ஐயமும்! தெளிவும்!!

in 2012 மார்ச்,ஐயமும்! தெளிவும்!!

ஐயம்: சிலர் தம்மைத் தாமே ஏசிக் கொள்கின்றனர். சிலர் தமது மக்களைச் சபிக்கின்றனர். சிலர் அல்லாஹ் தமக்குத் தந்துள்ள சொத்து முதலியவற்றை சபிக்கின்றனர். இவ்வாறு ஏசுவது, சபிப்பது சந்தர்ப்பத்தில் அப்படியே நடந்துவிடும் என்று கூறுகிறார்களே! அது உண்மையா? ஹதீஸின் அடிப்படையில் பதில் தரவும். எம்.பி.அப்துர்ரஹ்மான், இளங்காகுறிச்சி.

தெளிவு: “உங்களுக்கு நாசம் உண்டாகும்படி உங்களை நீங்களே சபித்துக் கொள்ளாதீர்கள். இவ்வாறே உங்கள் மக்களுக்கு நாசம் உண்டாகும்படி உங்கள் மக்களை நீங்களே சபித்து விடாதீர்கள். உங்கள் சொத்துக்களுக்கு நாசம் உண்டாகும்படியும் கூறி விடாதீர்கள். ஏனெனில் ஒவ்வொரு நாளிலும்) ஒரு நேரம் இருக்கிறது. சரியாக குறிப்பிட்ட அந்த நேரத்தில் அல்லாஹ்விடம் கேட்கப்படுபவை (அப்படியே) உங்களுக்கு கபூலாக்கப்பட்டு ஏற்கப்பட்டுவிடும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஜாபிர்(ரழி), முஸ்லிம்)

இந்த ஹதீஸின்படி ஒருவர் கோபத்தினால் தம்மையோ, தமது மக்களையோ, தமது சொத்து சுகங்களையோ ஏசுவது சபிப்பது சந்தர்ப்பத்தில் பெரிய துன்பத்திற்கும், துயரத்திற்கும் அவரை ஆளாக்கிவிடும் என்பதை அறிகிறோம்.

——————————————————

ஐயம்: மழை பெய்யும்போது கூட நபி(ஸல்) அவர்கள் அந்த மழை நல்லவிதமாக பெய்ய வேண்டும் என்ற கருத்தில் துஆ கேட்டிருப்பதாகக் கேள்விப் பட்டுள்ளேன். அந்த துஆ எது?
அப்துல்லாஹ், திருச்சி.

தெளிவு: நபி(ஸல்) அவர்கள் மழை பெய்வதைப் பார்த்தால் “”அல்லாஹும்ம ஸய்யிபன் நாஃபிஆ” யாஅல்லாஹ் பலன்தரும் மழையைப் பொழிய வைப்பாயாக! என்று ஓதுவார்கள்.
(ஆயிஷா(ரழி), புகாரீ)

—————————————————

ஐயம்: “இரவு நேரத்தில் பாம்பை பாம்பு என்று கூறாதீர்கள். கயிறு என்றோ, நிலப்பூச்சி என்றோ கூறுங்கள்” என்று ஒரு முறை இலங்கை வானொலி அறிவித்தது. இது உண்மையா? ஹதீஸில் ஆதாரம் ஏதும் உள்ளதா?
என். சுல்தான் இப்றாஹிம், கிருஷ்னாதிபட்டினம்.

தெளிவு: இலங்கை வானொலி அறிவித்திருந்தாலும், வேறு எவர் கூறியிருந்தாலும் இது ஹதீஸ் அல்ல என்பதை அறியவும், ஹதீஸில் இத்தகைய மூடப் பழக்கத்திற்கெல்லாம் சிறிதும் இடமில்லை’
—————————————————

ஐயம்: “என் சொல் இறைவசனத்திற்கு மாறுபட்டிருந்தால் என் சொல்லைப் புறக்கணித்துவிட்டு இறைவனின் வசனத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றோ அல்லது இக்கருத்தினை ஒத்த வகையில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளதா? என்பதை விளக்கிட வேண்டுகிறேன்.
ராஜா ட்ராக்டர் பார்ட்ஸ் கம்பெனி, திருத்துரைப் பூண்டி.

தெளிவு: “எனது சொல் அல்லாஹ்வின் சொல்லை மாற்றாது. அல்லாஹ்வின் சொல் எனது சொல்லை மாற்றிவிடும். அல்லாஹ்வின் சொல்லில் சில சொற்கள் சிலவற்றை மாற்றும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஜாபிர் (ரழி), தாருகுத்னீ)

இந்த அறிவிப்பு மவ்ழூஃ-இடைச் செருகலானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள “”ஹப்ருனுபின் வாகித்” என்பவர் பல வகையில் ஐயப்பாட்டிற்குரியவர் என்பதாக இமாம் தஹபீ, ஹாஃபிழ் இப்னு ஹஜர் ஆகியோர் ஊர்ஜிதம் செய்துள்ளார்கள். ஆகவே தாங்கள் கேட்டிருக்கும் வகையில் ஸஹீஹான ஹதீஸ் எதுவுமில்லை என்பதை அறியவும்.

—————————————————

ஐயம்: பர்ழான தொழுகையை ஜமாஅத்தோடு தொழும்போது கடைசி ரகாஅத்தில் இமாம் இருப்பில் அமராமல் மறதியாக எழுந்து விட்டால் பின்தொழும் நாம் கடைசி இருப்பில் உட்கார்ந்து கொண்டு சமிக்கை செய்வதா? அல்லது சமிக்கை செய்து கொண்டு நாமும் அவர் கூட எழுந்து நிற்பதா?
அப்துஸ்ஸலாம், மஞ்சக்கொல்லை.

தெளிவு: பர்ழான தொழுகையில் 3,4 ரகா அத்துத் தொழுகைகளில் இமாமுடன் சேர்ந்து நடு இருப்பில் எழுந்துவிட வேண்டும். ஏனெனில் நடு இருப்பு பிரதான சுன்னத்துகளில ஒன்றாகும். அது தவறிவிட்டால் ஸஜ்தா ஸஹ்வு-மறதிக்கான ஸஜ்தா செய்தால் போதும். ஆனால் கடைசி இருப்பு பர்ழாக இருப்பதால் இமாம் மறதியாக எழுந்திருக்கும்போது ஞாபகமுள்ள நாம் இருப்பில் இருந்தபடியே “”சுப்ஹானல்லாஹ்” என்று கூற வேண்டுமே தவிர எழுந்திருப்பது கூடாது.

—————————————————

ஐயம்: அல்லாஹ் மறுமை நாளில் மக்களை அழைக்கும்போது அவர்களின் தாயின் பெயரால் இன்ன பெண்ணுடைய மகனே, மகளே என்று தான் அழைப்பான் என்றும், கருணை மிக்க ரஹ்மான் அந்த நேரத்தில் கூட விபச்சாரத்தில் பிறந்தவர்களை அவர்களின் தந்தை யின் பெயரைச் சொல்லி அழைத்து அவர் களைக் கேவலப்படுத்தமாட்டான் என்றும் கூறப்படுகிறதே! இதற்கு ஆதாரமுண்டா?
ஷைக் முஹ்யித்தீன், திருநெல்வேலி.

தெளிவு: இது மக்களுக்கு பயான் செய்வதாகக் கூறி, கதை அளப்போரின் கப்ஸாக்களில் ஒன்றாகும். இதற்கு ஸஹீஹான ஹதீஸ் எதுவும் ஆதாரமாக இல்லாவிடினும் ஒரு பலகீனமான ஹதீஸ் கூட கிடையாது.
ஆனால் அபூதர்தாஃ(ரழி) வாயிலாக “”நிச்சயமாக நீங்கள் உங்கள் பெயரையும், உங்கள் தந்தையின் பெயரையும் கொண்டு மறுமை நாளில் அழைக்கப்படுவீர்கள். ஆகவே உங்களின் பெயர்களை அழகானதாக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூதாவூத், முஸ்னத் அஹ்மத் ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது. இவ்வறிவிப்பின் அறிவிப்பாளர் தொடரில் அபூ தர்தாஃ(ரழி) அவர்களிடம் கேட்டதாக இடம் பெற்றிருக்கும் “”அப்துல்லாஹ்பின் அபீ ஜகரிய்யா” என்பவர் அபூதர்தாஃ(ரழி) அவர் களைச் சந்தித்திருக்கும் வாய்ப்பிழந்தவர் என்று இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த அடிப்படையில் அபூதர்தாஃ(ரழி) வாயிலாக வந்துள்ள மேற் காணும் அறிவிப்பு லயீஃபு-பலகீனமானதாகி விடுகிறது.

இவ்வாறு இந்த அறிவிப்பு பலகீனமானதாகி விடுவதால் தாங்கள் கூறியது உண்மையாகி விட மாட்டாது. ஏனெனில் தாங்கள் கூறியிருப்பது போன்று ஒரு ஹதீஸும் கிடையாது.

—————————————————

ஐயம்: நம் பகுதிகளில் கணவன் உயிரோடிருக் கும்போது இறந்த பெண்களுக்கு சிவப்புத் துணியிலும், விதவைப் பெண்களுக்கு வெள்ளைத் துணியிலும் கபனிடும் பழக்கம் இருந்து வருகிறது. பொதுவாக கபனுக்காக புதிதான மல் துணியே பயன்படுத்தப்படுகிறது. கலீபாக்கள் மற்றும் ஸஹாபாக்களின் வரலாற்றில் அவர்களின் பழைய ஆடைகளான வேஷ்டி போன்றவற்றால் கபனிடப்பட்டதாகப் பார்க்கிறோம். அப்படியானால் நாம் பழைய வேஷ்டிகளையும் பெண்கள் அவர்களின் பழைய சேலைகளையும் கபனுக்காகப் பயன்படுத்தலாமல்லவா? அது புதிய வெள்ளைத் துணியாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உண்டா? கபனிடுவதில் விதவை, சுமங்கலி என்ற வேறுபாடு உண்டா?  ஷைக் முஹ்யித்தீன், திருநெல்வேலி.

தெளிவு : கபனிடுவதில் சுமங்கலி, விதவை என்ற வேறுபாடு ஹதீஸ்களின் வாயிலாக எதுவுமில்லை. கபனுக்காக புதிய துணிதான் வேண்டும் என்ற கட்டாயமும் ஹதீஸ்களில் இல்லை. கலீஃபாக்களும், மற்றும் சஹாபாக்களும் தமது பழைய வேஷ்டி, துப்பட்டி போன்ற ஆடைகளை கபனுக்காகப் பயன்படுத்தியது போல் நாமும் பயன்படுத்துவது மேலானதேயாகும்.

ஆனால் கபன் வெள்ளை நிறமானதாக இருக்க வேண்டும் என்பது குறித்து நபி(ஸல்) அவர்களின் பின்வரும் ஹதீஸில் காணப்படுவ தால் பொதுவாக கபன் வெள்ளை நிறமாக இருப்பது மேலாகும் என்பதை அறிகிறோம்.

“உங்கள் ஆடைகளில் வெள்ளை நிறமான வற்றை அணியுங்கள்; ஏனெனில் வெள்ளை நிற ஆடையே உங்கள் அடைகளில் மேலானவை யாகும். மேலும் உங்களுடைய மய்யித்துகளை வெள்ளை நிறத் துணிகளை கொண்டே கபனிடுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.(சுருக்கம்)
இப்னு அப்பாஸ்(ரழி), அபூதாவூத், திர்மிதீ)

சிக்கனத்தின் அடிப்படையில் பழைய ஆடைகளைக் கொண்டு கபனிடுவது மேலாகயிருப்பினும் நடைமுறைப்படி புதிய வெள்ளை நிற மல்துணியால் கபனிடுவதை இஸ்ராஃப்-விரயம் என்று கூறுவதும் சரி அல்ல.

—————————————————

ஐயம்: தமக்கு நோய் எதுவுமின்றி தமது சோந்த வேலைக்காகச் செல்லக்கூடிய ஒருவர் டாக்டரிடம் சென்று குறிப்பிட்ட சில தினங்கள் தமக்கு நோயிருந்ததாகவும் அந்த தினங்களுக்குப் பின்னர் தாம் வேலையில் சேருவதற்காக நோய் குணமாகிவிட்டதாகவும் சான்றிதழ் பெற்று வேலைக்குச் செல்கிறார்களே! இது பொய்யாகாதா? நாம் வேலை செய்யும் நிறுவனத்தை ஏமாற்றுவதாகாதா?
ஷைக் முஹ்யித்தீன், திருநெல்வேலி.

தெளிவு: நிச்சயமாக இவ்வாறு செய்வது மாபெரும் பாவமாகிய பொய்யாக இருப்பதோடு, நாம் வேலை செய்யும் நிறுவனத்தாருக்குச் செய்யும் மாபெரும் துரோகச் செயலுமாகும். இவற்றுக்கெல்லாம் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும். இத்தகையோர் பின்வரும் ஹதீஸை கவனிப்பார்களாக!

நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் இருந்த போது, அவர்கள் பெரும் பாவங்களில் மிகப் பெரியவை இன்னவை என்று உங்களுக்கு எடுத்துக் கூறட்டுமா? என்று மும்முறை கூறி விட்டு அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோரை இம்சித்தல், பொய்சாட்சி கூறுதல் ஆகியவையாகும் என்றார்கள். (அப்துர் ரஹ்மானுபின் அபீபக்கர்(ரழி), முஸ்லிம்)

—————————————————

ஐயம்: புதுப் பள்ளிவாசலுக்கு திறப்பு விழா நடத்துவதையும், அதில் முஸ்லிம்கள் கலந்து கொள்வதையும் இஸ்லாம் புனிதமாக கருதுகிறதா? ஏழு பள்ளிவாசல் திறப்பு விழாக்களுக்குச் சென்றால் ஒரு ஹஜ்ஜுச் செய்ததற்குச் சமம் என்கிறார்களே இவற்றுக்கெல்லாம் ஹதீஸில் ஆதாரமுண்டா?
எம்.ஏ.ஹாஜி முஹம்மத், பி.ஏ., நிரவி.

தெளிவு: ஒருவர் அல்லாஹ்வுக்கு ஒரு பள்ளி வாசல் கட்டினால் அவருக்காக சுவர்க்கத்தில் ஒரு வீட்டை அல்லாஹ் கட்டுவான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(உஸ்மான்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

இவ்வாறு பள்ளிவாசல் கட்டுவதால் உள்ள பலாபலன்களை எடுத்துக் கூறி நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசல் கட்டுவதற்காக ஆர்வமூட்டியுள்ளார்களே தவிர, அதற்காகத் திறப்பு விழா நடத்த வேண்டுமென்றோ, அதற்காக முஸ்லிம்கள் செல்ல வேண்டும் என்றோ நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை.

பெரும்பாலும் இன்று பள்ளி கட்டி, திறப்பு விழா நடத்துவதெல்லாம் அதை நடத்தும் ஊர் வாசிகளின் பெருமையை அடிப்படையாகக் கொண்டே செய்யப்படுகிறது. ஓர் ஊரில் பெரிய தொரு பள்ளிவாசல் கட்டப்படுகிறதென்றால் அப்பள்ளியை தொழுகையாளிகளைக் கொண்டு நிரப்புவதில் தான் அந்த ஊருக்கு கைர்-பரகத்-சிறப்பு முதலியவை இருக்கிறதே தவிர பள்ளித் திறப்பு விழா என்ற பெயரால் பிற ஊர் சகோதர முஸ்லிம்களுக்கு அழைப்புக் கொடுத்து அவர்களெல்லாம் வந்து பள்ளியை நிரப்புவதன் மூலம் என்ன பயன் இருக்க முடியும்?

பள்ளிவாசல்களின் வகையில் மக்கள் ஒருவருக் கொருவர் பெருமையாகப் பேசிக் கொள்ளுவது யுக முடிவுகால அறிகுறிகளில் ஒன்றாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அனஸ் (ரழி), அபூதாவூத், நஸயீ, தாரமி)

இன்று மேற்காணும் ஹதீஸில் கூறப்பட்டிருப்பதுபோல அநேக ஊர்களில், நமது பள்ளிவாசல் “”மினாரா” 10 கிலோ மீட்டருக்கு அப்பால் நின்று பார்க்கும்போதே தெரிகிறது. நமது பள்ளியைப் போன்று கவர்ச்சிகரமான பள்ளி இந்தப் பகுதியி லேயே கிடையாது. அந்த ஊர் பள்ளியை விட நமதூர் பள்ளிதான் மிக அலங்காரமாக, பார் வைக்கு எடுப்பாக இருக்கிறது என்றெல்லாம் பேசிக்கொள்வதை சர்வ சாதாரணமாக நாம் பார்க்கிறோம். அப்பள்ளியில் தொழுவோரைப் பார்க்கப் போனால் ஒரு ஸஃப்புக்கு இழுபறியாக இருக்கும்.

7 பள்ளிவாசல்களின் திறப்பு விழாக்களுக்குச் சென்றால் ஒரு ஹஜ்ஜுச் செய்வதற்கு சமம் என்பது ஏதோ ஒரு புண்ணியவானால் கட்டி விடப்பட்ட சரடே அன்றி வேறில்லை. நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் இவ்வாறு எதுவுமில்லை. 7 பள்ளிவாசல் திறப்புவிழா மட்டு மின்றி 700 பள்ளிகளின் திறப்பு விழாக்களுக்குச் சென்று வந்தாலும் அவை ஒரு ஹஜ்ஜுச் செய்வதற்குச் சமம் என்று கூற முடியாது. காரணம் ஹஜ் ஜுச் செய்வது என்பது அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட கடமைகளில் ஒன்றாகும். பள்ளிவாசலுக்கு திறப்புவிழாச் செய்வதென்பதும், அதற்காகச் செல்ல வேண்டும் என்பதும் அல்லாஹ்வினாலும் அவனது ரசூலினாலும் ஏவப்பட்டவை அல்ல.
“”நமது இம்மார்க்கத்தில் இல்லாதோர் அமலை ஒருவர் செய்வாரேயானால் அது மறுக்கப்பட வேண்டியதாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆயிஷா(ரழி), புகாரீ, முஸ்லிம்)

Previous post:

Next post: