அ முதல் ஃ வரை எதைப்பற்றி குர்ஆனில் கூறப்பட்டுள்ளது?
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
பொதுவாக மனிதர்களின் இயல்பு என்ன வென்றால் எதையயான்றையும் செய்வதாக இருந்தால் அதனால் என்ன பலன் என்பதை அறிய முதலில் விரும்புவார்கள்.
மேலும், ஏன் செய்யவேண்டும்?
எப்போது செய்யவேண்டும்?
எப்படி செய்யவேண்டும்?
என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புவார்கள். அவ்வாறு தெரிந்தால் தான் அதை செய்ய முன்வருவார்கள். இந்த இயல்பு சாதாரண அடிமட்ட தொழிலாளர்களிடமிருந்து உயர் மட்ட கல்வியாளர்கள் வரை இருக்கக்கூடிய ஒன்றுதான்.
அதில் ஒன்றும் தவறுமில்லை. மேலும் செய்வதை தெரிந்து முறையாக செய்தால் தான் அதற்குரிய பலனும் கிடைக்கும்.
அதுபோலவே இறைவனும் மனிதர்களைப் பார்த்து சில கடமைகளை செய்யுமாறு இறை நூலில் கூறுகிறான்.
ஆனால் அதனால் இறைவனுக்கு ஏதாவது தேவையுள்ளதா? (பலனுள்ளதா) என்றால் இல்லை.
ஏன்என்றால்அவன்தேவைஅற்றவன்.
பின்புஏன்மனிதர்களைசெய்யசொல்லவேண்டும்?
நியாயமான கேள்வி! ஆம்!
படைத்தவனுக்கு தெரியுமல்லவா மனிதனின் இயல்பு அதனால் சில கடமைகளை செய்தாக வேண்டும் என கட்டளை இட்டுள்ளான். அதுவும் தனக்காக அல்ல மனிதர்களின் நலனுக்காகவே.
அவ்வாறு கூறியதில் பல கட்டளைகள் உள்ளன. அவற்றில் இரண்டை மட்டும் செயல் வடிவத்தில் (வெளிப்படையாக) செய்தே ஆகவேண்டும் என்று கூறியுள்ளான்.
ஒன்று = தொழுகை
மற்றொன்று = ஹஜ்
மேற்கண்ட இரண்டில் முதலாவதாக கூறப் பட்டுள்ளது “தொழுகை‘யாகும்.
அந்த தொழுகையை ஏன் தொழவேண்டும் என்பது முதல் எப்போது தொழ முடியாது என்பது வரை இறைநூலிலும், இறைதூதர் மூலமும் வழிகாட்டியுள்ளான்.
அதாவது “அ முதல் ஃ வரை‘ சுமார் 80க்கு மேற்பட்ட வசனங்களில் தொழுகையைப் பற்றி விரிவாக கூறியுள்ளான்.
(வேறு எந்தவொரு கடமையைப் பற்றியும் இவ்வளவு விரிவாக கூறவில்லை, ஏன் என்றால் தொழுகை அந்த அளவிற்கு மிக முக்கியமானது)
அவைகள் என்ன?
1. தொழுகைக்கு முன்பு என்ன செய்ய வேண்டும்?
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்கு தயாராகும்போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உள்ள உங்கள் கைகளையும், கரண்டை வரை உள்ள உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள். மேலும் உங்கள் தலையை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்…” அல்குர்ஆன்:5:6
2. தொழுகை யாருக்காக?
“எனது தொழுகை, எனது வணக்கமுறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன…” அல்குர்ஆன் 6:162
3. தொழுகையில் முதலில் என்ன ஓதவேண்டும்?
“…வானங்களையும், பூமியையும் படைத்தவனை நோக்கி நேரான வழியில் நின்றவனாக எனது முகத்தைத் திருப்பிவிட்டேன் நான் இணைவைப்பவன் அல்ல.” அல்குர்ஆன் 6:79
4. எந்த அத்தியாயம் ஓதாவிட்டால் தொழுகை நிறைவேறாது?
“நீங்கள் குர்ஆனை ஓதத் தொடங்கும்போது சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டு (அவூதுபில்லாஹி மினஷைத்தான் என்று கூறி விட்டு) பாதுகாப்பு தேடவேண்டும்.” அ.கு.16:98
மேலும் பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் என்று கூறிவிட்டு அல்ஃபாத்திஹா என்ற முதல் அத்தியாயத்தை ஓதவேண்டும். ஏன் என்றால், அடியான் முக்கிய வேண்டுதலான நேர்வழி வேண்டி தன்னிடம் முதலில் கேட்கவேண்டும் என்று இறைவனே கற்றுக்கொடுத்ததை ஓதவேண்டும். அ.கு.1:1-7
5. நேர்வழியை கேட்ட அடியானுக்கு எது நேர்வழி என்று இறைவன் கூறுகிறான்?
அல்குர்ஆனாகும்.
6. தொழுகை எப்போது?
“…குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும் என்ற நிபந்தனையுடன் இறை நம்பிக்கையாளர் மீது தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது.” அ.கு. 4:103
“பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதி களிலும் தொழுகையை நிலைநிறுத்துவீராக! நன்மைகள் (தொழுகை) தீமைகளை அழித்து விடும். பின்பற்றுபவர்களுக்கு இது அறிவுரை யாகும்.” அல்குர்ஆன் 11:114
“சூரியன் நடுவானை விட்டு சாய்ந்ததிலி ருந்து இரவின் இருள் வரை தொழுகையை நிலைநிறுத்தும்.”
(இது லுஹர் முதல் இஷா வரையுள்ள நான்கு நேர தொழுகையை குறிக்கும்)
மேலும் “”பஜரில் (அதிகாலை நேர தொழுகை) குர்ஆன் ஓதி தொழுவது சாட்சி கூறப்படுவதாக இருக்கிறது.” அ.கு. 17:78
(பஜ்ர் நேரத்தில் இரவு நேரத்து வானவர் களும் பகல் நேரத்து வானவர்களும் ஒன்று சேர்ந்து சாட்சியாக இருக்கின்றார்கள்)
திர்மிதீ : 3060, இப்னு மாஜா : 662, அஹ்மத் : 9749
7. பயண நேர தொழுகை எப்படி?
“…தொழுகையைச் சுருக்கி கொள்வது உங்கள் மீது குற்றமாகாது” அல்குர்ஆன் 4:101
8. போர் காலங்களில் தொழுகை எப்படி?
“…ஆயுதங்களை கையில் வைத்துக் கொண்டு எச்சரிக்கையுடன் தொழுங்கள்…” அ.கு. 4:102
9. எப்படி தொழ வேண்டும்?
“இறைவனை நினைத்து (அல்லாஹ்வை நாம் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் நம்மை பார்க்கிறான் என்ற அச்சத்துடன்) அவனுக்கு அஞ்சி தொழுகையை நிறைவேற்றுங்கள்…” அல்குர்ஆன் 30:31
10. தொழுகையை யார் பாழாக்குவார்கள்?
“…மனோ இச்சைகளை பின்பற்றுபவர்கள்” அல்குர்ஆன் 19:59
11. யாரெல்லாம் வெற்றி அடைவார்கள்?
“இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ருகூவும், ஸுஜுதும் செய்யுங்கள். உங்கள் இறைவனுக்கு அடிபணியுங்கள். மேலும் நற்செயல் செய்யுங்கள். (இவர்களே) வெற்றி அடைவார்கள்”. அல்குர்ஆன் 22:77
12. தொழுகையாளிக்கு என்ன பெயர்?
“…உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கத் தில் நிலைத்திருங்கள். அல்லாஹ் உங்களுக்கு முன்னுள்ளவர்களுக்கும் “முஸ்லிம்கள்‘ என்று தான் பெயர் சூட்டியிருந்தான்; இதிலும் (குர் ஆனிலும்) உங்களுக்கு பெயர் முஸ்லிம்தான்…” அல்குர்ஆன் : 22:78
13. தொழுகை யாருக்கெல்லாம் சிரமமாக இருக்காது?
“…இறைவனை அஞ்சி வாழ்கின்ற அடியார்களுக்கு அது சிரமமானதாக இருக்காது. அவர்கள் யாரென்றால் இறுதியில் (மறுமையில்) தங்கள் இறைவனை சந்திப்பவர்களாய் இருக்கின்றோம் என்றும், அவனிடமே திரும்பச் செல்லவேண்டும். என்று யாரெல்லாம் உறுதியாக நம்புகிறார்களோ அவர்களுக்கு”. அல்குர்ஆன் 2:45,46
14. எப்போது தொழக்கூடாது?
“…பெருந்துடக்குடையவர்களாய் இருக்கும் நிலையில்…” அல்குர்ஆன் 4:43
15. தொழுகையில் குர்ஆனை எப்படி ஓதவேண்டும்?
“…குர்ஆனை நிறுத்தி, நிதானமாக ஓதுவீராக” அல்குர்ஆன் 73:4
“… குர்ஆனில் எந்த அளவுக்கு ஓதமுடியுமோ அந்த அளவிற்கு ஓதிக்கொள்ளுங்கள்..” அல்குர்ஆன் 73:20
16. இரவு தொழுகை எப்போது?
“இரவு எழுந்து தொழுவீராக! ஆனால் கொஞ்சநேரம், அதாவது பாதி இரவு அல்லது அதைவிட சற்று குறைவாகவோ, கூடுதலாகவோ தொழுவீராக” அ.கு. 73:2,3
17. வெள்ளிக்கிழமை தொழுகைக்கு அழைத்தால் என்ன செய்யவேண்டும்?
“…அல்லாஹ்வை நினைவு கூர்வதன் பக்கம் (பள்ளியை நோக்கி) விரைந்து செல்லுங்கள். கொடுக்கல், வாங்கலை விட்டுவிடுங்கள். இதுவே உங்களுக்கு மிக சிறந்ததாகும்…” அ.கு. 62:9,10
18. தொழ விடாமல் தடுப்பவன் யார்?
“மது மற்றும் சூதாட்டத்தின் வாயிலாக உங்களுக்ககிடையில் பகைமையும், வெறுப்பையும் ஏற்படுத்தி அல்லாஹ்வை நினைவு கூர்வதிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களை தடுத்திடவே ஷைத்தான் விரும்புகிறான். இந்த அறிவுரைக்கு பிறகாவது இவற்றை தவிர்த்துக் கொள்வீர்களா?…” அல்குர்ஆன் 5:91
19. தொழுதால் என்ன பலன்?
“…நிச்சயமாக தொழுகை மானக்கேடான மற்றும் தீய செயல்களைத் தடுக்கின்றது…” அல்குர்ஆன் 29:45
“யாரெல்லாம் இந்த குர்ஆனை (வழிகாட்டி நூலை) முறையாக கடைப்பிடித்து பின்பற்றி, தொழுகையும் நிலைநிறுத்துகின்றார்களோ, அத்தகைய நல்லொழுக்கமுடையோருக்கான கூலியை நிச்சயமாக நாம் வீணாக்கமாட்டோம். அல்குர்ஆன் 7:170
20. தொழச் சொல்லி யாருக்கு கட்டளையிட வேண்டும்?
“…மேலும் தொழுகையைப் பேணி வருமாறு உம்முடைய குடும்பத்தாருக்கு கட்டளை யிடுவீராக…” அல்குர்ஆன் 20:132
21. எதற்கு முன்பு தொழுகையை நிலைநிறுத்த வேண்டும்?
“கொடுக்கல் வாங்கலோ, நட்போ இல்லாத ஒருநாள் வருவதற்கு முன்பே (மரணத்திற்கு முன்பே) தொழுகையை நிலை நிறுத்த வேண்டும்…” அல்குர்ஆன் 14:31
22. தொழுகையை தவறாது நிறைவேற்ற என்ன துஆ ஓதவேண்டும்?
“என் இறைவா! தொழுகையை நிலை நிறுத்தபவனாய் என்னை ஆக்குவாயாக!
என் வழி தோன்றல்களையும் தொழுகையை நிலைநிறுத்துபவர்களாக ஆக்குவாயாக!
எங்கள் இறைவனே! எனது இந்த துஆவை ஏற்றுக் கொள்வாயாக!
என் இறைவனே! எனக்கும், என் பெற்றோ ருக்கும் நம்பிக்கை கொண்டவர்கள் அனைவருக்கும் கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளில் மன்னிப்பை அருள்வாயாக! அல்குர்ஆன் 14:40,41