தலையங்கம் :
இஸ்லாத்தில் நாட்டுப் பற்று!
உண்மையான தேசபக்தி… நாட்டுப் பற்று என்பது ஒரு நாட்டின் வரைபடத்தையோ, பூகோள அமைப்பையோ மண்ணையோ, கடலையோ, ஆறுகளையோ பாரத்மாதா என்று உருவபடுத்தி நேசிப்பதை விட அந்நாட்டைச் சேர்ந்த மக்களை நேசிப்பதுதான்.
இந்திய நாட்டு மக்களின் நலன் கருதி அவர்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளை ஆத்மார்த்தமாக செய்வதும் அவர்களோடு இணக்கமாக வாழ்வதும் அவர்களுக்காக உழைப்பதும் தான் உண்மையான இந்தியா தேசப்பற்று.
இந்திய நாட்டில் ஆரோக்கியம், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றின் வளர்ச்சிக்கு தன்னலம் கருதாது உழைப்பதும் அவர்களை ஒரு பண்பாடு மிக்க குடிமக்களாக வார்த்தெடுக்க தன்னால் ஆன உழைப்பை செய்வதும் நாட்டுப் பற்றின் உண்மை அடையாளங்களாகும்.
இந்திய தாய் நாடு ஆபத்துக்கோ, வறுமைக்கோ, பஞ்சத்துக்கோ, அநியாயத்துக்கோ உள்ளாகும்போது உயிரை துச்சமாகக் கருதி நாட்டை விட்டு ஓடாமல் அங்கேயே நிலைத்து நின்று நாட்டின் இடுக்கண்ணை விடுவிக்கப் பாடுபடுவது என்பது உண்மை நாட்டுப்பற்றின் உச்சகட்டம் எனலாம்.
இப்படிப்பட்ட ஆத்மார்த்தமான நாட்டுப்பற்று மனித உள்ளத்தில் வரவேண்டுமானால் அங்கு இறை நம்பிக்கையும், இறையச்சம் அடிப்படைத் தேவைகளாகும்.
நம்மைப் படைத்த இறைவன் நமக்கு கற்றுத்தரும் வாழ்க்கைத் திட்டத்திற்கே அரபி மொழியில் இஸ்லாம் என்று வழங்கப்படுகிறது. அதை வாழ்க்கை நெறியாக ஏற்றவர்கள் அவர்கள் வாழும் இந்தியா நாட்டை அதாவது நாட்டு மக்களை நேசிக்காமல் இருக்கமுடியாது.
இன, மொழி, நிற, மத வேற்றுமைகளை மறந்து மனிதகுலம் அனைத்தையும் தங்கள் சகோதரர்களாக பாவிக்கவேண்டும் என்பது இங்கு இறைவன் கற்பிக்கும் அடிப்படைப் பாடமாகும்.
“மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும், பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில் உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தாம்”. அல்குர்ஆன் 49:13
மேலும் நம் நாட்டு மக்களை நேசிப்பதை வழிபாடாகக் கற்பிக்கிறது இஸ்லாம்.
“மண்ணிலுள்ள மனிதர்களை நேசித்தால் விண்ணில் உள்ள இறைவன் உங்களை நேசிப்பான்” என்பதும்,
“மனிதர்கள் மீது கருணை காட்டாதவர் இறைவனால் கருணை காட்டப்படமாட்டார்” என்பதும் நபிமொழிகள்.
இஸ்லாம் முன்வைக்கும் மறுமை நம்பிக்கை. அதாவது இறைவனின் கட்டளைகளை பூமியில் நடைமுறைப்படுத்துபடும் எந்த ஒரு செயலும் வீண் போவதில்லை. அவற்றிற்கு இறைவனிடம் மறுமையில் அதாவது சொர்க்க வாழ்வில் நற்கூலி உண்டு என்ற உறுதியான நம்பிக்கை.
இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ்பவர்களுக்கு அசாத்திய துணிச்சலையும், வீரத்தையும் தருகிறது. நாட்டு மக்களை அநியாயத்தில் இருந்தும் அக்கிரமங்களில் இருந்தும் அந்நியர்களின் தாக்குதல்களில் இருந்தும் பாதுகாக்க சொந்த உயிரையும், உடமைகளையும் அர்ப்பணிக்க மாபெரும் உந்துசக்தியாக இந்த நம்பிக்கை செயல்படுகிறது. இதை மிஞ்சும் நாட்டுப்பற்றை எங்கேனும் காணமுடியுமா?
ஆகவே, இந்தியா தாய்நாட்டின் வளர்ச்சிக்கு எல்லாத் துறைகளிலும் பங்கு கொண்டு நாட்டை உயர்த்துவோம்… நாமும் உயர்வோம்!