரு கைகளால் “முஸாபஹா’ செய்வது நடைமுறைப்படுத்தப்பட்டது. ஹில்று அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை முன்பே நாம் ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தி இருக்கிறோம். மேலும் இரு கைகளால் “முஸாபஹா’ செய்யும்போது கைமடக்கு(கூலி) கொடுக்கும்போது அடுத்தவருக்குத் தெரியாமல் இரகசியமாக வாங்கிக் கொள்ளமுடியும். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். எனவே “முஸாபஹா’ ஒரு கையால் செய்வதே சுன்னத் என்று நாம் தெரிந்து கொள்கிறோம். குன்யதுத் தாலிபீன் என்ற நூலில் அப்துல் காதிர் ஜிலானி(ரஹ்) அவர்கள் “வலது கையால் செய்ய வேண்டியவை’ என்ற தலைப்பில் முஸாபஹாவையும் சேர்த்துள்ளார்கள். இமாம் நவவீ அவர்கள் வலது கையால் “முஸாபஹா’ செய்வதுதான் விரும்பத்தக்கது என்று கூறியுள்ளனர். இவற் றிலிருந்தும் ஒரு கையால்தான் “முஸாபஹா’ செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்கிறோம்.

இரண்டு கைகளால் “முஸாபஹா’ செய்பவர்களில் சிலர், வலது கையை இடது புறமாகக் கொண்டு சென்று, இடது கையை வலது புறமாகக் கொண்டு சென்று (ஏறத்தாழ “பெருக்கல்’ வடிவத்தில் கைகளை வைத்துக்கொண்டு) “முஸாபஹா’ செய்வதும், இன்னும் சிலர் வலது கையை, தன் தலைக்கு நேராக வைத்துக்கொண்டு இடது கையை அடிவயிற்றுக்கு நேராக வைத்துக் கொண்டு “முஸாபஹா’ செய்வதும், பார்க்க தமாஷாக இருக்கும். இந்த விநோதங்களை எல்லாம் எங்கிருந்து கற்றார்களோ தெரியவில்லை.

சுன்னத்தான முறைப்படி நாம் ஒரு கையை நீட்டினால், ஏதோ அதிசயப் பிராணியைப் பார்ப்பது போல் பார்க்கிறார் கள். நாகரீகமான ஒரு “முஸாபஹா’வை நம் மிடமிருந்து மேனாட்டவர் கற்றுக் கொண்டு செய்து வருகின்றனர். நம்மவர்கள்தான் அந்த சுன்னத்தை மாற்றிக் கொண்டோம். சுன்னத்தை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு கையால் “முஸாபஹா’ செய்வோமே!

“முஸாபஹா’ செய்யும்போது எதுவும் ஓதவேண்டும் என்று எவ்வித ஆதாரமும் கிடையாது. “முஸாபஹா செய்யும்போது ஸலவாத் ஓதவேண்டும்’ என்று இப்னு ஹிப்பானில் இடம் பெற்றுள்ள ஹதீஃத் முற்றிலும் நிராகரிக்கப்பட்டதாகும் என்று இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள். “முஸாபஹா’ செய்யும்போது வேறு எந்த திக்ருகளும் ஓத வேண்டும் என்பதற்கும் ஆதாரம் கிடையாது. குறிப்பிட்ட சில தொழுகைக்குப் பின் “முஸாபஹா’ செய்வதற்கும் “ஸஹீஹான’ ஆதாரங்கள் எதுவும் கிடையாது.

Previous post:

Next post: