சாமியார்கள்!

in 2022 பிப்ரவரி

சாமியார்கள்!

K.M.H. அபூ அப்தில்லாஹ்

நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சாமியார்களைப் பற்றிய செய்திகள் பரவலாக வந்து கொண்டிருக்கின்றன. துறவறத்தைக் கடைபிடிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் சாமியார்கள் தங்களிடம் வரும் பெண்களையும், ஆசிரமங்களில், மடங்களில் தங்கியிருக்கும் பெண்களையும் கற்பழிப்பது சர்வசாதாரண நிகழ்ச்சியாக ஆகிவிட்டது. உலக அழிவுக்குச் சமீபத்தில் விபச்சாரம் பெருகும் என்று இறுதி இறைத்தூதர்(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பிற்கு இந்தச் சாமி யார்களும் முன்னுதாரணங்களாகத் திகழ்கிறார்கள். சாமியார்களின் இழிச் செயல்களினால் பக்தி, பகல் வேஷமாகி வருகிறது. அறிவில் குறைந்த அடிமட்ட மனிதர்கள் தங்கள் அறியாமையினாலும், சுய சிந்தனையற்ற போக்காலும் இந்தச் சாமியார்களை இறைவனின் பக்தர்களாக-அவதாரங்களாக நம்பி மோசம் போகிறார்கள்.

அரசியல்வாதிகளோ இந்த அறிவற்ற அடிமட்ட மக்களின் வாக்குகளைக் கவர இந்தச் சாமியார்களின் கால்களில் நெடுஞ் சாண்கிடையாக விழுகிறார்கள். இந்தச் சாமியார்களிடம் காணப்படும் இழி குணங்கள் அனைத்தும் இந்த அரசியல்வாதிகளிடமும் உண்டு. இனம் இனத்தோடுதான் சேரும் என்பது போல் அவர்களின் நிலை இருக்கிறது. அது மட்டுமல்ல, உலக ஆதாயத்தில் மட்டும் குறியாக இருக்கும் பண முதலைகளும் இந்தச் சாமியார்களை மதிப்பது போல் நடித்து, அவர்களைக் கொண்டு உலக ஆதாயங்களை அடைந்து வருகிறார்கள். இவர்களும் விபச்சாரம், குடி போன்ற ஈனச் செயல்களுக்கு மொத்தக் குத்தகைக்காரர்களே.

ஆக சாமியார்கள், அரசியல்வாதிகள், பண முதலைகள் இப்படி ஒரு பெருங் கூட்டமே இறைவனின் பெயரால் பகல் வே­ம் போடுவதால், அதை நிதர்சனமாகப் பார்க்கும் ஓரளவு சிந்தனைத்திறன் பெற்றவர்கள், தங்களை பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் மன விரக்தி அடைகிறார்கள். அவர்களுக்கு மக்கள் நலனில் கொஞ்சத்திற்குக் கொஞ்சமாவது அக்கறை இருக்கிறது. எனவே இறைவனின் பெயரால் தானே சாமியார்களும், அரசியல்வாதிகளும், பண முதலைகளும் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். எனவே அந்த இறைவனே இல்லை என்று நிலைநாட்டிவிட்டால் சுபீட்சம் தானாகவே வந்துவிடும் என்று தப்புக் கணக்குப் போட்டு, மக்களுக்கு அதைப் போதிக்கத் துணிந்து விட்டார்கள். ஆயினும் அவர்களிலும் பலர் குடி, விபச்சாரம் போன்ற ஈனச் செயல்களின் கெடுதிகளை உணர்வதாக இல்லை. கோடி கோடியாக மக்களிடம் கொள்ளை அடித்து சொத்துச் சேர்த்து வைப்பதிலுள்ள கெடுதிகளையும் புரிந்து கொள்ளவில்லை.

இத்தனைக் கெடுதிகளுக்கும் மூலக் காரணம் எங்கே இருக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்போம். தங்களை அறிவாளிகள் என்று அலட்டிக் கொள்வோரும், தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கும் பரிதாப நிலையிலேயே இருக்கிறார்கள். அவர்களும் ஒரு வகையில் அழிந்து போகும் அற்ப உலகின் பணம், பதவி, சுகங்கள் இவற்றால் ஈர்க்கப்பட்டிருப்பதால், இல்லை மூழ்கி இருப்பதால் அவர்களாலும் உண்மையை உணர முடியவில்லை. அதனால்தான் அவர்களி டையே இவ்வுலகோடு முடிவடைந்து விடும் நாஸ்திகம் தலைதூக்குகிறது.

மனிதர்களில் வெவ்வேறு மதத்தினருக்கு வெவ்வேறு கடவுள் என்பது மூடநம்பிக்கையாகும். எல்லா மனிதர்களுக்கும், எல்லா மதத்தினருக்கும் ஒரே இறைவன் தான். அந்த ஒரே இறைவன் பல மதங்களை மக்களுக்குக் கொடுக்கவில்லை. ஒரே ஒரு வாழ்க்கை நெறியைத்தான் கொடுத்துள்ளான். மனிதர்களே, மதப் புரோகிதர்களே, சாமியார்களே தங்கள் சுயநலத்திற்காக வெவ்வேறு மதங்களைக் கற்பனைசெய்து மக்களுக்குப் போதித்து வருகிறார்கள். மதங்களில் காணப்படும் “துறவறம்’ ஒரே இறைவன் கொடுத்த நல்வழி முறையல்ல. மனிதர்கள் கற்பனை செய்து கொண்டதே; மூடத்தனமே. இதோ ஒரே இறைவனின் இறுதி மறை கூறுகின்றது பாருங்கள்!

“ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவறத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை. இறைவனின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியே யன்றி (அவர்களும் அதனை உண்டபண்ணிக் கொள்ளவில்லை; மேலும் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேணவில்லை”. அல்குர்ஆன் 57:27

இந்த இறைவாக்கு மூலம் தெளிவாக துறவறம் இறைவன் விதித்ததில்லை. மனிதன் தனது அற்ப அறிவால் உண்டாக்கிக் கொண்ட மூடத்தனமே என்பது புரிகின்றது. துறவறம் எப்படி அறிவற்ற செயல் என்பதை ஆராய்வோம்.

ஒருவன் முக்தி பெற துறவறம்தான் வழி என்றால், மனிதர்கள் அனைவரும் முக்தி பெறுவது சாத்தியமா? ஒரு துறவியின்-சாமியாரின் தாயும், தகப்பனும் முக்தி பெற விரும்பியிருந்தால் இந்தச் சாமியார் இந்த உலகில் பிறந்திருக்க முடியுமா? அப்படியானால் ஒரு ஆணும், பெண்ணும் (பெற்றோர்) இருவர் முக்தியை இழந்து ஒருவருக்கு முக்தி கிடைப்பதாக இருந்தால் இது நியாயமா? இது இறைவன் கொடுத்த வழியாக இருக்க முடியுமா? துறவறம் மூலம் மனிதர்கள் அனைவரும் முக்தி-இறைவனின் பொருத்தம் பெற முடியுமா? அப்படியே ஒரு காலகட்டத்தில் வாழும் மனிதர்கள் அனைவரும் துறவறம் பூண்டு முக்தி-இறை பொருத்தம் பெற முடிவு பண்ணிவிட்டால் அதில் அவர்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் அவர்களுக்குப் பின் இவ்வுலகம் இயங்குமா? இப்படிப்பட்ட வடிகட்டிய மூடத்தனமான துறவறத்தை இறைவன் தன்னை அடையும் வழியாக மனித வர்க்கத்திற்குக் கொடுத்திருக்க முடியுமா? சிந்தியுங்கள்.

பெண்ணைத் துறந்து முக்தியை நாடுகிறவர்கள் அத்துடன் ஊணையும் துறந்து விட்டால் அந்த முக்தி-முடிவு உடனடியாகக் கிடைத்து விடுமே? ஏன் ஊணைத் துறப்பதில்லை? பெண்ணைத் துறப்பதாக நடித்து புகழை அடைவது சாத்தியமில்லாது போய் விடும் என்ற அச்சமா? புகழை விரும்பும் இவர்களா துறவிகள்? சாமியார்கள்? அல்லது ஊணைத் துறப்பதால் சாவு சடுதியாக வந்துவிடும். இது தற்கொலையாகும் என்ற நல்லெண்ணமா? அப்படியானால் ஊணைத் துறந்து தனி மனிதனொருவன் சாவது பாவமென்றால், பெண்ணைத் துறப்பது மனித இனமே சாவதற்கொப்பாகுமே? இது மாபெரும் பாவமில்லையா? எல்லோரையுமா பெண்ணைத் துறக்கச் சொல்லுகிறோம் என்ற அசட்டுக் கேள்வி வேண்டாம். முக்தி அனைவரும் பெறுவதாக இருந்தால் அனைவரும் துறந்து தானே ஆக வேண்டும். இதிலிருந்தே “துறவறம்’ படைத்த இறைவன் கொடுத்த நேர்வழி இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கவில்லையா?

அது மட்டுமல்ல; மதப் புரோகிதர்களே! சாமியார்களே சுயமாக உண்டாக்கிக் கொண்ட துறவறத்தை, அவர்களே முழுமையாகப் பேணி நடக்கவில்லை என்ற உண்மையையும், அந்த இறைவனே அறியத் தந்துள்ளான். முற்றிலும் துறந்தவனே முனிவன் – சாமியார் இந்த நிலை இந்தச் சாமியார்களிடம் காணப்படுகிறதா? சாமியார் கள் காட்டில் வாழ வேண்டியவர்கள். நாட்டில் வாழ்வது துறவறமல்ல, எவ்வித வசதி வாய்ப்பும் இல்லாத சாதாரண குடில்களில், காய்கனி, இலை குழைகளைத் தின்று வாழ்க் கையை ஓட்ட வேண்டியவர்கள். அப்படியே தப்பித்தவறி நாட்டிலே வாழ்ந்தாலும், தங்களுக்கென்று எதையும் சேமித்து வைக்காமல், வெறும் ஆட்களாக இருந்து கடும் பசி எடுக்கும்போது மட்டும் வீடுவீடாகச் சென்று பிச்சை எடுத்து அரை வயிறு, கால் வயிறு சாப்பிட்டு விட்டு தியானத்தில் மூழ்க வேண்டியவர்கள், அடுத்த வேளை உணவுக்கு என்று சேமித்து வைப்பவர்களும், கசக்கிக் கட்டும் ஓருடை தவிர வேறுடை வைத்திருப்பவர்களும் துறவிகளல்ல – சாமியார்களல்ல. சாமியார்கள் கையில் வைத்திருக்கும் தண்டத்திலுள்ள கோவணத் துணி இதையே உணர்த்துகின்றது.

ஒரு சாமியாரைப் பார்த்த மாத்திரத்தில் அவர் போலிச் சாமியாரா? அல்லது உண்மைச் சாமியாரா? என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஒட்டிய வயிரோடு, ஊதினால் விழுந்து விடும் பலகீனமான உடலுடன் காணப்படுகிறவர்களே உண்மைச் சாமியார்கள். உருண்டு திரண்டு பளபளவென தோற்றமளிப்பவர்கள் போலிச் சாமி யார்களே அல்லாமல் உண்மைச் சாமியார்கள் அல்ல.

வெளியே மக்களை ஏமாற்றக் குடில் போன்ற தோற்றம், உள்ளே அரண்மனையில் காணப்படும் வசதிகள்; இவர்கள் சாமியார்களா? வேளாவேளைக்கு அறுசுவை உணவுண்டு, தூங்க கொசுவலை கேட்டவர்கள் சாமியார்களா? ஏ.சி. அறைகளில் வாசம் செய்பவர்கள் சாமியார்களா? எடைக்கு எடை தங்கம் விரும்புகிறவர்கள் சாமியார் களா? மனிதர்கள் இவற்றையயல்லாம் அனு பவிக்கக் கூடாது என்ற கருத்தில் இதை நாம் சொல்லவில்லை. மனிதர்கள் வரையறைக்குட்பட்டு இவற்றை அனுபவிக்கலாம். ஆனால் முற்றும் துறந்த சாமியார்கள் எப்படி இவற்றை எல்லாம் அனுபவிக்க முடியும் என்றுதான் கேட்கிறோம்.

அதுமட்டுமல்ல; துறப்பதற்கு எளிதான இவற்றையே இந்தச் சாமியார்கள் துறக்க முடியாமல் திணறும்போது, அவர்கள் பெண்ணின்பத்தை எப்படித் துறப்பார்கள்? அதுவும் உண்டு கொழுத்து தினவெடுக்கும் போது துறக்க முடியுமா? அவர்கள் உண்மைச் சாமியார்களாகத் திகழ முடியுமா?

உலகப் படைப்புகளை இறைவன் மனிதனுக்கு அழகலங்காரங்களாகவும், இன்பம் அளிப்பவையாகவும் படைத்துள்ளான். அவற்றை முறைப்படி அனுபவித்துக் கொள்ளவும் அனுமதி தந்துள்ளான். உலக வாழ்க்கை பரீட்சை வாழ்க்கையாக இருப்பதால் உலகச் சுகங்களில் கவர்ச்சியையும், (உடல்)இன்பத்தையும் இறைவன் வைத்துள்ளான். எனவே இயற்கையாகவே மனிதர்கள் அவற்றால் ஈர்க்கப்படத்தான் செய்கிறார்கள். அவற்றை அளவோடும், முறையோடும் அனுபவிப்பவன் வெற்றி-முக்தி பெறமுடியும். அவற்றை முற்றிலும் துறப்பதாகச் சொல்லுகிறவன் பாசாங்கு செய்து மக்களை ஏமாற்றுகிறான். அதனால் அவ னுக்கு இறைவனிடம் அழிவு ஏற்படுகின்றது. அவற்றில் மிதமிஞ்சி மூழ்குகிறவன் அவற்றாலேயே அழிகிறான். இதுதான் எதார்த்த நிலை.

மனித ஆசாபாசங்களை ஊணாசை, உடையாசை, பெண்ணாசை, மண், பொன்னாசை, புகழாசை என்று பகுத்துக் காட்டலாம். இவற்றில் ஊணாசை, உடையாசை இவற்றைத் துறந்து பசிக்குப் புசிப்பது, மானத்தை மட்டும் மறைப்பது என்பதை எட்டிய பின்பே பெண்ணாசையைத் துறக்க முடியும். இந்த மூன்றையும் துறந்தவனுக்கே மண், பொன்னாசையைத் துறக்க முடியும். இவை ஐந்தையும் துறந்தவனே புகழாசையைத் துறக்க முடியும். முற்றிலும் துறந்தவர்கள் முனிவர்கள்-சாமியார்கள் என்று சொல்லுகிறவர்களை உற்று நோக்குங்கள். உடை ஆசையைத் துறந்திருக்கலாம். சாமியாரைப் போல் வே­ம் தரித்திருக்கலாம். அதுவும் மக்கள் முன்னால் மட்டுமே.

ஊணாசையைத் துறந்திருக்கிறார்களா? மண்ணாசை, பொன்னாசையைத் துறந்திருக்கிறார்களா? பொன்னாசை துறந்தவர்கள் எடைக்கு எடை தங்கம் எதிர்பார்ப்பார்களா? அரசு சட்டத்தை மீறி அந்நிய நாட்டிலிருந்து கிலோ கணக்கில் தங்கம் வருவதை ஏற்றிருப்பார்களா? ஊணாசை, மண், பொன்னாசையைத் துறக்காதவர்கள், பெண்ணாசையைத் துறந்து விட்டதாகச் சொன்னால் அது உண்மையாக இருக்க முடியுமா? முதிர்ந்த விருத்தாப்பிய வயது காரணமாக-இயலாமையின் காரணமாக பெண்ணாசையைத் துறந்திருந்தால் அது தனி விஷயம்.

ஆக இன்றைய சாமியார்கள் மக்களை ஏமாற்றும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்பதில் அணுவின் முனையளவும் சந்தேகமேயில்லை. விதிவிலக்காக விரல் விட்டு எண்ணக்கூடிய ஓரிருவர் உண்மையிலேயே முற்றிலும் துறந்த முனிவர்களாக இருக்கலாம். அவர்களும் முக்தி பெற முடியாது. காரணம் எந்த இறைவனின் பொருத்தத்தை நாடி இவர்களாகத் துறவறத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்களோ அந்த இறைவன் துறவறத்தை அவர்களுக்கு விதிக்கவில்லை என்பதை அந்த இறைவனது இறுதி வேதத்தில் பார்த்தோம். பாடத்திட்டத்தில் இருந்தாலும் கேட்கப்படாத கேள்விக்கு 100க்கு 100 மார்க் கிடைக்கும் அளவுக்குத் திறமையாக பதில் எழுதினாலும் கிடைப்பது பூஜ்ஜியம் (0) என்பதை அறிஞர்களில் யாரால் மறுக்க முடியும்? துறவறம் இறைவனால் கேட்கப்படாத கேள்வி என்பதையும், அது அறிவுக்கே பொருந்தாத தத்துவம், இருவரை முக்தி இழக்கச் செய்து ஒருவர் முக்தி பெறுவதாகச் சொல்லும் போலித் தத்துவம் என்பதை விளங்க முடியாதவர்கள் புத்திசாலிகளாக இருக்க முடியுமா?

மேலும், இந்தச் சாமியார்கள் இறையருள் கொண்டு அற்புதங்கள் காட்டுவதாக மக்களை மயக்குவதும் ஒரு ஏமாற்று வித்தைதான். கண்கட்டி வித்தைதான், மோசடிதான், உண்மையிலேயே இறையருள் அவர்களுக்கிருந்தால் சந்தி சிரிக்கும் ஈனச் செயல்களில் ஈடுபட முடியுமா? சந்தி சிரிக்கும் சாமியார்கள் தங்கள் தலைமுடியை மழித்துக் கொண்டு கோவண மொட்டைச் சாமியார்களாக இருந்து வாயிலிருந்து விபூதியையும், லிங்கத்தையும் மற்றும் அற்புதப் பொருட்களையும் எடுத்துக் காட்டட்டுமே பார்க்கலாம். இவை கண்கட்டி வித்தையே அல்லாமல் வேறில்லை. பாமர மக்களை ஏமாற்றி மோசடி செய்ய இந்த போலிச் சாமியார்கள் போடும் வேஷமேயல்லாமல் வேறில்லை. அந்தோ பரிதாபம், இவற்றைவிட அதிசயங்களை “மாஜிக்’ காட்டுகிறவர்கள் செய்து காட்டும்போது அங்கு பக்தி காட்டாத பாமர மக்கள் இந்தப் போலிச் சாமியார்களிடம் மயங்குவதுதான் வேதனைக்குரியது.

எனவே மக்களை சுயசிந்தனையுடையவர்களாக அசல் பகுத்தறிவுடையவர்களாக (நாஸ்திகம் பேசும் அறைக் கிணறு தாண்டும் பகுத்தறிவாளர்களாக அல்ல) மாற்றுவதற்கு மனித நலனில் அக்கறையுள்ள மனித நேயத்தை விரும்பும் ஒவ்வொரு அறிவு ஜீவியும் முன் வரவேண்டும்.

மனித அறிவைக் கொண்டு மனித முக்திக்கு வழிசொல்ல முடியாது. அந்த வழியை மனிதனைப் படைத்த இறைவனே கற்றுத்தர வேண்டும். அந்த ஒரே இறைவன் காலத்திற்குக் காலம் தன் புறத்திலிருந்து இறைத்தூதர்களை அனுப்பி மனித வாழ்க்கை நெறியைக் கற்றுத் தந்தான். இவ்வாறு பல்லாயிரக் கணக்கான இறைத் தூதர்கள் உலகில் தோன்றியுள்ளனர். ஆனால், அந்த இறைத்தூதர்களுக்குப் பின்னால் அவர்களின் பெயரைச் சொல்லி இந்த மதப் புரோகிதர்கள் தான் தங்கள் சுயநலத்திற்காக இறை கொடுத்த வாழ்க்கை நெறியைப் பல்வேறு மதங்களாகத் திரித்து விட்டார்கள்.

இறைவன், இறுதியாக உலகம் அழியும் வரை நிலைத்திருக்கும். பாதுகாக்கப்பட்ட இறுதி நெறிநூலை – அல்குர்ஆனை உலக மக்கள் அனைவருக்கும் பொது மறையாகத் தந்து, அதன்படி செயல்பட கட்டளையிட்டுள்ளான். அவனது இறுதித் தூதரும் அதன்படி வாழ்ந்து காட்டிச் சென்றிருக்கிறார்கள்.

ஆனால் இங்கும் மதப் புரோகிதர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். நாடெங்கும், உலகெங்கும் பரந்து விரிந்து இஸ்லாத்தின் பெயரால் காணப்படும் தர்கா, கொடிமரம், உண்டியல், சடங்குகள் அனைத்தும் இந்த மதப் புரோகிதர்களால் கற்பனை செய்யப்பட்டவையே. சூஃபிஸ துறவறமும் மாற்று மதப் புரோகிதர்களைக் காப்பியடித்து முஸ்லிம் மதப்புரோகிதர்கள் உண்டாக்கியவையே. ஆசிரமங்களில், மடங்களில் காணப்படும் காமக்களியாட்டங்கள், போதை கூத்துகள் தர்காக்களிலும், தரீக்கா கான்காஹ்(திக்ரு – தியான மடங்கள்)களிலும் காணப்படவே செய்கின்றன. ஆசிரமங்கள் போல் தர்காக்களும் சந்தி சிரிக்கும் காலத்தை எதிர்பார்த்தே இருக்கின்றன. அப்படி ஒருசில சம்பவங்களும் வெளிவந்துதான் இருக்கின்றன. இனியும் வரத்தான் போகின்றன.

இறைவனை அடையும் வழிகள் என்று சொல்லப்படும், படைத்த இறைவன் கொடுக்காத வழிகள் – தத்துவங்கள் அனைத்தும் மக்களை ஏமாற்றிப் பிழைக்க மதவாதிகள் உண்டாக்கும் மாய வலைகளே. மக்களே அவர்களை விட்டும் உஷாராக வேண்டும். உண்மையை நாடும், வெற்றி காணத் துடிக்கும் மனித நல விரும்பிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து படைப்புகளின், மனித வர்க்கத்தின் ஒரே இறைவனின் இறுதி மறையைப் பற்றிப் பிடித்து, மனித இனத்தை “ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற உன்னத நிலைக்கு உயர்த்தப் பாடுபட முன்வர வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.

Previous post:

Next post: