யார் அதிர்ஷ்டசாலி?
N. அஹமது இப்ராஹிம், ஒரத்தநாடு
தலைப்பை பார்த்தவுடன் வாசகர்களுக்கு “அந்நஜாத்‘ பத்திரிக்கை 40ஆம் ஆண்டை முன்னிட்டு ஏதோ பரிசு போட்டி வைத்து அதிர்ஷ்டசாலிகளை தேர்ந்தெடுத்து பரிசு கொடுக்க உள்ளது என வாசகர்கள் நினைக்கலாம். நாம் (“அந்நஜாத்‘) அவ்வாறெல்லாம் செய்யமாட்டோம், நமது வாசகர்களும் அவ்வாறு எதிர்பார்ப்பவர்கள் அல்ல என்பதையும் நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
பின்பு ஏன் “யார் அதிர்ஷ்டசாலி” என்ற தலைப்பை சூட்டியுள்ளீர்கள் என்று கேட்கலாம். பரிசு போட்டி நடத்தினால்தான் இந்த தலைப்பை வைக்கவேண்டும் என்று கட்டாயம் ஒன்றுமில்லை. மாறாக நாமும், நம் வாசகர்களும் “அதிர்ஷ்டசாலி”களாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த தலைப்பை சூட்டியுள்ளோம்.
தலைப்புக்கான காரணம் தெரிந்து கொள்வதற்கு முன்பு “அதிர்ஷ்டசாலி” என்பதற்கு என்ன பொருள் என்பதை தெரிந்து கொள்வது நல்லது.
“அதிர்ஷ்டசாலி” என்ற வார்த்தையானது பிற மொழிச் சொல்லாகும்.
அதற்கு தமிழில்
“வாய்ப்பை பெற்றவர்கள்” அல்லது “வெற்றி பெற்றவர்கள்” என்பது பொருளாகும்.
பொதுவாக இவ்வுலகில் குலுக்கல் முறையிலோ அல்லது சில வாய்ப்புகளாலோ “அதிர்ஷ்டசாலி”கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
அதுபோல் கோடிக்கணக்கான மக்களிடமிருந்து வெகு சிலரை மட்டும் சில வெற்றியா ளர்களாக அல்லாஹ் தேர்ந்தெடுக்கின்றான். அவர்களில் நியமனம் செய்யப்பட்டவர்கள் சிலர் மட்டுமே. மீதமுள்ளவர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக ஆவார்கள்.
நியமனம் செய்யப்பட்டவர்கள் யார் யார்?
1. யஹ்யா(அலை) அவர்கள் 19:12
2. மூஸா(அலை) அவர்கள் 20:41,42
3. ஹாரூன்(அலை) அவர்கள் 3:49
4.ஈஸா(அலை) அவர்கள் 3:49
ஆகியவர்கள் ஆவார்கள்.
மேற்கண்ட நான்கு நபிமார்களைத் தவிர ஏனைய ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபி மார்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட “வெற்றியாளர்கள்” ஆவார்கள். இதில் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உள்பட. (3:179)
அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட (வெற்றியாளர்களாக) சில நபிமார்களின் வரலாற்றை பார்த்தோமேயானால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அதுவே அல்லாஹ்வின் தனித் தன்மையாகும்.
உதாரணமாக :
1. நபி இப்ராஹிம்(அலை) அவர்களின் தந்தை கோயில் பூசாரியாகவும், சிலைகள் செய்து விற்பனை செய்பவராகவும் இருந்தார். ஆனால் அவருடைய வாரிசான நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் சிலை வணக்கம் கூடாது. அவைகளுக்கு எந்த சக்தியும் இல்லை, அவை கடவுளும் இல்லை என்று சொன்னார் கள். அல்லாஹ் அவரை தேர்ந்தெடுத்தான்.
2. நபி யூசுப்(அலை) அவர்களின் வரலாற்றை பார்த்தோமேயானால் அவரது சகோதரர்களால் பொறாமையின் காரணமாக கிணற்றில் தள்ளப்பட்டு கொலை செய்ய முயற்சித்தார்கள்.
அல்லாஹ் அவரை வியாபார கூட்டத்தார் மூலம் காப்பாற்றி மந்திரி சபையில் மிகவும் பொறுப்பு வாய்ந்த மந்திரியாக ஆக்கினான். இவரையும் அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்.
மேலும் இறுதி நபியான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எழுதப் படிக்க தெரியாதவராகவும், அதற்கு முன்பு அருளப்பட்ட இறை நூலை(வேதத்தை) யாரிடமும் கற்றுக் கொள்ளாமலிருந்த நபி(ஸல்) அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்.
எனவே வெற்றியாளர்கள் (அதிர்ஷ்டசாலிகள்) பெரிய பிரபல திறமைசாலிகளாக இருந்தால்தான் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்படு வார்கள் என்பது இல்லை.
அதுபோல் நாமும் அல்லாஹ்வால் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால் நபியாக அல்ல. அந்த அந்தஸ்துக்கும்(தகுதிக்கு) நிகராகவும் அல்ல. மாறாக வெற்றியாளராக (அதிர்ஷ்டசாலியாக) ஆகமுடியும்.
அதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்பதை தனது வழிகாட்டி நூலில் (இறைநூலில்) சுமார் 15க்கு மேற்பட்ட இடங்களில் கூறியுள்ளான்.
அவை வருமாறு : பார்க்க கீழ்கண்ட வசனங்கள்: 2:5, 3:104, 5:56, 7:8, 9:20, 23:102. 23:111, 24:52, 30:38, 31:4,5, 58:22, 59:9, 20, 64:16.
“என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு ஆட்சியிலிருந்து (ஒரு பங்கைத்)தந்து, கனவு களின் விளக்கத்தையும் எனக்குக் கற்றுத் தந்தாய்; வானங்களையும், பூமியையும் படைத்தவை! இம்மையிலும், மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! இன்னும் நல்லவர்களுடன் என்னைச் சேர்த்திடுவாயாக!” (என்று அவர் பிரார்த்தித்தார்) (12:101)
நம்மையும் வெற்றியாளராக (அதிர்ஷ்ட சாலியாக) தேர்ந்தெடுக்க பாடுபடுவோம். இன்ஷா அல்லாஹ்.