வருமுன் காப்போம் வளம் பெறுவோம்! (அ) நிம்மதியாக (சந்தோசமாக) வாழ வழி!
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
2025 மே மாத தொடர்ச்சி….
சென்ற மே மாதம் இதழில் நாம் குறிப்பிட்டிருந்ததுபோல் ஆரோக்கிய வாழ்விற்கு நடை பயிற்சி “நடப்பதெல்லாம் நன்மைக்கே‘ எவ்வளவு முக்கியம் என்பதை காணலாம்.
1. நலம் தரும் நடை எது?
2. எப்போது நடக்கனும்?
3. நடைபயிற்சி எவ்வளவு தூரம்?
4. நடப்பதா? ஓடுவதா? எது நல்லது?
5. நடராஜா – நடராணி
6. பள்ளிக்கு (பஜர் தொழுகையை நிறைவேற்ற) நடந்து செல்லுதல் பலன் தருமா?
மேற்கண்ட தலைப்பில் ஒவ்வொன்றைப் பற்றி விரிவாக காணலாம். அதற்கு முன்பாக நாம் வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவேண்டியது “எண்ணம்தான் செயல்களின் அடிப்படை‘ என்பதாகும்.
அதாவது அருகாமையில் இருக்கும் இடங்களுக்கு நடந்து போய் விடலாமா? அல்லது,
Two Wheeler (இரண்டு சக்கர வாகனம் மூலம்) போகலாமா? என்று இரண்டு வகையான எண்ணம் முதலில் தோன்றும். பின்பே எது முடிவாக தோன்றுகிறதோ அதுவே செயலாக மாறுகிறது. எதுவொன்றும் எண்ணமாக இருந்தால் மட்டும் பலன் தராது. செயல் வடிவமாக மாறும்போது தான் பலன்தரும்.
இந்த இடத்தில் ஒரு இறைவசனத்தை நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.
“தொழுகையைப் பற்றி இறைநூலில் (குர்ஆனில்) குறிப்பிடும் பொழுதெல்லாம் ஜகாத்தையும் (தர்மத்தையும்) இறைவன் சேர்த்தே குறிப்பிடுவதை நாம் அறிவோம்.’
அதுபோல் இறைநூலில் “இறை நம்பிக்கையைப் பற்றி‘ எங்கெல்லாம் இறைவன் குறிப்பிடுகிறானோ அங்கெல்லாம் “நற்செயல்கள் பற்றியும்‘ சேர்த்தே குறிப்பிட்டுள்ளான். அதாவது செயலில் வராதா ஈமான் (இறைநம்பிக்கை) பலன் தராது என்பதே அதன் விளக்கமாகும்.
நடந்தே போகலாம் என்ற எண்ணம் மட்டும் பயன் தராது. அதை செயல் வடிவத்தில் கொண்டு வரும்பொழுது மட்டுமே பலன் தரும். எனவே நடந்தே போய்விடலாம் என்று எண்ணம் தோன்றும்பொழுது செயல்படுத்தி பாருங்கள். நிச்சயம் “நடப்பது நன்மையாகவே இருக்கும்‘.
நடப்பதற்கு முன்பு உங்களின் உடல் எடை(Body Weight) இப்போது என்ன என்பதை கவனத்தில் கொள்வதும் நல்லது.
அலுவலகங்களில் (Office Work) வேலை செய்பவர்கள் மற்றும் சுயதொழில் (Business) செய்பவர்கள் தங்கள் வேலைகளைக் கவனிக்கவே நேரம் போதவில்லை. இதில் எங்கே நடப்பதற்கு நேரம்? நடந்து சென்றால் காரியம் கைகூடுமா? என்றெல்லாம் சொல்கிறார்கள்.
உண்மையில் இது சாக்குபோக்கு ஆகும்.
“ஓடாத இயந்திரம் பழுதுபட்டுவிடும். நடக்காத உடலும் கெட்டுவிடும்.’
முன்பெல்லாம் எல்லா வேலைகளும் உடல் உழைப்பைக் கொண்டே நடந்தது. எங்கு சென்றாலும் நடந்தே செல்லவேண்டிய சூழ்நிலை இருந்தன. இன்று அப்படி அல்ல. பெரும்பாலோர் நடப்பதே கிடையாது. அடுத்த தெருவிற்கு செல்வதற்குக் கூட அல்லது அருகாமையில் உள்ள பள்ளிக்கு செல்வதற்குக் கூட இருசக்கர வாகனம் (Two Wheeler) தான்.
நாம் நடைப்பயிற்சி நல்லது என்று கூறு வதால் உலகில் நிரந்தரமாக வாழலாம் என்று நாம் சொல்லவில்லை. நம்பியும் விடாதீர்கள். மரணம் வரை (அல்லாஹ் தீர்மானித்த வரை) ஆரோக்கியமாக வாழலாம் என்பது தான் உண்மை.
நாம் பார்த்தவரை மாற்று மத சகோதர பெண்கள் நடைப்பயிற்சி செய்வது போல் இஸ்லாமிய பெண்கள் நடைபயிற்சி செய்வது கிடையாது. வெகு சிலர்தான் மனைவியுடன் நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள். கணவன்–மனைவி இருவரும் சேர்ந்தே அதிகாலை நேர (பஜருக்கு பிறகு) நடைபயிற்சி மேற்கொள்வது மிக சிறந்தது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்ல. சில விசயங்களை மனம் விட்டு பேசவும், கலந்து ஆலோசிக்கவும் நல்வாய்ப்பும் கூட. நமது வீட்டு பெண்களுக்கு வெளிக்காற்றை சுவாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதால் பல நோய்கள் வராமல் தடுக்கவும் முடியும். மேலும் Medical Tax (மருத்துவ வரி) செலுத்த அவசியமும் ஏற்படாது.
பொதுவாக மனிதர்கள் நடந்தாலும், நடக்காமல் இருந்தாலும் உடல் உறுப்புக்களில் மூளை, இதயம், குடல், கல்லீரல், சிறு நீரகம் போன்ற உறுப்புக்கள் வேளை செய்து கொண்டேதான் இருக்கும். மற்றும் இரத்த ஓட்டமும் நடந்துகொண்டேதான் இருக்கும். ஆனால் நடைபயிற்சியை மேற்கொண்டால் உடல் தசைகளும், வலுப்படும், உடல் எடை (Body Weight) கூடுவதையும் தடுக்கும். இன்னும் ஏராளமான நன்மைகளும் உண்டு.
படைப்புகளிலே உயர்வானது மனித படைப்பாகும். அல்லாஹ் வழங்கிய மனித உடலைப் பேணுவது அவசியமாகும்.
“ஓட்டை வீடு ஒன்பது வாசல்‘ என்பது முன்னோர்கள் வாக்கு.
எனவே மனிதன் உடலையும், உறுப்பையும் பாதுகாப்பது நோய் வராமல் தடுக்க உதவும். ஆனால் அவசரமான உலகத்தில் உடலைப் பேணுவதற்கு நேரமில்லை. மற்றும் உணவு பழக்கங்களில் மாற்றம், நல்ல நீர் கிடைப்பது இல்லை, மாசு இல்லாத நல்ல காற்றையும் சுவாசிக்க முடியவில்லை என்பதால் நோய்கள் பெருகிவிட்டன. மருந்து மாத்திரைக்கு மனிதனை நவீன மருத்துவ உலகம் அடிமையாக்கி வைத்துள்ளது.
எங்கும் கலப்படம், மேலும் தொலை பேசி (Mobile), தொலைக்காட்சி (TV), சோசியல் மீடியா இணையதளம் (Internet) ஆகியவற்றுக்கு அடிமையாகி உடல் உழைப்பு குறைந்து விட்டன.
இன்றைய இளைஞர்களிடையே சுகவாழ்க்கை, சோம்பல்தனம், உடல் உழைப்பு இல்லாமலும், நடந்து செல்லும் பழக்கமும் குறைந்துவிட்டதால் ஆரோக்கியத்தை தடுக்கும் அனைத்தும் தொற்றிக் கொண்டுள்ளன.
எங்கும் பேச்சு :
1. சுகர் (சர்க்கரை நோய்)
2. BP (இரத்த அழுத்தம்)
3. மூட்டு வலி
4. தலைவலி (குறிப்பாக பெண்கள்)
மேற்படிநோய்களின்தாக்கமும், துன்பமும் வளர்ந்துக் கொண்டே இருக்கின்றன.
எனவே நலவாழ்விற்கு “நடைப்பயிற்சி‘ அவசியம். அதனைப் பற்றிய விரிவான விளக்கங்கள் இன்ஷா அல்லாஹ். அடுத்த இதழில் காணலாம்.
வருமுன் காப்போம் தொடரும்…