ஒன்றுபட்ட சமுதாயத்தின் இன்றைய நிலை!

in 2023 ஜூலை

தலையங்கம் :

ஒன்றுபட்ட சமுதாயத்தின் இன்றைய நிலை!

ஒன்றுபட்டிருந்த மனித சமுதாயம் ஷைத்தானின் மேலாதிக்கத்தால் பகைமை மேலோங்கி, மூடச் சடங்குகளில் மூழ்கி, நரக நெருப்புக்குழியின் விழிம்பை நெருங் கிய போதெல்லாம், வல்ல அல்லாஹ் தனது அளப்பெரும் கருணையால் நபிமார்களை அனுப்பினான். நேர்வழி காட்டுதலை அந்நபிமார்கள் மூலம் சிதருண்ட மக்களுக்கு அவ்வப்போது வேதங்களாக அருளி சகோதரர்களாக்கினான்.

இவ்வாறு அருளப்பட்ட அனைத்து முந்திய வேதங்களையும் உள்ளடக்கியதே அல்குர்ஆன். இறுதி மறையாம் இக்குர்ஆனில் முந்திய காலங்களில் நடந்த அனைத்து நல்லது கெட்டதுகளையும், மிகத் தெளிவாக விளக்கி எச்சரித்து, மக்களைப் பண்பட்ட மக்களாக இறை நெருக்கமுள்ளவர்களாக வாழ வகை செய்துள்ளான் வல்ல அல்லாஹ். இவ்வளவு தெளிவான இறுதி வேதமுள்ள நிலையிலும் உலக மக்களும், குறிப்பாக இதைப் பின்பற்றுகிறோம் என்று வானளாவப் பீற்றிக் கொள்ளும் முஸ்லிம் களும், இறைவழிகாட்டுதலுக்கொப்ப வாழ்கிறார்களா? என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

முந்தைய ஒன்றுபட்ட சமுதாயத்தைக் கூறுபோட்டுச் சிதைத்து, மக்களைச் சுரண்டி, தங்களின் வயிறுகளை நிரப்புவதோடு, மறுமையில் மிகப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்கள் புரோகிதர்கள் என்பதை இறைவன் தனது திருமறையில், மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறான். எனினும் நாம் எவ்விதப் படிப்பினையும் பெறாதவர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதெற்கெல்லாம் அடிப்படைக் காரணம் குர்ஆனை ஒப்புக் கொண்டபடி முறையாக நாம் அதனை விளங்கவில்லை. மேலும் நாம் உயிரினும் மேலாகப் போற்றும் நபி(ஸல்) வாழ்ந்து காட்டிய வாழ்க்கை நெறியைக் கடைப்பிடிப்பதில்லை.

அன்றைய, இன்றைய யூத, கிறிஸ்தவ சமுதாயங்கள் எப்படி புரோகித குருமார்களை சுயசிந்தனையற்று, குருட்டுத்தனமாக நம்பி மோசம் போயினவோ, இப்போதும் போய்க் கொண்டிருக்கின்றனவோ, அதே வழியில் இறுதி வேதம் கொடுக்கப்பட்ட நாமும் மோசம் போய்க்கொண்டிருக்கிறோம். வல்ல அல்லாஹ் தனது இறுதி மறையில்நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து அல்லாஹ்வை திடமாக நம்பும் இந்த உம்மத்தில் உள்ளவர்களைப் பார்த்து மேன்மைமிக்க சமுதாயம் என்கிறான். (3:110) மற்ற சமுதாயத்திலுள்ள மக்களுக்கு நம்மை சாட்சியாளர்களாக ஆக்கி நம்மை நடுநிலைச் சமுதாயம்‘ (2:143) என்று புகழாரம் வேறு சூட்டுகிறான். உண்மையில் நாம் மேன்மை மிக்க சமுதாயமா? சுய சிந்தனையற்ற ஆடு, மாடுகளைப் போல் புரோகித முல்லாக்களுக்கு வெண் சாமரம் வீசிக்கொண்டு குர்ஆன் நபிவழிக்கு மாற்றமாக நடந்துகொண்டிருக்கும் நாம் நடுநிலைச் சமுதாயமா? சிந்தியுங்கள்! நம் நிலையைச் சீர்தூக்கிப்  பாருங்கள்.

புரோகித முல்லாக்களை நம்பியது போதும், புறப்படுங்கள் உண்மை மார்க்கம் அறிய

அன்றைய புரோகிதர்களால் பிரிந்து சின்னாப் பின்னப்படுத்தப்பட்டுச் சிதறிய சமுதாயத்தை வல்ல அல்லாஹ் ஒன்றுபடுத்தி, இனி பிரியக்கூடாது என பலமுறை இறுதி வேதத்தில் எச்சரித்த பின்பும், மத்ஹபுகள் பேராலும், தரீக்காக்கள் பேராலும், “தவ்ஹீத்என்று சொல்லிக்கொண்டு பல்வேறு இயக்கங்கள், கழகங்கள் குழுக்கள் பேராலும் எங்ஙனம் பிரிந்தோம்? உலகெங்கும் முஸ்லிம்களே முஸ்லிம்களை அடித்துக்கொண்டு சாகும் நிலை ஏற்பட்டது எங்ஙனம்? பாகிஸ்தானில் இறையில்லத்தில் அனைவரும் ஒரே இறைவனை, கிப்லா நோக்கி தொழுது கொண்டிருக்கும் பொழுது, கைகலப்புகள், துப்பாக்கிச் சண்டைகள் ஏராளமான சாவுகள். முஸ்லிம்கள் என்று சொல்ல நமக்கு வெட்கம் வரவில்லையா?

இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்டப் போகிறோம் என்று மார்தட்டிக் கொண்டு அந்நியர்களை ஆப்கானிஸ்தானை விட்டு ஓடோட விரட்டிய இஸ்லாமிய இயக்கங் களுக்கு அங்கு இஸ்லாமிய ஆட்சி அமைக்க முடிந்ததா? சாந்தியை நிலைநாட்ட முடிந்ததா? ஏன் முடியவில்லை? முஸ்லிம்களே, முஸ்லிம்களை குண்டுக்கு இரையாக்கும் அவலம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே ஏன்? முஸ்லிம்கள் பாடம் பெற வேண்டாமா? முஸ்லிம் என்ற அல்லாஹ் இட்ட பெயரில் ஒரே இயக்கமாக ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டு இயங்கக் கடமைப்பட்ட முஸ்லிம் சமுதாயம் பிரிந்து பல இயக்கங்களாகவும், கழகங்களாகவும், குழுக்களாகவும் பல தலைமை களின் கீழ் செயல்படுவதால்தான், பதவி ஆசையால் தான் இந்த அலங்கோலம் என் பதை யாரால் மறுக்க முடியும்? பிரிந்து நிற்கும் முஸ்லிம்கள் பாபரி மஸ்ஜிதை காப்பாற்றியே தீருவோம் என்று காட்டுக்கத்தாக கோரஸ் பாடினார்களே முடிந்ததா? முஸ்லிம்களுக்கு அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தருவோம் என்று பந்த், பேரணி, சாலை மறியல், உண்ணாவிரதம் என்று சுய புத்தியில் செயல்படுகிறவர்களால் சாதிக்க முடிந்ததா? எனவே ஒன்றுபட்ட சமுதாயத்தைப் பிளந்து சுய ஆதாயம் தேடும் மதப் புரோகிதர்களையும், அற்ப உலக ஆதாயத்தைக் குறிக்கோளாகக் கொண்டுள்ள அரசியல்வாதிகளான இயக்கங்களையும், கழகங்களையும் புறக்கணிப்போம்.

மக்களை மடையர்களாக்கி, பிரித்து சின்னாபின்னப்படுத்தி, சிதைத்து வழி நடத்திக் கொண்டிருக்கும் முஸ்லிம் முல்லாக்களே! அரசியல்வாதிகளே அவர்களைக் கண் மூடிப் பின்பற்றும் எனதருமை சமுதாயத்த வர்களே! நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்திருக்கிறீர்களா? அல்லது இற்றுப்போன கந்தல் கயிறுகளைப் பற்றிப் பிடித்திருக்கிறீர்களா? சிந்திப்போம். நமது நிலைகளை ஒரு கனம் எண்ணிப் பார்ப் போம். சீர்திருத்துவோம். முஸ்லிம்களாக ஒரே தலைமையில் ஓரணியில் ஒன்றுபடுவோம். அணி திரள்வோம். வல்ல அல்லாஹ் நம்மை நேர்வழி நடத்தாட்டுவானாக.

Previous post:

Next post: