(மது) போதை!  அது  அழிவின் பாதை! 

in 2025 ஜுன்

(மது) போதை!  அது  அழிவின் பாதை! 

M. சையத் முபாரக்,  நாகை

இஸ்லாம்தான் உலக மக்களுக்குத் தீங்குகளைத் தருகின்ற போதை, விபச்சாரம் போன்ற அனைத்து தீமைகளையும் வேரோடு கிள்ளி  எறியச்  செய்கிறது.

மேற்கண்ட தீமைகள் மூலம் பணத்தைக் கொள்ளையடிக்கின்ற அதிகார வர்க்கத்திற்கு, மாஃபியா கும்பலுக்கு இது பிடிப்பதில்லை. அவர்கள் சொல்லும் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும், உள்வாங்கும் மதங்களை அனுசரிக்கும் இவர்கள், இவைகளை முழு மூச்சுடன் எதிர்க்கும் இஸ்லாத்தை விட்டு வைப்பார்களா? அதனால், இஸ்லாத்தை அழிக்க முழு உத்வேகத்துடன் அனைவரும் ஒன்று  சேர்ந்து  இயங்குகின்றார்கள்.

அவர்களை எதிர்க்கும் அனைத்து இயக்கங்களையும் அழித்தார்கள், அழித்துக் கொண்டிருக்கின்றனர். இஸ்லாம் மட்டுமே அதில் விதிவிலக்காக இருக்கிறது.

இறைமறுப்பாளர்கள் தங்கள் வாய்களால் அல்லாஹ்வின் ஒளியை அணைத்துவிட விரும்புகிறார்கள். அவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை முழுமை யாக்காமல் இருக்கமாட்டான்”. (.கு.9:32)

போதைகள் பலவிதம்:

மக்களிடம் பலவித போதைகள் இருக்கின்றன. அதிகார போதை, பதவி போதை, புகழ் போதை, செல்ஃபி போதை, சூதாட்ட போதை, மது போதை, குழந்தை முதல் பெரியவர் வரை செல்ஃபோன் போதை, பெண்களுக்கு ஆடை, அணிகலன்கள் போதை இன்னும் பல போதைகள் இருப்பினும் இங்கு மது போதைப் பற்றிப் பார்ப்போம்.

மது போதை :

மனிதர்களை அச்சுறுத்தும் தீமைகளில் முதலிடத்தில் இருப்பது மது. இது சாதாரண மாகத் தீமை போன்று தெரியாது. ஆனால், இது அடுத்தடுத்து ஏற்படுத்தும் தீங்குகள் தாறுமாறானவை. இதனை விளக்க உஸ்மான் பின் அஃப்ஃபான்(ரழி) அவர்கள் கூறிய நிகழ்வைப் பார்ப்போம்.

மதுவைக் கைவிடுங்கள். அது தீமைகளின் தாயாகும். முன்னோர்களில் ஒரு வணக்கசாலி இருந்தார். அவரை ஒரு விபச்சாரி அடைய விரும்பினாள். தனது பணிப்பெண்ணை அவரிடம் அனுப்பி சாட்சி சொல்ல வரும்படி அழைத்து வரச் செய்தாள். அவர் எழில் கொஞ்சும் அந்தப் பெண்ணிடம் வந்தார். அவளுக்கு அருகில் ஒரு சிறுவனும், மது நிரம்பிய கண்ணாடிப் பாத்திரமும் இருந்தது. “அல்லாஹ் மீது சத்தியமாக நான் சாட்சி சொல்ல அழைக்கவில்லை. மாறாக, என்னுடன் நீர் உறவு கொள்ள வேண்டும் அல்லது இந்தச் சிறுவனைக் கொல்லவேண்டும் அல்லது இந்த மதுவை அருந்தவேண்டும்என்று அந்தப் பெண் அழுத்தம் திருத்தமாக கூறினாள்.

அவர்(யோசித்து) “எனக்கு ஒரு கோப்பை மதுவை ஊற்றிக் கொடுஎன்றார். (போதை தலைக்கேறியதும்) அவர் அவளுடன் உடலுறவு கொண்டு விட்டார். அதற்கு இடைஞ்சலாக அழுத சிறுவனை கொலையும் செய்துவிட்டார். எனவே, மதுவை விட்டு விலகிவிடுங்கள். ஏனெனில், மதுவும் இறை நம்பிக்கையும் ஒருவரிடம் (ஒரேநேரத்தில்) ஒருபோதும் என்று சேராது. அவற்றில் ஒன்று மற்றொன்றை வெளியேற்றியே தீரும். (இது நஸயீஃல் வந்திருப்பதாக தஃப்சீர் இப்னு கஸீர் பாகம் 3, பக்கம் 310, 311ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது)

மன, உடல் பாதிப்பு :

மது மனித உடலை, மனதை சீர்கெடுத்து விடும். மது குடிப்பது ஆரம்பத்தில் மகிழ்ச்சி உற்சாகம் தரும். பிறகு, அது ஏற்படுத்தும் மன, உடல் உபாதைகளைக் கண்டு நிறுத்த முயற்சித்தாலும் அது விலகவிடாது தனக்கு அடிமைப்படுத்திவிடும். 

மது அருந்தாதபோது, மதுவால் நாம் பல இன்னல்களை ஏற்படுத்துகிறோமே என்ற குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது. அதனை மறக்க மேலும் மேலும் குடிக்கும் நிலை ஏற்படுகிறது.

பிரச்சனை தீர குடிப்பதாக மதுப்பிரியர்கள் கூறினாலும், அது பிரச்சனைகளை மேலும் மேலும் அதிகரித்து விடுகிறது. உடல் வலிமை குறையக் குறைய மதுவின் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

மது குடியர் தன்னிலை மறப்பார், குடும்பத்திலுள்ள மரியாதைக்குரியவர்களையும் மறப்பார். அதனால் தன் சுயமரியாதையை, தன் மானத்தை இழப்பார்; மற்றவர்களின் கெளரவத்தைச் சீர்குலைப்பார்.

வாய், தொண்டை, உணவுக்குழாய் பாதிக்கப்பட்டு, புற்றுநோய் உருவாகும். உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். அதனால் இதய பாதிப்பு, செயல் இழப்பு ஏற்படும். கல்லீரல் பாதிப்பு அடையும். அதன்மூலம் மஞ்சள் காமாலை, ஈரல் அழுகும் அபாயம் ஏற்படும்.

மனச்சோர்வு, பதட்டம் ஏற்படும். நரம்பு பலவீனம் அடையும். பக்கவாதம் தாக்கும். நரம்பு சிதலமடைகிறது; மூளை பாதிப்படைகிறது; ஞாபகமறதி ஏற்படுகிறது; தற்கொலை எண்ணம் மிகைக்கிறது. சிறுநீரகப் பாதிப்பு, பார்வைக் குறைபாடு; இரப்பை சுழற்சி, குடற்புண், செரியாமை ஏற்படும். மேலும், பல மன, உடல் நோய்கள் உண்டாகும்.

சமூக சீரழிவு :

மது தனி மனிதனை மட்டுமின்றி அவனது குடும்பத்தை, உறவுகளை, சமூகத்தைச் சீரழிக்கிறது. குடிக்கு அடிமையானவர் வேலையை இழப்பார். அதனால் பொருளாதாரச் சிக்கல் ஏற்படும். அதற்கு கடன் வாங்குவார்; பொய் சொல்வார்; அடுத்து திருடவும் ஆரம்பித்து விடுவார்.

மனைவியைச் சந்தேகப்படுவார்; மனைவி, மக்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பார்; கேவலமானச் செயல்களைச் செய்வார்; கொலை, கொள்ளை, கற்பழிப்புகளைச் சர்வ சாதாரணமாகச் செய்வார்.

குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மீது வெறுப்பை விதைப்பார்; கலகம் விளைவிப்பார்; சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணியாக திகழ்வார்; குடும்பப் பிரிவினைக்கும் காரணமாக  விளங்குவார்.

இஸ்லாம்  கூறும்  மதுவிலக்கு :

நம்பிக்கையாளர்களே! மதுபானம், சூதாட்டம், கற்சிலைகள், அம்புகள் மூலம் குறி கேட்பது ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவை. எனவே, நீங்கள் வெற்றியடைய இவைகளிலிருந்து விலகி விடுங்கள். மதுபானம் மற்றும் சூதாட்டம் உங்களிடையே பகைமை மற்றும் வெறுப்பை உண்டாக்கும். அல்லாஹ்வின் நினைவிலிருந்து தொழுகையிலிருந்து உங்களைத் தடுக்கவே ஷைத்தான் விரும்புகிறான். ஆகவே, அவைகளை விட்டு நீங்கள் விலகமாட்டீர்களா?”
(
அல்குர்ஆன் 5:90,91)

“…போதைத் தரக்கூடிய ஒவ்வொன்றும் தடை (ஹராம்) செய்யப்பட்டது ஆகும்என்று  நபி(ஸல்)  அவர்கள்  கூறினார்கள். (புகாரி 6124, முஸ்லிம் 4075, 4076)

நபி(ஸல்) அவர்கள் ஜெருசலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட (இஸ்ரா& மிஃராஜ்)போது, அவர்களிடம் இரு கிண்ணங்கள் கொண்டுவரப்பட்டன. ஒன்றில்பால், மற்றொன்றில் மது இருந்தன. அவைகளை உற்றுப்பார்த்த நபி(ஸல்) அவர்கள் பால் கிண்ணத்தை எடுத்தார்கள். அப்போது, ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம்தங்களுக்கு இயற்கை வழியைக் காட்டிய இறைவனுக்கே எல்லாப் புகழும். நீங்கள் மதுக் கிண்ணத்தை எடுத்திருப்பின் உங்கள் சமுதாயம் தறிக்கெட்டு (வழிதவறி)ப் போயிருக்கும்  என்றார்கள். (முஸ்லிம்: 4095, புகாரி 4709, 5576)

மது  போதையிலிருந்து  விடுபட :

1. அல்லாஹ்விடம் மனமுருகி துஆ செய்ய வேண்டும்.

2. மது போதையிலிருந்து மீள்வேன் இன்ஷா அல்லாஹ் என்ற உறுதியான நம்பிக்கை வேண்டும்.

3. எப்பொழுதாவது மது குடிக்கும் பழக்கம் இருந்தால் அதனை விட்டு உடனடியாக வெளியாகிவிடவேண்டும்.

4. மொடாக்குடியர்கள் உடனடியாக நிறுத்தினால் பயம், பதற்றம், எரிச்சல், கை நடுக்கம், தூக்கமின்மை ஏற்படலாம். அதனால் மீட்புக் குழு அல்லது டாக்டரிடம் ஆலோசனை பெற்று நிறுத்தவேண்டும். தேவையானால் சிகிச்சைப் பெறவேண்டும்.

5. மது குடிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்போது தண்ணீர், இளநீர், பழச்சாறுகள் அருந்தவேண்டும். அதோடு மனதிற்குப் பிடித்த செயல்களைச் செய்யவேண்டும். (.ம்.) குர்ஆன் படித்தல், இஸ்லாம் அனுமதிக்கும் விளையாட்டை விளையாடுதல்.

6. உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

7. மது அருந்தத் தூண்டும் சூழல்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். (.ம்.) மது குடிக்கும் நண்பர்களை விட்டு விலகுதல். 

8. மதுவை நிறுத்தினால்தான் நம் உடல் ஆரோக்கியம் பெறும்; மனம் தெளிவு அடையும்; உறவுகள் பேணப்படும்; நல்வாழ்வு கிட்டும் என்ற எண்ணம் மிகைக்க வேண்டும். அத்துடன் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவேண்டும். நன்றாக  தூங்கவேண்டும்.

9. சிலபோது ஒரு தடவையாவது மது அருந்துவோமே என்ற எண்ணம். சபலம், நப்பாசை மதுவை நிறுத்தியவருக்கு ஏற்படலாம். அப்போது குடும்பத்தாருடன், குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுங்கள். சபலம் மாறிவிடும்.

10. குடிப்பதற்குச் செலவிடும் பணத்தை தினமும் சேமிப்பு செய்தால் 6 மாதங்கள் அல்லது 1 வருடம் கழித்து பார்க்கும்போது பிரமிப்பு ஏற்படுவதுடன், வீண் விரயம் செய்ததும் புலப்படும். இது மனரீதியாக  மாற்றத்தை ஏற்படுத்தும்.

அரசு கவனிக்குமா?

தெருக்குழாயில் தண்ணீர் (குடிநீர்) வருகிறதோ இல்லையோ ஊரில் மது தண்ணீர் தாராளமாகக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அரசும் அதற்கான வேலைகளை முழு மூச்சுடன் செய்கிறது. அரசு அதனை வருமானமாக கணிக்கிறது. ஆனால், மதுப்பிரியர் களின் ஆரோக்கியத்திற்கான செலவோ அதிகம் என்பதை அரசு உணர மறுக்கிறது. சமூக ரீதியிலும் எவ்வளவு இழப்பு என்பதையும் உணர்வதில்லை அரசு. சாலை விபத்துகளுக்கும், குடும்ப பிரச்சனைகளுக்கும் மதுதான் முக்கியக் காரணமாக இருக்கிறது என்பதையும்  அரசு  கவனத்தில் கொள்வதில்லை.

வேறு எதிலும் இந்தியா சாதனை புரிகிறதோ, இல்லையோ? மது தயாரிப்பதிலும், குடிகாரர்களை உருவாக்குவதிலும் இந்தியா (நமது நாடு) சாதனைப் படைத்துக் கொண்டிருக்கிறது. வியாபாரமும்களை கட்டிக் கொண்டிருக்கிறது.

போதை மயமாகிவிட்ட சமுதாயத்தில் ஒழுக்கத்தையோ, சிறந்த பண்பாட்டையோ காணமுடியாது. இதனை அரசு உணர்ந்து, அனைத்து போதைப் பொருள்களையும் இஸ்லாம் எவ்வாறு தடை செய்துள்ளதோ, அப்படி தடை செய்ய முன்வரவேண்டும். நம் நாடு  நல்லொழுக்கத்தால்  மிளிர வேண்டும்.

போதைப் பொருள்களைத் தவிர்ப்போம்! போதையிலிருந்து மீள்வோம்!! நல்லொழுக்கங் களால் தலை நிமிர்வோம்!!!

Previous post:

Next post: