நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்! உங்கள் இறைவன் ஒரே இறைவன் தான்!

in 2024 ஜனவரி

 நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்! உங்கள் இறைவன் ஒரே இறைவன் தான்!

S.H. அப்துர் ரஹ்மான்

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்.

படைத்தவன் நம் அனைவருக்கும் அருள் புரியட்டும்.

அந்த  ஒரே  இறைவன்  பெயரால்….

இது முற்றிலும் சரியான விசயத்தைக் கூறுகின்ற  இறைநூல்.

புகழ் அழைத்தும் அந்த இறைவ னுக்கே! அவனே தன்னுடைய அடியார் மீது இந்த இறைநூலை இறக்கியருளினான். இதில் எவ்விதக் கோணலையும் வைத்திட வில்லை.

இது முற்றிலும் சரியான விசயத்தைக் கூறுகின்ற இறைநூலாகும். அந்த இறைவனின் கடுமையான வேதனையைக் குறித்து (மக்களை) அவர் எச்சரிப்பதற்காகவும், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிவோர்க்குத் திண்ணமாக நற்கூலி இருக்கின்றது.

அதை என்றென்றும் பெற்றுக்கொண்டிருப்பார்கள் என்று நற்செய்தி அளிப்பதற்காகவும். 

மேலும், “அந்த இறைவன் மகனை ஏற்படுத்திக் கொண்டான்என்று கூறுவோரை எச்சரிப்பதற்காகவும்தான்.

அதைப் பற்றிய எவ்வித ஞானமும் அவர்களிடம் இல்லை. அவர்களுடைய மூதாதையரிடமும் இருக்கவில்லை. அவர்களின் வாயிலிருந்து வெளிப்படுகின்ற பேச்சு எத்துணை மோசமானது! அவர்கள் வெறும் பொய்யைத்தான் கூறுகின்றார்கள்.

இவர்கள் இந்த அறிவுரையின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையானால், இவர்களின் பின்னே கவலைப்பட்டு உமது உயிரை மாய்த்துக் கொள்வீர் போல் இருக்கிறதே!

திண்ணமாக, நாம் இப்பூமியின் மீதுள்ள அனைத்தையும் அலங்கார மாய் ஆக்கியுள்ளோம். இவர்களில் மிகவும் சிறந்த செயலைச் செய்பவர் யார் என்று இவர்களைச்  சோதிப்பதற்காக!

இறுதியில் திண்ணமாக, நாம் இவையனைத்தையும் ஒன்றும் இல்லாமல் ஆக்கிட  இருக்கிறோம்.

குகை மற்றும் கல்வெட்டுக்காரர்கள் நம்முடைய வியக்கத்தக்க மாபெரும் சான்றாய்த் திகழ்ந்தனர் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?

இளைஞர்கள் சிலர் குகையில் தஞ்சம் புகுந்தபோது இறைஞ்சினார்கள். எங்கள் இறைவனே! உன்னுடைய தனிப் பட்ட அருளை எங்களுக்கு வழங்கு வாயாக! எங்கள் செயல்களை சீராக்கித் தருவாயாக!

அப்போது நாம் அவர்களை அதே குகையில் பல்லாண்டுகள் ஆழ்ந்த உறக் கத்தில் ஆழ்த்தினோம்.

பிறகு அவர்களை எழச் செய்தோம். அவர்கள் இரு பிரிவினரில் யார் தாங்கள் தங்கியிருந்த காலத்தை மிகச் சரியாக கணக்கிடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக!

அவர்களின் உண்மையான சரிதையை நாம் உமக்கு எடுத்துரைக்கிறோம். திண் ணமாக அவர்கள் தம் இறைவன் மீது நம்பிக்கை கொண்டிருந்த இளைஞர் களாவர். நாம் அவர்களை நேர்வழியில் மேலும் மேலும் முன்னேறச் செய்தோம்.

அவர்கள் எழுந்து, “யார் வானங்க ளுக்கும், பூமிக்கும் அதிபதியாக இருக்கின் றானோ அவன் மட்டுமே எங்களுக்கும் அதிபதியாவான். அவனை விடுத்து வேறெந்த இறைவனையும் நாங்கள் அழைக்கமாட்டோம். அவ்வாறு அழைத் தால் திண்ணமாக நாங்கள் முறையற்ற பேச்சை பேசியவர்களாவோம் என்று துணிந்து பிரகடனம் செய்தபோது அவர்களின் உள்ளங்களை நாம் திடப் படுத்தினோம்.

(பிறகு, அவர்கள் தங்களுக்குள் கூறிக்கொண்டார்கள்) இந்த நம்முடைய சமுதா யத்தினர் பேரண்டத்தின் அதிபதியை விடுத்து பிறவற்றைத் தெய்வங்களாக்கி உள்ளார்கள். அவை தெய்வங்கள்தாம் என் பதற்கு ஏதேனும் தெளிவான சான்றினை இவர்கள் ஏன் கொண்டு வருவதில்லை? அந்த இறைவன் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனை விட பெரும் அநியாயக்காரன் வேறு  யார்?

நீங்கள் இவர்களைவிட்டும், அந்த இறைவனை விடுத்து, இவர்கள் அழைத்து வருகின்ற பிற தெய்வங்களை விட்டும் வில கிக் கொண்டீர்கள் என்றால், இன்ன குகைக் குள் சென்று அபயம் தேடுங்கள்! உங்கள் இறைவன் தன் கருணையை உங்கள்மீது இன்னும் விரிவாக்குவான். மேலும், உங்கள் பணிகளுக்கு வேண்டிய அனைத்து வசதி வாய்ப்புகளையும் உங்களுக்கு உருவாக்கித் தருவான்.  (18:1-16)

அதிகாரம் உண்மையானவனாகிய அந்த ஒரே  இறைவனுக்கே  உரித்தானது :

அவர்களிடம் ஓர் உதாரணத்தை எடுத்துரைப்பீராக! இரண்டு மனிதர்கள், அவர் களில் ஒருவருக்கு நாம் இரு திராட்சைத் தோட்டங்களை வழங்கினோம். அவற் றைச் சுற்றிலும் பேரீச்சை மரங்களை அமைத்தோம். அத்தோட்டங்களுக்கு இடையே பயிர் நிலத்தையும் உருவாக்கியிருந்தோம்.

அவ்விரு தோட்டங்களும் நல்ல விளைச்சலைக் கொடுத்தன. அதில் அவை சிறிதளவும் குறை வைத்திடவில்லை. அத்தோட்டங்களின் நடுவே ஓர் ஆறு ஓடச் செய்தோம்.

அவனுக்கு நல்ல பலன் கிடைத்தது. (இவற்றையயல்லாம் பெற்றிருந்த) அவன் ஒரு நாள் தன் நண்பனிடம் உரையாடிக் கொண்டிருக்கும்போது கூறினான். “நான் உன்னைவிட அதிக செல்வமுடையவன், உன்னை விட அதிக ஆள் பலமும் கொண்டவன்

பிறகு அவன் தனது தோட்டத்தினுள் நுழைந்தான். அப்பொழுது தன்னுடைய ஆன்மாவுக்கே  கொடுமை இழைப்பவனாய்க் கூறலானான். இந்தச் செல்வம் என்றைக்காவது அழிந்துவிடும் என்று நான் கருதவில்லை.

யுக முடிவு எப்பொழுதேனும் வரும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு வேளை நான் என் இறைவனிடம் திரும்பக் கொண்டு செல்லப்பட்டால் கூட திண்ணமாக இதைவிட மகத்தான இடத்தையே நான் பெறுவேன்! என்றான்.

அதற்கு அவனுடைய நண்பன் அவனிடம் உரையாடிக் கொண்டே கூறினான். “அந்த மாபெரும் ஆற்றலுடையவனையா நிராகரிக்கிறாய்? அவனோ உன்னை மண்ணிலிருந்தும் பிறகு விந்திலிருந்தும் படைத்தான் பின்னர் உன்னை ஒரு முழு மனிதனாய் ஆக்கினான்.

ஆனால், என்னைப் பொறுத்தமட்டில் அந்த ஒரே இறைவன் தான் என்னைப் பரிபாலிக்கும் இரட்சகன்! அந்த இறைவனுடன் எவரையும் நான் இணையாக்கு வதில்லை.

நீ உன்னுடைய தோட்டத்தில் நுழைந்தபோது உன் நாவிலிருந்துஎதை அந்த இறைவன் நாடினானோ, (என்றும்) “அந்த ஒரே இறைவனை கொண்டே தவிர எந்த சக்தியும் ஆற்றலும் இல்லைஎனும் வார்த்தைகள் ஏன் வெளிப்படுத்தவில்லை? நான் பொருட் செல்வத்திலும், மக்கட் செல்வத்திலும் உன்னை விடக் குறைந்தவனாக இருக்கின்றேன் என்று நீ கருதியதனால்,

என்னுடைய இறைவன் உன் தோட்டத்தை விடச் சிறந்ததை எனக்கு அளித்துவிடக் கூடும். உன்னுடைய தோட்டத்தின் மீது வானத்திலிருந்து ஏதேனுமொரு ஆபத்தை அனுப்பிவிடக் கூடும். அதனால், அத்தோட்டம் வெறும் வெட்ட வெளியாக மாறிவிடக்கூடும்.

அல்லது எந்த விதத்திலும் உன்னால் வெளிக்கொணர முடியாத அளவுக்கு அதன் தண்ணீர் வற்றிப் போய்விடக்கூடும்.

இறுதியில் அவனுடைய விளைபொருள்கள் யாவும் அழிக்கப்பட்டுவிட்டன. அவனுடைய திராட்சைத் தோட்டம் அதன் பந்தலில் குப்புற விழுந்து விட்டதைக் கண்டு, தான் அதில் முதலீடு செய்ததெல் லாம் வீணாகிவிட்டதே என்ற வருத்தத்துடன் தன் கைகளைப் பிசைந்து கொண்டு கூறலானான். “அந்தோ! நான் என் இறைவனுடன் எவரையும் இணை வைக்காமல் இருந்திருக்கக் கூடாதா?

அந்த ஒரே இறைவனை விடுத்து அவனுக்கு உதவி புரிவதற்கு எந்தக் கூட்டத் தாரும் இருக்கவில்லை. தானாகவே அந்த ஆபத்தைச் சமாளிப்பதற்கும் அவனால் இயலவில்லை.

காரியங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் அதிகாரம் உண்மையானவனாகிய அந்த ஒரே இறைவனுக்கே உரித்தானது என்று அப்போது தெரிந்துவிட்டது. மேலும் அவன் அருள்வதே சிறப்பான வெகுமதியாகும். இன்னும் அவன் காண்பிக்கின்ற முடிவே  மகத்தான  முடிவாகும். (18:32-44)

சரியாகச் செய்திருக்கின்றோம் என்ற கருத்தில்  மூழ்கிக் கிடப்பவர்கள் :

அந்த நிராகரிப்பாளர்களோ அவர்கள் எனது நல்லுரைகள் விசயத்தில் குருடர் களாகவும் அதனை செவியுறுவதற்கு முன் வராதவர்களாயும்  இருந்தார்கள்.

இறைவனை நிராகரிக்கும் இம்மக்கள் நினைத்திருக்கின்றார்களா? என்னை விடுத்து என்னுடைய அடிமைகளை (தங்களுடைய) காரியம் நிறைவேற்றுபவராய் ஆக்கிக்கொள்ளலாம் என்று? இத்தகைய நிராகரிப்பாளர்களை உபசரிப்பதற்காக நரகத்தை நாம்  தயார்  செய்து  வைத்துள்ளோம்.

இவர்களிடம் நீர் கூறும் தம்முடைய செயல்களில் பெரும் நஷ்டத்திற்கு ஆளானவர்கள் யார் என்பதை நாம் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?

அவர்கள் யாரென்றால், உலக வாழ்க்கையில் அவர்களுடைய முயற்சிகள் அனைத்தும் நேர்வழியிலிருந்து பிறழ்ந்தே  இருந்தன. ஆனால், அவர்களோ தாம் அனைத்தையும் சரியாகச் செய்திருக்கின்றோம் என்ற கருத்தில் மூழ்கிக் கிடந்தார்கள்.

அவர்கள்தாம் தங்களுடைய இறைவ னின் சான்றுகளை ஏற்க மறுத்துவிட்ட வராவர். மேலும் அவனுடைய சந்திப்பினைக் குறித்து நம்பிக்கை கொள்ளாத வராவர். இதனால் அவர்களுடைய செயல்கள் அனைத்தும் வீணாகிவிட்டன. மேலும் மறுமையில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் நாம்  அளிக்க மாட்டோம்.

அவர்களுக்குரிய கூலி நரகமேயாகும். அவர்கள் நிராகரித்ததின் காரணத்தாலும், என்னுடைய வசனங்களையும், என்னுடைய தூதர்களையும் பரிகசித்துக் கொண்டி ருந்ததன்  காரணத்தாலும்!

ஆனால் எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களை உபசரிப்பதற்காக உயர்ந்த சுவனங்கள் இருக்கின்றன.

அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவற்றை விட்டு வெளி யேறி வேறு எங்கேனும் சென்றிட அவர்கள் சற்றும்  விரும்பமாட்டார்கள்.

நபியே நீர் கூறும். “என் இறைவனின் வாக்குகளை எழுதுவதற்குக் கடலே மையாகி விட்டாலும், கடல்நீர் தீர்ந்து போய்விடுமே தவிர என் இறைவனின் வாக்குகள் தீர்ந்து போய்விடாது. அதேபோல இன்னொரு மடங்கு மையை நாம் கொண்டு வந்தாலும் அதுவும் போதாது.

நபியே நீர் கூறும். “நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். உங்கள் இறைவன் ஒரே இறைவன் தான் என்று எனக்கு வஹி வருகிறது. எனவே, எவர் தன் இறைவனின் சந்திப்பை எதிர்பார்த்தவராய் இருக்கின்றாரோ அவர் நற்செயல்கள் புரியட்டும். அடிபணிவதில் தன் இறைவனுடன் யாரையும் இணையாக்காதிருக்கட்டும்.  (18:101-110)

இறைவன் கூறியபடி நற்செயல்கள் புரிந்து அடிபணிவதில் அந்த ஒரே இறைவனுடன் யாரையும் இணையாக்காதிருப்போம்.

Previous post:

Next post: