பல்சமயச் சிந்தனை!

in 2025 ஜுன்

பல்சமயச் சிந்தனை!

ஆசிரியர் குழு

2025 மே தொடர்ச்சி

அதனால்தான் இறைவன் இணை வைப்பதற்கு அடுத்த பெருங்குற்றமாக, முன்னோர்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதைக் குறிப்பிடுகின்றான். இன்னும் சொல்லப்போனால், இதையும் தனக்கு இணை வைப்பதாகவே குறிப்பிடுகின்றான். “இவர்கள் அல்லாஹ்வை யன்றித் தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும் மர்யமுடைய மகன் மஸீகையும், (தங்கள்) தெய்வங்களாக எடுத்துக்கொண்டிருக்கின்றனர். எனினும், ஒரே ஆண்டவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்றே, இவர்கள்(யாவரும்) ஏவப்பட்டிருக்கின்றனர். அடிபணிவதற்குரிய நாயன், அவனையன்றி வேறெவனும் இல்லை. அவர்கள் இணை வைக்கும் இவற்றைவிட்டு அவன் மிகவும்  பரிசுத்தமான வன்.  அல்குர்ஆன் 9:31

இந்த திருவசனம் இறங்கியபோது, கிறித்தவராக இருந்து, இஸ்லாத்தில் இணைந்த அதீ இப்னு ஹாத்தம்(ரழி) என்கிற நபிதோழர், “அல்லாஹ்வின் தூதரேநாங்கள் எங்கள் மத அறிஞர்களை வணங்கிக் கொண்டிருக்கவில் லையே!(ரப்புகளாக ஆக்கிவிட்டதாக இறைவன் கூறுகிறானே?) என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கிறார்கள். அதற்கு அவர்கள், “உங்கள் மத அறிஞர்கள் ஹலால் என்று கூறியவற்றை ஹலால் என்றும், ஹறாம் என்று கூறியவற்றை ஹறாம் என்றும் (ஆதாரம் பார்க்காமல், கண்ணை மூடிக்கொண்டு) நீங்கள் ஏற்றுக் கொண்டீர் களல்லவா? அதுதான் உங்கள் மத அறிஞர்களை ரப்புகளாக ஆக்கியதுஎன்று நபி(ஸல்)  விளக்கம்  அளித்தார்கள்.  ஆதாரம்: அஹ்மத், திர்மிதி.

இது கிறித்தவர்களைக் குறிப்பிட்டு இறைவன் கூறி இருந்தாலும், அவர்கள் எந்தக் குற்றத்திற்காக இறைவனுக்கு இணை வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்களோ, அதே குற்றத்தை முஸ்லிம்களும் செய்தால் அவர்களும் இணை வைத்தவர்களே ஆவார்கள். கிறித்தவர்கள் இறைவனுடைய சொல்லை விட, தங்கள் பாதிரிமார்களின் சொல்லுக்கு முதன்மை கொடுத்தார்கள். அதனால் பாதிரிமார்களை இறைவன் ஆக்கிவிட்டதாக இறைவன் குற்றம் சாட்டுகின்றான். அப்படியே முஸ்லிம்களும் இறைவனது சொல்லைவிட, பெரியார் கள் சொன்னதாக (இமாம்கள்) இறைநேசர்கள் சொன்னதாகச் சொல்லப்படும் சொல்லுக்கு முதன்மை கொடுத்தால், இவர்களும் தம் பெரியார்களையும், இறை நேசர்களையும் இறைவனா ஆக்கிவிட்டதாக ஏன் கருதக்கூடாது? சினங்கொள்ளாது சிந்திக்க  வேண்டுகின்றேன்.

இவ்வாறு தங்கள் முன்னோர்கள் மீது குருட்டுத்தனமாக நம்பிக்கைக் கொண்டிருந்த, இறுதித் தூதரின் நெருங்கிய உறவினர்களையும், மார்க்கத்துக்காகப் பெரும் உதவி செய்தவர்களையும் கூட விட்டுவிடவில்லை. அவர்களை மிகக் கடுமையாகத் தண்டித்தான் இறைவன்.

அபூலஹப் இறுதித் தூதரின் தகப்பனார் கூடப் பிறந்தவன். இறுதித் தூதர் பிறந்தவுடன் முதல் மீலாது கொண்டாடியவன் அபூலஹப்; (இறுதித் தூதர் தனது பிறந்த தினத்தைக் கொண்டாடவில்லை) இன்று மீலாது கொண்டாடுவோர் அபூலஹபைப் பின்பற்றித்தான் மீலாது கொண்டாடுகிறார்கள். இறுதித் தூதர் மழலையாக இருக்கும்போது, அவர்களைக் கொஞ்சிக் குலாவி, மேனி எல்லாம் முத்தமிட்டு வளர்த்தவன் அபூலஹப், அவர்கள் மீது அளவு கடந்த அன்பைச் சொரிந்தவன். இறுதித் தூதரின் இரண்டு பெண் மக்களுக்குத் தன் இரண்டு ஆண் மக்களைக் கொடுத்து, இரட்டைச் சம்பந்தியாகிக் கொண்டவன் அபூலஹப், இறுதித் தூதருக்கு ஏற்படும் புகழைத் தனக்குக் கிடைத்ததாக எண்ணி மகிழ்ந்தவன் அபூலஹப். ஆனால் இறைவனால் அவன் சபிக்கப்பட்டான். அவனைச் சபித்தது குறித்து செய்தி இறுதி நெறிநூலில் ஒரு அத்தியாயமாகவே இருக்கிறது.    (பார்க்க: .கு. 111:1-5) 

இத்தனைச் சிறப்புக்களை உடையவன் சபிக்கப்பட்டதற்குக் காரணம்? காரணம் ஒன்றே. இறுதித் தூதர் தன் சகோதரன் மகன் என்பதற்காக இத்தனை உறவுகளை வைத்திருந்தான். இறைவன் ஒருவனை மட்டுமே வணங்கவேண்டும் என்று சொன்ன அளவில் வெகுண்டெழுந்தான். இறைவனையும் வணங்கிக்கொண்டு, அதே சமயத்தில் இறைத் தூதர்களையும், மஹான்களையும், சிலைகளாகவும், சமாதிகளாகவும் வடித்து, அவற்றிற்கும் மரியாதை செய்து கொண்டிருந்த தன் முன்னோர்களின் வழியைத்தான் அபூலஹப் சரி  என்று  கண்டான். 

தன் முன்னோர்களை விட, இந்த முஹம்மது அறிவாளியாகிவிட்டாரா? என்பதே அவனது சந்தேகம். இறுதித் தூதரைப் பார்த்து அவன் உதிர்த்த வாசகங்கள் இவை தாம். “இறைத்தூதர் இப்ராஹீம்(அலை)  முதல் கொண்டு இஸ்மாயீல்(அலை) அவர்களுக்குப் பிறகு தோன்றிய பெரியார்கள். இறை நேசர்களாகிய முன்னோர்கள், எல்லாம் வழிகேடர்களா? நரகவாசிகளா? இறைவனை, இறை கட்டளைகளை அறியாதவர்களா? அவர்களை விட நீ அறிவாளியாக ஆகிவிட்டாயோ? நான் பார்க்கப் பிறந்தவன் நீ, நான் தூக்கி வளர்த்தவன் நீ, என்னை விட தெரிந்துவிட்டாயோ? எனக்கே அறிவுரை சொல்ல வந்துவிட்டாயோ?” என்றுதான் ஆத்திரத்துடன் கேட்டான். அபூலஹபுக்கு முன்னோர்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றும் கடும் பற்று இருந்ததே அல்லாமல், தான் பார்க்கப் பிறந்தவர், தான் தூக்கி வளர்த்தவர், தான் விரும்பி ஒன்றைச் சொல்லவில்லை; இறைவன் சொல்லச் சொல்லிக் கட்டளை யிட்டுள்ளதைச் சொல்கிறார் என்பதையும், தான் குருட்டுத்தனமாக முன்னோர்களைப் பின்பற்றி நடக்கும் கொள்கைகள், இப்ராஹீம் (அலை) இஸ்மாயீல்(அலை), உண்மையான பெரியார்கள், இறைநேசர்கள் போதித்த போதனைகள் அல்ல. மார்க்கத்தை வியாபாரப் பொருளாக்கியவர்களின் கட்டுக் கதைகளைத்தான், உண்மை என்று நம்பி செயல்பட்டு வருகிறோம் என்பதையும் அறியும் இல்லாமல்  போய்விட்டது.

இந்த அபூலஹபைப் பின்பற்றி நடக்கக் கூடியவர்கள் இன்றும் மிகுதியாக இருக்கிறார்கள். அவர்கள் சிந்தித்து விளங்கித் திருந்த முன்வர வேண்டும். இல்லை என்றால் அபூலஹபின் கதி அவர்களுக்கும் ஏற்பட்டு விடுமோ  என்று  அஞ்சுகின்றேன். 

அடுத்து தகப்பனார் கூடப் பிறந்த இன்னொரு சகோதரர் அபூதாலிப் இறுதித் தூதருடனே இருந்தார். இருந்தது மட்டுமன்று. உறுதுணையாக, குறைகளை எதிர்க்கும் அரணாக, எல்லா வகைகளிலும் இறுதித் தூதருக்கு உதவி செய்து கொண்டிருந்தவர். ஒரே இறைவனை மட்டும் வணங்கும் அந்தப் போதனையால் ஏற்பட்ட இன்னல்கள், சிரமங்கள் அனைத்தையும் அவர் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். உண்மையான மார்க்கத்தை நிலைநாட்டும் பெரும் பணியில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. இறுதித் தூதரிடம் தன் உயிரையே வைத்திருந்தார். அப்ரஹா என்ற அரசன் இறை இல்லத்தைத் தகர்க்க வந்தபோது, இறை இல்லத்தை இறைவன் பாதுகாத்துக் கொள்வான்  என்று சொல்லி, இறைவனிடமிருந்த தன் நம்பிக்கையை வெளிப்படுத்தியவர் மகன். ஆனால் இறுதி வரை உண்மையான மார்க்கத்தை ஏற்கும் பேறு அவருக்குக்  கிட்டவில்லை.

தனக்கு எல்லா வகைகளிலும் உதவி செய்த வளர்ப்புத் தந்தை, நரகிற்குப் போய்விடக் கூடாது. ஆதலால் அவரை எப்படியும் காப்பாற்றி விட வேண்டும் என்று இறுதித் தூதர் புழுவாகத் துடித்தார்கள். கெஞ்சினார்கள், கதறினார்கள். இறைவனிடம் மீண்டும் மீண்டும்  முறையிட்டார்கள்.

இறுதித் தூதரின் துடிப்பில், கெஞ்சலில், கதறலில் இறைவன் இரக்கம் காட்டவில்லை. இத்தனைக்கும் இறைவனின் மிகவும் நேசத்திற்குரிய, பாசத்திற்குரிய இறுதித் தூதர், மாறாக, “நீர் விரும்புகிறவர்களுக்கு நேர்வழி காட்ட உம்மால் முடியாது. நான் யாருக்கு விரும்புகிறானோ, அவர்களுக்கு மட்டுமே நேர்வழி காட்டுகிறேன்” (.கு.28:56) என்று இறுதித் தூதருக்கு இறை வெளிப்பாடு வந்தது. ஆக உடல், பொருள், ஆவி அனைத்தையும் இஸ்லாத்திற்கே தத்தம் செய்து மார்க்கத்தை வளர்க்கத் துணை புரிந்த அபூதாலிப் நேர்வழி பெறும்  பாக்கியம்  பெறவில்லை. 

ஆனால் வஹ்´, ஹிந்தா போன்ற பெருங் குற்றவாளிகளெல்லாம் நேர்வழி பெறும் பாக்கியம் பெற்றனர். காரணம் அதேதான். ஆம். அபூத்தாலிபுக்குத் தனது முன்னோர்கள் மீதிருந்த குருட்டு நம்பிக்கைதான். இறுதித்தூதர் இறைவனை மட்டும் தெய்வமாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னபோது, அவர் உதிர்த்த வார்த்தைகள் இதை மெய்ப்பிக்கின்றன. அபூத்தாலிபுடைய வார்த்தைகள் இவை: “நான் எனது தந்தை அப்துல் முத்தலிப் எந்த மதத்தில் இருந்தாரோ, அதே மதத்தில் இருக்க ஆசைப்படுகிறேன்.” முன்னோர்களைக் குருட்டுத் தனமாகப் பின்பற்றுவோரின் கதி இதுவே தான் சகோதரர்களே. அவர்கள் தூதர்களின் நெருங்கிய  உறவினர்களாக இருந்தாலும் சரி, உண்மையான மார்க்கத்தின் வளர்ச்சிக்கு எல்லா வகைகளிலும் உதவி செய்தவர்களாக இருந்தாலும் சரி; இறைத் தூதர்களை  உயிருக்குயிராக நேசிப்பவர்களாக இருந்தாலும் சரி; முன்னோர்களை, முன் சென்ற அறிஞர்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுபவர்கள் நேர்வழி பெறமாட்டார்கள். இதில் ஐயமே இல்லை. மாறாக இறைவனது சாபத்திற்கும் தண்டனைக்கும் அவர்கள் ஆளாவார்கள்.

ஆகவே, மார்க்கம் இறுதி நெறிநூலையும், இறுதித் தூதரின் போதனைகளையும் பின்பற்றி நடக்கக் கட்டளையிடுகிறதே அல்லாமல், குருட்டுத்தனமாக யாரையும் பின்பற்றச் சொல்லவில்லை. ஆதலால் உண்மையான இறை நம்பிக்கையாளன், “இறைவசனங்களே ஓதிக்காட்டப்பட்டாலும் கண்மூடித்தனமாகப் பின்பற்றமாட்டான். (சிந்தித்துச் செயல்படு வான்)” என்று இறைவனே தனது இறுதி நெறிநூலின் புர்கான் என்ற 25ஆவது அத்தியாயத்தில் 73ஆவது வசனத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கும் போது, வேறு யாருடைய சொல்லைக் பின்பற்றமுடியும்? என்பதை நீங்களே சிந்தித்து விளங்கிக் கொள்ளுங்கள். இறுதி நெறிநூலை யும், இறுதித் தூதரின் போதனைகளையும் நேரடியாக விளங்கிச் செயல்படுபவன் மட்டுமே  நேர்வழி  நடப்பவனாவான்.

மார்க்கத்தில் இடைத்தரகர்களுக்கு இடமே இல்லை. சாத்தான் வந்து புகுந்துவிட்டால் குழப்பம் ஏற்படுவது போல், இந்த இடைத் தரகர்கள் வந்து புகுந்துவிட்டால் மதங்கள் ஏற்பட்டுவிடும். மக்களால் இறுதி நெறிநூலையும், இறுதித் தூதரின் போதனைகளையும் விளங்கிக்கொள்ள முடியாது. நாங்கள் சொல்வதே இறைவாக்கு. இதை மக்கள் நம்புவது அவர்களது தலை எழுத்து என்று துணிந்து கூற இந்தத் தரகர்களுக்கு எப்படித்தான் துணிவு வந்ததோ? நாம் அறியோம்? இறுதி நெறிநூலையும், இறுதித் தூதரின் போதனைகளையும் ஆராய்ந்தால், மார்க்கம் எளிதாக்கப்பட்டிருக்கிறது என்பது விளங்கும். இறுதி இறை வசனங்கள் மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தான் இறக்கப்பட்டுள்ளன. இறுதித் தூதரின் போதனைகளும் மக்கள் விளங்க எளிதாகவே இருக்கின்றன என்ற உண்மையே வெளிப்படுகின்றது. இவர்கள் சொல்வதைப் பார்த்தால், இறைவனும் இறுதித் தூதரும் மக்களுக்கு மார்க்கத்தை எடுத்து விளக்க ஆற்றல் அற்றவர்களாகப் போய்விட்டார்களா என்று தோன்றும்.

அந்தப் பெரிய கைகாரியத்தை இவர்கள் செய்வது போல் அல்லவா எண்ணத் தோன்றுகின்றது? இது வியப்பாக இல்லை? இறைவனை உங்களால் நெருங்க முடியாது. இந்தச் சிலைகளுக்கும், சமாதிகளுக்கும் மரியாதை செய்தால், அவை உங்களை இறைவன்பால் நெருங்கச் செய்யும் (.கு.10:18, 39:3) என்று கூறி அன்றைய மக்களை வழிகெடுத்த அந்த அபூஜஹீல் கூட்டத்தாருக்கும், இறைவனது இறுதி நெறிநூலையும், இறுதித் தூதரின் போதனைகளையும் உங்களால் விளங்கிக் கொள்ளமுடியாது. எங்களுக்கு மரியாதை செய்தால், நாங்கள் விளங்கச் செய்கிறோம் என்று கூறி இன்றைய மக்களை வழிகெடுக்கும் இந்த புரோகிதக் கூட்டத்தாருக்கும் வேறுபாடே தெரியவில்லை. ஆதலால் என் முஸ்லிம் சகோதரர்களைப் பார்த்து  நான்  இரக்கப்படுகின்றேன்.

Previous post:

Next post: