முஸ்லிம்களே ஒன்றுபட்டு! ஒரே அமீரின் கீழ் செயல்படுவோம் வாருங்கள்!

in 2023 ஏப்ரல்

முஸ்லிம்களே ஒன்றுபட்டு! ஒரே அமீரின் கீழ் செயல்படுவோம் வாருங்கள்!

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

1444 வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ்வின் கட்டளைப்படி நபி(ஸல்) அவர்கள் அமைத்து, நடத்திக்காட்டி, நமக்காக விட்டுச் சென்றஜமாஅத்துல் முஸ்லிமீன்சமூக அமைப்பில் முஸ்லிம்கள் தங்களுக் கிடையேயுள்ள வேற்றுமைகளை மறந்து இணைந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அதுபற்றிய தெளிவுகளை 1991 வருடங்களில் அந்நஜாத்தில் வெளியிட்டிருந்தோம். மறந்துவிட்ட சகோதர சகோதரிகள் மீண்டும் உணர்வு பெற அக்கட்டுரையை மீண்டும் இந்த இதழில் இடம் பெறச் செய்துள்ளோம்.

சுமார் 1444 வருடங்களுக்கு முன் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களால் அமுல் படுத்தப்பட்டு ஓர் இஸ்லாமிய வல்லரசு அமைத்து காட்டப்பட்டு விட்டது. பெரும்பாலான முஸ்லிம்கள் ஷைத்தானின் தூண்டுதலால் அல்லாஹ் கொடுத்த அத்திட்டத்தைக் கைவிட்டு, மனித திட்டங்களை இஸ்லாத்தின் பெயரால் செயல்படுத்தி வருகிறார்கள். முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கு இதுவே பிரதான காரணமாகும். எனவே இப்போது நமது தலையாய கடமை இஸ்லாத்தில் நுழைந்துள்ள மனித அபிப்பிராயங்களை நீக்கி, நபி(ஸல்) அவர்கள் கொடுத்த திட்டத்தை  அமுல்படுத்துவது  மட்டுமே.

தங்களை இஸ்லாமிய சிந்தனையாளர் கள், இஸ்லாமிய அடிப்படையிலான செயல்திறன் மிக்கவர்கள் என்று சொல்லிக் கொண்டு இஸ்லாத்தை நிலைநிறுத்த பாடுபடுபவர்களையும் ஷைத்தான் தனது மாய வலையில் சிக்கவைத்துள்ளான் என்பது வேதனைக்குரிய வி­யமாகும். எனவே அவற்றைத் தெளிவாக விளங்கி அவற்றை விட்டு நீக்குவது ஒவ்வொரு முஸ்லிமின் நீங்காக் கடமையாகும். அவற்றை விரிவாகப்  பார்ப்போம்.

ஷைத்தானின் மாயை :1

மனித அபிப்பிராயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மார்க்க வியங்களில் சிறியது. பெரியது என இவர்களாகவே பாகுபடுத்தி, சிறிய விசயங்களில் கவனம் செலுத்துவதை தேவையற்ற செயலாக கருதுகின்றனர். தேவையற்ற எந்த ஒரு விசயத்திலும் நபி(ஸல்) அவரகள் ஈடுபட்டதில்லை. இந்த நவீன சிந்தனையாளர்கள் நினைப்பது போல் சின்ன விசயங்கள் தேவையற்றனவாக இருந்தால், நபி(ஸல்) அவர்கள் அவற்றில் கவனம் செலுத்தியே இருக்க மாட்டார்கள். உண்மை என்ன தெரியுமா?  சிறிய விசயமாக இருந்தாலும், பெரிய விசயமாக இருந்தாலும் அவை அனைத்தும் இருக்க வேண்டிய முறைப்படி இருந்தால் மட்டுமே எதுவும் இயங்க முடியும். இல்லையயன்றால், பெயரளவில் அந்த ஒன்று இருக்குமே யல்லாமல் இயங்க முடியாது. உதாரணமாக,

ரூ. 4 லட்சம் பெருமதியான ஓர் உயர் ரக கார், அதில் பிரதான இன்ஜினிலிருந்து ஏனைய நான்கு டயர், டியூப் அனைத்தும் சரியாகவே இருக்கின்றன. டாங்க் நிறைய பெட்ரோலும் இருக்கிறது. மூன்று டயர் களில் காற்று சரியாக இருக்கிறது. ஒரே ஒரு டயரில் மட்டுமே காற்று இல்லை. (டய ருக்கு வெளியே காற்று தாராளமாக இருக் கிறது) பெட்ரோல் பங்கில் காற்று ஓசியில் கிடைக்கிறது. காசு கொடுப்பதில்லை. ரூ. 4 இலட்சம் காருக்கு இந்த ஓசிக் காற்று சின்னஞ் சிறிய விசயம்தான். எனவே ஒரு டயரில் காற்று இல்லாத நிலையில் இன் ஜினை இயங்கச் செய்தாலும், அந்த காரை முறையாக இயங்கச் செய்ய இந்த புத்திசாலி களால் முடியுமா? 100 மைல் பிரயாணத்தில் 75 மைலை அந்த காரைக் கொண்டு கடந்து விடலாம் என்று இவர்கள் சொல்ல முன் வருவார்களா? இன்னொரு உதாரணம்.

ஒரு கைக்கெடிகாரம், அதனது பிரதான உறுப்புகள் அனைத்தும் சரியாக இருக்கின்றன. ஏர்ஸ் பிரிங்கை ஸ்டெட் துவாரத்தில் செலுத்தி அது நகர்ந்து விடா மல் இருக்கச் சொருகும் சிறிய பின் மட்டுமே இல்லை. சின்னஞ்சிறிய வி­யம் தான். அது இல்லாமல் கடிகாரம் இயங்க முடியும். ஆக ஒன்று முறையாக இயங்க வேண்டுமென்றால், அதனது பெரிய வி­யத்திலிருந்து சிறிய விசயம் வரை எப்படியிருக்க வேண்டுமோ அப்படியே இருக்க வேண்டும். அப்போதுதான் அது இயங்கும். இதை மறுக்காத புத்திசாலிகள் இஸ்லாம் இயங்க மட்டும் சிறிய விசயங்களில் கவனம் செலுத்த வேண்டியதில்லை என்று சொல்வதாக இருந்தால் அவர்கள் ஷைத்தானின் இந்த மாய வலையிலிருந்து விடுபட வில்லை என்பதுதானே அதன் பொருளாகும். அறிவுடையோர் அந்த வலையை அறுத்தெரிய  முயற்சிப்பார்களாக!

ஷைத்தானின் மாயை : 2

நபி(ஸல்) அவர்கள் காலத்திலிருந்து சொற்ப காலம் வரை இயங்கிக் கொண்டிருந்த இஸ்லாம். அதன்பின் மனித அபிப்பிராயங்கள் புகுத்தப்பட்டு முடக்கப்பட்டது. இஸ்லாத்தை மீண்டும் இயங்க வைக்க பல முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. இன்று அந்த முயற்சியில் ஈடுபடுபவர்கள் இஸ்லாத்தை இயங்க வைக்கப் பாடுபடு கிறோம் என்று சொல்லி, அவர்கள் அதனை இயக்க புதியதொரு இயக்கத்தை உண் டாக்கி விடுகிறார்கள். அதன் விளைவு இஸ்லாம் இயங்குவதற்கு பதிலாக அவர்களின் இயக்கம் இயங்க ஆரம்பித்து விடுகின்றது. அதன் மூலம் இவர்கள் உலக ஆதாயம் அடைகிறார்களே யல்லாமல், இஸ்லாம் இயங்குவதாகவோ, அதைக் கொண்டு மக்கள் பலன் அடைவதாகவோ இல்லை. சுருங்கச் சொன்னால் இஸ்லாத்தை இயக்க, இயக்கம் அமைத்தவர்கள் தங்களின் இயக்கம் முடங்காமல் இருக்க இஸ்லாத்தை முடக்கி  விடுகிறார்கள்.

“´ர்க்‘, “பித்அத்துகளை விட்டு விடுபட்டு சத்திய முயற்சிகளில் ஈடுபட்டிருப்போரும், பல இயக்கப் பெயர்களில் இயங்கி வருவதால், சில சமயங்களில் தங்களின் இயக்கப் பெயரே முன்னணியில் இருக்க வேண்டும் என்று அவர்களுக்கிடையில் போட்டா போட்டியும், அதனாலேயே கருத்து வேறுபாடுகளும், கசப்புணர்வுகளும் ஏற்பட்டு மேலும் பிளவுகள் வலு வடைகின்றன. தங்கள் இயக்கத்திலுள்ள பாசத்தினால், அதற்கு கெளரவக் குறைவு ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில், தங்கள் இயக்கத் தலைவர் மற்றும் முக்கிய அங்கத்தினர்களின் குறைகளைத் தெளிவாகத் தெரிந்த நிலையிலும், அவற்றைக் கண்டித்துத் திருத்த முற்படுவதில்லை. இயக்க வழிபாடு அவர்களை இந்த அளவு செயலிழக்கச் செய்து விடுகிறது.

இவ்வுலகில் எந்த ஒரு முயற்சி செய்வதாக இருந்தாலும் பொருளாதாரம் அவசியப்படுகிறது. பொருளாதாரம் இல்லா மல் ஓர் இயக்கம் இயங்குவது சாத்திய மில்லை ஓர் இயக்கத்தை அமைத்து வளர்த்து வரும்போது அதன் வளர்ச்சிக் கேற்றவாறு பொருளாதாரத் தேவையும் அதிகப்படுகின்றது. இதற்கும் ஏற்பாடாகி இயக்கம் சிறப்பாக செயல்படும் நிலையில் இருக்கும்போது, ஷைத்தான் அந்தப் பொரு ளாதாரத்தைக் கொடுப்பவர்களின் மூலம் தனது திறமையைக் காட்ட ஆரம்பித்து விடு கின்றான். அவர்கள் மூலம் மனித அபிப்பிரா யங்களை மார்க்கத்தில் நுழைக்க தூண்டு கின்றான். பொருளாதார உதவி செய்வதால் அவர்களை அறியாமலேயே அவர்களிடம் ஓர் ஆதிக்க உணர்வு ஏற்பட்டு விடுகின்றது. இதன் முடிவு, ஒன்று பொருளாதார சிக்க லில் இவர்களின் இயக்கம் முடங்க வேண் டும். அல்லது இவர்களின் இயக்கம் இயங்க பொருளாதார உதவி அளிப்பவர்களின் மனித அபிப்பிராயத்தை ஏற்று சத்தியத்தை முடக்க வேண்டும். அதன் விளைவு இவர் கள் எந்த இஸ்லாத்தை இயங்க வைக்க இயக்கம் ஆரம்பித்தார்களோ அந்த இயக் கம் இயங்க, பிரதான இஸ்லாத்தின் இயக் கத்தை முடக்கி விடுகிறார்கள். ஆம், அவர் களின் இயக்கம் முடங்கினால் அது அவர்களின் மானப் பிரச்சினை. கெளரவப் பிரச் சினை எனக் கருதுகின்றனர். இந்த நிலையில் இஸ்லாம் முடங்குவது அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியாது. இலட்சியத்தை அடைய வகுத்த வழி இலட்சியத்தை விட முக்கியமானதாக ஆகிவிட்டது. இதில் சிக்குபவர்களை அறிஞர்களை ஏற்றுக் கொள்ள முடியுமா?

தாங்கள் செய்வது குர்ஆன், ஹதீதுக்கு முரணானது என்று நன்றாக அறிந்து கொண்டே, தங்கள் இயக்க நலன் கருதி அதனை செய்பவர்களை இயக்க வழிபாட் டுக்காரர்கள் என்று அழைப்பதில் தவறுண்டோ? நீங்கள் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் எங்கள் இயக்க விதிகள் எங்கள் கைகளை கட்டியுள்ளன என்று ஒரு இயக்கத்தில் பிரதான உறுப்பினர் ஒருவர்  கூறியது  இங்கு  நமது சிந்தனைக்குரியது. இந்த துர்பாக்கிய நிலைகளைக் கடந்து இஸ்லாத்தை இயங்க வைக்கும் நிலையில் எந்த இயக்கமும் இயங்குவதாக நமக்குத் தெரியவில்லை. அப்படி இருந்தால், இது சின்ன விசயம் தானே என்று இஸ்லாத்தின் எந்த அம்சத்தையும் உதாசீனம் செய்யும் நிலையில் அந்த இயக்கம் இருக்காது.

நபி(ஸல்) அவர்கள் தங்களுக்கு அருளப்பட்ட குர்ஆனைக் கொண்டு 23 வருட கால அவகாசத்தில், முடங்கிக் கிடந்த இஸ்லாத்தை முறையாக இயக்கிக் காட்டி னார்கள். இன்று பல இயக்கங்கள் அதை விட அதிக காலங்கள்  உழைத்தும், இஸ்லாத்தை முறையாக இயங்க வைக்க முடியவில்லை. இதிலிருந்தே அந்த இயக்கங்கள் மனித அபிப்பிராயங்களை மார்க்கத்தில் கலக்காமல் செயல்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மனித அபிப்பிராயங்களை மார்க்கத்தில் கலக்காமல் செயல்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மனித அபிப்பிராரயங்கள் கலக்காத நிலையில் குர்ஆனும், அதற்கு விளக்க உரையான நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளும் மட்டுமே  மார்க்கமாகக் கொள்ளப்பட்டிருந்தால், நிச்சயமாக இஸ்லாத்தை முறையாக இயங்க வைத்திருக்க முடியும்.

எமது இந்த முயற்சியில் இயக்க ஆதிக்கம் ஏற்படாமல் சிறிய விசயத்திலிருந்து பெரிய விசயம் வரை கவனிக்கப் பட்டு, குர்ஆன், ஹதீத் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டு மனித அபிப்பிராயங்கள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுமேயானால், நிச்சயமாக இன்னும் நிச்சயமாக எமது இந்த முயற்சியினால் முடங்கிக் கிடக்கும் இஸ்லாம், முறையாக இயக்க ஆரம்பித்து விடும். மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் நுழைய ஆரம்பித்து விடுவார்கள் என்பதில் ஐயமில்லை.  இன்ஷா அல்லாஹ்.

ஷைத்தானின் மாயை :3

அடுத்து இஸ்லாத்தை முடங்கச் செய்ய, ஷைத்தான் செய்த பெரியதொரு சூழ்ச்சி, தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பெரும்பாலான இயக்கங்கள் இயக்கங்கள் அமீருடைய வி­யத்தில் அல்குர்ஆன் 4:59 வசனம் காட்டும் வழிகாட்டலுக்கு மாற்றமாக ஜனநாயகத்தின் பெயரால் மனித அபிப்பிராயத்தைப் புகுத்தியதாகும்.

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். இன்னும் அல்லாஹ்வின் தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விசயத்தில் பிணக்கு ஏற்படுமானால், மெய்யா கவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் அதை அல்லாஹ்விட மும், அவன் தூதரிட மும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.  (அல்குர்ஆன் 4:59)

இன்று தலைவர்கள், அமீர்கள், கமிட்டி என்ற அடிப்படையில் பெரும் பான்மையினரின் விருப்பப்படி தேர்ந் தெடுக்கப்படுகின்றனர். இதனை ஜனநாய கம் என்று பெருமையாக பேசிக் கொள்கின் றனர். புத்திசாலிகளையும் ஏமாற்றும் ஒரு அமைப்பே ஜனநாயக அமைப்பு என்பதை தங்களை புத்திசாலிகள் என்பவர்களும் புரிந்து கொள்வதாக இல்லை. 11 நபர்கள் கொண்ட கமிட்டியில், 6 நபர்கள் மிகவும் தவறான ஒரு அபிப்பிராயத்தில் இருந்தால், எஞ்சியுள்ள 5 நபர்கள் மிகச் சரியான முடிவில் இருந்தாலும், இறுதியில் பெரும்பான்மையினரின் விருப்பமே அமுல் செய்யப்படும். இப்போது இந்த மிகத் தவறான முடிவுக்கு அந்த 5 நபர்களும் உடந்தையாகி விடுகின்றனர். இங்கு அறிஞர்களும் அறிவிலிகளின் நிலைக்கு நிர்பந்திக் கப்படுகிறார்கள்.

அதேபோல் காலத்திற்குக் காலம் அமீரை மாற்றுவதும், உடன் இருப்பவர்களின் அபிப்பிராயங்களை அனுசரித்தே அமீர் செயல்பட வேண்டும் என்று இவர்களாக முடிவு செய்து வைத்திருப்பதும், சத்தியத்தை மறைக்கத் துணை போவதா கும். இவை காரணமாக அமீருக்கு தலைவருக்கு அல்லாஹ்வை அதிருப்தி செய்யும் அக்கறையே மிகைத்து விடுகிறது. காரணம், உடன் இருப்பவர்களின் அதிருப்தி, இங்கேயே அமீரைப் பாதிக்கும். அல்லாஹ்வுடைய அதிருப்தியின் விளைவு நாளை மறுமையில் சந்திக்கும் ஒன்றாக இருக்கிறது. எனவே, சத்தியம் மறைக்கப்பட்டு, இஸ்லாம் முடக்கப்பட இவை காரணங்களாக  அமைகின்றன.

மேலும் இப்படி பெரும்பான்மையின ரின் விருப்பப்படி முடிவுகள் எடுக்கப்படுவதால், அந்த முடிவுகள் குர்ஆன், ஹதீத்படி இருக்கிறதா? இல்லையா? என்ற சிந்தனையும் மங்கி விடுகின்றது. பெரும்பான்மை யினரின் முடிவு என்ற மாயையில் சத்தியம் முடக்கப்பட்டு விடுகின்றது. இப்படிப்பட்ட கெடுதிகளைத் தடுத்து சத்தியம் நிலை நாட்டப்பட இஸ்லாம் இயங்கிக் கொண்டிருப்பதற்கு அல்லாஹ்வின் திட்டமே மிகச் சரியானதாகும்.

முஸ்லிம்கள் அனைவரும் கூடி பெரும்பான்மையினர் அமீரை தேர்வு செய்ய வேண்டும் என்ற நிலையும் இஸ்லாத்தில் இல்லை. அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கும் அறிஞர்கள் ஒரு சிலர் கலந்தாலோசனை செய்து இருப்பவர்களில் மிகவும் தகுதி வாய்ந்தவரை அமீராக தெரிவு செய்ய இஸ்லாம் பணிக்கிறது. இப்படி இருப்பவர் களில் மிகவும் தகுதி வாய்ந்தவர். அமீராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், குர்ஆன், ஹதீத் அடிப்படையில் முடிவு எடுக்கும் முழு அதிகாரத்தை அமீருக்கே இஸ்லாம் வழங்குகின்றது. கூட இருப்பவர்களின் ஆலோசனைகளைக் கேட்டும், சில சந்தர்ப்பங்களில் கேட்காமலும் முடிவெடுக்கும் அதிகாரம் அமீருக்குண்டு. கூட இருப்பவர்கள் அனைவரின் ஆலோசனைக்கும் மாற்ற மாக முடிவெடுக்கும் அதிகாரமும் அமீருக் குண்டு.

உதாரணமாக அபூபக்கர்(ரழி) அவர் கள் மிகவும் நெருக்கடியான நிலையில் அமீ ராகத் தெரிவு செய்யப்படுகிறார்கள். நாட்டில் பல காரணங்களால் கொந்தளிப்பு நிலவுகின்றது. இந்த நிலையில் ஒரு கூட்டம் ஜகாத் கொடுக்க மறுக்கின்றது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தருணம் இது வல்ல, நிலைமை மிக மோசமாக இருக்கிறது. சிறிது விட்டுப்பிடியுங்கள் என்று அபூ பக்கர்(ரழி) அவர்களை, அமீராகத் தெரிவு செய்ய முழுமுதல் காரணமாக இருந்த உமர் (ரழி) அவர்கள் முதற்கொண்டு, உடன் இருந்த அனைவரும் இந்த ஆலோசனையைத் தருகிறார்கள். அபூபக்கர்(ரழி), உடன் இருந்த அனைவரின் ஆலோசனைகளையும் நிராகரித்துவிட்டு, இக்கட்டான அந்த நிலையிலும்ஜகாத்கொடுக்க மறுத்தவர் கள் மீது நடவடிக்கை எடுத்தார்கள்.

இங்கு அமீரின் கண்முன் குர்ஆன், ஹதீத் பிரதான இடத்தைப் பெறுகின்றன. உடன் இருப்பவர்களின் திருப்திக்காக வளைந்து கொடுக்கும் எண்ணம் தோன்றா திருக்க இஸ்லாம் வழி வகுத்திருக்கிறது.

அதே சமயம்அமீர்இஷ்டப்பட்ட தையயல்லாம் செய்துவிட முடியாது. குர்ஆன், ஹதீதுக்கு மாற்றமாகஅமீர்ஒரு செயலில் இறங்கினால் உடன் இருக்கும் ஆலோசகர்கள் மட்டுமல்ல, சாதாரண ஒரு நபரும் அமீரின் அந்தத் தவறைச் சுட்டிக் காட்ட பூரண உரிமை பெற்றிருக்கிறார்கள். அமீருக்குக் கட்டுப்பட்டு நடுப்பதெல்லாம், நன்மையான காரியங் களில் மட்டுமே, என்று மார்க்கம் தெளிவாகக் கூறுகின்றது. அதற்கு அளவுகோலாக குர்ஆனையும், ஹதீதையும் எடுத்துக் கொள்ளும்படி 4:59 வசனம் தெளிவுபடுத்துகின்றது.

மார்க்கத்தில் மனித அபிப்பிராயத்தை  நுழைத்தல், இன்றைய அரசியலில் நடப்பது போல் செல்வாக்கு, பணம், குலம், கோத்திரம் இவற்றைக் கொண்டு கோஷ்டிப் பிரிவுகளை உண்டாக்கிக் கொண்டு தங்களின் பலத்தைக் காட்டி அமீரைதலைவரை தங்கள் நோக்கத்திற்கு இணங்கச் செய்தல், சத்தியத்தை விட்டும் பிறழச் செய்தல் போன்ற துர்ச்செயல்கள் நடைபெறாமல் இந்த அழகிய முறை மூலம் தடுக்கப்பட்டிருக் கிறது.

ஒரு சந்தேகம்: முடிவு செய்யும் முழு அதிகாரம் அமீருக்கு மட்டுமே உண்டு. ஆலோசனை கூறுபவர்கள் அனைவரின் கருத்தையும் நிராகரித்து விட்டு முடிவு எடுக் கும் அதிகாரமும் அமீருக்கு உண்டு என்றால் பின் ஏன் அவர் உடன் இருப்பவர்களின் ஆலோசனைகளைக் கேட்க மார்க்கம் வலியுறுத்துகின்றது என்பதாகும். ஒரு சாதாரண மனிதனிடத்திலும் உயர்ந்த சிறந்த ஆலோசனை தோன்றலாம். அமீரின் சிந்தனையிலில்லாத சிறந்த ஆலோசனையைத் தந்து விடலாம். மனித இயல்புப்படி அமீர் குர் ஆனை, ஹதீதை மறந்து ஒரு முடிவு செய் யும் போது அவருக்கு அதனை நினைவுபடுத்தலாம். ஆக இப்படி அமீர் குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் மிக பொருத்தமான, சிறந்த நல்ல முடிவை எடுக்க அவருக்கு உதவி செய் யும் வகையிலும், அமீர் குர்ஆன், ஹதீத் அடிப்படையில் செயல்படுகிறாரா? என்று கண்காணிக்கவும் இந்த ஆலோசனை முறையை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அதல்லாமல் மனித அபிப்பிராயங்களை மார்க்கத்தில் புகுத்த, இந்த ஆலோசனை முறைக்கு இஸ்லாம் வழிவகுக்கவில்லை. அதிலும் பெரும்பான்மை என்ற ஆயுதத்தை வைத்துக் கொண்டு, அமீரை தங்கள் இஷ்டத்திற்கு வளைக்க இஸ்லாம் கண்டிப்பாக அனுமதி வழங்கவில்லை. இது சத்தியம் மறைக்கப்பட்டு இஸ்லாத்தை முடங்கச் செய்ய ஷைத்தான் திட்டமிட்டுத் தந்துள்ள, மிக அழகாகத் தெரியும் ஒரு நச்சுத் திட்டமாகும். அமீரின் செயலில் சந்தேகம் வந்தால் அதனைத் துணிந்து நேரில் கேட்டு சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள மார்க்கம் வலியு றுத்துகிறது என்பதற்கு, ஜும்ஆ பிரசங்கம் செய்ய வந்த அமீர்உமர்(ரழி) அவர்களிடம் ஒவ்வொருவருக்கும் கிடைத்த பங்கை விட அதிக துணியில் எப்படி சட்டை  தைத்தீர்கள் என சந்தேகத்தைக் கிளப்பி, அதற்கு அவர்கள் தமது மகனுக்குக் கொடுக்கப்பட்ட பங்கையும் சேர்த்து சட்டைத் தைத் துள்ளதாக பெறப்பட்ட விளக்கம், தக்க சான்றாகும். அமீர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்லர். தொடுக்கப்படும் விமர் சனத்தை குர்ஆன், ஹதீத்படி தெளிவு படுத்த கடமைப்பட்டுள்ளார் அமீர்.

ஷைத்தானின் மாயை : 4

இஸ்லாத்தை இயங்க வைக்கும் முயற்சியில் ஆர்வமுடன் செயல்படும் சிந்தனையாளர் களிடையே காணப்படும் இன்னொரு தவறு:

நாம் முன்பு விளக்கியது போல் இஸ் லாத்தை இயங்க வைக்கிறோம் என்று இவர் கள் இயக்கங்களாக இயங்கி வருவதால், இவர்களுக்கிடையே போட்டி, பொறாமை வளர்ந்து விடுகின்றது. ஓர் இயக்கம் மற்ற இயக்கங்களைவிட நாங்கள் உயர்ந்தவர்கள் என்று காட்டிக்கொள்ளும் நோக்கத்துடன் செயல்பட முனைகிறார்கள். மற்றவர் களைத் தங்கள் எதிரிகளாக எண்ணிக்  கொண்டு அவர்களின் சிறிய தவறுகளை யும் பெரிதுபடுத்தி மிக வன்மையாகக் கண் டித்துப் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். அதே சமயம் தங்கள் அணியில் இருப்பவர் களின் பெருந் தவறுகளைக் கூட கண்டிக்கத் துணிவதில்லை. அப்படி கண்டிப்பதை ஹிமாலயத் தவறாகக் கருதுகின்றனர். தங்க ளுக்கொரு நியாயம், மற்றவர்களுக்கொரு நியாயம் என்ற நிலை இங்கு ஏற்பட்டு விடு கின்றது. இஸ்லாம் இதை வரவேற்கவில்லை. தவறு எங்கிருந்து வந்தாலும் அதைக் கண் டிக்க இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அப்படி கண்டிப்பதால் சத்திய பிரச்சாரத்திற்கு பங் கம் ஏற்பட்டு விடுகிறது என்று இவர்களாக தங்கள் மனித அபிப்பிராயங்களைக் கொண்டு முடிவு செய்கிறார்கள். இது தவறு. இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந்தால் சத்திய பிரச்சாரத்தில் முன்னணியில் இருப்பவர்களின் சிறு தவறுகள் முதல் உடனுக்குடன் கவனிக்கப்பட்டு, எவ்வித தாட்சண்யமும் இன்றி கண்டிக்கப்பட வேண்டும். இதுவே இஸ்லாம் இயங்குவதற்குரிய வழியாகும். சத்திய இஸ்லாத்தை மக்களுக்கு போதித்துக் கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் சிறுசிறு தவறுகளைக் கண்டித்து பல குர்ஆன் வசனங்கள் காணப்படுவது இதற்கு தெளிவான சான்றாக இருக்கிறது.

அமீர் மற்றும் பிரச்சாரத்தின் முன்ன ணியில் இருப்பவர்கள் சத்தியத்தை மறைக்க முன்வரவில்லை என்பதற்காகவும், தங்கள் மனித அபிப்பிராயங்களையும், மனோ இச் சைகளையும் ஏற்று வளைந்து கொடுக்க வில்லை என்பதற்காகவும், அவர்கள் மீது வீண் பழி சுமத்தி அவதூறு பரப்புவது பெருங்குற்றமாகும். இது ஈமானுடையவர் களின் செயல் அல்ல; இது ஷைத்தானின் வேலையாகும். அதே சமயம் அவர்களிடம் உண்மையாக இடம் பெறும் சிறிய தவறு களையும் பகிரங்கமாகக் கண்டித்து அவர் களும் மனிதர்களே, உயர்ந்த பணி செய்வதி னால் தவறு இடம் பெறாத இறையம்சம் பெற்றவர்கள் அல்லர் என்பதை நிலை நிறுத் திக் கொண்டே இருக்கவேண்டும். இதனை, நபி(ஸல்) அவர்களைக் கண்டித்து இறக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்து கின்றன. இதற்கு மாற்றமாக தீன் பணியில் ஈடுபட்டிருப்பவர்களின் சேவைகள் புகழப்பட்டு, அவர்களின் உண்மையான தவறு களும் மறைக்கப்படுவதால், அது தனி மனித வழிபாட்டிற்கு வழிவகுக்கின்றது. தரீக்காக் களின் பெயராலும், இன்னும் பல பெயர் களாலும் மனித வழிபாடு உருவானதற்கு இதுவே காரணமாகும்.

சீர்திருத்தப் பணியில் முன்னணியில் நின்று செயல்பட்டவர்களின் ஆரம்ப கால சேவைகள் பெரிதும் புகழப்பட்டு, அவர் களது பேணுதலற்ற நிலைகள், பொய் சொல் லும் நிலைகள், தொழுகை போன்ற கட்டா யக் கடமைகளில் அக்கறையற்ற நிலைகள், அவர்கள் செய்யும் தீன் பணி கெட்டு விடுமோ என்ற அச்சத்தில் மறைக்கப்பட்ட தால், அவர்கள் நிதானமிழந்து பிதற்றவும், அவர்கள் வழிகெடவும், மக்களை வழி கெடுக்கவும் காரணமாயிற்று. இதனை அறி ஞர்களும் படிப்பினையாகக் கொள்வதாக இல்லை. அவர்களது தவறுகள் சுட்டிக்காட் டப்பட்டு கண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். அது இஸ்லாத்திற்கு நலமாக அமைந்திருக் கும். எனவே, தீன் பணியில் ஈடுபடுபவர்களின், குறிப்பாக அதில் முன்னணியில் இருப்பவர்களின் உண்மையான தவறுகள் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு, திருத்தப்பட முயற்சிகள் செய்ய வேண்டும் என்பதில் சந்தேகமேயில்லை. இதுவே மனித வழிபாட்டைத் தடுக்க சிறந்த வழியாகும்.

தவறைக் கண்டித்துத் திருத்துவதில் தூர இருப்பவர்களை விட நெருக்கமாக இருப்பவர்களி டம் அதிக கண்டிப்புக் காட்டவேண்டும். ஷைத்தான் இன்று அதற்கு மாற்றமான நடைமுறையைக் கைக் கொள்ளச் செய்துள்ளான். தூரமாக இருப்பவர்களை தங்களின் எதிரிகளாகக் கருதி மிக வன்மையாகக் கண்டிப்பவர்கள். நெருக்கமாக இருப்பவர்களின் தவறுகள் கண்டிக்கப் படுவதை ஹிமாலயத் தவறாகக் கருதுகின்றனர். அடுத்து முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவர்களில் யாரையும் (சத்தியத்தை எதிர்த்து நேரடியாக நம்மோடு போராட வருபவர்களைத் தவிர மற்ற மாற்றுமத சகோதரர்களில் யாரையும் எதிரியாகக் கருதுவதும் கூடாது) நமது எதிரிகளாக எண் ணக்கூடாது. வழிகெட்டுச் செல்லும் 72 கூட்டமும் எனது உம்மத்திலுள்ளவர்களே என்று நபி(ஸல்) அவர்களே சொல்லி இருக் கும்போது, அந்த மக்களை இந்த உம்மத்திலி ருந்து வெளியேற்ற நமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? அப்படி அவர்களை வெளி யேற்றிவிட்டால், அதன்பின் அவர்களைக் கண்டிக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது? அவர்கள் நம்மவர்கள், எனவே திருந்தி நல்ல வர்களாக இருக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு அந்த கண்டிப்பு இருக்க வேண்டும். அறியாது தவறு செய்யும் பிள்ளையைக் கண்டித்துத் திருத்தும் தகப்பனின் நிலை, அந்த பிள்ளை விசயத்தில் எப்படி இருக்குமோ, அதேபோன்ற ஒரு நிலையில் கண்டிக்க வேண்டும். எதிரிகளாக எண்ணி கண்டிக்கவே கூடாது. முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவர்களைகாஃபிர்  என்று ஃபத்வா கொடுக்கவோ, அவர்களின் பின்னால் தொழக்கூடாது என்று ஃபத்வா கொடுக்கவோ முற்படக் கூடாது. இது பெரும் தவறாகும்.

இங்கு இன்னொன்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இன்ன இன்ன காரியங்கள் ச´ர்க்கை உண்டாக்கும். இன்ன இன்ன காரியங்கள் குஃப்ரை ஏற்படுத்தும் இவைகள் இஸ்லாத்தை விட்டு வெளியேறச் செய்துவிடும் என குர்ஆன், ஹதீதைக் கொண்டு பொதுவாக எச்சரித்து, அப்படிப் பட்ட தவறுகளை விட்டும் மக்களை தடுக்கப் பாடுபடுவது குஃப்ர் ஃபத்வா கொடுத்ததாக ஆகாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தகப்பன் பிள்ளையை இப்படி நீ செயல்பட்டால் நாளை கஷ்டப்படுவாய், வறுமையில் வாடுவாய், யாரும் உன்னை மதிக்க மாட்டார்கள் என்று எச்சரித்து திருத்த முற்படுவது போலாகும். இது தங்க ளுக்கென்று ஓர் அணி அமைத்துக் கொள்வதால்தான், மற்றவர்களை எதிர் அணிகளா கக் கருதி அவர்களை வரம்புமீறி இகழும் நிலையும், குஃப்ர் ஃபத்வா கொடுக்கும் நிலையும், அவர்களிடையே வரட்டு கெளரவம் பாராட்டும் நிலையும் ஏற்படு கின்றது. ஓர் உண்மை முஸ்லிமுக்கென்று ஒரு தனி அணி இருக்க முடியாது. அவர் அல்லாஹ்வின் அணியிலுள்ளவர். எனவே அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கக் கடமைப்பட்டவர். அல்லாஹ் வுக்குரிய தனித்தன்மைகள் மாசுபடுவதையும், அல்லாஹ் கொடுத்த மார்க்கம் வளைக்கப்படுவதையும், பெரும் கெளரவப் பிரச்சினையாக ஒரு முஸ்லிம் எண்ண வேண்டுமேயல்லாமல், சத்தியத்தை மறைத்து தனது வரட்டு கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள  ஒருபோதும்  முனையக்  கூடாது.

மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ள தவறுகளை விட்டு விடுபட்டு, நமது இந்த முயற்சியில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதே நமது பேரவாவாகும். தீனுடைய நலனைக் கருத்தில் கொண்டு பாடுபட்டு வரும் இயக்கங்கள், ஜமாஅத்துகள் இந்தத் தவறுகளை விட்டு விடுபட்டு இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. இந்த நமது கருத்தை மற்றவர்கள் விமர்சிக்க உரிமையுண்டு.

அந்த விமர்சனங்கள் சரியா? அல்லது தவறா? எனப் பரிசீலிக்க நமக்கு கடமை இருக்கிறது. விமர்சனங்கள் சத்தியமானவையாக இருந்தால் அவற்றை ஏற்று திருந்திக் கொள்ளவும் நாம் கடமைப்பட் டுள்ளோம்.

மேலே நாம் சுட்டிக்காட்டியுள்ள ஷைத் தானின் மாயைகளிலிருந்து விடுபட்டு, சுமார் 1444 வருடங்களுக்கு முன் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டித் தந்த அதே முறையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், அல்லாஹ் கொடுத்த இஸ்லாமிய வாழ்க்கை நெறியை அகில உலகிற்கும் அறிமுகப்படுத்துவது தான் நமது நோக்கமாகும். உடனே 21ஆம் நூற்றாண்டை சந்திக்க வேண்டிய மக்களை 6ம் நூற்றாண்டின் காட்டு மிராண்டி வாழ்க்கைக்கு இட்டுச் செல்லப்போகிறீர்களா? என்று நுனிப்புல் மேய்பவர்கள் கேட்கலாம். ஒட்டகங்களிலும், கோவேறு கழுதைகளிலும் பிரயாணம் செய்து கொண்டு, அன்று மக்கள் உபயோகித்தவற்றையே இன்றைய மக்க ளும் உபயோகிக்க வேண்டும் என்று நாம் சொல்ல  வரவில்லை.

மனிதன் மனிதனாக வாழ, மனிதனைப் படைத்த அல்லாஹ் தனது தூதர் மூலம் கற்றுக் கொடுத்த வாழ்க்கை ஒழுக்க நெறிகளைக் கடைபிடித்து மனிதனாக வாழவேண்டும் என்பதையே வலியுறுத்துகிறோம். அதை விட்டு மனிதன் என்று சொல்லிக் கொண்டு 20ம் நூர்றாண்டின் நாகரீகம் என்ற நினைப்பில் இரண்டு கால் மிருகமாக மனிதன் வாழ முற்படுவதையே கண்டிக்கிறோம். இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்கிறோம். மனிதனுக்குரிய வாழ்க்கை நெறிகளை மனிதனே வடிவ மைத்துக் கொள்ள முடியாது. அதற்குரிய ஆற்றலும் மனிதனுக்கில்லை, உரிமையும் மனிதனுக்கில்லை என்கிறோம். தனக்கு அதிகாரம் இல்லாத ஒன்றில் மனிதன் தலையிட் டதால்தான், உண்மை பேச வேண்டும் என்று சொல்லிக் கொண்டே பொய் பேசுபவனாகவும், பிறருக்கு உபகாரியாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே உபத்திரவம் கொடுப்பவனாகவும், சுருங்கச் சொன்னால் சொல்லுக்கும், செயலுக்கும் சம்பந்தமேயில்லாத ஒரு இழிவான நயவஞ் சகமான வாழ்க்கை வாழ்கிறான் மனிதன். இந்த இழிவான மிருக வாழ்க்கையை விட்டு உயர்ந்து மனித வாழ்க்கை வாழவே இஸ்லாம் அழைப்பு விடுக்கிறது. மனிதன் தனக் குள் ஏற்பட்ட முன்னேற்றம் என நினைத்து மிருக வாழ்க்கை வாழ்வதை இஸ்லாம் தடை செய்கிறதேயல்லாமல், வெளிப்பொருட்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பயன்படுத்தி உலக வாழ்க்கையை வளப்புடனும், வசதியுடனும், செழிப்புட னும் நடத்திக் கொள்வதை இஸ்லாம் தடை செய்யவில்லை. அவையும் அல்லாஹ் மனி தனுக்கு கொடுத்த அருட்கொடைகளே என்ற நன்றி உணர்வுடன், அவற்றை ஆராய்ந்தறியவும், அவற்றை பயன்படுத்திக் கொள்ளவுமே இஸ்லாம் கட்டளையிடுகிறது.

மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ள ஷைத்தானின் மாயைகளை விட்டு விடுபட்டு, மனித அபிப்பிராயங்கள் கலக்காமல் மிகத் தூய்மையான முறையில் செயல்படும் ஒரு ஜமாஅத் இருந்தால், நாமும் அந்த ஜமாஅத்துடன் இணைந்து செயல்படக் கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில் அப் படி ஒரு ஜமாஅத் செயல்படும் நிலையில் இரண்டாவதொரு ஜமாஅத்தாகச் செயல்பட மார்க்கம் அனுமதிக்கவில்லை. ஆனால் அப்படி ஒரு ஜமாஅத் செயல்படு வதாகத் தெரியவில்லை. எனவே முதல் கட்டமாக தமிழகம் தழுவிய அளவில் மத்ஹபுகள், தரீக்காக்கள், கட்சிகள், இயக்கங்கள், கழகங்கள் அனைத்தையும் விட்டு தெளபா (பாவ மன்னிப்பு) செய்து விட்டு வெளி வரும் சகோதரர்கள் ஒன்றிணைந்து 1444 ஆண்டுகளுக்கு முன்னர் நபி(ஸல்) அவர்கள் விட்டுச் சென்றஜமாஅத்துல் முஸ்லிமீன்சமூக அமைப்பில் போய் சேர்த்துக் கொள்ள முயற்சிகள் செய்து கொண்டு அதற்காக அழைப்பு விட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த கோரிக்கையிலுள்ள நியாயத்தையும், அவசியத்தையும் உணர்ந்த சகோதர சகோதரிகள் வந்து இணைந்துகொள்ள அன்புடன்  வேண்டுகிறோம்.

நாம் மேலே சுட்டிக் காட்டியவை உண்மையில் ஷைத்தானின் மாயைகள் தான். நாங்கள் அவற்றிலிருந்து விடுபட்டு, 1444 வருடங்களுக்கு முன் நபி(ஸல்) அவர் கள் அமைத்துக் காட்டிய அதே முறையில் இஸ்லாமிய நெறியை முற்றிலும் கடைப் பிடித்தொழுகி, அதை அகில உலகிற்கும் அறிமுகப்படுத்தி, அகில உலக முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றிணைக்கச் செய்யப் படும் முதல் கட்ட முயற்சியில் ஒன்றுபட்டு செயல்பட இன்ஷா அல்லாஹ் தயாராக இருக்கிறோம்.

Previous post:

Next post: