இறைநூல் (குர்ஆன் !)
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
குர்ஆனின் வரலாறு என்பது வந்து, வாழ்ந்துவிட்டுப் போனவர்களின் வாழ்க்கை வரலாறு போல் அல்ல; மாறாக சாதனைகளைத் தந்து பல சரித்திர மனிதர்களை உருவாக்க உறுதுணையாக அன்றும், இன்றும், என்றும் இருப்பதாகும்.
எப்படி சுடப்படாத தங்கம் ஆபரணமாவதில்லையோ, துளையிடப்படாத மூங்கில் புல்லாங்குழலாக ஆவதில்லையோ, உளியின் வலிக்கு பயந்த கற்கள் சிற்பமாவதில்லையோ அதுபோல் குர்ஆனை படிக்காத அதிலுள்ளதை சிந்திக்காத அதை பின்பற்றாத எந்த மனிதனின் வாழ்க்கையும் முழுமைப் பெற்றதாக ஆவதில்லை.
குர்ஆனை புரிந்துகொள்ள முடியாது என்பது சில முல்லாக்களால் கூறப்படும் மூடத்தனம், முடியுமா என்பது பழகீனமான வர்களின் கோழைத்தனம், முடியும் என்பதே முழுமை பெற்ற மனிதனின் மூலதனம்.
எவ்வாறு என்றால்,
குர்ஆன் மனித வாழ்வின் எந்த பகுதியையும் பற்றி கூற தயங்கவில்லை, தவறவில்லை, அதுமட்டுமல்ல புறக்கணிக்க கூடவில்லை. அதாவது ஆன்மீகம், அரசியல், குடும்ப வாழ்வு, கல்வி, சுகாதாரம் இன்னும் ஏராளம், ஏராளம் எனவே எல்லாப் பகுதிகளையும் விவரிக்கிறது. ஏன் என்றால் மனிதன் எந்த நிலையிலும் தவறி விடக்கூடாது என்பதற்காக மனிதனைப் படைத்த இறைவனே செய்துள்ள ஏற்பாடு இது. அதனை புரிந்துக் கொள்வதிலும், உள்வாங்கி செயல்படுத்துவதிலும் சில கருத்து வேறுபாடு உள்ளது. அதனால் குர்ஆன் முழுமையாக விளங்காது என்ற தவறான கருத்து சில மார்க்க அறிஞர்களால் (ஆலிம்களால்) விதைக்கப்படுகிறது.
உண்மை என்னவென்றால் இறையச்சம் உள்ள எல்லா மனிதர்களாலும் குர்ஆனை புரிந்து கொள்ளமுடியும். அதை அருளியவனே அவ்வாறு தான் கூறுகிறான்.
இது (குர்ஆன்) இறைவனால் அருளப்பட்ட வழிகாட்டி நூலாகும். இதில் யாதொரு சந்தேகமும் இல்லை. இறையச்சமுடையோருக்கு (இது) நேர்வழி காட்ட கூடியதாகும். (அ.கு. 2:2)
“பெரும்பாக்கியம் நிறைந்தவனான இறைவனால் தன்னுடைய அடியார்கள் மீது சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து காட்டும் இந்த ஃபுர்கானை (இறைநூலை) இறக்கிவைத்துள்ளான்” (அ.கு. 25:1)
“…இது (குர்ஆன்) யாவற்றையும் தெளிவாக விவரிக்கக் கூடியதாக இருக்கிறது. முற்றிலும் இறைவனுக்கு கீழ்ப்படிந்து வாழும் மக்களுக்கு இது நேர்வழி காட்டக்கூடியதாகவும், அருளாகவும் நற்செய்தியை கூறக்கூடிய தாகவும் இருக்கிறது.” (அ.கு. 16:89)
நாம் மேலே குறிப்பிட்ட வசனங்கள் போல் இன்னும் ஏராளமான வசனங்கள் குர்ஆனில் உள்ளன.
குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்கள் பலரும் செய்த தவறு என்னவென்றால் அத்தியாயங்களின் வரலாற்று பின்னனியும், சில (ஆயத்) வசனங்களின் பின்னனியும் முழுமையாக விளங்காமலும், அதை புரிந்து கொள்ளாமலும் மொழி பெயர்த்து விட்டனர். அதாவது வார்த்தைக்கு வார்த்தை (அரபி To தமிழ்) மட்டுமே பெரும்பாலானவர்கள் மொழி பெயர்த்துள்ளனர்.
மாற்று கருத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்ளாமலும், மேலும் மாற்றுக் கருத்தை எதிர்ப்பதாகவும் இருக்கின்றது. அது மட்டுமல்ல நடுநிலையான கருத்தை சொல்ல வந்தவர்கள் கூட “நடுவில் நின்று நெஞ்சை துருத்துகிறார்களே” தவிர இரு பக்கங்களையும் பார்ப்பது கிடையாது.
உதாரணமாக :
இல்லறத்தில் மகிழ்ச்சி எப்போது வருமென்றால்,
1. பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்தால் மட்டும் வருமா? என்றால் வராது.
2. நகைகள் வாங்கிக் கொடுத்தால் மட்டும் வருமா? என்றால் வராது.
3. பணம் கட்டு கட்டாக கொடுத்தால் வருமா? என்றால் வராது.
மாறாக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால் மட்டுமே வரும்.
அதுபோல் குர்ஆனில் மாற்றுக் கருத்துள்ளவர்கள் இறைவனுக்காவும், இறையச்சத்தோடும் விட்டுக்கொடுத்தால் மட்டுமே மாற்றுக் கருத்தை சரி செய்யலாம்.
குர்ஆன் என்பது அல்லாஹ் நம்மிடையே பேசுவது போல் உள்ளதாகும்
இதில்,
1. அல்லாஹ்வே பேசும் வசனங்களும் உள்ளன.
2. அல்லாஹ்வின் அடியார்கள் பேசும் வசனங்களும் உள்ளன.
3. அல்லாஹ்வின் தூதர்களும் பேசிய வசனங்களும் உள்ளன.
4. வானவர்கள் (மலக்குகள்) பேசிய வசனங்களும் உள்ளன.
5. இப்லீஸ் பேசிய வசனங்களும் உள்ளன.
6. அல்லாஹ்வின் படைப்புகளான பறவை எறும்பு முதற்கொண்டு பேசிய வசனங்களும் உள்ளன.
7. அல்லாஹ்வின் எதிரிகள் பேசிய வசனங்களும் உள்ளன.
8. சொர்க்கவாசிகள், நரகவாசிகள் பேசப் போகின்ற வசனங்களும் உள்ளன.
எனவே அத்தியாயங்களின் வரலாற்று பின்னனியும், மற்றும் சில வசனங்களின் வரலாற்று பின்னனியும் தொடராகவும், நினைவூட்டுதலாகவும் சுருக்கமாக குறிப்பிட உள்ளோம். இன்ஷா அல்லாஹ.(ஏதேனும் கருத்துக்கள் குறிப்பிட தவறியிருந்தால் வாசகர்கள் சுட்டிக்காட்ட தயங்க வேண்டாம். அதை மனமுவந்து ஏற்றுக்கொண்டு பரிசீலனைச் செய்து அதையும் பிரசுரம் செய்வோம்.) இன்ஷா அல்லாஹ்.