ஐயமும்! தெளிவும்!!

in 2021 மார்ச்,ஐயமும்! தெளிவும்!!

ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : ஆண்களும், பெண்களும் அடக்கப்பட்டிருக்கும்போது கப்ருஸ்தானில், ஆண்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். பெண்கள் கப்ருஸ்தான் வர தடை இருக்கிறது. அந்நிய ஆண்கள் அடக்கம் செய்யப்பட்டிருப்பதால், பெண்களுக்கு தடை இருக்கிறது. அதேபோல் அந்நிய பெண்கள் அடக்கப்பட்டிருந்தும் ஆண்கள் மட்டும் அனுமதிக்கப்பட காரணம் என்ன?

தெளிவு : சிந்தனையின் அடிப்படையிலான நல்ல கேள்வி இது! அந்நிய ஆண்கள் அடக்கம் செய்யப்பட்டிருப்பதால், பெண்களுக்கு தடை இருக்கிறது என்று கூறுகிறீர் கள். அந்நிய பெண்கள் அடக்கும் செய்யப்பட்டிருக்கும் அதே கப்ருஸ்தானில் ஆண்கள் மட்டும் எப்படி அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது தங்களின் ஐயம். அதற் கான தெளிவை இப்போது காண்போம்.

அடக்கம் செய்யப்பட்டிருக்கும் ஆண் பெண் ஆகிய இரு பாலினங்களை அனுமதிக்கான அளவுகோலாக தாங்கள் குறிப்பிடுகிறீர்கள். ஆண்கள் அனுமதிக்கப்படுவதும் பெண்கள் தடை செய்யப்படுவதற்கும், இதுதான் அளவுகோல் என்பதை தாங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்? நிச்சயமாக இறைநெறிநூல் குர்ஆனும், தூதரின் வழிமுறையான ஹதீஃதும் இப்படியான ஒரு அளவுகோலைக் காரணமாகத் தரவில்லை.

அப்படியானால் ஆண்களுக்கு அனுமதியும், பெண்களுக்கு தடையும் ஏன்? சிந்திப்போம்!

ஒரு மனிதர் இறந்துவிட்டால் அந்த வீட்டில் நடைமுறையில் என்ன நடைபெறுகிறது என்பதை உற்றுநோக்குங்கள். உறவு முறையில் உள்ள ஆண்கள் சப்தமின்றி கண்ணீர் சிந்துகின்றனர். அதிலும் பெரும்பான்மையான ஆண்கள் அழுகையை அடக்கிக் கொள்வதைக் காணமுடிகிறது. இந்த வீட்டின் தலைவர் மரணித்தவருக்கு உறவின் முறையில் மிக நெருக்கமானவராக இருப்பார். அப்படி இருந்தும் அவர் அழுதழுது மூலையில் உட்கார்ந்து கொள்ள மாட்டார், மாறாக, மரணித்தவரின் இழப்பை நெஞ்சில் சுமந்துகொண்டு, அந்த இழப்பை ஈடு செய்ய அவரை சார்ந்தவர்களை எப்படி எல்லாம் முன்னேற வைக்கவேண்டும் என்ற எதிர்கால திட்டத்தை மனதில் கணக்குப் போட்டுக்கொண்டு, துக்க வீட்டில் அடுத்தடுத்து நடக்கவேண்டிய வேலை களை ஏவிக்கொண்டும், கவனித்துக் கொண்டும் இருப்பார்.

மரண சம்பவம் நடந்துவிட்ட வீட்டில் ஆண்களின் நிலை இவ்வாறாக இருக்க, அதே வீட்டில் இயல்பாகவே மென்மை யாக இருக்கும் பெண்களின் நிலை எப்படி மாறி இருக்கிறது என்பதை கவனித்து இருக்கிறீர்களா? மரணித்தவருக்கு நெருக்கமான உறவில் உள்ளவர் மனைவியோ, மகளோ, சகோதரியோ, அவர் எங்கும் சென்று விடாமல் தடுத்து, மரணித்தவருக்குப் பக்கத்திலேயே கட்டாயமாக அவரை உட்கார வைத்துவிடுகின்றனர். அவர் எப்போதும் அழுதுகொண்டு இருக்கும்படியான சூழ்நிலையில் இருப்பார். மய்யித்தை சுற்றி உட்கார்ந்து இருப்பவர்களும் அழுது கொண்டு இருப்பார்கள். அதுவும் ஒப்பாரி வைத்து அழவும் செய்வார்கள். அறியாமைக் காலக் கூப்பாடுகளை சொல்லிச்சொல்லி இன்றளவும் மாய்ந்து போகின்றனர். மார்பிலும், தலையிலும் அடித்துக் கொள்கின்றனர்.

இறந்த உடலைப் பார்ப்பதற்காக அடுத் தடுத்து மக்கள் வந்து கொண்டு இருக்கும் போதெல்லாம், இவ்வாறு திரும்பத் திரும்ப திடீர் திடீரென்று அழ ஆரம்பிக்கிறார்கள். மரித்தவரின் பிரிவைத் தாங்க முடியாமல் அழுது புலம்பிக்கொண்டு, வந்திருப்பவர்களிடம் மரணித்தவரைப் பற்றி, அவர் மலையாக்கும், சிகரமாக்கும், அப்படி செய்தார், இப்படி செய்தார் என்று நடந்து முடிந்த நிகழ்வுகளையயல்லாம் நினைவுக்குக் கொண்டுவந்து புலம்பிக் கொண்டு இருப்பார்கள். பல பெண்களின் முகங்கள் அழுதழுது வீங்கிப் போயிருக்கும். இந்தியா போன்ற கீழை நாடுகளில் இதை சர்வ சாதாரணமாகக் காண முடிகிறது.

இப்படிப்பட்ட பெண்களை கப்ருஸ் தானில் அனுமதித்தால் நிலைமை என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள். கப்ருஸ்தான் ஒப்பாரிக் கூடமாகவும், ஷிர்க் செய்யக்கூடிய இடமாகவும் மாறிவிடும்.

இப்படிப்பட்டவர்கள் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், முன்கர் நக்கீர் மலக்குகளின் கேள்விகளுக்கு கப்ராளி சரியாக பதில் சொல்வதற்கும், கப்ருடைய வேதனை களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவதற்கும், கப்ரை விசாலமானதாகவும், ஒளிமயமாகவும் ஆக்கித் தருவதற்கும் அல்லாஹ்விடம் துஆ செய்வதற்கு பதிலாக, இப்படிப்பட்ட பெண்கள் தர்காக்களில் நடந்து கொள்வது போல தங்களது தேவை களை நிறைவேற்றித் தருமாறு கப்ருகளில் அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் துஆ கேட்கக்கூடியவர்களாகவோ அல்லது மார்க்கம் காட்டித் தராதவாறு கப்ருகளில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் மூலமாக தங்களது தேவைகளை நிறைவேற்றி தருமாறு அல்லாஹ்விடம் கேட்கக் கூடியவர்களாகவோ இருப்பார்கள்.

துக்க வீட்டில் ஒப்பாரி வைத்ததைக் கூட நபி(ஸல்) அவர்கள் காலத்திலேயே அவர்கள் வந்திருந்த துக்கவிட்டிலேயே தடுக்க முடியாமல் போன நிகழ்வுகளும் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் நபி(ஸல்) அவர்களிடம் ஒப்பாரி வைக்கமாட்டோம் என உடன்படிக்கை செய்யக்கூட பெண்கள் முன் வந்ததில்லை. இவைகளை கீழுள்ள ஹதீஃதுகளிலிருந்துத் தெரிந்து கொள்ள முடிகிறது.

இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள். ஸஅத் இப்னு உபாதா(ரழி) அவர்கள் நோயுற்றபோது நபி(ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரழி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரழி), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரழி) ஆகியோரோடு நோய் விசாரிக்கச் சென்றார்கள். வீட்டில் நுழைந்தபோது ஸஅத் இப்னு உபாதாவின் குடும்பத்தினர் அவரை சூழ்ந்திருந்தார்கள். “என்ன இறந்து விட்டாரா?” எனக்கேட்டார்கள், “இல்லை, இறைத்தூதர் அவர்களே!” என்றனர். நபி(ஸல்) அவர்கள் அழலானார்கள். அவர்களின் அழுகையைக் கண்ட மக்களும் அழத் தொடங்கினர். பிறகு, நபி(ஸல்) அவர்கள், “நீங்கள் கேட்கமாட்டீர்களா? நிச்சயமாக கண்கள் அழுவதாலும், உள்ளம் கவலை கொள்வதாலும் அல்லாஹ் தண்டிப்பதில்லை. பின்பு தம் நாவின் பக்கம் சைகை செய்து “இதன் காரணமாகத்தான் தண்ட னையையோ அருளையோ வழங்குகிறான். நிச்சயமாக குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் வேதனை செய்யப்படுகிறது’ என்று கூறினார்கள். அவர்கள் “ஒப்பாரி வைப்பவர்களை உமர்(ரழி) கண்டால், கம்பினால் அடிப்பார், கல்லெறிவார், இன்னும் மண் வாரி வீசவும் செய்வார்” என்று இப்னு உமர்(ரழி) அவர்கள் மேலும் சொன்னார்கள். (புகாரி எண்: 1304)

அன்னை ஆயிஷா(ரழி) அறிவித்தார்கள்: “ஸைத் இப்னு ஹாரிஸா(ரழி), ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரழி), அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரழி) ஆகியோர் (போரில்) கொல்லப்பட்ட செய்தி வந்தபோது, நபி (ஸல்) அவர்கள் கவலை கொண்ட முகத்தோடு அமர்ந்திருந்தார்கள். நான் கதவின் இடைவெளி வழியாக நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “இறைத்தூதர் அவர்களே! ஜஅஃபர்(ரழி) வீட்டுப் பெண்கள் (ஒப்பாரி வைத்து) அழுகிறார்கள்’ என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் தடுக்கும்படி அவருக்குக் கட்டளையிட்டார்கள். அவர் சென்று திரும்பி வந்து, “நான் தடுத்தேன். அவர்கள் என்னுடைய சொல்லுக்குக் கட்டுப்படவில்லை’ என்றார்.

உடனே நபி(ஸல்) அவர்கள், “நீ சென்று அவர்களைத் தடுத்துநிறுத்து’ என்று இரண்டாவது முறையாகக் கட்டளையிட்டார்கள். மீண்டும் அவர் சென்று வந்து, “இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என்னை மிஞ்சிவிட்டனர்” என்றார். “அப்பெண்களின் வாயில் மண்ணை அள்ளிப் போடுங்கள்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், என நான் நினைக்கிறேன். பின்னர் நான் அவர்களை நோக்கி, “அல்லாஹ் உங்களை இழிவாக்குவானாக! நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டதையும், நீங்கள் செய்யவில்லை; இன்னும் அவர்களைத் தொந்தரவு செய்வதையும் நிறுத்தவில்லை” என்று கூறினேன். (புகாரி:1305)

உம்மு அதிய்யா(ரழி) அறிவித்தார்: ஒப்பாரி வைக்கக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். எனினும் இந்த ஒப்பந்தத்தை எங் களில் 5 பெண்களைத் தவிர வேறு யாரும் நிறைவேற்றவில்லை. அப்பெண்கள் உம்மு ஸுலைம்(ரழி), உம்முல் அலா, முஆத்(ரழி) அவர்களின் மனைவி அபூ சப்ராவின் மகள், இன்னும் இரண்டு பெண்கள் அல்லது அபூ சப்ராவின் மகள் முஆத்(ரழி) அவர்களின் மனைவி, இன்னும் ஒரு பெண். (புகாரி:1306)

பெண்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை இந்த ஹதீஃதுகளிலிருந்து அறியமுடிகிறது. இன்றளவும் பெண்களின் இந்த நிலை நீடித்துக் கொண்டிருப் பதை வேதனையுடன் பார்த்து வருகிறோம். மட்டுமில்லாமல், இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான ஈமானை இழக்கும் செயல்களையும் கண்டுவருகிறோம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெண்களின் வி­யத்தில் என் அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள். ஏனெனில், பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான். மேலும், விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக் கோணலானதாகும். நீ அதை நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியே விட்டுவிட்டால், அது கோணலாகவே இருக்கும். எனவே, பெண்களின் வி­யத்தில் என் அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள். (அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி), புகாரி:ஹதீஃத் எண்: 3331)

விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்ட பெண்களின் நிலையாதெனில், விலா எலும் பின் மேற்பகுதி கோணலாக இருப்பதால் அதை நேராக்க முயற்சிக்காதே. முயன்றால் அதை உடைத்துவிடுவாய். எனவே, முயற்சி செய்யாமல் இருக்க வேண்டி இருப்பதால் அது கோணலாகத்தான் இருக்க வேண்டி யிருக்கிறது.பெண்கள் விஷயத்தில் நபி(ஸல்) அவர்களின் அறிவுரையை ஏற்று செயல்படுவது ஒன்றே சிறந்த வழியாகும்.

பெண்கள் கப்ருஸ்தானுக்கு வரக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தடுத்ததில் இன்னும் இன்னும் பல காரணங்கள் இருக்கலாம். அல்லாஹ்தான் அறிந்தவன்.

ஈமான் கொண்டவரின் நிலையில் நமது நிலைப்பாடு இருக்க வேண்டுமானால், 2:285வது வசனத்தில் முஃமின்கள் கூறுவது போல இருக்கவேண்டும்.

“செவிமடுத்தோம், வழிப்பட்டோம், மன்னிப்புக் கோருகிறோம் இறைவா! எங்களின் மீளுதல் அவனிடமே இருக்கிறது என்ற நிலைப்பாட்டிற்கு வந்து விடுவோம்.

ஐயம் : ஹரம் எல்லைக்குள் இருக்கும் என் போன்றவர்கள் உம்ராவுக்கு, இஹ்ராம் கட் டும்போது ஹரம் எல்லைக்குள் இருந்து இஹ்ராம் கட்டுவது நல்லதா? அல்லது எல் லையை தாண்டி (போய்) உம்ரா பள்ளியில் இஹ்ராம் கட்டிவிட்டு, விடுவது நல்லதா? விபரம் தேவை.

தெளிவு : வெளியூரிலிருந்து உம்ரா ஹஜ் ஜுக்கு வருபவர்கள் இஹ்ராம் கட்டும் எல் லைகளை வரையறுத்துக் கூறிய ரசூல்(ஸல்) அவர்கள் தங்களைப் போல மக்காவிலேயே இருப்பவர்கள் இஹ்ரம் கட்ட வேண்டிய இடத்தையும் வரையறுத்துக் கூறியுள்ளதை கீழ் காணும் நபிமொழியில் காணலாம்.

ரசூல்(ஸல்) அவர்கள் விளக்கினார்கள்: ஹஜ், உம்ராவிற்கு வருபவர்கள் இஹ்ராம் அணிவதற்கான எல்லைகள்: மதீனாவாசி களுக்கு துல்ஹுலைஃபா: ஷாம்வாசி களுக்கு அல்-ஜுஹ்ஃபா, நஜ்த் வாசிகளுக்கு கர்னுல் மனாஜில், யமன் வாசிகளுக்கு யலம்லம், இந்த எல்லைகளுக்குள் வசிப்பவர்கள் அவரவர் வசிக்கும் இடங்களே எல்லையாகும், மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் அணியலாம். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி), ஆதாரங்கள்: புகாரீ (2:599, 601,604,605), முஸ்லிம் (2:2659,2660) முஸ்னத் அஹ்மது.

மக்காவில் வசிப்பவர்களில் பெரும்பாலோர், குறிப்பாக வெளிநாட்டவர்கள், இஹ்ராம் அணிவதற்காக உம்ரா பள்ளி செல்வதை நாமும் அறிவோம். ஒரு காலத் தில் நாமும் அவ்விதம் இஹ்ரம் அணிந்து உம்ரா செய்திருக்கிறோம். அதற்குக் காரணம் தாங்கள் கூறியுள்ளது போல ஹரம் எல்லையைத் தாண்டி சென்று இஹ்ராம் அணிவதாகவும் உம்ராப்பள்ளி எல்லைத் தாண்டி இருப்பதாகவும் நம்புவதுதான். ஆனால் உண்மையில் உம்ரா பள்ளியும் நாம் மேலேக் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் உள்ளது என்பதை பலர் அறிவதில்லை. எனவே மக்காவில் வசிப்பவர்கள் தங்களது இருப்பிடத்திலேயே இஹ்ரம் அணிவது நபி வழியாகும்.

ஐயம் : ஹஜ் காரியங்களில் குர்பானி கண்டிப்பாக கொடுக்கவேண்டுமா, அப்படி அங்கு கொடுக்க வழியில்லையயனில் அதற்குப் பதில் பெருநாள் கழித்து தொடர்ந்து 10 நாள் நோன்பு இருந்தால் போதுமா? குர்ஆன், ஹதீஃத் ஒளியில் விளக்கம் தரவும்.

தெளிவு : ஹஜ் காரியங்களில் குர்பானி கொடுப்பது ஒரு அங்கமாக அல்லாஹ் 2:196 வசனத்தில் கூறியிருப்பதைக் காணலாம். ஆனால் எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் அருகில் இல்லையோ அவர்க ளுக்கு ஒரு சலுகையையும் அல்லாஹ் வழங்கியுள்ளதையும் அவ்வசனத்தில் பார்க்கலாம். அதாவது :

ஹஜ் வரை உம்ரா செய்வதில் வசதி களைப் பெற்றோர் தமக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானி கொடுத்தல் வேண்டும். (அவ்வாறு குர்பானி கொடுக்க) சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின் (தம் ஊர்) திரும்பி யதும் ஏழு நாட்களும் ஆகப்பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். இச்சலுகையானது எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் அருகில் இல்லையோ அவருக்குத்தான். (அல்குர்ஆன்: 2:196)

இச்சலுகைப் பெற நாடுவோர் ஹஜ் காலத்தில் மூன்று நாட்களும், பின் ஏழு நாட்களும் (ஆக பத்து நாட்கள்) நோன்பு நோற்க வேண்டும். அல்லாஹ்வின் பேரருளால் ஹஜ் செய்ய ஆயத்தமான உங்களுக்கு எவ்வித கஷ்டமுமில்லாத நிலையில் இன்று செளதி அரசு குர்பானி கொடுக்க எல்லா வசதிகளையும் செய்துள்ளது. அதனை முழுமையாக தாங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படியும் உங்களுக்கு எதிர்பாராத வசதிக் குறைவுகள் ஏற்பட்டால் அல்லாஹ் கூறிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் ஹஜ் முழுமையாக நிறைவேற நாமும் பிரார்த்திக்கிறோம்

ஐயம் : திருமண விருந்து மாப்பிள்ளை வீட்டார் சார்பாக கொடுப்பது தான் சுன்னத்தா? அல்லது இரு வீட்டாரும் சேர்ந்து கொடுக்கலாமா?

தெளிவு : நபிவழியில் திருமண விருந்து என்று ஒன்று இல்லை, மணமகன் தரும் வலிமா விருந்து நபி(ஸல்) அவர்களால் காட்டித்தந்த விருந்தாகும். பெரும்பாலும் நபித் தோழர்களிடையே திருமணம் நடந்திருப்பதை அவர்கள் தரும் வலிமா விருந்து மூலமே அறிந்துகொள்ள முடிந்திருக்கிறது. இதனைக் கீழ்காணும் நிகழ்ச்சி உண்மைப்படுத்துவதைக் காணலாம்.

நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் மதீனாவில் பெரும் செல்வந்தராக இருந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்(ரழி) என்ற நபிதோழர் ஒரு அன்சாரி பெண்ணை மணமுடித்தார்கள். அத்திருமணத்திற்கு நபி (ஸல்) அவர்களுக்கு அழைப்பு கொடுக்கப் படவில்லை. மறுநாள் காலை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்(ரழி) அவர்கள் தொழுகைக்கு வந்தார்கள். அவரது உடையில் மஞ்சள் நிற வாசனை பொருளின் கறை இருப்பதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் என்ன விசேஷம்? என வினவினார்கள். தனக்கு முந்திய இரவு திருமணம் நடந்தது. தான் ஒரு மதீனத்துப் (அன்சாரிப்) பெண்ணை மணம் முடித்தேன் என பதிலளித்தார்கள். ரசூல்(ஸல்) எவ்வளவு மஹர் கொடுத்தாய்? இப்னு அவ்ஃப்(ரழி), ஒரு பேரீத்தம் பழ அளவு தங்கம் ரசூல்(ஸல்): “ஒரு ஆட்டையாவது அறுத்து வலீமா விருந்து வைப்பீராக” என்றார்கள்.

இந்நபி மொழியின் மூலம் திருமணங்கள் விருந்து வைத்து நடத்தப்பட்டதாகக் காணமுடியவில்லை. ஆனால் திருமணம் முடித்த மணமகன் வலீமா விருந்து கொடுக்க ரசூல்(ஸல்) வலியுறுத்தியிருப்பதைக் காணலாம். இந்நபிமொழியை முஅத்தா மாலிக் 1108, புகாரி 3:264, 5:125, 7:10,83,85,96.97.100, 8:105,395, முஸ்லிம்: 2:3319-3322, அபூ தாவூது, திர்மிதீ, தாரமீ, இப்னுமாஜா, முஸ்னத் அஹ்மத் போன்றவைகளில் காணலாம்.

ரசூல்(ஸல்) பல திருமணங்களை முடித்தார்கள். எந்த திருமணத்திற்கும் அவர்கள் திருமண விருந்து கொடுத்ததாக ஆதாரமில்லை. ஆனால் ஒவ்வொரு திருமணத்திற்கும் வலீமா விருந்து கொடுத்ததாக ரசூல் (ஸல்) அவர்களிடம் மதீனாவில் ஏறத்தாழ 10 வருடங்கள் பணிபுரிந்த அனஸ் இப்னு மாலிக்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கொடுத்த “வலிமா விருந்துகளில் ஜைனப்(ரழி) அவர்களை மணமுடித்த பின் கொடுத்தது போன்ற சிறப்பானதை நான் பார்க்கவில்லை. அதற்கென ரசூல்(ஸல்) அவர்கள் ஒரு ஆடு அறுத்து விருந்தளித்தார்கள். அந்த விருந்தில் ரொட்டியும், இறைச்சியும் வழங்கப்பட்டது.

இந் நபிமொழியை புகாரி, முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜ்ஜா, பைஹகீ, அஹமத் போன்ற நூல்களில் காணலாம்.

நபி(ஸல்) அவர்களின் திருமணங்களில் இரு முத்துக்கள் அளவுள்ள பார்லியில் தயாரிக்கப்பட்டதை வலிமா விருந்தாகக் கொடுத்தார்கள். இங்கு இரு முத்துக்கள் என்பது 15 கிலோ ஆகும். இதனை சபிய்யா பின்து ஷைபா(ரழி) அவர்கள் அறிவிக்க, புகாரி, 7:101, முஸ்லிம், அஹமது போன்ற நூல்களில் பதிவாகி உள்ளதைக் காணலாம்.

இந்நீண்ட விளக்கம் கொடுக்கக் காரணம், இன்று முஸ்லிம்களிடையே திருமண விருந்து என பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் வீணாவதைக் காண்கிறோம். அதுவும் பெண் வீட்டார் தலையில் சுமத்தப்படுவதையும் காண்கிறோம். ஒரு சிலர் பெருமனதுடன் இருவீட்டாரும் சேர்ந்து பெரும் விருந்துகள் கொடுப்பதையும் காண் கிறோம். இவையனைத்தும் நபிவழி அற்ற முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சீரழிக்கும் செயல்களாகும்.

நபிவழியின்படி, மணமகன் கொடுக்கும் வலிமா விருந்தே சிறப்பானதாகும். அதுவும் படாடோபமின்றி கொடுக்கப்பட வேண்டுமென்பதை மேற்கண்ட நபிமொழிகள் நமக்கு தெளிவாக்குகின்றன.

ஐயம் : மாற்றுமத டாக்டரிடம் அறுவை சிகிச்சை செய்யலாமா? மாற்றுமத டாக்டரிடம் “கத்னா” செய்யலாமா? “கத்னா” முஸ் லிம்கள் கட்டாயமாக செய்யவேண்டுமா? கத்னா செய்யாதவர் காஃபிர் என்றால் திரு மணம் செய்யாமல் அலைபவர்கள், தாடி வைக்காமல் சேவிங் செய்பவர்களும் காஃபிர் தானே! விரிவான விளக்கம் தரவும்.

தெளிவு : அல்லாஹ் கூறுகிறான்: நன்மையி லும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக் கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும் பகைமையிலும் நீங்கள் ஒரு வருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். (அல்குர்ஆன்: 5:2)

இவ்வசனத்தில் உதவி செய்து கொள்ளுங்கள் தாவுன் என்பது மனித இனத்தில் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் உலகியல் ரீதியான உதவியாகும். அல்லாஹ்வினால் சபிக்கப்பட்ட யூதர்களிடம் கூட ரசூல்(ஸல்) அவர்கள் உலகியல் ரீதியான உதவிகளைப் பெற்றிருக்கிறார்கள். அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரசூல்(ஸல்) அவர்கள் மரணித்தபோது யூதன் ஒருவனிடம் கடையில் அவர்களது போர் கவசம் அடமானமாக வைக்கப்பட்டு எங்களது உணவுக்காக உணவுப் பொருள்கள் வாங்கியதை நாங்கள் அறிந்திருக் கிறோம். (புகாரி, முஸ்லிம், அஹ்மது) மேலும் யூதப் பெண்மணி அழைத்த விருந்திலும் ரசூல்(ஸல்) கலந்து கொண்டு இருக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)

இவையனைத்தும் அகில லோகத்திற்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட ரசூல்(ஸல்) மனித நேயத்துடன் அனைவரிடமும் பழகக் காட்டித் தந்த வழிமுறைகளா கும். எனவே மாற்றுமத டாக்டரிடம் அறுவை சிகிச்சை செய்வது தவறானது அல்ல. மாற்று மதத்தாருக்கு முஸ்லிம் டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை செய்வதும் தவறானதல்ல. கத்வாவும் செய்யலாம்.

கத்னா செய்வது ரசூல்(ஸல்) அவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட ஒரு வழியல்ல. இது இப்ராஹீம்(அலை) அவர்கள் காலத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நபிவழி யாகும். கத்னா செய்யாதவரையோ, திருமணம் முடிக்காதவரையோ, தாடிவைக் காதவரையோ காஃபிர் என சொல்வதற்கு இஸ்லாம் அனுமதியளிக்கவில்லை. அவர் நபிவழியை விட்டவர் என்றே கூறலாம். இக்காரியங்களை மிகமிகக் கட்டாயக் கட மையாக நினைத்து இதனை விட்டவர்களை காஃபிர் எனக் கூறி முழு இஸ்லாமிய சமுதாயத்திலிருந்து விரட்டியடிக்க எவருக்கும் அதிகாரமில்லை.

அவர்களை முஸ்லிம்களாகவே ஏற்று இச்செயல்கள் நபிவழி என்ற முக்கியத் துவத்தை உணர்த்தி நபிவழி நடக்கும் நல்ல முஸ்லிம்களாக வாழ அறிவுரை கூறுங்கள். காஃபிர் என ஒதுக்கி, காழ்ப்புணர்ச்சியுடன் வாழவேண்டாமென வேண்டிக் கொள்கிறோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டப் போதுமானவன்.

ஐயம் : நரகத்தின் எரிக்கட்டைகளாக மனிதர்களையும், கற்களையும் பயன்படுத் துவதாக வாக்களித்துள்ள வல்ல நாயன், இணை வைத்து வணங்கப்பட்டு கொண்டி ருந்த கற்சிலைகளுக்கு உரிய மனிதர்களையும் இந்நரக வேதனைக்கு உள்ளாக்குவானா? அல்லது ஏகத்துவத்தை எடுத்தியம்பிய நபி ஈஸா(அலை), இப்ராஹீம்(அலை) போன்ற நல்லடியார்கள் நீங்கலாக ஏனையவர்கள்தான் இவ்வேதனைக்கு ஆட்படுத்தப்பட்டவர்களா?

தெளிவு : ஏகத்துவத்தை மக்களுக்கு எடுத்தியம்பிய இப்ராஹீம்(அலை) அவர்களையே சிலையாக வடித்து மக்கத்து மக்கள் வணங்கி வந்தனர். அதேபோல ஈஸா(அலை) அவர்களையும், அவர்களது தாய் மர்யம்(அலை) அவர்களையும் இரு கடவுள்களாக இன்றும் கிறித்தவர்கள் வழிப்பட்டு வருகின்றனர். இவர்களது இவ்விழிச் செயலுக்கு சம்பந்தப்பட்ட நபி, ரசூல்கள் எப்படி பொறுப்பா வார்கள்! இவ்விளக்கத்தை அல்குர்ஆனில் 5:116 -118 வசனங்களில் பாருங்கள்.

மறுமையில் ஈஸா(அலை) அவர்களைப் பார்த்து அல்லாஹ், “நீர் உன்னையும், உனது தாய் மர்யமையும் இரு கடவுள்களாக எடுத்துக்கொள்ள மக்களை ஏவினாயா? எனக் கேள்வி கேட்க ஈஸா(அலை) அவர்கள் அதனை மறுத்து தான் அல்லாஹ் அறிவித்ததைத் தவிர வேறு எதனையும் மக்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும், தனக்குப்பின் மக்கள் செய்ததை தான் அறியவில்லை என்றும் கூறி தப்பிப்பதைக் காணலாம். இதே நிலைதான் ஒவ்வொரு நல்லடியார்களுக் கும் ஏற்படும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். அது மட்டுமின்றி அல்லாஹ் கூறுகிறான்.

பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே, கேட்டைத் தேடிக்கொள்கிறது, ஓர் ஆத்மாவில்(பாவச்) சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. (அல்குர்ஆன்: 6:164, 17:15, 35:18, 39:7, 53:38)

ஏகத்துவத்தையும், அல்லாஹ் அறிவித் ததை மட்டுமே மக்களுக்கு போதித்த நபி, ரசூல்கள் மரணித்தபின் அவர்களது மக்கள் அந்நபி, ரசூல்கள் பெயரில், உருவில், உருவாக்கிய அல்லாஹ் அங்கீகரிக்காத செயல்களுக்கு அந்நல்லடியார்கள் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? அதற்காக அல்லாஹ் அவர்களை தண்டிப்பான் எனக் கூறமுடியுமா? அல்லாஹ் நீதிமான்களில் மிகச் சிறந்த நீதிமான் அல்லவா?

எனவே எவர்கள் ஏகத்துவத்திற்கும், ஏக இறைவனின் ஆணைக்கும் கட்டுப்படாமல் நடந்தார்களோ, அவர்கள் நபிகளில் மக்களாயினும், மனைவியாயினும் சரியே, அவர்களையே நரகத்தின் எரிக்கட்டைகளாக அல்லாஹ் தண்டிப்பான் எனக் கொள்ள வேண்டும். மக்கள் செய்த தவறுகளை அவர்களது நபி, ரசூல்கள் மீது போடுவது அவர் களை அவமதிப்பதாகும். அச்செயலை அல்லாஹ் அறவே செய்யமாட்டான்.

ஐயம் : குர்ஆன், ­ரீஃப்பில் வரும் சூராக்கள் எல்லாம் “பிஸ்மில்லாஹி’ எனத் தொடங்குகின்றன. ஆனால் 9வது சூராவான “தெளபா’ மட்டும் பிஸ்மில்லாஹ் என தொடங்கவில் லையே? இதற்கு ஏதாவது காரணம் உண்டா? விளக்கவும்.

தெளிவு : குர்ஆனை “குர்ஆன் ஷரீஃப்’ என்று கூறும் பழக்கம் பரவலாக இருக்கின்றது. ஆனால் அல்குர்ஆனில் அல்லாஹ் பலவாறாகச் சொல்லியிருந்தும் குர்ஆனுக்கு “ஷரீஃப்’ என்று குறிப்பிடவில்லை. ஹதீஃதிலும் குறிப்பிடப்படவில்லை. கஃபாவுக்கே “கஃபா ஷரீஃப்’ என்று ஹதீஃதில் வந்துள்ளது. அல்குர்ஆனை அல்லாஹ் குறிப்பிடும் அழகிய பெயர்களில் குறிப்பிடுவதே முறையாகும். குர்ஆன் மஜீத் என்று கூறலாம். இன்னும் அல்குர்ஆனில் காணப்படும் வேறு பெயர்களிலும் குறிப்பிடலாம்.

திருக்குர்ஆனில் அனைத்து அத்தியாயங்களும் பிஸ்மில்லாஹி கொண்டு ஆரம்பமாக 9வது அத்தியாயம் மட்டும் பிஸ்மில்லாஹி என ஆரம்பிக்காமலிருப்பது நபி(ஸல்) அவர் கள் காட்டித் தந்த வழிமுறையாகும்.

இதற்கு விளக்கமளிக்கும் ஒருசில குர்ஆன் விரிவுரையாளர் (முஃபஸ்ஸிர்)கள். 9வது அத்தியாயம், 8வது அத்தியாயத்தின் தொடர்ச்சி என்றும், எனவே பிஸ்மில்லாஹி குறிப்பிடவில்லையயனக் கூறுகிறார்கள். இது சரியோ, தவறோ நாமறியோம். இது இவர்களது கருத்துக்களாகும். ரசூல்(ஸல்) அவர்கள் அவ்விதம் கூறியதாக ஆதாரமில்லை.

நம்மைப் பொறுத்தவரை ரசூல்(ஸல்) அவர்கள் சூரா தெளபாவை ஓதும்போது பிஸ்மில்லாஹ் ஓதவில்லை, அதனை தொகுத்தப்போதும் பிஸ்மில்லாஹ்வை குறிப்பிடவில்லை. இதனை அப்படியே ஏற்கிறோம். இது ரசூல்(ஸல்) அவர்களின் அடிச்சுவட்டை நழுவாமல் நடக்கும் ஒரு வழிமுறை(சுன்னத்) என முழுமையாக நம்புகிறோம். தாங்களும் இதற்கான காரணங் ளை அறிய ஆராய முற்படாமல் ஏற்பதே நலமென நாடுகிறோம். அல்லாஹ் நம்மனைவரையும் அவனது நபிவழி நடக்க அருள்புரிவானாக.

ஐயம் : தொழுது கொண்டிருப்பவருக்கு குறுக்கே செல்ல நேரிட்டால் எவ்வளவு தூரம் இடைவெளிவிட்டு செல்ல வேண் டும்?

தெளிவு : தொழுது கொண்டிருப்பவர், தான் சஜ்தா செய்யும் இடத்திற்கு சிறிது தள்ளி ஒரு அடையாளத்தை (தடுப்பு) வைப்பது அவசியமாகும். அந்த அடையாளத்திற்கு அடுத்து நாம் நடப்பது அவரது தொழு கைக்கு குறுக்கே நடப்பதாக ஆகாது.

தொழுது கொண்டிருப்பவரின் குறுக்கே செல்பவன் ஷைத்தான். அவனை தனது கையால் தடுத்து நிறுத்துங்கள் என்பது நபிமொழியாகும் (முஸ்லிம், அஹ்மது), இதனடிப்படையில் தொழுபவரின் சஜ்தா இடத்தை விட்டு மிகவும் தள்ளி நடப்பதை குறுக்கே செல்வதாக கொள்ள முடியாது. இருப்பினும் தொழுபவர் தனக்கு முன் ஒரு தடுப்பு வைத்து விட்டால் அதைத் தள்ளி நடக்கலாம். அதனால் தூர அளவுகள் பொருட்டாகாது.

Previous post:

Next post: