தலையங்கம் :
அந்நஜாத்தும்! நாற்பதாம் ஆண்டும்!
அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அந்நஜாத் தனது 39ம் ஆண்டுகள் பணியை தொய்வின்றி முடித்துக்கொண்டு 40ஆம் ஆண்டில் பணியை துவக்குகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
மர்ஹும் அபூ அப்தில்லாஹ் மற்றும் சில தனி மனிதர்களின் முயற்சிக்கு பிறகே பல தெளிவுக்கு பிறகே “”அந்நஜாத்” 1986ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முதல் இதழ் ஆரம்பிக்கப்பட்டு வெளிவரத் தொடங்கி இறைவன் கிருபையால் இன்றும் “”பாதை மாறா பயணம்” தொடர்கிறது.
இதுவரை பயணம் தொடர வாய்ப்பு அளித்த வல்லோனுக்கு முதலில் நன்றியையும், பெரும் துணையாக ஆதரவு காட்டி வரும் வாசகர்களுக்கும், கட்டுரையாளர்களுக்கும் குறிப்பாக நேரிடையாகவும், மறைமுகமாகவும் எதிர்க்கும் மவ்லவிமார்கள் உட்பட எல்லோருக்கும் எங்களின் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
நமது சமுதாயத்திற்கு இன்றும் வழிகாட்ட எத்தனையோ வார, மாத, மாதம் இரு முறை என பல இதழ்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன என்பதை பலரும் அறிவோம்.
எந்தவொரு இதழுக்கும் இல்லாத எதிர்ப்புக்கள் பல “”அந்நஜாத்”திற்கு மட்டும் அன்றும் இன்றும் இருக்க காரணம் என்ன?
“அந்நஜாத்” சத்தியத்தை (குர்ஆன், ஹதீத்) மட்டுமே மக்களிடையே எடுத்து வைப்பதால் பல முனைகளிலிருந்தும் எதிர்ப்புக்கள் வரும், வருகிறது, வரத்தான் செய்யும் என தெரிந்தே இந்த பணி தொடர்கிறது.
மறுமை வெற்றியை இலட்சியமாக கொண்டு “அந்நஜாத்” செயல்படுவதால் ஏனைய இதழ்களுக்கு கிடைக்கின்ற தற்காலிக ஆதரவு “அந்நஜாத்”திற்கு இல்லை என்பது ஓரளவு உண்மை தான்.
ஆனால் பெரும்பான்மை மக்களின் ஆதரவு கிடைக்கவில்லையே என கடுகளவும் கவலைப்படுவதில்லை.
ஏன் என்றால்,
பல இறைத்தூதர்கள் (நபிமார்கள்) தன்னந்தனியாக பின்பற்றுபவர்கள் இல்லாமல் சுவர்க்கம் புகுவார்கள் என்பது இறுதி தூதரின் சொல் மூலம் கிடைத்த செய்தியாகும்.
அதுபோல் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு “அந்நஜாத்”திற்கு இல்லாவிட்டாலும் சொர்ப்பமான வாசகர்களின் ஆதரவை கொண்டே “அந்நஜாத்”தின் குர்ஆன், ஹதீத் மட்டும் தான் மார்க்கம் என்ற பணி தொடரும். இன்ஷா அல்லாஹ்.
“அல்லாஹ்வின் ஒளியைத் (இறைவாக்கான அல்குர்ஆனை) தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். மறுப்போர் வெறுத்தாலும் இறைவன் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விடமாட்டான்” அல்குர்ஆன் 9:32
“சத்தியம் வெல்லும்; அசத்தியம் அழிந்தே தீரும்” என்பது நிச்சயம்.