பல்சமயச்  சிந்தனை!

in 2025 ஏப்ரல்

பல்சமயச்  சிந்தனை!

ஆசிரியர் குழு

2025 மார்ச் தொடர்ச்சி

சிதறிய  சிந்தனை  ஒன்றுபடும்போது!

இதுபோல் ஒரு மனிதன், ஒரு கல்லையோ ஒரு சிலையையோ, ஒரு மகானையோ, வேறெதையோ மையமாக வைத்து, அவனது சிதறும் சிந்தனையை ஒன்றுபடுத்தினால், இந்த நிலைகளும், தோற்றங்களும், காட்சிகளும் ஏற்படவே செய்யும். அவனிடத்தில் சில, பல அதிசயங்களும் நிகழ்ந்து விடலாம். இதில் வியத்தற்கொன்றுமில்லை, இது அனைத்து மதவாதிகளிடமும் காணப்படும் ஒன்றாகும். இதனால்தான் அவரவர்கள் இருக்கக்கூடிய மதங்களிலேயே உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். தங்களது மதம் தங்களுக்கு ஈடேற்றத்தைத் தரும் என்று நம்புகிறார்கள். இதனால் தான்எம்மதமும் சம்மதம்என்றும் சொல்கிறார்கள். இப்படி எல்லாம், தங்கள் சிந்தனைகளைச் செலுத்துகிறார்களே அல்லாமல், அதில் இறைவன் சம்மதமிருக்கிறதா? அது இறைத்தூதர்களால் காட்டித் தரப்பட்டதா? என்று ஒருபோதும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. தாங்கள் நிலை, காணும் காட்சி, தோற்றங்களுக்கு அவர்கள் முதன்மை கொடுக்கிறார்களே அல்லாமல், இறை  ஆணையை  நினைப்பதில்லை.

இறை  ஆணை  இதுதான்!

இறை ஆணையும், இறுதித் தூதரின் வழிகாட்டலும் இதுதான். எந்தச் சந்தர்ப்பத்திலும் மனிதன் தன்னிலை மறப்பதை மார்க்கம் அனுமதிக்கவில்லை. இறுதித் தூதர் மூலம் இறைவன் கடமையாக்கியுள்ள தொழுகையை உற்றுநோக்கினால், இந்த உண்மை தெளிவாகத் தெரியும். வேறு சிந்தனை இல்லாமல், இறை சிந்தனையில் மட்டும் ஒருவன் மூழ்கி, “என்னை நினைப்பதற்கே தொழுங்கள்என்ற இறைவனால் ஏவப்பட்ட அந்தத் தொழுகையையே, இறைத்தூதர் காட்டித் தந்த முறைப்படி, வெவ்வேறு நிலைகளை அதனதன் இடத்தில் முறையாகச் செய்யத் தவறினால், அவன் வழிகெட்டான் என்பது தான் உண்மையான உண்மையாகும். அவர்கள் நினைப்பது போல் இறை சிந்தனையில் மூழ்கித் தம்மை மறக்கும் நிலை, மார்க்கத்தில் வரவேற்கப்படக் கூடியதாக இருந்தால், தொழுகையை இப்போது தொழுவது போல் இறைவன் கடமையாக்கி இருக்கமாட்டான். ஓர் இடத்தில் அசைவில்லாது உட்கார்ந்து தொழும்படி கட்டளையிட்டிருப்பான். போதை தரும் பொருட்களை உபயோகிப்பதை விட்டும், இசையை மார்க்கம் மிகக் கண்டிப்பாக விலக்கியிருப்பதற்கும் காரணம், மனிதன் போதைப் பொருளால் தன்னிலை மறப்பது போல, இசையினால் தன்னிலை மறக்கிறான் என்பதற்கே ஆகும். ஆகவே தன்னிலை மறப்பதை இறுதித் தூதர் இறை ஆணைப்படித் தடுத்திருக்கிறார்கள். முந்தைய தூதர்களும்  அதைத்  தடுத்திருக்கிறார்கள். (பார்க்க : 2:219,4:43,5:90,91,26:221-226)

சாத்தான்  காட்டிய  வழி!

இது மனிதன் தன்னிலை மறந்து தறிகெட்டுச் செல்வதற்கும் தானே இறைவன், தானே எல்லாம் என்று சொல்லி நரகப் படுகுழியில் விழுவதற்கும் சாத்தான் காட்டிய வழியாகும். இந்த வழிகேட்டில் மூழ்கி, ஜபதவத்தின் மூலம் இந்த நிலையை அடைய முடியாதவர்கள், போதைப் பொருட்களை உட்கொண்டு, அதன் மூலம் அந்த நிலையை அடைந்து விட்டதாகச் சொல்பவர்களும் அவர்களில் இருக்கிறார்கள். அதனால்தான்அபின் சுல்தான், கஞ்சா மஸ்தான்என்ற பழமொழிகள்  ஏற்பட்டுள்ளன  போலும்.

காண்பது  இறைக்  காட்சியா?

அவர்கள் காணும் காட்சி, அவர்கள் எண்ணுவது போல் இறைக்காட்சி அன்று; சாத்தானின் காட்சியாகும். இறைத்தூதர் மோசஸ்(அலை) இறைக் காட்சியைக் காண முடியாமல், வேரோடு மரம் சாய்வது போல் சாய்ந்து, மூர்ச்சித்து விட்டார்கள். தூர்மலை சுக்கு நூறாகச் சிதறியது (பார்க்க 7:143). இறுதித் தூதர் தன்னுடையமிஃராஜ்எனும் விண்வெளிப் பயணத்தில், இறைவனை நேரடியாகப் பார்க்கும் சக்தியைப் பெறவில்லை. “இறுதித் தூதர் இறைவனை நேரடியாகப் பார்த்தனர்என்று சொல்பவர்கள், பொய்யே சொன்னார்கள் என்று இறுதித் தூதரது அருமை மனைவி ஆயிஷா(ரழி) அவர்களே உறுதியாகச் சொல்லி, அதற்குச் சான்றாக, “எவரின் பார்வையும் அவனை அடையாது; அவனோ யாவற்றையும் அறிந்தவன்‘ (6:103) என்ற இறை வசனத்தையும் தருகிறார்கள். அப்படிப்பட்ட இறைக் காட்சியையா இச்சாதாரண மனிதர்களால் பார்த்துவிட முடியும்? அதுவும் மலத்தையும் சிறுநீரையும், நாற்ற உடலையும் சுமந்து கொண்டிருக்கும் நிலையில், ஒருபோதும், இச்சாதாரண மனிதர்களுக்கு  அது  முடியாதது.

ஆக, இந்த அறிஞர்களின் கூட்டமும் வழி விலகியே சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களால்தான், இறைவனால் முழுமை யாக்கப்பட்ட இஸ்லாம் மார்க்கத்திலும்சமாதி(தர்கா) வழிபாடு புகுத்தப்பட்டது. இவர்களால் ஏற்பட்ட இந்த இறைவனுக்கு இணை வைக்கும் இம்மாபெரும் குற்றத்திற்கு, அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். இவ்வாறு சொல்வதால், மஹான்களையும், பெரியோர்களையும், இறைநேசர்களையும், அவமதிப்பதாக, குறை கூறுவதாக எவரும் எண்ணவேண்டாம்; தெளிவாகச் சொல்லுகிறேன். இறுதி நெறிநூலையும், இறுதித் தூதரையும் ஏற்று இறைவனால் கொடுக்கப்பட்ட மார்க்கத்தைப் பின்பற்றிய பெரியார்களின், இறைநேசர்களின் காலுக்குச் செருப்பாக நான் தயாராக இருக்கிறேன். அவர்களை அவர்களின் தகுதியால் மதிக்கிறேன். ஆனால் மார்க்கத்தை மதங்களாக்கி, உலகைத் தேடுபவர்களையே இங்குக் குறிப்பிடுகிறேன். மார்க்கத்தில் கூடுதல் குறைவு செய்ய இறை வெளிப்பாடுகளைப் பெற்ற இறைத்தூதர்களுக்கே அதிகாரம் இல்லாதபோது, அதைத் தெளிவாக இறைவன் தன் இறுதி நெறிநூலில் சொல்லிக் காட்டும்போது, வேறு யாருக்கு அதிகாரம் இருக்கமுடியும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.   (பார்க்க 5:67, 17:73-75, 69:44-47)

இறுதித் தூதர் தன் சொந்த விருப்பத்தினால் மக்களுக்கு அல்ல, தனக்கு மட்டிலும், தனது மனைவியரின் மனநிறைவிற்காக, இறைவன் ஆகுமாக்கியதை ஆகாதென்று சத்தியம் செய்ததில், “நான் ஆகுமாக்கியதை உமது மனைவிமார்களின் திருப்திக்காக ஆகாதாக்கிக் கொண்டீரா?’ என்று இறைவன் கண்டித்து இறுதித்தூதரின் சத்தியத்தை முறிக்கச் செய்து, அதற்குப் பரிகாரமும் கொடுக்கும்படி கட்டளையிட்டான் (66:1,2). இறுதித் தூதருக்கே இந்த நிலை ஏற்பட்டது என்றால், மற்றவர்களின் நிலையைக் குறித்து என்ன சொல்ல இருக்கிறது? ஆராய்ந்து, நீங்களே ஒரு முடிவுக்கு  வாருங்கள்.

4. பேரறிஞர்களின்  ஏமாற்றம்!

இறுதியாக, மதங்கள் ஏற்பட நாலாவது காரணம், அறிவார்த்தமான வாதங்கள், சர்ச்சைகள்; அதனால் பெறப்படும் முடிவுகளை, மார்க்கத்தின் அடிப்படைகளாக்கிக் கொள்ளலாகும். பேரறிஞர்கள், ஆற்றல் மிக்கவர்களை எல்லாம் சாத்தான் இந்த மாயவலையில் சிக்க வைத்திருக்கின்றான். இறைவன் இல்லை, மறுமை இல்லை என்ற நாத்திகமும் இதிலிருந்தே பெறப்படுகின்றது. இங்கு நாத்திகர்கள் இல்லை. அதைப்பற்றிய விளக்கத்தை விட்டு மேலே தொடர்ந்து பேசுகின்றேன். மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அற்ப அறிவைக்கொண்டு ஆராயும் போது, நன்மை என்று தனக்குப் பட்டால் அவன் அதை எடுத்துக்கொள்கிறான்; தீமை என்று பட்டால் விட்டுவிடுகிறான். அவனது அறிவின் முடிவையே எல்லையாக்கிக் கொள்கிறான்.  ஆனால் உண்மையில் மனிதன் சரி என்று காண்பது தவறாகவும், தவறென்று நினைப்பது சரியாகவும் சமயங்களில் அமைந்து விடுகின்றது. இதை இறைவன் தன் இறுதி நெறிநூலில் சுட்டிக்காட்டுகிறான். (பார்க்க 2:216). இதனால்தான் நீதிமன்றங்களில் குற்றவாளிகள் நிரபராதிகளாகச் சில வேளைகளில் முடிவுசெய்யப்பட்டு அவர்கள் விடுதலையடைகிறார்கள்; நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு நாட்டின் அரசியல் சாசனமும், மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்களும், காலத்திற்குக் காலம், மாற்றங்களுக்கு  உள்ளாகி  வருகின்றன. 

இது மனித அறிவின் இயலாமையை எடுத்துக்காட்டுகின்றது. மனிதன் தன் அறிவுத் திறன் கொண்டு தன்னைப் பெற்றெடுத்த தாயையும், தந்தையையும் அறிய முடியவில்லையே? வேறு எதை அவனால் அறிந்து கொள்ளமுடியும்? அம்மா என்று எழுத்துக் கூட்டி வாசிக்கும் ஒருவன், கம்பராமாயணத்திற்கு விளக்கம் கூற முற்பட்டால்? 2+2=4 என்பதை அறியாதவன், 2100 பற்றிச் சொல்ல முற்பட்டால், 5 கிலோ தராசில் 5000 கிலோ நிறுக்க முற்பட்டால், அரசு சட்டம் போடுவதை விட்டு, மக்களே சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டால் என்ன என்ன விளைவுகள் ஏற்படுமோ அதைவிட விபரீத விளைவுகள், மனிதன் தன் அறிவு கொண்டு மார்க்க விசயத்தில் முடிவுகள் எடுப்பதால் ஏற்படும்; இந்த அடிப்படையில் மரணத்தைத் தவிர்த்து (இதில் மாற்றுக் கருத்துக்கு வழியில்லை) இறைவன் இருக்கிறானா? இல்லையா? மறுமை உண்டா? இல்லையா? என்பது முதல் அனைத்துச் செய்திகளிலும் விவாதங்கள், சர்ச்சைகள் செய்து, அவற்றில் மனித அறிவால் பெறப்படும் முடிவுகளை எல்லையாகக் கொண்டு எடுத்து நடக்க முற்படுகிறார்கள். மனம் போல் வாழ்வு என்ற அடிப்படையில் எண்ணற்ற மதங்களைத் தோற்றுவிக்கிறார்கள். அளப்பதற்குமுன் அளக்கும் கருவியைச் சரிபார்ப்பது போல், அறிவைப் பயன்படுத்து முன் அறிவின் அளவைச் சரிபார்க்கத் தவறிவிடுகிறார்கள்.

மதுவிலும்,  சூதிலும்,  நன்மை  உண்டா?

இவர்களது அறிவை அழகாக இறைவன் தன் இறுதி நெறி நூலில் சுட்டிக்காட்டுகின்றான். “மதுவிலும், சூதிலும் நன்மை இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் நினைப்பதுபோல் மதுவிலும், சூதிலும் சில நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. நன்மையை விடத் தீமைகள் அதிகமாக இருப்பதால் (அதைத் தடை செய்கிறேன்”) (2:219) என்று இறைவன் கூறுகின்றான். தங்கள் அறிவுப்படி மதுவிலும், சூதிலும் நன்மையைக் கண்டவர்கள் அதில் மூழ்கி இருப்பதைப்  பார்க்கிறோம். 

இது அவர்களது மதம், உலக மக்களால் கெடுதல் என்று கூறப்படும், மதுவிலும், சூதிலும் ஒருசில நன்மைகள் இருப்பதாக இறைவனே ஒப்புக்கொள்ளும்போது, வேறு எதில் சில நன்மைகளாவது இல்லாமல் இருக்க முடியும்? ஆகவே அறிவு கொண்டு முடிவு செய்தால், கெட்டதை எல்லாம் நல்லதாகவும், நல்லதை எல்லாம் கெட்டதாகவும் முடிவு செய்து செயல்பட நேரிடும். அதனால்தான் மதங்கள் உருவாகின்றன. தன்னைப் படைத்துத் தன்னை ஆட்டிப் படைக்கும் ஒரு சக்தி இருக்கிறது. அவன்தான் இறைவன் என்பதை எப்போது அறிகிறானோ அப்போது தான் மனிதன் அறிந்தவனாக, அறிஞனாக ஆகின்றான். மார்க்கத்தைத் தன் அற்ப அறிவு கொண்டு ஆராய்ந்து அதையே எல்லையாக்காமல், இறைவனது உண்மையான உத்தரவு இதுதானா? என்பதை மட்டும் சரியாக விளங்கிக் கொண்டு அதை மட்டுமே செயல்படுத்தினால், அதற்கு நாம் அனைவரும் தயாராகி விட்டால், மனித மதங்கள் அனைத்தும் அழிந்து, இறைவனது மார்க்கம் மட்டும் உலகில் நிலைநாட்டப்பட்டு விடும். அந்த நாள் எந்த நாளோ? அது நிகழ்ந்துவிட்டால், அதிசயமோ என்று நாமே வியக்கத்தக்க வகையில், நலமும், அமைதியும் உலகில் ஏற்பட்டு விடும். (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: