திருமண விருந்து மாப்பிள்ளை வீட்டார் சார்பாக கொடுப்பது தான் சுன்னத்தா?

in 1996 ஏப்ரல்,ஐயமும்! தெளிவும்!!,கேள்வி-பதில் (தொகுப்பு),பொதுவானவை

ஐயமும்! தெளிவும்!!

ஐயம்: திருமண விருந்து மாப்பிள்ளை வீட்டார் சார்பாக கொடுப்பது தான் சுன்னத்தா? அல்லது இரு வீட்டாரும் சேர்ந்து கொடுக்கலாமா? மீராமுஹைதீன், புதுக்கோட்டை.

தெளிவு: நபிவழியில் திருமண விருந்து என்று ஒன்று இல்லை. மணமகன் தரும் வலீமா விருந்து நபி(ஸல்) அவர்களால் காட்டித் தந்த விருந்தாகும். பெரும்பாலும் நபித்தோழர்களிடையே திருமணம் நடந்திருப்பதை அவர்கள் தரும் வலீமா விருந்து மூலமே அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது. இத் கீழ்காணும் நிகழ்ச்சி உண்மைப் படுத்துவதைக் காணலாம்.

நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் மதீனாவில் பெரும் செல்வந்தராக இருந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்(ரழி) என்ற நபிதோழர், ஒரு அன்சாரி பெண்ணை மண முடித்தார்கள். அத்திருமணத்திற்கு நபி(ஸல்) அவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட வில்லை. மறுநாள் காலை அப்துர்ராஹ்மான் பின் அவ்ஃப்(ரழி) அவர்கள் தொழுகைக்கு வந்தார்கள். அவரது உடையில் மஞ்சள் நிற வாசனை பொருளின் கறை இருப்பதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் என்ன விசேஷம்? என வினவினார்கள். தனக்கு முந்திய இரவு திருமணம் நடந்தது. தான் ஒரு மதீனத்துப் (அன்சாரிப்) பெண்ணை மணம் முடித்தேன் என பதிலளித்தார்கள். ரசூல்(ஸல்) எவ்வளவு மஹர் கொடுத்தாய்? இப்னு அவ்ஃப்(ரழி): ஒரு பேரீத்தம் பழ அளவு தங்கம்! ரசூல்(ஸல்): “”ஒரு ஆட்டையாவது அறுத்து வலீமா விருந்து வைப்பீராக” என்றார்கள்.

இந்நபி மொழியின் மூலம் திருமணங்கள் விருந்து வைத்து நடத்தப்பட்டதாகக் காண முடியவில்லை. ஆனால் திருமணம் முடித்த மணமகன் வலீமா விருந்து கொடுக்க ரசூல்(ஸல்)வலியுறுத்தியிருப் பதைக் காணலாம். இந்நபிமொழியை முஅத்தா மாலிக்(1108), புகாரி(3/264, 7/10, 83,85,96,97,100;8/105,395) முஸ்லிம்)2/3319- 3322), அபூதாவூது, திர்மிதீ, தாரமீ, இப்னுமாஜ்ஜா, முஸ்னது அஹ்மத் போன்றவைகளில் காணலாம்.

ரசூல்(ஸல்) பல திருமணங்களை முடித்தார்கள். எந்த திருமணத்திற்கும் அவர்கள் திருமண விருந்து கொடுத்ததாக ஆதாரமில்லை. ஆனால் ஒவ்வொரு திருமணத்திற்கும் வலீமா விருந்து கொடுத்ததாக ரசூல்(ஸல்) அவர்களிடம் மதீனாவில் ஏறத்தாழ 10 வருடங்கள் பணிபுரிந்த அனஸ் இப்னு மாலிக்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கொடுத்த “வலீமா விருந்துகளில் ஜைனப்(ரழி) அவர்களை மணமுடித்த பின் கொடுத்தது போன்ற சிறப்பானதை நான் பார்க்கவில்லை. அதற்கென ரசூல்(ஸல்) அவர்கள் ஒரு ஆடு அறுத்து விருந்தளித்தார்கள். அந்த விருந்தில் ரொட்டியும், இறைச்சியும் வழங்கப்பட்டது.

இந்நபிமொழி புகாரி, முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜ்ஜா, பைஹகீ, அஹ்மத் போன்ற நூல்களில் காணலாம்.
நபி(ஸல்) அவர்களின் திருமணங்களில் இருமுத்துக்கள் அளவுள்ள பார்லியில் தயாரிக்கப்பட்டதை வலீமா விருந்தாகக் கொடுத்தார்கள். இங்கு இரு முத்துக்கள் என்பது 15 கிலோ ஆகம். இதனை சபிய்யா பின்து ஷைபா(ரழி) அவர்கள் அறிவிக்க, புகாரி, (7/101) முஸ்லிம், அஹமது போன்ற நூல்களில் பதிவாகி உள்ளதைக் காணலாம்.

இவ்விளக்கம் கொடுக்கக் காரணம், இன்று முஸ்லிம்களிடையே திருமண விருந்து என பல்லாயிரக் கணக்கான ரூபாய்கள் வீணாவதைக் காண்கிறோம். அதுவும் பெண் வீட்டார் தலையில் சுமத்தப்படுவதையும் காண்கிறோம். ஒரு சிலர் பெருமனதுடன் இருவீட்டாரும் சேர்ந்து பெரும் விருந்துகள் கொடுப்பதையும் காண்கிறோம். இவையனைத்தும் நபிவழி அற்ற முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சீரழிக்கும் செயல்களாகும்.

நபிவழியின்படி மணமகன் கொடுக்கும் வலீமா விருந்தே சிறப்பானதாகும். அதுவும் படாடோபமின்றி கொடுக்கப்பட வேண்டுமென்பதை மேற்கண்ட நபி மொழிகள் நமக்கு தெளிவாக்குகின்றன.

Previous post:

Next post: