சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும்

in 2022 டிசம்பர்

சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும்

அபூ அஸீம், இலங்கை

நவம்பர் மாத தொடர்ச்சி…

எனவே அவர்கள் எத்தகையோர் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம்) கூறப்பெற்றால், அவர்களுடைய இதயங்கள் அச்சத்தால் நடுங்கும், அன்றியும் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் “பொறுமையுடன்’ சகித்துக் கொள்வோராகவும், தொழுகையைச் சரிவரக் கடைப்பிடிப்போராகவும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (இறைவனின் பாதையில்) செலவு செய்வோராகவும் இருப்பார்கள். அல்குர்ஆன் 22:35

எனவே, “பொறுமையுள்ள’ ஆண்களு(க்கு)ம், (“பொறுமையுள்ள’) பெண்களு(க்கு)ம் அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக் கின்றான். அல்குர்ஆன் 33:35

பின்னர் அவர்களிடம் வானவர்கள் ஒவ்வொரு தலைவாயில் வழியாகவும் வருவார்கள். நீங்கள் “பொறுமையைக்’ கடைப்பிடித் ததற்காக “ஸலாமுன் அலைக்கும்’ (உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக!) உங்களுடைய இறுதி வீடு மிகவும் நல்லதாயிற்று!’ (என்று) வானவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 13:24)

ஒரு முறை; அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “அல்லாஹ்வின் படைப்பில் முதன் முதலாகச் சொர்க்கம் செல்பவர்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் “அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்றார்கள். (அப்போது) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் படைப்பில் முதன் முதலாகச் சொர்க்கத்தில் நுழைபவர்கள் (பொறுமையாளர்களான) ஏழை முஹாஜிர்கள் ஆவார்கள் (உலகில்) அவர்களுக்கு எல்லைகள் மூடப்படும் பிரச்சனைகளில் கேடயமாக்கப்படுவார்கள். அவர்களில் ஒருவர் தனது ஆசைகளை நெஞ்சில் புதைத்துக் கொண்டு அவற்றை நிறைவேற்ற இயலாமலேயே (பொறுமையாளராக) இறந்து போகிறார்.

உயர்ந்தோன் அல்லாஹ் தான் விரும்பிய வானவர்களிடம் நீங்கள் அம்மக்களிடம் சென்று முகமன் கூறுங்கள் என்பான் அதற்கு அவர்கள் நாங்கள் உன்னால் தேர்ந் தெடுக்கப்பட்டு உனது வானத்தில் வசிப்பவர்கள் நாங்கள்தான் இரவு பகலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதித்துக் கொண்டும் உனது தூய்மையைப் போற்றிக் கொண்டும் இருக்கிறோமே! நாங்கள் இம்மக்களிடம் சென்று அவர்களுக்கு முகமன் கூற வேண்டும் என்று எங்களுக்குக் கட்டளையிடுகிறாயே! எங்களை விட மேலாக நீ தேர்ந்தெடுத்துள்ள இவர்கள் யார்? என்று வினவுவார்கள்.

அதற்கு அல்லாஹ் அவர்கள் எனக்கு இணையாக்காமல், எனது வழியில் போராடிய, எனது வழியில் துன்புறுத்தப்பட்ட (போதிலும் பொறுத்துக்கொண்டு) என்னை மட்டுமே வழிபட்ட நல்லடியார்கள் ஆவர். அவர்களுக்கு (உலகில்) எல்லைகள் மூடப்பட்டன. பிரச்சனைகளில் கேடயமாக்கப்பட்டனர் (பொறுமையாளர்களான) அவர் களில் ஒருவர் தமது ஆசைகள் எதையும் நிறைவேற்ற இயலாமல் நெஞ்சில் புதைத்துக் கொண்டே (பொறுமையுடன்) இறந்து போனார் என்று கூறுவான்.

அப்போது வானவர்கள் ஒவ்வொரு வாசல்களின் வழியாகவும் அவர்களிடம் வந்து (உலகில் பலவீனமானவர்களாக இருந்த நிலையில்) நீங்கள் பொறுமை காத்ததன் பலனாக உங்கள்மீது சாந்தி நிலவட்டுமாக! மறுமையின் முடிவு உங்களுக்கு நல்லதாகிவிட்டது என்று கூறுவார்கள். (அப்துல்லாஹ் பின் அம்ர்(ரழி) அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்(ரழி) முஸ்னது அஹ்மத், தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 4, பக்கம் 887-889)

பொறுமை கொண்டோர் மறுமை நாளில்:

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரழி) அவர்கள் அறிவித்தார்கள். நாங்கள், இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் எங்கள் இறை வனை நாங்கள் காண்போமா? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் (மேகமூட்டமில்லாது) வானம் தெளிவாக இருக்கையில் சூரியனையும், சந்திரனையும் பார்க்க நீங்கள் (முண்டியடித்துக் கொண்டு) சிரமப்படுவீர்களா? என்று கேட்டார்கள். நாங்கள் “இல்லை’ என்று பதிலளித்தோம். இவ்விரண்டையும் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப் போன்றே அந்த நாளில் உங்களுடைய இறைவனைக் காணவும் நீங்கள் சிரமப்படமாட்டீர்கள் என்று கூறிவிட்டு(ப்பின்வருமாறு) விளக்கினார்கள்.

(மறுமை நாளில்) அழைப்பாளர் ஒருவர், ஒவ்வொரு சமுதாயத்தாரும் தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும் என்று அழைப்பு விடுப்பார். அப்போது சிலுவை வணங்கிகள் தங்களது சிலுவையுடனும், சிலை வணங்கிகள் தங்களது சிலைகளுடனும், ஒவ்வொரு (பொய்த்) தெய்வ வழிபாட்டார்கள் தத்தம் கடவுள்களுடனும் செல்வார்கள். முடிவில் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டு நன்மைகளும் புரிந்து கொண்டிருந்த நல்லவர்கள் அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்துவந்த) பாவிகள், மேலும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். பின்னர் நரகம் கொணரப்பட்டுக் கானலைப் போன்று அவர்களுக்குக் காட்டப்படும். அப்போது யூதர்களிடம், நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள் நாங்கள் அல்லாஹ்வின் மகன் உஸைர் அவர்களை வணங்கிக் கொண்டிருந்தோம் என்று பதிலளிப்பார்கள்.

அப்போது அவர்களிடம், நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ்வுக்கு மனைவியோ, மக்களோ இருக்கவில்லை என்று சொல்லப்படும். பிறகு அவர்களிடம், இப்போது நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? என்று கேட்கப்படும். அதற்கவர்கள், எங்களுக்கு (குடிப்பதற்கு நீர்) புகட்டுவாயாக! என்பார்கள். அப்போது (அவர்களிடம் கானலைப் போன்று நரகம் காட்டப்பட்டு குடியுங்கள் என்று கூறப்படும். (அதைக் குடிக்க முனையும்போது) அவர்கள் நரகத்தில் விழுந்து விடுவார்கள்.

பின்னர் கிறிஸ்தவர்களிடம் நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் மகன் மஸீஹை(ஈசாவை) நாங்கள் வணங்கிக் கொண்டிருந்தோம் என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம் நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள், அல் லாஹ்வுக்கு மனைவியோ மக்களோ இருக்க வில்லை என்று கூறப்பட்ட பின் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், நீ எங்களுக்கு (நீர்) புகட்டுவதையே நாங்கள் விரும்புகிறோம் என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம் (கானலைப் போன்று காட்சி தரும் நரகத்தைக் காட்டி) குடியுங்கள் என்று கூறப்படும். அப்போது நரகத்தில் அவர்களும் விழுந்துவிடுவார்கள்.

இறுதியில் அல்லாஹ்வை (மட்டும்) வணங்கிக் (கொண்டு நன்மைகளும் புரிந்து) கொண்டிருந்த நல்லோர் அல்லது(அல்லாஹ் வையும் வணங்கிக் கொண்டு சில பாவங்களும் புரிந்து வந்த) தீயோர் மட்டும் எஞ்சியிருப்பர். அவர்களிடம் மக்கள் (அனைவ ரும் தத்தம் தெய்வங்களுக்குப் பின்னால்) சென்றார்களே! நீங்கள் மட்டும் ஏன் இங்கேயே இருந்து கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், (உலகத்தில்) நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும் (அவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிராமல் பொறுமையுடன்) அவர்களை விட்டுப் பிரிந்திருந்தோம். (இப்போது மட்டும் அவர்கள் பின்னால் நாங்கள் செல்வோமா? என்ன?) இங்கு ஓர் அழைப்பாளர் ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலக வாழ்வில்) தாம் வணங்கிக் கொண்டிருந்த அவர்களுடன் சேர்ந்து கொள்ளட்டும் என்று அழைக்கக் கேட்டோம். நாங்கள் (வணங் கிக் கொண்டிருந்த) எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என்று கூறுவார் கள். (முழுமையாக அறிய பாருங்கள் புகாரி : 7439)

எனவே முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள். (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள். (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர் கள். அல்குர்ஆன் 3:200

அல்லாஹ் நேசிக்கும் பொறுமையாளர்கள்:

மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில் அறப்)போர் செய்தனர், எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்துவிடவில்லை. பலஹீனம் அடைந்துவிடவுமில்லை, (எதிரிகளுக்குப்) பணிந்துவிடவுமில்லை. அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான். அல்குர்ஆன் 3:146

பொறுமை என்பது பயபக்தியுடையவர்களால்தான் முடியுமானதாகும்:

புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக் கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும் இறுதி(த் தீர்ப்பு)நாளின் மீதும் மலக்குகளின் மீதும் வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தனது) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன் (களான ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல், இன்னும் தொழு கையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல் (இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தமது வாக்குறுதிகளை நிறைவேற்று வோரும், (வறுமை இழப்பு போன்ற)துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற் றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள், இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள் : அல்குர்ஆன் 2 :177)

மேலும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்படுபவர்களால்தான் பொறுமை கொள்ள முடியும்.

(இன்னும் அவர்கள்) பொறுமையுடையோராகவும், உண்மையாளராகவும், அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்படுவோராகவும், (இறைவன் பாதையில்) தான தர்மங்கள் செய்வோராகவும், (இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பர்.  அல்குர்ஆன் 3:17

உள்ளச்சம் உடையவர்களுக்கே முடியுமானதாக இருக்கும் :

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள் எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். அல்குர்ஆன் 2:45

எனினும் அல்லாஹ்வின் உதவி இல்லாமல் யாராலும் பொறுமையாக இருக்க முடியாது. (நபியே!) இன்னும் நீர் பொறுமையுடன் இருப்பீராக, எனினும் அல்லாஹ்வின் உதவியில்லாமல் நீர் பொறுமையுடனே இருக்க முடியாது. அவர்களுக்காக நீர் (எது பற்றியும்) கவலைப்பட வேண்டாம். அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளை பற்றி நீர்(மன) நெருக்கடியில் ஆகிவிட வேண்டாம். அல்குர்ஆன் 16:127 (முடிவுற்றது)
————————–

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ, குண்டூர்

  1. இறைச்செய்தி (வஹி) எவ்வாறு வருவ தாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    மணி ஓசையைப் போன்று வரும். புகாரி 2
  2. நம்பிக்கை கொண்டவர்களிடம் அல்குர்ஆன் வசனங்கள் நினைவூட்டப்பட்டால் என்ன செய்வார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
    சுஜூது(ஸஜ்தா) செய்தவர்களாக விழுவார்கள்.  அல்குர்ஆன் 32:15
  3. ஸக்கூம் மரத்தின் பழக்குலைகள் எவ்வாறு இருக்கும் என்று அல்லாஹ் கூறினான்?
    ஷைத்தானின் தலை போன்று இருக்கும். அல்குர்ஆன் 37:65
  4. இறப்பின் நெருக்கத்தில் இருப்போருக்கு எதனை நினைவுபடுத்த நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    லாஇலாஹா இல்லல்லாஹ். முஸ்லிம்:1673
  5. மனிதர்களிலேயே அல்லாஹ்விடம் மிகவும் கோபத்திற்குரியவன் யார்?
    உண்மையை மறைத்து பொய்யை நிலைநாட்ட கடுமையாக சச்சரவு செய்பவன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் : 5183
  6. வலப்புறத்தார் என்பவர் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
    முள்ளில்லா இலந்தை மரத்தின் கீழிருப்பவர். அல்குர்ஆன் : 56:27,28
  7. நபி(ஸல்) அவர்களின் குறிப்புப் பெயர் என்ன?
    அபுல் காசிம். முஸ்லிம்: 4319, 4321, 4322, 4323, 4324, 4325.
  8. முனாஃபிக் என்று யாரை குறித்து அல்லாஹ் கூறுகிறான்?
    நயவஞ்சகர்கள். அல்குர்ஆன் 9:64
  9. புகல் என்றால் என்ன என்று அல்லாஹ் கூறுகிறான்?
    போலி காரணம். அல்குர்ஆன் 9:90
  10. ஸாதிகீன் என்று யாரை அல்லாஹ் குறிப் பிடுகிறான்?
    உண்மையாளர். அல்குர்ஆன் 7:70
  11. ஸப்து என்றால் என்ன என அல்லாஹ் கூறுகிறான்?
    சனிக்கிழமை. அல்குர்ஆன் 7:163, 4:47
  12. அன்ஃபால் என்றால் என்ன என அல்லாஹ் கூறுகிறான்?
    வெற்றிப் பொருள். (போரில் கிடைத்த)  அல்குர்ஆன் 8:1
  13. முஷ்ரிக்குகள் என யாரை அல்லாஹ் கூறுகிறான்?
    இணை வைப்பவர்கள்.   அல்குர்ஆன் 9:113, 6:148
  14. நடுத் தொழுகை பற்றி அல்லாஹ் கூறும் அத்தியாயம் எது?
    அல்குர்ஆன் அத்தியாயம் 2, வசனம் 238
  15. ஃபாஸிக் என்றால் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
    பாவி. அல்குர்ஆன் 5:59,57:16,59:5,9:6
  16. ஹவாரிய்யூன்கள் என்றால் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
    சீடர். அல்குர்ஆன் 5:111
  17. நகரங்களின் தாய் என என அல்லாஹ் கூறுகிறான்?
    மக்கா (சவுதீ அரேபியா) அல்குர்ஆன் 6:92
  18. ரப்பானிய்யூன் என்றால் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
    மேதை. அல்குர்ஆன் 5:44
  19. அஹ்பார் எனறால் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
    அறிஞர். அல்குர்ஆன் 5:44
  20. ஜராத என்றால் என்ன என்று அல்லாஹ் கூறுகிறான்?
    வெட்டுக்கிளி. அல்குர்ஆன் 7:133

Previous post:

Next post: