ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம்
நபிகால இஸ்லாமிய ஒற்றுமை; பிரிவுகளால் விளையும் விபரீதங்கள்!
முஹிப்புல் இஸ்லாம்
மறு பதிப்பு :
(இறைத்தூதர் நுஹுக்கு எதை அவன் அறிவுறுத்தினானோ அதையே (அந்த இஸ்லாத்தையே) உங்களுக்கும் (அந்த அல்லாஹ்) மார்க்கமாக்கியிருக்கின்றான்.
(நபியே!) நாம் உமக்கு வஹியாக அறிவித்ததும் (இறைத்தூதர்கள்) இப்ராஹீம், மூஸா ஈஸா ஆகியோருக்கும் (இறைக் கட்டளையாக) அறிவுறுத்தியதும்,
(இஸ்லாம்) மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். அதிலிருந்து நீங்கள் பிரிந்து விடாதீர்கள் என்பதுதான்.
இணை வைப்போரை எதன் (இஸ்லாத்தின்) பக்கம் அழைக்கிறீர்களோ அது அவர்களுககுப் பெரும் சுமையாக இருக்கிறது.
தனக்கு விருப்பம் உள்ளவர்களை அல்லாஹ் நேர்வழிக்குரியவர்களாய் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்.
அவனை முன்னோக்கி வருவோர்க்கு தன்னிடம் வரும் நேர்வழியை அவன் காண்பிக்கின்றான். அல்குர்ஆன் 42:13
பிரிவுகளின் விபரீதங்கள் :
கடந்த 1000 ஆண்டுகளாய் முஸ்லிம்கள் பிரிவிலும், பிளவிலும் சிக்கித் தவிக்கிறார்கள்.
பிரிவுகள் பெயரால் மார்க்க மோசடிகள், பிரிவுகள் பெயரால் மார்க்க மீறல்கள், பிரிவுகள் பெயரால் மாபாதகங்கள், பிரிவுகள் பெயரால் வழிகேடுகள்…..
பிரிவுகளால் முஸ்லிம்களுக்குள் மோதல்கள், பொருள் இழப்புகள், உயிர் சேதங்கள், பிரிவுகளால் உலக அளவில் முஸ்லிம்கள் அனுபவித்து வரும் துன்பங்களையும், துயரங்களையும் அளவிட இயலாது; சொல்லியும் மாளாது; எழுத்திலும் வடிக்க முடியாது.
எனினும் பிரிவுகள் துவங்கியதிலிருந்து இன்றளவும் பிரிவின் பிடியிலிருந்து எந்த மனிதனும், குறிப்பாக எந்த முஸ்லிமும் விடுபட்டதாய் தெரியவில்லை.
ஒற்றுமை வீழ்த்தப்பட்டுவிட்டது. பிரிவுகள் கொழுத்து வருகின்றன. ஒற்றுமை ஏற்பட வழியே இல்லையா? மானுட ஒற்றுமை சாத்தியமே இல்லாதது? மனிதநேய விரும்பிகளின் ஏக்கம் விரிந்து செல்கிறது. இதுகாலம் ஒற்றுமை ஏற்பட யாரும் எந்த முயற்சியும் செய்யவில்லை. வேதனைக்குரிய கசப்பான உண்மை.
பிரிவுகள் பெயரால் நேர்வழி வழிகேடாகவும், வழிகேடு நேர்வழியாகவும் சித்தரிக்கப் படுகின்றன. விட்டில்களாய் பிரிவுகளில் விழுந்து விடுகிறார்கள். முஸ்லிம்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
பிரிவுகளின் நிரந்தர முற்றுப்புள்ளி இஸ்லாம். இஸ்லாத்தின் உன்னத இலட்சியம் மானுட ஒற்றுமை. முஸ்லிம்கள் மட்டுமின்றி மானுடத்தை ஒன்றிணைக்கும் இறையருளிய வாழ்க்கை நெறி, வாழும் நெறியே இஸ்லாம். இதை இன்றளவும் முஸ்லிம்கள் சரியாக உணரவும் இல்லை. முஸ்லிம்களுக்கு உணர்த்தப்படவும் இல்லை.
பிரிவுகளின் விபரீத விளைவுகளையும், கேடுகளையும் மற்ற மனிதர்களுக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பும், கடமையும் உடையவர்கள் முஸ்லிம்கள் அவர்கள் என்ன செய்கிறார்கள்?
ஏதேனும் ஒரு பிரிவைச் சார்ந்து இருப்பதே சாலச் சிறந்தது என்ற தவறான முடிவில் இருக்கிறார்கள். இன்றைய முஸ்லிம்கள் பிரிவுகளால் விளையும் விபரீதங்களைக் கண்ணாறக் கண்டும், சுயமே அனுபவித்தும் பிரிவுகளின் உடும்புப் பிடியிலிருந்து யாரும் விடுபடவில்லை. விடுபட முயல்வோரும் ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவுக்குத் தாவிவிடுகிறார்கள். பிரிவுகளின் கொடூரப் பிடியிலிருந்து யாராலும் முற்றாக விடுபட முடியவில்லை.
பிரிவுத் தாவல் :
அரசியல்வாதிகள் அடிக்கடி கட்சி மாறிக் கொண்டிருப்பது போல் ஒரு பிரிவில் அதிருப்தி ஏற்படும்போது அடுத்த பிரிவுக்கு மாறிவிடுகிறார்கள். இவர்கள் அரசியல்வாதிகளையும் தோற்கடித்து வருகிறார்கள். ஆம்! அந்த அரசியல்வாதிகளைக் காட்டிலும் துரிதமாய் அதிவேகமாய்.
A ஒரு பிரிவிலிருந்து வேறொரு பிரிவுக்கு
B ஒரு அணியிலிருந்து இன்னொரு அணிக்கு
C ஒரு அமைப்பிலிருந்து மற்றொரு அமைப்புக்கு
D ஒரு இயக்கம் விட்டு அடுத்த இயக்கத்துக்கு
E ஒரு ஜமாஅத்தை விடுத்து அடுத்த ஜமாஅத்திற்கு என
F பிரிதல், பிரித்தல்
G பிளவுபடல், பிளவுபடுத்துதல்
வெகு விமரிசையாக அரங்கேறி வருகிறது.
பிரிவுகளால் உலக அளவில் முஸ்லிம்கள் அனுபவிதது வரும் துன்பங்களையும், துயரங்களையும் சொல்லியும் மாளாது; எழுதினும் ஓயாது.
இதனால் முஸ்லிம்கள் மாற்றார்களின் இழி சொல்லிலிருந்தும், பழி சொல்லிலிருந்தும் தப்ப முடியவில்லை. தவறிழைக்கும் முஸ்லிம்களுக்கு இது தேவைதான். இருந்தும் முஸ்லிம் களுக்கு இன்னும் ரோசம் பிறக்கவில்லை. இழித்தலும், பழித்தலும் முஸ்லிம்களோடு நிற்கவில்லை. முஸ்லிம்கள் மீது பாய்ந்து வரும் கண்டனங்களும், விமர்சனங்களும் அதைவிட வேகமாய் இஸ்லாத்தின் மீது பாய்ந்து வருகிறதே! முஸ்லிம்கள் செய்யும் தவறுக்கு இஸ்லாம் பலியாக்கப்படுகிறதே!
ஓ! என்னரும் முஸ்லிம் பெருமக்களே! இஸ்லாத்தின் மீது இத்தகைய பழி சுமத்தப்பட்டுள்ளது? கவனித்தீர்களா? இதுபோன்ற பழிகளுக்கும், இஸ்லாத்துக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? நிச்சயம் இல்லை.
எனதருமை முஸ்லிம் பொதுமக்களே! சிந்திக்க வேண்டாமா? இஸ்லாத்திற்கு நற்பெயரைத் தேடித்தர வேண்டிய முஸ்லிம்கள் பிரிவினைவாதிகளாய் மாறியதால், அவப்பெயரை அள்ளி, அள்ளி குவித்துக் கொண்டிருக்கிறீர்கள். பிரிவினைவாதிகளால் வரிந்து திணிக்கப்பட்ட பிரிவினை இஸ்லாத்துக்கு இழுக்கைத் தேடித்தருகிறது என்றால்…
பிரிவினைவாதிகளே! இஸ்லாத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள களங்கம் சாதாரணமானதா? இதுபோன்ற பழிக்கும் இஸ்லாத்துக்கும் ஏதேனும் தொடர்புண்டா?
பிரிவுகளின் எதிர்வினை :
பிரிவுக்கும், பிளவுக்கும் முற்றுப்புள்ளியான இஸ்லாம் பிரிவினைவாதிகளின் தவறுக்கு எவ்வாறு பொறுப்பேற்கும்? பிரிவினைவாதிகள் உங்களால் ஏற்பட்ட பழியை நீங்கள் தான் துடைத்தெறிய வேண்டும். நீங்கள் ஏற்றிருக்கும் இறையருளிய வாழ்க்கை நெறி இஸ்லாத்துக்கு நீங்கள் நற்பெயரைத் தேடித் தராவிட்டாலும் பரவாயில்லை. அவப் பெயரைத் தேடித் தராமல் இருக்கவேண்டும். அப்போது தான் பிரிவினைவாதிகளான போலி முஸ்லிம்கள் உண்மை முஸ்லிம்களாய் உயர்வடைய முடியும்.
அறிஞர்கள், தத்துவ ஞானிகள் உதிர்த்த தத்துவங்கள், சித்தாந்தங்கள் எதுவும் மானுடத்தை ஒன்றுபடுத்தவில்லை; ஒன்றுபடுத்தவும் முடியாது. மாறாக மனிதர்களைப் பிரிவுகளாக்கின, இன்னும் பிரிவுகளாக்கியும் வருகின்றன; குழுக்களாகவும், அணிகளாகவும் பிரித்தன; பிரித்தும் வருகின்றன.
பிரிவுகளாலும், பிளவுகளாலும் விளையும் அத்துணை விபரீதங்களையும், மாபாதகங் களையும் மனிதர்கள் சந்தித்தார்கள். சந்தித்தும் வருகிறார்கள். (பிரிவுகளில் சிக்கி பிரிந்து கிடக்கும் இன்றைய முஸ்லிம்களும் இதிலிருந்து விடுபடவில்லை; விடுபடவும் முடியவில்லை)
மானுட அமைதி, மானுட ஒருமைப்பாடு, மானுட சமத்துவம் பிரிவுகளாலும் அணிகளாலும் அடித்துச் செல்லப்படுகின்றன. பிரிவினைத்துயர் மனிதர்களை வாட்டி எடுத்து வருகிறது. பிரிவுகளின் உடும்பு பிடியிலிருந்து விடுபடும் வழியறியாது மனிதர்கள் தவிர்தார்கள்; தவிக்கிறார்கள். நபித்துவத்துக்கு முன் அரபகத்தின் நிலை மட்டுமல்ல உலக மக்கள் அனைவரும் அணிகளாகவும், குழுக்களாகவும் பிளவுபட்டிருந்தார்கள். மனிதர்கள் மதம், நாடு, மொழி, இனம், நிறம், குலம்… இத்யாதி–இத்யாதி என பிரிவிலும், பிளவிலும் அணிகளாகவும், குழுக்களாகவும் பிளக்கப்பட்டிருந்தார்கள்.
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அனைத்தின் படைப்பாளன்–வல்லவன் அல்லாஹ் இஸ்லாத்தை நிறைவு செய்ய நாடினான். நபி (ஸல்) அவர்களை இறுதி இறைத்தூதராக தெரிவு செய்தான். நபி(ஸல்) அவர்களுக்கு அல்குர்ஆன் இறுதி நெறிநூலாய் அருளப்பட்டது.
நிரந்தர முற்றுப்புள்ளி :
அல்லாஹ்வின் மேற்பார்வையில் நபி(ஸல்) அவர்கள் அல்குர்ஆனுக்கு வாழ்வியல் வடிவ மானார்கள். நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமிய ஒருமைப்பாட்டின் சின்னமானார்கள். நபி தோழர்கள் இஸ்லாமிய ஒருமைப்பாட்டின் அங்கங்களானார்கள்.
A ஒரே இறைவன் அல்லாஹ்…!
B அல்லாஹ் தெரிவு செய்த நபி(ஸல்) அவர்களும் ஒரே இறைத்தூதர்! இறுதி இறைத் தூதரும் கூட!
C நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளிய அறநூல் அல்குர்ஆனும் ஒன்றே!
D இஸ்லாமிய கோட்பாட்டின் (Theory) – அல்குர்ஆனுக்கு, வாழ்வியல் (Practical Life)-வடிவான நபி (ஸல்) அவர்கள் நிறுவியதும் உம்மத்தன் வாஹிதாவாகிய–ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே!
அணி, குழு, பிரிவு, பிளவு, பிரிதல், பிரித்தல், பிளத்தல், பிளவுபடுத்துதல், அனைத்துக்கும் இஸ்லாம் நிரந்தர முற்றுப் புள்ளியானது.
எங்கெல்லாம், எங்கனமெல்லாம், எவை யயல்லாம், எப்படியயல்லாம் மனிதர்களைப் பிரிக்கிறதோ, பிளக்கிறதோ அவை அனைத் தின் வாயில்களுக்கும் இஸ்லாம் நிரந்தர மூடு விழா நடத்தியது. இஸ்லாம் முஸ்லிம்களை மட்டுமின்றி மானுடத்தை ஒருங்கிணைக்கும் இணைப்புப் பாலம் ஆனது.
இணைப்புப் பாலம் :
அனைத்து இறைத்தூதர்களுக்கும் அல்லாஹ் இஸ்லாத்தை மார்க்கமாக்கினான். இறைத்தூதர்கள் அனைவரும் இஸ்லாத்தோடு எப்படி ஐக்கியமானார்கள்? என்பதை அல்லாஹ் அல்குர்ஆனில் பதிவு செய்துள் ளான். இஸ்லாத்தை நிலைநிறுத்துவதே ஒற்றுமை. இஸ்லாத்தை நிலைநாட்டாமல் இருப்பதும் பிரிவுதான். இஸ்லாத்தை நிலை நாட்டுவதிலிருந்து பிரிந்துவிடக் கூடாதென்று அல்லாஹ் எல்லா இறைத்தூதர்களுக்கும் கட்டளையிட்டான். (இறைத்தூதர்) நூஹுக்கு எதை அவன் அறிவுறுத்தினானோ அதையே அந்த இஸ்லாத்தையே உங்களுக்கும் மார்க்கமாக்கியிருக்கிறான்.
(நபியே!) நாம் உமக்கு வஹியாக அறிவித்ததும், (இறைத்தூதர்கள்) இப்றாஹீம், மூஸா, ஈஸா (ஆகியோர்க்கும் இறைக் கட்டளையாக) அறிவுறுத்தியதும்,
இஸ்லாம் மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். அதிலிருந்து நீங்கள் பிரிந்துவிடாதீர்கள் என்பதுதான்… (அல்குர்ஆன் 42:13)
இஸ்லாத்தோடு ஐக்கியமாவதும், இஸ்லாத்தை நிலைநாட்டுவதும் யாருக்கு பளுவாக இருக்கும்? அல்லாஹ்வே அதையும் தெளிவுபடுத்துகிறான்.
இணை வைப்போரை எதன் (இஸ்லாத்தின்) பக்கம் அழைக்கிறீர்களோ அது அவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கிறது. (அ.கு.42:13)
இஸ்லாத்தோடு ஐக்கியமாகி, இஸ்லாத்தை நிலைநாட்ட தனக்கு விருப்பமுள்ளவர்களை அல்லாஹ் அவன் நேர்வழிக்குரியவர்களாய் தேர்ந்தெடுத்துக்கொள்கிறான். அவனை முன்னோக்கி வருவோர்க்கு தன்னிடம் வரும் நேர்வழியை அவன் காண்பிக்கின்றான். (அல்குர்ஆன் 42:13)
இஸ்லாத்தோடு ஐக்கியமாகாமல் இஸ்லாத்தை நிலைநாட்ட எவ்வித முயற்சியும் செய்யாத பெயர்தாங்கி முஸ்லிம்கள் 42:13ல் இடம் பெற்றுள்ள மேற்கண்ட இறையுரையிலிருந்து அவசியம் படிப்பினைப் பெறக் கடமைப்பட்டுள்ளார்கள். இஸ்லாத்தோடு ஐக்கியமாகுதல் என்பதன் நடைமுறை வரைவு என்ன? அடுத்த ஆய்வில் காண்போம். இன்ஷா அல்லாஹ்.