பல்சமயச் சிந்தனை!

in 2025 மே

பல்சமயச் சிந்தனை!

ஆசிரியர் குழு 2025

ஏப்ரல் தொடர்ச்சி

மூதாதையர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவது மார்க்கமா?

மதத்தின் தொடர்பாகும் சம்பந்தப்பட்ட ஐயங்களுக்கு இங்கே ஓரளவு விளக்கம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். நியாயமாகத்தான் படுகின்றது. ஆனாலும் எங்கள்  முன்னோர்கள் எதில் இருக்கக் கண்டோமோஅதில் தான் எங்களுக்குப் பெருமை இருக்கிறது. சொர்க்கத்தில் இருந்தாலும், நரகத்தில் இருந்தாலும் அவர்களோடு இருக்கத்தான் விருப்பப்படுகிறோம் என்று சிலர் சொல்லலாம். அவர்கள் சொல்லில் உண்மை இல்லை. முன்னோர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றக் கூடியவர்கள், அதை இவ்வுலகில் முதலில் செய்துகாட்ட வேண்டுமல்லவா? முன்னோர்கள் ஏழைகளாக இருந்திருந்தால், இவர்களும் ஏழைகளாக இருக்க விருப்பப்பட வேண்டுமல்லவா? அவர்கள் அறிவிலிகளாக இருந்தால் இவர்களும் அறிவிலிகளாக இருக்க விருப்பப்பட வேண்டுமல்லவா? அவர்கள் குடிசையில் வாழ்ந்திருந்தால் இவர்களும் குடிசையில் வாழ விருப்பப்பட வேண்டுமல்லவா? கூழைக் குடித்துக் கந்தையைக் கட்டி இருந்தால், இவர்களும் கூழைக் குடித்துக் கந்தையைக் கட்ட விருப்பப்பட வேன்டுமல்லவா? இது உண்மை தானா? இவை எல்லாம் இழிவு: இவற்றை விட்டு விடுதலை பெறவேண்டும் என்றல்லவா, அல்லும் பகலும் பாடுபடுகிறார்கள். அப்படி என்றால் மத அளவில் மட்டும் இவர்கள் முன்னோர்களைப் பின்பற்றுகிறோம் என்று சொல்வது சரியா? இவர்கள் முன்னோர்களைப் பின்பற்றவில்லை சாத்தானையே  பின்பற்றுகிறார்கள்.

ஏழைகளாக இருப்பதை விட, குடிசையில் வாழ்வதை விட, கூழைக் குடித்துக் கந்தையைக் கட்டுவதை விட, இறைவன் கொடுத்த மார்க்கத்தை விட்டு மனிதன் படைத்த மதங்களைப் பின்பற்றுவதே மிகப் பெரும் இழிவாகும். அது மிகப்பெரும் இழிவு மட்டுமல்ல; மறுமையில் மாபெரும் இழப்பையும், துன்பத்தையும் தரக்கூடியது அது என்பதை உணர்ந்து கொண்டால், அவர் களால் அவ்வாறு சொல்ல முடியாது. இவ்வுலகின் சாதாரண துன்பங்களை விட்டும் விடுதலை பெறப் பெரும் முயற்சி எடுக்கும் மனிதன், மறுமையின் மாபெரும் துன்பங்களை உணர்ந்திருந்தால், புரிந்திருந்தால் அதை விட்டும் விடுதலை பெற முயற்சி செய்யாமல் இருக்க முடியுமா? சொர்க்கத்திற்குப் போனாலும், நரகத்திற்குப் போனாலும் முன்னோர்களைப் பின்பற்றியே நடப்போம் என்று சொல்லமுடியுமா? அறியாமையின் பேச்சே இது ஆகும். அறிஞனின்  வாயிலிருந்து  இத்தகு  பேச்சு  வெளிப்படாது.

மனிதர்களைப் பல வழிகளில் முயற்சி செய்து நரகப் படுகுழியில் சாத்தான் தள்ளுகிறான். முதலில் இறைவனை மறுக்கும் நாத்திகனாக்கப் பார்க்கிறான். அதில் அவன் தோல்வி கண்டால், மனிதன் இறைவனை ஏற்றுக்கொண்டால், இறைவனுக்கு இணை வைத்து அதன் மூலம் நரகில் விழச் செய்கிறான். இதற்காக அவன் பயன்படுத்தும் உபாயம் முன்னோர்களின், அறிஞர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடக்கவேண்டும் என்ற ஒரு பக்தி உணர்வை உண்டாக்குவ தாகும். இதில் பெரும்பாலோர் சிக்கி விடுகிறார்கள். முன்னைய அறிஞர்களைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லியே மக்களில் பெரும்பாலோர் வழிகெட்டுப் போகிறார்கள். கடந்த கால வரலாற்றை உற்று நோக்கினால், அபூலஹப், அபூஜஹல் போன்ற வழிகேடர்கள், இறைவனால் சபிக்கப்பட்டவர்கள், இறை தண்டனைக்கு ஆளானவர்கள், இவர்களே நம் முன்னோர்கள், அறிஞர்கள் எல்லாம் முட்டாள்களா? மார்க்கம், தெரியாதவர்களா? நீ புதிதாகச் சொல்ல வந்துவிட்டாயே! அவர்களை விட நீ மிகவும் அறிந்து விட்டாயோ? அவர்களெல்லாம் வழி தவறியவர்களா? நரகவாதிகளா? என்று அடுக்கிக் கொண்டே போய் மக்களை அவர்கள் வழி கெடுத்திருக்கிறார்கள். அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்ற நேர்வழி நடந்தவர்கள் எந்தச் சிக்கல் வந்தாலும், இறைவன் என்ன சொல்லுகிறான், இறைத்தூதர் என்ன சொல்கிறார் என்று மட்டுமே பார்த்திருக்கிறார்கள். இந்த வழிகேடர்களின் குதர்க்கமான கேள்விக்கு, இறைவனே தனது இறுதி நெறி நூலில்அவர்கள் செய்த நல்வினை அவர்களுக்கே, நீங்கள் செய்த நல்வினைதான் உங்களுக்கு, அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று நீங்கள் கேட்கப்படமாட்டீர்கள்” (2:134,141) என்று முன்சென்ற நபிமார்களைப் பற்றியே குறிப்பிடுகிறான். நபிமார்களைப் பற்றியே குறிப்பிடுகிறான். நபிமார்களைப் பற்றியே நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று இறைவனே சொல்லும்போது, முன்னோர்களையும் முன்சென்ற அறிஞர்களைப் பற்றியும் அவர்கள் ஏன் கவலைப்படுகிறார்கள்? மக்களை வழிகெடுக்கவே, இவ்வாறு கூறுகிறார்கள் என்பது இங்கு விளங்குகிறதல்லவா?

சாத்தானின்  மாயவலை!

முன்னோர்களின், முன் சென்ற அறிஞர்களின் வழி நடக்கிறோம் என்ற சாத்தானின் மாய வலையில் சிக்கித்தான், மக்கள் இறைத் தூதர்களின் போதனையை மறுத்தார்கள். இரண்டு இறைத்தூதர்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், முன்னைய தூதரின் போதனையிலிருந்து சிறிது, சிறிதாக இக்கூட்டத்தார், சாத்தானின் துணையைக் கொண்டு, மக்களை வழிதவறச் செய்தார்கள்; மக்களே முன்னைய தூதரின் போதனைப்படிதான் நடக்கிறோம் என்ற நம்பிக்கயோடு அதற்கு நேர்மாற்றமாக நடந்து கொண்டிருப்பார்கள். அடுத்த தூதர் வந்து உண்மையான மார்க்கத்தைப் போதிக்கும்போது, அது அவர்கள் பின்பற்றி நடக்கிற இக்கூட்டத்தாரார் முன்னைய தூதரின் போதனை என்று சொல்லப்பட்டதற்கு நேர்மாற்றமாக இருக்கும். அறிஞர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இக்கூட்டத்தார் மீது நம்பிக்கை கொண்டுள்ள மக்கள், முன்னைய தூதர் அறியாதவரா? வழி தவறியவரா? என்று கேட்டு, இரண்டாவது இறைத்தூதரின் நற்போதனைகளை மறுத்து விடுவார்கள். காலத்துக்குக் காலம் முன்னைய தூதரைவிடப் பின்னர் வந்தவர் அறிவாளியாகி விட்டாரா? என்ற எண்ணத்திலேயே மக்கள் இறைத்தூதர்களை நிராகரித்து வந்தார்கள். “அடியார்கள் மீதுள்ள கைசேதமே! அவர்களிடம் எந்தத் தூதர் வந்தபோதிலும் அவர்கள் அவரைப் பரிகாசம் பண்ணாதிருக்க வில்லை” (36:30)  என்று இறைவன் தன் இறுதி நெறி நூலில் குறிப்பிடுகின்றான்.

 இப்படித்தான் மோஸஸ்(மூஸா)(அலை) போதித்த கொள்கையில் இருப்பதாக நம்பிக்கைக் கொண்டு அதற்கு நேர்மறையான கொள்கையில் இருந்த யூதர்கள், அவர்களிடம் ஜீஸஸ் (மூஸா)(அலை) வந்து, உண்மையான இறை மார்க்கத்தைப் போதித்தபோது, மோஸஸ்(மூஸா)(அலை) மீதிருந்த தவறான நம்பிக்கையினால், ஜீஸஸை(ஈஸா)(அலை) ஏற்றுக்கொள்ளாது நிராகரித்ததோடு, அவரைக் கொலை செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டார்கள். இறைவன் தன் தூதரைக் காப்பாற்றிக் கொண்டான். அதேபோல் ஜீஸஸ்(ஈஸா) (அலை) போதித்த போதனையில் இருப்பதாக நம்பிக்கொண்டு, அதற்கு நேர்மாற்றமான கொள்கையில் இருந்த கிருத்தவர்கள், அவர்களிடம் முஹம்மது(ஸல்) வந்து இறை மார்க்கத்தைப் போதித்தபோது, ஜீஸஸ்(ஈஸா) (அலை) மீதிருந்த தவறான நம்பிக்கையினால், முஹம்மதை(ஸல்) ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படி எல்லாம் மக்களை வழி கெடுத்தவர்கள், மார்க்கத்தைக் கொண்டு உலகைத் தேடியவர்கள். இவர்களின் துர்ப்போதனையால், இரண்டு தூதர்களுக்கிடையில் வேறுபட்ட கருத்துப் போல், தோன்றியதால் முன்னைய தூதர் வழிகேடரா? என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டது. அதற்கு விளக்கமாகத்தான் 2:134, 141 வசனங்களை  இறைவன்  இறக்கினான்.

இதே அடிப்படையில் இறுதித்தூதர் மறைவுக்குப் பிறகு இதே கூட்டத்தார் மீண்டும், மக்களை இறுதித் தூதரின் உண்மையான போதனைகளிலிருந்து நெடுந்தூரம் அழைத்துச் சென்று விட்டார்கள். பெரும்பாலான மக்கள் அதில்தான் மூழ்கி இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் தவறான நிலை, இறுதி நெறிநூல் இறுதித் தூதரின் போதனைகளைக் கொண்டு சுட்டிக்காட்டப்பட்டால், தாங்கள் மூழ்கி இருக்கும் கொள்கையிலும், யாரைப் பின்பற்றி அந்தக் கொள்கையில் இருக்கிறார்களோ, அவர்கள் மீதுள்ள தவறான நம்பிக்கையிலும், இறுதி நெறிநூலின் வசனங்களையும், இறுதித் தூதரின் போதனைகளையும் நிராகரிக்கிறார்கள். இது உலகம் அழியும்வரை நடைபெற இருக்கும் ஒரு தொடர் கதையாகும்.

ஆத்திகர்களிடம் மதவாதிகளிடம் இந்த முன்னோர் முன்னைய அறிஞர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடக்கும்  எண்ணம் மிகத் தீவிரமாக இருப்பதாக அதைப்பற்றி இன்னும் சற்று விரிவாகப் பேசவே விருப்பம் உலகில் தோன்றிய பல்லாயிரம் இறைத் தூதர்களையும் மக்கள் எதிர்த்ததற்குக் காரணம், அவர்கள் முன்னோர்கள் காட்டித்தந்த கொள்கைகள் என்று, கடைபிடித்துக் கொண்டிருந்த கொள்கைகளுக்கு நேர்மாற்றமாக இறைத்தூதர்கள் போதித்ததை அவர்களால் சகிக்கமுடியவில்லை, அதனால் அளவு கடந்து ஆத்திரப்பட்டு இறைத்தூதர் களைக் கொடுமைப்படுத்தினார்கள். சிலரைக் கொலையும் செய்தார்கள், முன்னோர்கள் நேரான பாதையில் இருந்ததாகக் குருட்டுத்தனமாக நம்பினார்கள். ஆம்? குருட்டுத்தனமாக நம்பிச் செயல்பட்டார்கள் என்று தான் சொல்லமுடியும். அவற்றிற்குரிய ஆதாரங்களைப் பார்த்து அவர்கள் பின்பற்றவில்லை. அப்படி நடப்பவர்கள், அப்படி நடப்பதற்கு, இறைவனிடமிருந்து என்ன ஆதாரத்தைப் பெற்றுள்ளனர்? அந்த ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள் என்று இறைவனே இறுதி நெறி நூலில் கேட்கின்றான் என்பது ஒரு செய்தி.

தெளிவான கட்டளைகளை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். அவர்கள் தங்களுக் கிடையிலுள்ள பொறாமையின் காரணமாக, அவர்களிடம் (இறை) ஞானம் வந்த பின்னரும், அவர்கள் (தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு) பிரிந்துவிட்டனர். நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பவற்றைப் பற்றி மறுமையில் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான்.”  அல்குர்ஆன்45:17

மார்க்கத்தின் நேரான வழியில்தான் நாம் உம்மை ஆக்கி இருக்கிறோம். ஆகவே அதனையே நீர் பின்பற்றி நடப்பீராக; அறிவற்றவர்களின் விருப்பங்களை நீர் பின்பற்றாதீர்” (45:18) என்று இறுதித் தூதரையே இறைவன்  எச்சரிக்கின்றான்.

இவற்றிலிருந்து எந்த ஒரு சிக்கலுக்கும், இறைநெறிநூல் என்ன சொல்கிறதென்று பார்க்கவேண்டுமே அல்லாது, அந்தப் பெரியார் என்ன சொன்னார், இந்தப் பெரியார் என்ன சொன்னார் என்று பார்ப்பது மார்க்கமாகாது. இந்த எண்ணம்தான் முன்னோர்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றும் நிலையை உண்டாக்கி வழிகேட்டில் இட்டுச் சென்றது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…..

Previous post:

Next post: