முஸ்லிம்களுக்கு இன்றைய தேவை ஒருங்கிணைந்த பைத்துல்மாலும்! ஒன்றாக இணைக்கப்பட்ட கல்வியுமே!!

in 2025 மே

முஸ்லிம்களுக்கு இன்றைய தேவை ஒருங்கிணைந்த பைத்துல்மாலும்! ஒன்றாக இணைக்கப்பட்ட கல்வியுமே!!

S.H. அப்துர் ரஹ்மான்

அன்புள்ள சகோதர சகோதரிகளே!

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும். படைத்த அந்த ஒரே இறைவன் உங்களுக்கு  அருள் புரியட்டும்.

இஸ்லாம் என்பது நபி(ஸல்) அவர்கள் மூலம் இறைவன் நமக்கு அளித்த வாழ்வியல் நெறியும், வழிகாட்டுதலும் ஆகும். அதில் நபி(ஸல்) நடைமுறைப்படுத்தி காட்டிய ஒவ்வொன்றும் இஸ்லாத்தில் முக்கியமானது ஆகும். நபி(ஸல்) காட்டி தந்த ஒன்றை விட்டு விடுவதும் தவறு. நபி(ஸல்) காட்டி தராத ஒன்றை செய்வதும் தவறு. நாளை மறுமையில் இதற்காக அவசியம் தண்டனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும்.

ஒருங்கிணைந்த பைத்துல்மால்என்றால் என்ன?

ஒற்றை அமீர் தலைமையில் இதற்கென்று பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இயங்கி வரும் கருவூல அமைப்பு. இதன் மூலம் செல்வம் செல்வந்தர்களிடம் சுற்றி வருவதில் இருந்து நீங்கி ஏழை முஸ்லிம்கள் பொருளா தாரத்தில்  பலம்  பெறுவார்கள்.

பொருளாதாரம் பலம் பெற்ற பின் முஸ்லிம்களுக்கு தேவை. உலக கல்வியும் மார்க்க கல்வியும் ஒருங்கிணைந்த பூரணமான கல்வி திட்டம். கல்வியில் உலகக் கல்வி என்றும், மார்க்கக் கல்வி என்றும், எந்தப் பிரிவினையும் கிடையாது. நபி(ஸல்) அவர்கள் இறைவனிடம் பயனற்ற கல்வியை விட்டும் பாதுகாப்பு தேடினார்கள் என்ற அடிப்படையில் பயனுள்ள கல்வி, பயனற்ற கல்வி என்று வேண்டுமானால் பிரித்துக் கொள்ளலாம். எல்லாக் கல்வி ஞானமும் இறைவனிடமிருந்து வந்தவை தாம். இறைவன் தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஞானத்தைக் கொடுக்கின்றான். எனவே எல்லாவிதமான பயனுள்ள கல்வியையும் கற்பதற்கு முஸ்லிம்கள் முயலவேண்டும். இதுபோன்ற பயனுள்ள கல்வியைக் கற்பதற்கு முயலாமல் அதில் பொடுபோக்காக இருந்த காரணத்தினால்தான் இன்றும் முஸ்லிம் சமுதாயம் முன்னேறாமல்  இருக்கின்றது.

கல்வியின்  சிறப்பு :

அல்லாஹ் கூறுகிறான், “தான் நாடுகின்றவர்களுக்கு அல்லாஹ் ஞானத்தை வழங்குகிறான். எவருக்கு ஞானம் வழங்கப்படுகிறதோ அவர் (மெய்யாகவே) ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்ட வராவார். (இவற்றிலிருந்து) நல் அறிவுடை யோர் தவிர வேறெவரும் சிந்தித்துப் படிப்பினை பெற மாட்டார்கள்.”  (2:269)

கல்வியை கட்டாயமாகப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக அதைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் அதிகம் வலியுறுத்தியுள்ளார்கள். “இரவின் ஒரு சிறுபகுதியில் கல்வி கற்பது, இரவு முழுவதும் விழித்திருந்து இறைவணக்கம் புரிவதை விடச் சிறந்ததாகும்என நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள்.  (நூல்: மிஷ்காத்,  அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி))

அறிவு நுட்பம் என்பது அறிவாளியின் கை விட்டுப்போன பொருளாகும். அதை எங்கு கண்டாலும் அதை பெற்றிட அவர் உரிமை யுள்ளவராவார்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி, அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி))

மேலும் கூறினார்கள்: “இறைவன் ஒருவனுக்கு நல்லதை நாடிவிட்டால் அவனுக்கு தீனை(வாழ்க்கை நெறியை)ப் புரிந்துகொள்ளும் கல்வியை அவனுக்கு கொடுக்கிறான்‘. (நூல்: புகாரி, முஸ்லிம், அறிவிப்பவர்: முஆவியா(ரழி))

எவரொருவர் கல்வியைத் தேடிச் செல்கிறாரோ அவருக்கு சொர்க்கம் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்கி விடுகிறான்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம், அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி))

மேலும் மற்றொரு அறிவிப்பில், “கல்வியைத் தேடி எவர் செல்கிறாரோ அவருக்கு சுவனத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மேலும் அவருக்காக வானவர்கள் இறைஞ்சுகிறார்கள். அவர்களின் இறக்கைகளை பணிக்கிறார்கள், சுவனவாசிகள் அவருக்காகப் பிரார்த்திக்கிறார்கள். கடலில் வாழும் மீன்கள் உள்பட அனைத்து படைப்பினங்களும் அவருக்காக பாவமன்னிப்பு தேடுகின்றன‘. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல் : திர்மிதி))

கல்வி இல்லாமல் இஸ்லாம் இல்லை. இறைத்தூதருக்கு இறங்கிய முதல் வசனமேஇக்ராபடிப்பீராக என்பதுதான். கல்வியின் மூல ஆதாரம் இறைநூல் தான். “அளவிலாக் கருணையுள்ள இறைவன் இந்தக் குர்ஆனை கற்றுத்தந்தான்  (55:1,2)

வாழ்க்கையின் நோக்கமும் அதனை அடையும் வழிமுறைகளுக்கான அடிப்படை கல்வியை பெறுவது ஒவ்வொரு ஆண், பெண் மீது  கட்டாய  கடமை.

இறைவன் நமக்களித்த அருட்கொடை களில் மிகப் பெரும் அருட்கொடை கல்வியாகும்.

கல்வி என்பது மனிதனை மனிதனாக, மனித நேயமுள்ளவனாக, சீரான நேரான வளர்ச்சி பெற்றவனாக அவனை மாற்றவேண்டும். அவனுடைய ஆளுமையை வெளிக்கொண்டு வரவேண்டும். அந்த ஆளுமை இறை நம்பிக்கையுடன் கூடியதாக இருக்கவேண்டும். அல்லாமல் வெறுமனே பொருள் சம்பாதிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட கல்வியாக இருக்கக் கூடாது. நாம் கற்கும் கல்வி ஆன்மீகத்தையும், அறிவையும் ஒருங்கே  பெற்றுத் தரவேண்டும்.

இத்தகைய ஒருங்கிணைந்த கல்வியை வழங்க அந்த அந்த மஹல்லா தலைவர்கள்  முயலவேண்டும்.

உங்கள் மஹல்லா பகுதியில் உள்ள செல்வந்தர்களிடம் ஜகாத்களை வசூலித்து அந்த பொருளாதாரத்தைப் பயன்படுத்தி உங்கள் மஹல்லாவில் உள்ள வக்ஃப் செய்யப்பட்ட இடங்களில் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள், உயர்நிலை பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் என்று படிப்படியாக கொண்டு வந்து மஹல்லாவில் உள்ளவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க முயற்சி செய்யவேண்டும். கிறிஸ்தவர்கள் பொது சொத்துகளில் கல்லூரிகளை, பள்ளிக் கூடங்களையும், மருத்துவமனைகளை கட்டி தங்கள் சமுதாய மக்களின் நலனுக்கு பயன்படச் செய்வது போல் முஸ்லிம்கள் செய்வது  நல்லது.

உங்கள் பகுதியில் உள்ள அரபி மதரஸாக்கள் அதன் பொருளுக்கு ஏற்றவாறு உலகக் கல்வி என்றும், மார்க்கக் கல்வி என்றும் எந்தப் பிரிவினையும் ஏற்படுத்தாமல் ஒருங்கிணைந்த கல்வியை தரக்கூடிய கூடங்களாக மாற்றுவது நல்லது. இன்ஷா அல்லாஹ். முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து முயற்சி செய்வோம். அல்லாஹ் நமது செயல்களை சீராக்குவானாக.

Previous post:

Next post: